ஆரண்ய காண்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரண்ய காண்டம்
இயக்கம்தியாகராஜன் குமாரராஜா
தயாரிப்புஎஸ். பி. பி சரண்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜாக்கி செராப்
ரவி கிருஷ்ணா
சம்பத் ராஜ்
யாஸ்மின் பொன்னப்பா
குரு சோமசுந்தரம்
மாஸ்டர் வசந்த்
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
படத்தொகுப்புபிரவீண் கே. எல்
என். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்
வெளியீடுஅக்டோபர் 30, 2010 (2010-10-30)(SAIFF)
10 சூன் 2011 (இந்தியா)ஜூன் 10, 2011
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு5.25 கோடி [1]

ஆரண்ய காண்டம் (ஆங்கிலத் தலைப்பு: Anima and Persona)[2] என்பது 2011-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் தியாகராஜன் குமாரராஜா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டது. ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 'நியோ நோயேர்' வகையில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படமாக கருதப்படுகிறது[3][4]. நியோ ந்வார் (Neo Noir) வகை என்பது குற்றங்கள், கொலை மற்றும் வன்முறை ஆகியவற்றை பெருமளவில் வெளிக்காட்டும் திரைப்படங்கள் ஆகும்.

இந்த படத்தின் கருவானது ஆறு பேரின் ஒருநாள் வாழ்க்கையை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். ஜாக்கி செராப்[5], ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ் மற்றும் புது முகங்களான யாஸ்மின் பொன்னப்பா, சோமசுந்தரம் மற்றும் மாஸ்டர் வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ்.பி.பி சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் பாடல்கள் இல்லாத போதும், யுவனின் பின்னணி இசை கவனத்தைப் பெற்றது.

இந்த படம் 18 டிசம்பர், 2008-இல் ஆரம்பிக்கப்பட்டு, 2009-இல் நிறைவடைந்தது. தணிக்கையில் அனுமதி கிடைக்காததனால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 52-காட்சிகள் வெட்டப்பட்டு[3] 10 ஜூன் 2011 இல் வெளியிடப்பட்டது[6]. இந்த படம், சிற‌ந்த பட‌த்தொகு‌ப்பு‌க்கான தே‌சிய ‌விருதைப் பெ‌ற்று‌ள்ளது.

கதை[தொகு]

