ஆர். சாமாசாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமா சாத்திரி
பிறப்பு1868 சனவரி
ருத்ரப்பட்டணம் கிராமம், அரக்கலகுடு வட்டம், ஹாசன் மாவட்டம் (மைசூர் மாவட்டம்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்சாணக்கியரின் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரம்

ருத்ரபட்டணம் சாமாசாத்திரி (Rudrapatna Shamasastry) (1868-1944) இவர்மைசூரில் உள்ள கீழை நாட்டுவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமசுகிருத அறிஞராகவும் மற்றும் நூலகராகவும் இருந்தார். புள்ளிவிவரங்கள், பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ மூலோபாயம் பற்றிய பண்டைய இந்திய நூலான அர்த்தசாஸ்திரத்தை இவர் மீண்டும் கண்டுபிடித்து வெளியிட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாமாசாத்திரி 1868 இல் கர்நாடக மாநிலத்தில் காவேரி ஆற்றின் கரையில் இருக்கும் ருத்ரபட்டணம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது ஆரம்பக் கல்வி ருத்ரபட்டணத்திலேயே தொடங்கியது. பின்னர் மைசூர் சமசுகிருத பாடசாலைக்குச் இவருக்கு இளங்கலைப் பட்டம் வழங்கியது. செம்மொழிச் சமசுகிருதத்தில் இவரது திறனை அறிந்த, மைசூர் இராச்சியத்தின் அப்போதைய திவான் சர் சேசாத்திரி ஐயர், சாமாசாத்திரியை ஆதரித்து, உதவினார். இதனால் மைசூரில் உள்ள அரசு கீழைநாட்டுவியல் நூலகத்தில் நூலகராக இவர் சேர முடிந்தது. இவர் வேதங்கள், வேதங்கம், சமசுகிருதம், பிராகிருதம், ஆங்கிலம், கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மற்றும் பிற மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். [1]

கண்டுபிடிப்பு[தொகு]

கீழைநாட்டுவியல் ஆராய்ச்சி நிறுவனம் மைசூர் கீழைநாட்டுவியல் நூலகமாக 1891 இல் நிறுவப்பட்டது. இது ஆயிரக்கணக்கான சமசுகிருத பனை-ஓலை கையெழுத்துப் பிரதிகளை வைத்திருந்தது. ஒரு நூலகராக, சாமாசாத்திரி இந்த உடையக்கூடிய கையெழுத்துப் பிரதிகளை அவற்றின் உள்ளடக்கங்களைத் தீர்மானிக்கவும் பட்டியலிடவும் தினமும் ஆய்வு செய்தார் [1]

1905 ஆம் ஆண்டில், சாமாசாத்திரி கையெழுத்துப் பிரதிகளில் அர்த்தசாஸ்திரத்தைக் கண்டுபிடித்தார். இவர் 1909 இல் சமசுகிருத பதிப்பை படியெடுத்து, பதிப்பித்து வெளியிட்டார். மேலும், அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து, 1915 இல் வெளியிட்டார். [2] கையெழுத்துப் பிரதி ஆரம்பகால கிரந்த எழுத்தில் இருந்தது. அர்த்தசாஸ்திரத்தின் பிற பிரதிகள் பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பண்டிதர்' இந்த நூலகத்திடம் ஒப்படைத்த கையெழுத்துப் பிரதிகளில் இதுவும் ஒன்று. [3]

இந்தக் கண்டுபிடிப்பு வரை, அர்த்தசாஸ்திரம் தான்டின், பாணர், விஷ்ணுசர்மா, மல்லிநாதசூரி, மெகஸ்தெனஸ் மற்றும் பிறர் உள்ளிட்ட படைப்புகளில் குறிப்புகள் மூலம் மட்டுமே அறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு பண்டைய இந்திய அரசியல் ஆய்வு வரலாற்றில் ஒரு சகாப்தத்தை உருவாக்க்கிய நிகழ்வாகும். [4] இது பண்டைய இந்தியாவின் கருத்தை மாற்றியது. மேலும் வரலாற்று ஆய்வுகளின் போக்கையும் மாற்றியது, குறிப்பாக இந்தியர்கள் நிர்வாகக் கலையை கிரேக்கர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்ற ஐரோப்பிய அறிஞர்களின் தவறான நம்பிக்கையை மாற்றியது. [1]

இந்த புத்தகம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. [1]

பிற பணிகள்[தொகு]

