அ. பாலமனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணாமலை பாலமனோகரன் (பிறப்பு: சூலை 7, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறந்த நாவலாசிரியர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்ற கிராமத்தில் பிறந்த இவர் இளவழகன் என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். வன்னி மண்ணின் மணம் கமழும் "நிலக்கிளி" என்னும் புதினம் சாகித்திய விருது பெற்றது. நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என பலவழிகளில் தன் திறன் காட்டுபவர். தற்சமயம் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார்.

கல்வியும் கல்விப்பணியும்[தொகு]

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1962ல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தன் ஆசிரியப்பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 1967ல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணி ஏற்றார். பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார்.

இலக்கியத்துறையில்[தொகு]

மூதூரில் ஆசிரியராக இருக்கும்போதுதான் முதுபெரும் எழுத்தாளரான வ. அ. இராசரத்தினத்தின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. இவரது இலக்கியப்பணிக்கு இந்த நட்பே காரணமானது. சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" என்பதே இவரது முதலாவது சிறுகதையாகும். 1973ல் வீரகேசரி பிரசுரமாக இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் வெளியானது.

இவரது நூல்கள்[தொகு]

  • நிலக்கிளி - நாவல் - வீரகேசரிப் பிரசுரம்[1]
  • கனவுகள் கலைந்தபோது - நாவல் - வீரகேசரிப் பிரசுரம்
  • வட்டம்பூ
  • குமாரபுரம் - நாவல் - வீரகேசரிப் பிரசுரம்[2]
  • தாய்வழித் தாகம் - தென்னிந்தியாவில் வெளியான நாவல்
  • நந்தாவதி - தென்னிந்தியாவில் வெளியான நாவல்
  • தீபதோரணங்கள்- சிறுகதைத் தொகுதி
  • நாவல் மரம் - டேனிஷ் மொழியில் இவரது சிறுகதைத்தொகுதி
  • டேனிஷ்- தமிழ் அகராதி - இவர் தொகுத்தது

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்பு[தொகு]

தளத்தில்
அ. பாலமனோகரன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பாலமனோகரன்&oldid=3901748" இலிருந்து மீள்விக்கப்பட்டது