அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆம் ஆண்டு நடந்த "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்" வாடி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்றழைக்கப்படும் மாடு பிடிக்கும் வீர விளையாட்டு ஆகும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பின் காரணமாகவும் ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களின் மூலமும் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

வரலாறு

சங்க இலக்கியமான கலித்தொகை

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்[1]

என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும்.

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர்/யாதவர் மக்களிடம் ஏறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல வாலிபர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குல பெண்.[2]. 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லி காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிகட்டு' என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது.

மேற்கோள்கள்

  1. கலித்தொகை, முல்லைக் கலி, பாடல் 103, வரிகள் 63-64
  2. மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்