ஒரு நூலகராக, மைசூர் கீழைநாட்டுவியல் நூலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1912-1918 வரை பெங்களூரில் உள்ள சிறீ சாமராசேந்திர சமசுகிருத மகா பாடசலையின் முதல்வராக பணியாற்றினார். 1918 ஆம் ஆண்டில், இவர் அரசு மைசூர் கீழைநாட்டுவியல் நூலகத்திற்குத் திரும்பி, வாசிப்பவராகவும் பின்னர் மைசூரில் தொல்பொறினார். சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தைக் கண்டுபிடித்ததைத் தவிர, வேத சகாப்தத்திலும் வேத வானவியலிலும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். வேத ஆய்வுகளுக்கு மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்தார். சாமாசாத்திரியின் படைப்புகளில் பின்வருபவை:

  1. வேதங்கஜ்யதிஷ்யம் - வானியல் பற்றிய ஒரு வேத கையேடு, கிமு 8 ஆம் நூற்றாண்டு
  2. திராப்சம்: கிரகணங்களின் வேத சுழற்சி - வேதங்களின் பொக்கிஷங்களைத் திறப்பதற்கான ஒரு திறவுகோல். [5]
  3. வேதங்கள், பைபிள் மற்றும் குரானில் கிரகணம்-வழிபாட்டு முறை - திராப்சத்திற்கு ஒரு துணை. இந்த வழிபாட்டு முறைதான் இந்தியாவில் காவிய மற்றும் புராணக் கதைகளுக்கு வழிவகுத்தது. கிரகணம்-சுழற்சிகளின் கணித அம்சம் மிக நீளமாக நடத்தப்படுகிறது மற்றும் கிரகண அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஈ. அபேக் கூறியதாவது: 'வேத வானியல் மற்றும் நாட்காட்டியின் கடினமான சிக்கல்களில் முழுமையான அறிஞர் ஆர். சாமாசாத்திரி.' [6]
  4. கவம் அயனா- வேத சகாப்தம் - வேதக் கவிஞர்களின் மறக்கப்பட்ட தியாக நாட்காட்டியின் வெளிப்பாடு மற்றும் யுகங்களின் தோற்றம் பற்றிய விவரத்தையும் உள்ளடக்கியது. [7]
  5. இந்திய அரசியலின் பரிணாமம். இந்த புத்தகம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பத்து சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். கொல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அசுதோஷ் முகர்ஜி இந்த சொற்பொழிவுகளை வழங்க சாத்திரியை தனிப்பட்ட முறையில் அழைத்தார். இந்தப் பணியில், வேதங்கள், புனைவுகள், அர்த்தசாஸ்திரம், மகாபாரதம், சைனகம படைப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் பண்டைய இந்திய நிர்வாக அமைப்புகள் மற்றும் பல்வேறு நிலை நிர்வாக அமைப்புகள் விமர்சன ரீதியாக ஆராயப்படுகின்றன. [8]
  6. தேவநாகரி எழுத்துக்களின் தோற்றம் . [9]

இவரது படைப்புகள் அனைத்தும் உலகெங்கிலும் உள்ள பல சிறந்த அறிஞர்களிடமிருந்து, குறிப்பாக ஐரோப்பிய இந்தியவாதிகளிடமிருந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன.

ஆர். சாமாசாத்திரி பல கன்னட நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட சில முக்கியமான படைப்புகள்:

  • ருத்ரபட்டாவின் ஜெகநாதவிஜயம் (1923)
  • நயசேனனின் தர்மரதம் (1924 இல் பகுதி I & 1926இல் பகுதி II )
  • லிங்கண்ணகவியின் கேலேந்திரப்பவிஜயம் (1921)
  • கோவிந்த வைத்யரின் காந்தீரவ வனராசராச விஜயம் (1926)
  • குமாரவியாசரின் கர்நாடக மகாபாரதத்தின் விராட பர்வம் (1920)
  • குமாரவியாசரின் கர்நாடக மகாபாரதத்தின் உத்யோக பர்வம் (1922)

விருதுகள்[தொகு]

சாமாசாத்திரியின் படைப்புகளை அசுதோஷ் முகர்ஜி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற பலரும் பாராட்டினர். சாமாசாத்திரி 1927 இல் மைசூரிலுள்ள நந்தி மலையில் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். [2] இவரது கண்டுபிடிப்பு சர்வதேச புகழை இந்த நூலகத்திற்கு கொண்டு வந்தது.

