அரமகளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரமகளிர் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் உள்ளன. இவற்றைத் தொகுத்து எண்ணிப் பார்க்கும்போது இக்காலத்து வழிபடப்படும் கன்னிமார் தெய்வம் நினைவுக்கு வருகிறது.

  • சூர் அரமகளிர்
மலையருவியில் நீராடும் சூரர மகளிரை அடைய முடியாது. [1]
முருகன் குடிகொண்டுள்ள சோலையில் சூர்-அரமகளிர் ஆடினர். பலராக ஒன்றுகூடி ஆடினர். அவர்கள் தம் கால்களில் சிலம்பு அணிந்திருந்தனல். அவர்கள் ஆடும்போது எழுந்த சிலம்பொலி சோலையில் எதிரொலித்தது. "வெற்றி கண்ட கோழிக்கொடி வாழிய" எனப் பாடிக்கொண்டே ஆடினர். [2]
தலைவன் தலைவியின் கையைப் பற்றிக்கொண்டு சூர்-அரமகளிர் கோயிலின் முன் நின்றுகொண்டு "பிரியேன்" எனச் சூளுரை செய்தான். [3]
  • வான் அரமகளிர்
திருச்சீர் அலைவாய் முருகனின் 12 கைகளில் ஒன்று வானர மகளிர்க்கு மாலை சூட்டிக்கொண்டிருக்கும். [4]
இமயத்து உச்சியில் வாழும் வான் அரமகளிர் அன்னப்பறவையை விரும்புவர். [5]
  • வரை அரமகளிர்
வரையர மகளிர் இளமைக் கோலத்தினர். மென்மை, அரும்புமுலை, செவ்வாய், சுணங்கழ்ழகு கொண்ட மார்பகம் ஆகியவற்றைக் கொண்ட பருவப்பெண் ஒருத்தி, குன்றக் குரவனின் மகள், வரையர மகளிர் போன்றவள் எனக் குறிப்பிடப்படுகிறாள். [6]
வரையர மகளிர் அணியாக நின்றுகொண்டு தலைவியை 'நல்லவள்' 'நல்லவள்' என வாழ்த்தினார்களாம். (தலைவன் திரும்பவும் வந்தது தன்னை மணந்துகொள்ளாமையால்) தலைவனுக்கு மட்டும் தலைவி தீயவள் ஆகிவிட்டாளாம். இவ்வாறு கூறுகிறாள் ஒரு தலைவி. [7]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
    நேர் கொள் நெடு வரைக் கவாஅன் (25)
    சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.(அகநானூறு 162}
  2. 'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி
    வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்
    சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி (40)
    சூரரமகளிர் ஆடும் சோலை, (திருமுருகாற்றுப்படை)
  3. நேர் இறை முன்கை பற்றி,
    சூரரமகளிரோடு உற்ற சூளே. (குறுந்தொகை 153)
  4. ஒரு கை (115)
    நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை
    வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட; (திருமுருகாற்றுப்படை)
  5. நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
    விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,
    பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
    வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் (5)
    வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் (நற்றிணை 356)
  6. குன்றக் குறவன் காதல் மட மகள்
    வரையர மகளிர்ப் புரையும் சாயலள்;
    ஐயள்; அரும்பிய முலையள்;
    செய்ய வாயினள்; மார்பினள், சுணங்கே.(ஐங்குறுநூறு 255)
  7. வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
    பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
    நல்லள் நல்லள் என்ப; (5)
    தீயேன் தில்ல, மலை கிழவோற்கே! (ஐங்குறுநூறு 204)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரமகளிர்&oldid=1521869" இலிருந்து மீள்விக்கப்பட்டது