சிங்கம் பெருமாள் ஒரு வயதான தாதா. அவரிடம் பசுபதி மற்றும் சில ரவுடிகள் வேலை பார்க்கிறார்கள். அவர் தன் வீட்டிலேயே சுப்பு என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறார். கஜேந்திரன் என்னும் தாதாவிற்கு வரும் பொருளை வாங்குமாறு பசுபதி சிங்கம்பெருமாளிடம் சொல்கிறான். அதன் வாக்குவாத முடிவில் ஐம்பது லட்சம் கொடுத்து பொருளை வாங்க பசுபதிக்கு சம்மதம் தெரிவிக்கிறான். பசுபதியையும் மேலும் சிலரையும் அனுப்பி வைத்து விட்டு தன்னிடம் வேலை பார்க்கும் சப்பை என்பவனிடம் சுப்புவை வெளியே அழைத்து செல்ல சொல்கிறான் சிங்கம் பெருமாள். இதற்கிடையில் பொருளை கொண்டு வந்திருக்கும் குருவி பாவா லாட்ஜ் என்னுமிடத்தில் தங்கி இருக்கிறான். அவனது அறையில் கொடுக்காபுளி என்ற சிறுவனும் அவனது அப்பா காளையனும் தங்கியிருக்கிறார்கள். சேவற்சண்டையில் வென்று கடனை அடைப்பதற்காக நகரம் வந்திருப்பதாக அவர்கள் சொல்லுகிறார்கள். பின் சேவற்சண்டையில் கலந்து கொள்கிறார்கள். அங்கே வரும் சிங்கம் பெருமாளின் சேவல் காளையனின் சேவலிடம் தோற்று விடுகிறது. அந்தக் கோபத்தில் சிங்கம் பெருமாள் காளையனின் சேவலை வெட்டி விடுகிறான். வேறு வழி இல்லாமல் காளையனும் கொடுக்காப்புளியும் திரும்பி பாவா லாட்ஜ் வருகிறார்கள். அதே வேளையில் இன்னொரு பக்கம் பசுபதியும் மற்ற அடியாட்களும் பாவா லாட்ஜிற்கு வரும் வழியில் சிங்கம் பெருமாள் ஒரு அடியாளிற்கு தொலைபேசி மூலமாக பசுபதியை கொன்று விடுமாறு கூறுகிறான். அது அங்குள்ள ஒலிபெருக்கி மூலமாக அனைவரும் அறிகிறார்கள். காவலர்கள் அங்கு வர அவர்களை வேண்டுமென்றே எதிர்த்து பேசி அடியாட்களிடம் இருந்து தப்பிக்கிறான் பசுபதி. காவலர்கள் அழைத்துச் செல்லும்முன் ஒரு அடியாள் வந்து, "நாங்கள் சென்று உன் மனைவி கஸ்தூரியை அழைத்துச் செல்லுகிறோம்" என்று கூறும்போது தான் பசுபதி தன் தவறை உணர்கிறான். பாவா லாட்ஜிற்கு திரும்பி வரும் காளையனும் கொடுக்காப்புளியும் குருவி இறந்து கிடப்பதை பார்க்கிறார்கள். பிறகு பொருளை எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறார்கள். அதற்குள் பொருளைத் தேடி வரும் கஜேந்திரனின் ஆட்கள் காளையனைத் துரத்துகிறார்கள். காளையனும் கொடுக்காப்புளியும் தப்பித்து விடுகிறார்கள். காவலர்களிடம் இருந்து தப்பிக்கும் பசுபதி நேராக வீட்டிற்கு செல்கிறான். அங்கே கஸ்தூரியைக் காணவில்லை. அடியாட்கள் ஏற்கனவே வந்து கஸ்தூரியை அழைத்துச் சென்று விடுகிறார்கள். கஸ்தூரியைக் காரிலேயே வைத்திருக்குமாறும், அவளை ஒன்றும் செய்யக்கூடாது என்றும் சிங்கம் பெருமாள் தொலைபேசியில் அடியாட்களிடம் சொல்லுகிறான். வீட்டில் யாரையும் காணாது பசுபதி தவித்துக்கொண்டு இருக்கும் வேளையில் கஜேந்திரனின் அடியாளான முள்ளு என்பவன் பசுபதியின் தலையில் துப்பாக்கி வைத்து பொருள் எங்கே என்று கேட்கிறான். பிறகு பசுபதியை அவர்கள் துரத்துகிறார்கள். ஒரு குப்பை மேட்டின் இடையில் வைத்து முள்ளுவைத் துப்பாக்கி முனையில் வைத்துத் தப்பிக்கிறான் பசுபதி. காளையனும் கொடுக்காபுளியும் தங்கள் கையிலிருக்கும் சீட்டில் இருக்கும் போன் நம்பருக்கு போன் செய்கிறார்கள். அது சிங்கம் பெருமாளுக்குப் போகிறது. சிங்கம் பெருமாளின் ஆட்கள் வந்து காளையனைத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். கொடுக்காப்புளி தப்பித்து விடுகிறான். கொடுக்காப்புளியிடம்தான் இப்போது சரக்கு இருக்கிறது. இதற்கெல்லாம் இடையில் வேறொரு பக்கம் சப்பைக்கும் சுப்புவுக்கும் உடலுறவு நடக்கிறது. அதன்பின் இருவரும் ஊர் சுற்ற கிளம்பி விடுகிறார்கள். அங்கு வைத்து இருவரும் சிங்கம் பெருமாளிடம் இருந்து தப்பித்து விடத் திட்டமிடுகிறார்கள். இருவரும் வீடு திரும்பும்போது அங்கே காளையனைச் சித்திரவதை செய்து கொண்டு இருக்கிரார்கள். அதை கண்டு இருவரும் பயந்து விடுகிறார்கள். இருப்பினும் தப்பித்து போவதில் சப்பை உறுதியாக இருக்கிறான். தன் தந்தையை காணாமல் அழுது கொண்டு இருக்கும் கொடுக்கப்புளி தன்னிடம் உள்ள சீட்டிலிருக்கும் இரண்டாம் எண்ணிற்கு அழைக்கிறான். அதை பசுபதி எடுக்கிறான். பொருள் கொடுக்காப்புளியிடம் இருப்பதை