இந்தியாவுக்கு வெளியே, சாமாசாத்ரியின் கண்டுபிடிப்பை இந்தியவியலாளர்களும் மற்றும் கீழைநாட்டுவியலாளர்களுமான ஜூலியஸ் ஜாலி, மோரிஸ் வின்டர்னிட்ஸ், எஃப். டபிள்யூ. தாமஸ், பால் பெலியட், ஆர்தர் பெரிடேல் கீத்து, ஸ்டென் கோனோவ் போன்ற பலரும் பாராட்டினர். [1] சாமாசாத்திரியைப் பற்றி ஜே. எஃப். ஃப்ளீட் என்ற கல்வெட்டியலாளர் இவ்வாறு எழுதினார்: "பண்டைய இந்தியாவின் பொது வரலாற்றைப் படிப்பதற்கான எங்கள் வழிமுறைகளுக்கு மிக முக்கியமான சேர்த்தலுக்காக நாங்கள் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். எப்போதும் இருப்போம்." [2]

சாமாசாத்திரிக்கு 1919 இல் வாசிங்டன் டி.சி.யில் உள்ள கீழைநாட்டுவியல் பல்கலைக்கழகத்திலும், 1921 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [10] இவர் பிரித்தானிய ஆசியச் சங்கத்தின் சக ஊழியர் ஆனார். மேலும் காம்ப்பெல் நினைவு தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

மைசூர் மகாராஜாவின் அர்த்தசாஸ்திர விசாரதம், இந்திய அரசால் மகாமகோபாத்யாயா மற்றும் வாரணாசி சமசுகிருத மண்டலத்தால் வித்யாலங்காரம் மற்றும் பண்டிதராஜா உள்ளிட்ட பல பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டன.. [11]

ஜெர்மனியில் அங்கீகாரம்[தொகு]

பெரும்பாலும் சொல்லப்பட்ட ஒரு கதை, அப்போதைய மைசூர் மன்னர் நான்காம் கிருட்டிணாராச உடையார், ஜெர்மனிக்கு சென்றபோது, அவரிடம் ஒரு ஜெர்மன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரால் சாமாசாத்திரி மைசூரைச் சேர்ந்தவரா என்று கேட்டார். மன்னர் இந்தியா திரும்பி வந்ததும், சாமாசாத்திரிக்கு மரியாதை அளித்து, "மைசூரில் நான் மகாராஜா, நீங்கள் எங்கள் உடைமை, ஆனால் ஜெர்மனியில், நீங்கள் எஜமானர், மக்கள் உங்கள் பெயர் மற்றும் புகழ் மூலம் எங்களை அங்கீகரிக்கிறார்கள்" என்றார். [1] [2]

பிற்கால வாழ்வு[தொகு]

சாமாசாத்திரி இந்தியவியல் பிரச்சினைகள் குறித்த தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். [1] பின்னர் இவர் அந்நிறுவனத்தின் கண்காணிப்பாளராக ஆனார். [2] மைசூர் மாநில தொல்பொருள் இயக்குநராக, கல் மற்றும் செப்புத் தகடுகளில் பல கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்.

மைசூரின் சாமுண்டிபுரா வட்டாரத்தில் உள்ள இவரது வீடு அசுதோஷ், என்று சர் அசுதோஷ் முகர்ஜிக்குப் பிறகு பெயரிடப்பட்டது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Prof. AV Narasimha Murthy (21 June 2009), "R Shamasastry: Discoverer of Kautilya's Arthasastra", The Organiser[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Sugata Srinivasaraju (27 July 2009), "Year of the Guru", Outlook India
  3. Richard Mattessich (2000), The beginnings of accounting and accounting thought: accounting practice in the Middle East (8000 B.C. to 2000 B.C.) and accounting thought in India (300 B.C. and the Middle Ages), Taylor & Francis, p. 146, ISBN 978-0-8153-3445-3
  4. Ram Sharan Sharma (2009), Aspects of political ideas and institutions in ancient India (4 ed.), Motilal Banarsidass Publ., p. 4, ISBN 978-81-208-0827-0
  5. R. Shamasastry (1938), Drapsa: The Vedic Cycle of Eclipses : a Key to Unlock the Treasures of the Vedas, Sri Panchacharya Electric Press
  6. R. Shamasastry (1940), Eclipse-cult in the Vedas, Bible and Koran: A Supplement to the "Drapsa", Sri Panchacharya Electric Press
  7. R. Shamasastry (1908), Gavam Ayana the Vedic Era, R. Shamasastry, 1908
  8. R. (Rudrapatna) Shama Sastri (2009), Evolution of Indian Polity, HardPress, 2012, ISBN 9781290797320
  9. R. (Rudrapatna) Shama Sastri (2009), The Origin of the Devanagari Alphabets, Bharati-Prakashan, 1973, ISBN 9781290797320
  10. "Annual Convocation". University of Calcutta. Archived from the original on 28 May 2012.
  11. "Annual Convocation". Karnataka Samskruta University. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சாமாசாத்திரி&oldid=3683401" இலிருந்து மீள்விக்கப்பட்டது