ஆதி நாகசுப்ரமணியா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி நாகசுப்ரமணியா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:பாலக்காடு மாவட்டம்
அமைவு:நெம்மேரா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதி நாகசுப்ரமணியா
சிறப்பு திருவிழாக்கள்:குமார சஷ்டி கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குணி உத்திரம் & வைகாசி விசாகம்.

ஆதி நாகசுப்ரமணியா கோயில் (adi naga subramanya) என்பது இந்தியாவில், கேரள மாநிலத்தின், பாலக்காடு மாவட்டத்தில், நெம்மேரா என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும்.

இடம்[தொகு]

ஆதி நாகசுப்ரமணியா கோயில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மேரா என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பொள்ளாச்சி வழியாகத் திருச்சூர் சென்றாலும் நெம்மேராவை அடையலாம்.

கோயில்[தொகு]

இந்தக் கோயிலின் முதன்மை நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் கிழக்குத் திசை நோக்கி கருவறை அமைந்துள்ளது. ஆயிரம் தலையும் இரண்டாயிரம் நாக்குகளும் கொண்ட ஆதிசேஷன், இங்கு ஐந்து தலை நாகமாகக் காட்சியளிக்கிறார். சண்முகக் கடவுள் அழகாக சிறிய உருவில் காட்சியளிக்கிறார். கேரளக் கோயில்கள் பலவற்றில் கருவறையில் மின் விளக்குகள் அமைக்கப்படாதது போலவே இக்கோயிலிலும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. குத்துவிளக்குகளின் ஒளி மற்றும் நெய் விளக்கு ஒளியிலேயே தரிசனம் நடக்கிறது. தினந்தோறும் காலையில் நடைபெறும் பூசையின்போது குமரனுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது.

மேற்குத் திருச்சுற்றின் பின்புறச் சுவரில் இரண்டு விநாயகர்கள் காட்சியளிக்கிறனர். மஹாவிஷ்ணு மற்றும் சாஸ்தாவுக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரசுராமர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலின் உள்ளே அழகான குளமும் உள்ளது. இதையொட்டி நான்கு புறமும் சுவர் எழுப்பி பெரிய வாசலுடன் அமைக்கப்பட்ட மண்டபத்தின் உள்ளே ஒரு பெரிய புற்று காணப்படுகிறது. இதையடுத்து பெரிய அரச மரத்தின் கீழே பெரிய நாகர் சிலையும் அருகே சிறிது சிறிதாக இருபது நாகங்களும் காணப்படுகின்றன.

தல வரலாறு[தொகு]

புராணக்கதைப்படி, பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தான் முருகன். பின்னர் அந்தக் குற்றவுணர்ச்சி தாளாமல் பாம்பாக அலைந்து பின்னர் தாயின் அருளால் மீண்டும் கடவுளான தலமாக இந்த ஆதி நாகசுப்ரமணியா கோயில் கருதப்படுகிறது.

சிறப்பு பூசைகள்[தொகு]

அதிகாலை ஐந்து மணியிலிருந்து பதினோரு மணிவரையிலும் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டரை மணிவரையிலும் நடை திறந்திருக்கும். நாக தோசம் உள்ளவர்கள் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் தோசம் விலகி நன்மை பெறுவார்கள் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள், ஒரு மண்டலம், அரை மண்டலம், கால் மண்டலம் என்று விரதம் மேற்கொண்டு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

திருவிழாக்கள்[தொகு]

தமிழகத்தில் கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படுவதுபோல் கார்த்திகை மாதத்தில் வரும் குமார சஷ்டி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்தான் பார்வதி தேவி விரதமிருந்து முருகனை மீண்டும் மகனாகக் கண்ட நாள். இது மட்டுமின்றி தைப் பூசம், பார்வதி தேவியிடம் ஞானப் பால் அருந்திய விழாவும் சிறப்பான நாட்கள்.[1]

குறிப்புதவிகள்[தொகு]

  1. ஸ்ரீபுரம் சுப்ரமணியன் (30 நவம்பர் 2017). "மலையாள தேசத்தில் சண்முகர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2017.

இதனையும் பார்க்க[தொகு]