அறிந்து கொண்டு அவனை தன்னிடம் வர சொல்கிறான். சரக்கு தன்னிடம் வந்ததும் தனக்கு தெரிந்த ஒரு காவலர் மூலமாக முள்ளுவைத் தன்னிடம் அழைக்க்கிறான். ஆனால் தன்னிடம் வரும் முள்ளுவிடம் எதையும் கூறாமல் திருப்பி அனுப்பி வைத்து விடுகிறான். அதை அறிந்து கொள்ளும் கஜேந்திரன் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக உணர்கிறான். அந்தக் கோபத்தில் முள்ளுவை கொன்றும் விடுகிறான். அதற்குள் பசுபதி, கஜேந்திரனையும் சிங்கம்பெருமாளின் ஆட்களையும் ஒரே இடத்திற்கு வரச் சொல்கிறான். அங்கே கூடும் கஜேந்திரனின் கண் முன்னே அவன் தம்பி கஜபதியைக் கொல்கிறான் பசுபதி. உடனே துரத்தல் தொடர்கிறது. வேறொரு பக்கத்தில் நிற்கும் சிங்கம் பெருமாளின் ஆட்களிடம் அவர்களை அழைத்து செல்கிறான். தங்களை நோக்கி வரும் பசுபதியையும் கஜேந்திரனையும் அவன் ஆட்களையும் பார்க்கும் சிங்கம் பெருமாளின் ஆட்கள் குழம்புகிறார்கள். கஜேந்திரனும், ஆட்களும் எதிரில் சிங்கம் பெருமாளின் ஆட்களைப் பார்த்து இது சிங்கம் பெருமாளின் திட்டம் என்று தவறாக நினைக்கிறார்கள். எதையும் தெளிவாக யோசிக்கும் நேரத்திற்குள் சண்டை ஆரம்பமாகிறது. சண்டையின் முடிவில் பசுபதி தவிற மற்ற அனைவரும் மரணமடைகிறார்கள். வீட்டில் சித்திரவதையை முடித்து விட்டுப் படுக்கையறைக்கு வருகிறான் சிங்கம் பெருமாள். அங்கே சப்பையையும் சுப்புவையும் பார்த்து விட்டு குளிக்க செல்கிறான். குளிப்பதற்குள் பீரோவில் இருந்து ஐம்பது இலட்சம் பணத்தை எடுத்துச் சப்பையிடம் கொடுத்து அதை அருகிலிருக்கும் கடையில் கொடுக்கச் சொல்கிறாள் சுப்பு, கூடவே ஒரு துப்பாக்கியையும் கொடுக்கிறாள். குளித்து விட்டு வரும் சிங்கம் பெருமாள் பணத்தை காணாமல் கோபமடைகிறான். அங்கே நடக்கும் சண்டையில் சப்பை சிங்கம் பெருமாளை கொன்று விடுகிறான். தொடர்ச்சியாக சப்பையை கொன்று விடுகிறாள் சுப்பு. அதற்குள் அங்கே வரும் பசுபதி சுப்புவை கண்டு சிங்கம் பெருமாள் சப்பையை சுட்டதாகவும் அதற்காக சுப்பு சிங்கம் பெருமாளை சுட்டதாகவும் நினைத்து சுப்புவை அங்கிருந்து போய்விடுமாறு கூறுகிறான். பிறகு கஸ்தூரியை வைத்திருக்கும் அடியாட்களை போன் செய்து சிங்கம் பெருமாள், கஜேந்திரன், கஜபதி எல்லோரையும் கொன்று விட்டதாகவும், இனிமேல் எல்லாம் நான் தான் என்றும் சொல்கிறான். சிறிது நேரத்தில் கஸ்தூரியை அழைத்துக்கொண்டு அவர்கள் வருகிறார்கள். அடிபட்டு கிடக்கும் காளையனை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டு கொடுக்காப்புளிக்குப் பணம் கொடுக்கிறான் பசுபதி. ஆனால் அந்த் ஐம்பது இலட்சம் எங்கே போனதென்று யாருக்கும் தெரியவில்லை. சுப்பு அருகிலிருக்கும் கடைக்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்லுவதோடு படம் முடிவடைகிறது. மொத்த கதையும் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The new darlings of Kollywood". Archived from the original on 7 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "SAIFF 2010". Saiff.org. Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-06-14.
  3. 3.0 3.1 Sudhish Kamath (2011-02-05). "Arts / Cinema : A new chapter". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2012-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025101720/http://www.thehindu.com/arts/cinema/article1158882.ece. பார்த்த நாள்: 2011-06-14. 
  4. "Movie Review:Aaranya Kaandam". Sify.com. Archived from the original on 2011-06-13. பார்க்கப்பட்ட நாள் 2011-06-14.
  5. "Shroff turns South". தி இந்து (Chennai, India). 2008-12-05 இம் மூலத்தில் இருந்து 2009-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090211162937/http://www.hindu.com/fr/2008/12/05/stories/2008120550260100.htm. பார்த்த நாள்: 2008-05-18. 
  6. "Friday Fiesta 100611". IndiaGlitz.Com. 27 December 2011 இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612001304/http://www.indiaglitz.com/channels/tamil/article/67543.html.