ஆனந்த மடம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆனந்த மடம் (நாவல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆனந்த மடம்
Cover
Cover of the book
நூலாசிரியர்பங்கிம் சந்திர சட்டர்ஜி
உண்மையான தலைப்புআনন্দমঠ
மொழிபெயர்ப்பாளர்Julius J. Lipner
நாடுIndia
மொழிBengali
வகைNovel (Nationalist)
வெளியீட்டாளர்Oxford University Press, USA
வெளியிடப்பட்ட நாள்
1882
ஆங்கில வெளியீடு
2005, 1941, 1906
ஊடக வகைPrint (Paperback)
பக்கங்கள்336 pp

ஆனந்த மடம் (Anandamath (வங்காள மொழி: আনন্দমঠ முதல் ஆங்கில வெளியீட்டின் தலைப்பு-The Abbey of Bliss) என்பது வங்காள எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட வங்காள மொழிப் புதினமாகும் இது 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் நடந்த சன்னியாசிகளின் புரட்சி என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் இந்திய மற்றும் வங்காள இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க புதினமாகும்.[1] இந்நூல் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராடும் இந்திய விடுதலைப் போரைக் குறிப்பதாகக் கருதி. பிரித்தானிய அரசு இந்நூலைத் தடை செய்தது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நாவலை சட்டர்ஜி வங்க தர்சன் எனும் நாளேட்டில் எழுதினார். இதன் முதல் அத்தியாயத்தில் கடவுளை வாழ்த்தும் பாடலாக வெளிவந்த வந்தே மாதரம் எனும் பாடல் பிற்காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்திற்கு பெரிதும் பங்காற்றியது. இப்பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது. [2]

கதைச் சுருக்கம்[தொகு]

1771 இல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சத்தைத் அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது.[3] மகேந்திரன்-கல்யாணி என்ற தம்பதியர் பித்தானிய ஆட்சியின் போது ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 'பச்சிங்கா' என்ற தங்கள் சொந்த கிராமத்தில் உணவும் நீருமின்றி தவிக்கின்றனர். எனவே அவர்கள் கிராமத்தை விட்டு பிழைப்பைத் தேடி அருகிலுள்ள நகரத்திற்குச் செல்கின்றனர். செல்லும் வழியில் கல்யானியும் மகேந்திரனும் பிரிந்து விடுகின்றனர். மனிதர்களைத் தின்னும் காட்டுவாசிகளிடமிருந்து தப்பிப்பதற்காக கல்யாணி தனது கைக்குழந்தையுடன் காட்டிற்குள் ஓடுகிறாள். நீண்ட தூரம் ஓடிய அவள் கங்கைக்கரையில் சுயநினைவிழந்து வீழ்ந்து விடுகிறாள். அவளை மீட்ட இந்துத் துறவியான சத்யானந்தர் என்பவர் அவளையும் அவளது குழந்தையையும் பராமரிக்கிறார். அவளை அவளது கணவனுடன் சேர்க்க முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இச்சமயத்தில் கல்யாணியைப் பிரிந்த மகேந்திரன் ஒரு துறவிகள் கூட்டத்துடன் இணைந்து தாய் நாட்டிற்காகத் தொண்டாற்றுகிறான். இதையறிந்த கல்யாணி தாய் நாட்டிற்காக உழைக்கும் தனது கணவனுக்கு இடையூறாக தான் இருக்கக்கூடாது என எண்ணி தற்கொலைக்கு முயல்கிறாள். இச்சமயத்தில் கல்யாணிக்கு உதவ நினைக்கும் துறவி சத்யானந்தர் துறவிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதி பிரித்தானிய அரசால் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில் துறவிகளுக்குரிய உடையேதும் அணியாத மற்றொரு துறவியான பவானந்தரிடம் கல்யாணியையும் குழந்தையையும் சத்யானந்தர் ஒப்படைக்கிறார். அவர் பாடிய பாடலால் கல்யாணியின் உள்ளத்தைக் கவர்கிறது. எனவே அவள் தன் குழந்தையுடன் மற்ற துறவிகளும் மறைந்து வாழும் பவானந்தரது உறைவிடத்திற்குச் செல்கிறார். அங்கு ஏற்கனவே துறவிகளால் புகலிடம் அளிக்கப்பட்ட தனது கணவர் மகேந்திரனைக் கண்டு இணைகிறாள். அம்மடத்தின் தலைவரான பவானந்தர் மகேந்திரனுக்கு பாரதா மாதா ஜகதாத்ரி, காளி, துர்கா என்ற மூன்றுவடிவில் காட்சி தருவதாகக் கூறி அந்தச் சிலைகளைக் காட்டுகிறார். இதனால் மகேந்திரன் தீவர பாரத மாதாவின் பக்தனாகிறான்.

