அரோள் கரோலி
| அரோள் கரோலி Arrol Corelli | |
|---|---|
| இயற்பெயர் | எஸ். அருள் முருகன் |
| பிறப்பு | 3 அக்டோபர் 1985 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர் |
| இசைத்துறையில் | 2014 - இன்று |
| குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
| வயலின், தனிப்பாட்டு, பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் | |
அரோள் கரோலி (Arrol Corelli, பிறப்பு அக்டோபர் 3, 1985) என்பவர் ஓர் இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ சுடுடியோ தயாரித்த பிசாசு (2014) படத்திற்கு இசையமைத்தார்.[1][2] திரைப்படத் துறையில் அருள் என பலர் இருப்பதால் இயக்குநர் மிஷ்கின் அரோள் என இவருக்கு பெயரை மாற்றினார். அருளைக் கவர்ந்த இசைக் கலைஞர்களில் முதன்மையானவர் இத்தாலிய வயலின் இசை மேதை கரோலி. ஆகவே அவர் பெயரையும் தன் பெயரோடு இணைத்துக்கொண்டார்.
வாழ்க்கை
[தொகு]அருள் முருகன் என்ற இயற்பெயர் கொண்ட அரோள் கரோலியின் பூர்வீகம் தேனி மாவட்டம் என்றாலும் வளர்ந்தது சென்னை மறைமலை நகரில். இவர் தன் ஐந்து வயதில் கருநாடக சங்கீதத்தில் வயலின் வாசிக்க சிறீ இரவிக்குமாரிடம் கற்கத் துவங்கினார். 12 வயதில் ஏ. கன்யாகுமாரியிடமும் வயலின் கற்றார். ஆசிரியர் செண்ட் பீட்டரிடம் மேற்கத்திய இசையில் பியானோ கற்றுக் கொள்ளவும் ஆரம்பித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும், இசை ஆர்வத்தின் காரணமாக மேற்கொண்டு படிக்க விரும்பவில்லை என்றாலும். பெற்றோரால் சி.ஏ. படிக்க அனுப்பப்பட்டார். பெற்றோர் பேச்சை மீற முடியாமல் சி.ஏ. படித்து முடித்து பட்டையக் கணக்காளர் வேலையிலும் சேர்ந்தார். முதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் இசைக் கருவிகளை வாங்க ஆரம்பித்தார்.
சிறிய ஒலிப்பதிவு மையத்தை அமைக்கத் தேவையான கருவிகளை ஒவ்வொன்றாக வாங்கத் துவங்கினார். மேலும் இசைக்கலவை (சவுண்ட் மிக்சிங்), நிரலாக்கம் (புரோகிராமிங்) போன்ற இசையின் தொழில்நுட்பங்களையெல்லாம் இணைய கானொளி வழியாகக் கற்றுக்கொண்டார். சொந்த இசை ஆல்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்த இவருக்கு, ஒரு கட்டத்தில் இசையைத் தவிர வேறெதையும் நினைக்க முடியவில்லை. 2012 இல் வேலையை விட்டுவிட்டார். ஆனால் வீட்டில் சொல்லப் பயந்து மறைத்துவிட்டார். திரைப்படத்திற்கு இசையமைக்க விரும்பி அதற்கான முயற்சியில் இறங்கினார். திரைப்படத்துறையில் யாரையும் தெரியாத நிலை. செல்வாக்கு மிக்க குடும்பப் பின்னணியும் இல்லாததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கையிருப்பில் இருந்த சேமிப்புப் பணமும் காலியானது. ஒருவழியாக நண்பர் மூலமாக இயக்குநர் மிஷ்கினைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிஷ்கின் இரண்டு முழு நீளத் திரைக்கதைகளைச் சொல்லி அதற்கு ஏற்ப பின்னணி இசையமைக்கச் சொன்னார். பின்னணி இசையை அழகாகக் கோத்துக் கொடுக்க அதில் திருப்தி அடைந்த இயக்குநர். முதற்பட வாய்ப்பை அளித்தார்.
படத்துக்கு ஏற்றவாறு தன் மனதில் ஓடிய இசையை வயலினில் வாசித்துப் பதிவு செய்திருந்தார் அதுதான் ‘நதி போகும் கூழாங்கல் பயணம்’ என்ற பாடலாக உருவாகியது. படம் முழுக்க சிம்ஃபனி இசை பாணியில் 40 உருப்படி ஆர்கெஸ்டிரா வைத்து பிரம்மாண்டமாக இசை உருவாக்கப்பட்டது.
‘பிசாசு’ படம் கண்ட வெற்றி பாண்டியராஜ் இயக்கிய ‘பசங்க-2’ பட வாய்ப்பைத் தேடித் தந்தது. தற்போது மிஷ்கின் தயாரிப்பில் சவரக்கத்தி, இயக்குநர் வெற்றி மாறனும் பாக்ஸ் ஸ்டார் புரொடக்சனும் இணைந்து தயாரிக்கும் அண்ணனுக்கு ஜே போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.[3]
இசையமைப்பில் வெளியானவை
[தொகு]| ஆண்டு | தமிழ் | தெலுங்கு | கன்னடம் | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2014 | பிசாசு • | பிசாச்சி (2015) | ராக்சசி • | 2015 ஆண்டிற்கான சிறந்த பின்னணி இசைக்கானவிஜய் விருதுகள் பெற்றது (தமிழ்) |
| 2015 | பசங்க 2 • | மேமு (2016) |
தயாரிப்பில் உள்ள படங்கள்
[தொகு]| 2016 | தமிழ் | சவரக்கத்தி • | தயாரிப்பில் |
| 2016 | தமிழ் | துப்பறிவாளன் • | தயாரிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.youtube.com/watch?v=P-Mxk-sboN0
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-28. Retrieved 2016-06-20.
- ↑ ம.சுசித்ரா (10 சூன் 2016). "புறப்படும் புதிய இசை 11: உள்ளிருந்து ஒலித்த குரல்". தி இந்து (தமிழ்). Retrieved 20 சூன் 2016.