இவ்வாறு தொடங்கும் சந்நியாசிகளின் புரட்சி நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. அவர்கள் செங்கல்லாலான ஒரு கோட்டையைக் கட்டி அதனைத் தலைமையிடமாகக் கொள்கின்றனர். பிரித்தானிய அரசு பெரும் படை பலத்துடன் இக்கோட்டையைத் தகர்க்க முயலுகிறது. ஆனால் ஆயுத வலிமையையும் படைப்பயிற்சியையும் குறைவாகக் கொண்ட துறவிகள் பிரித்தானிய ஆயுதங்களுக்கெதிராகப் போராட இயலாமல் திணறுகின்றனர். பிரித்தானியப் படை கலகக்காரர்களைச் சுட்டு வீழ்த்துகிறது. அவர்கள் போராடிய ஆற்றுப் பாலம் முழுவதும் அவர்களுடைய செத்த உடல்கள் நிறைகின்றன. ஆயினும் ஒரு சிலர் பிரித்தானிய பீரங்கிகளை அவர்களுக்கெதிராகத் திருப்பி பிரித்தானியர்களைக் கொல்கின்றனர். பிரித்தானியப் படை வீழ்ச்சியடைகிறது. முதல் முதலாக புரட்சிக்காரர்கள் தங்களது போர்க்களத்தில் வெற்றிபெறுகின்றனர். மகேந்திரனும் கல்யாணியும் திரும்பவும் வீட்டைக் கட்டுகின்றனர். தொடர்ந்து அவர்கள் புரட்சியாளர்களுக்கு உதவுகின்றனர். எனக் கதை முடிகிறது.

கருத்துகள்[தொகு]

ஆனந்த மடம் நூல் 1770 இல் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் மற்றும் வெற்றியடையாத 'சன்னியாசிக் கலகம்' ஆகியவற்றைப் பின்னணியாகக் கொண்டது. பங்கிம் சந்திரர் பிரித்தானியர் இல்லாத இந்தியாவைக் கனவு கண்டார். அந்தக் கனவில் படைபலம் கொண்ட பிரித்தானியரை படைப்பயிற்சியற்ற துறவிகள் எதிர்த்து வெற்றியடைவதாகக் கண்டார். இந்தப் புதினம் பிரித்தானிய ஆட்சியை எதிர்க்கும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் காதல உணர்வுகளைத் , தேசப்பற்றினை எழுச்சி பெற செய்வதற்கான ஒரு முக்கியமான குரலாக ஒலித்தது.

வரலாற்றுப் பின்னணி[தொகு]

இப்புதினம் இஸ்லாமியர்களை எதிரியாகச் சித்தரித்தாலும், இப்புதினம் எழுந்த காலகட்டத்தில் வங்காளத்தை பிரித்தானியர் ஏற்கனவே ஆளத்தொடங்கியிருந்தனர். பங்கிமின் துல்லியமற்ற அரசியல் கண்ணோட்டத்தின் மூலம் அவரது அரசியல் ஆர்வம், இந்து தேசியவாதஅரசியல், வங்காளத்தின் அன்றைய தார்மீக மற்றும் கலாச்சாரச் சூழ்நிலை ஆகியவற்றை இப்புதினத்தின் வழி அறியலாம்.[4] அஹமது சோஃபா என்பவர் சன்னியாசிக் கலகத்தில் இசுலாமியர்கள் ஆற்றிய பங்கினையும், குறிப்பாக மஜ்னு ஷா என்பவரின் பங்களிப்பையும் குறிப்பிடாததைக் கண்டிக்கிறார்..[5]

திரையில்[தொகு]

இந்தப் புதினம் 1952 இல் ஆனந்த் மத் என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஹேமன் குப்தா. இதில் பரத் பூஷன், பிரதீப் குமார், கீதா பாலி ஆகியோர் நடித்துள்ளனர். ஹேமந்த் குமார் என்பவர் இத்திரைப்படத்திற்காக இசையமைத்துள்ளார். இப்படத்தில் தான் வந்தே மாதரம் என்ற புகழ் பெற்ற பாடல் இடம்பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Julius, Lipner (2005). Anandamath. Oxford, UK: OUP. பக். 27–59. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-517858-6. 
  2. Bhattacharya, Sabyasachi (2003). Vande Mataram. New Delhi: Penguin. பக். 68–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-303055-3. 
  3. "Place வந்தே மாதரம் In Correct Context" by Vikram Kumar, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7 January 1999[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
  4. Kabir, Nurul (1 September 2013). "Colonialism, politics of language and partition of Bengal PART XIX". The New Age இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141228094909/http://newagebd.com/old_archives/special.php?spid=31&id=157. பார்த்த நாள்: 28 December 2014. 
  5. Sofa, Ahmed (1997). Shata Barsher Ferari: Bankim Chandra Chattopadhya (The fugitive of a century: Bankim Chandra Chattopadhya). Prachyavidya Prakashani. பக். 44. 
  6. Pradeep Kumar ரெடிப்.காம்.

கருவி நூல்[தொகு]

வந்தே மாதரம் (நூல்) பி வி கிரி, வள்ளி புத்தக நிலையம்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_மடம்_(புதினம்)&oldid=3646195" இலிருந்து மீள்விக்கப்பட்டது