அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு மருத்துவக் கல்லூரி
வகைதமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனம்.
உருவாக்கம்1992
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சுருக்கப் பெயர்IRT மருத்துவக் கல்லூரி
இணையதளம்[1]

அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி (Govt. Erode Medical College), இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாநகரை அடுத்துள்ள பெருந்துறையில் அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 20கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. ஈரோடு மாநகரப் பேருந்து வழித்தடங்களின் மூலம் போக்குவரத்தில் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

ஈரோட்டை அடுத்துள்ள பெருந்துறையில் 1937ம் ஆண்டு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, 1939ம் ஆண்டு முதல் 344.36ஏக்கர் நிலப்பரப்பில் காசநோய் சானிடோரியம் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. 1986இல் தமிழக சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில், போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் பயன்பெறும் நோக்கில் ராமலிங்கம் காசநோய் மருத்துவமனை வளாகத்தை மருத்துவக்கல்லூரி அமைத்திட நிர்வாக அனுமதி அளித்தது தமிழ்நாடு அரசு. பணிகள் துவக்கப்பட்டு 1992ம் ஆண்டு முதல் சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்து கவுன்சில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களை அளித்துள்ளது. இதில் 18 இடங்கள் போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக் மீதமுள்ள 42 இடங்களில் 9 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும், 33 இடங்கள் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தால் நிரப்பப்பட்டு வந்தது. இந்த இடத்தில், 2008 முதல் மருத்துக் கல்லூரியுடன் ஓர் செவிலியர் கல்லூரியும் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், தமிழக சாலை போக்குவரத்து நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக, இக்கல்லூரியை, 2018ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று, அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.[2]. 2020ஆம் ஆண்டு முதல், 'அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி[தொகு]

இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்து கவுன்சில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களை அளித்துள்ளது. இதில் 30 இடங்கள் போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக் மீதமுள்ள 70 இடங்களில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும், 55 இடங்கள் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககத்தால் நிரப்பப்படுகிறது.

தற்போது இந்த அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் 208 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.

பாடப் பிரிவுகள்[தொகு]

இக்கல்லூரியில் முதன்மைப் பட்டமாக, மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ். (M.B.B.S.,) பட்டப்படிப்பு உள்ளது. பட்டமேற்படிப்புகளாக பொது மருந்தியல், (M.D. General Medicine) பொது அறுவை மருத்துவம் (M.S. General), குழவியர் அறுவை மருத்துவம் (M.Ch.) உள்ளன. இங்கு மருத்துவப் பட்டயக் கல்விபடிப்புகளாக சில படிப்புகள் (D.G.O, D.C.H, D.A, ).

மேலும் மருத்துவம் சார்புப் படிப்புகளான செவிலியர் படிப்புக்கு 60 இடங்களும் மற்றும் மருந்தாளுமை பட்டயப்படிப்புகளும் உள்ளன.

வசதிகள்[தொகு]

கல்லூரி, 10 க்கும் மேலான துறைகளில், தனியான நூலக வசதியுடனும், நல்ல மருத்துவ ஆய்வுக்கூடங்களுடனும் இயங்குகிறது. இக்கல்லூரியில், ஓர் ஆண்கள் விடுதியும், ஓர் பெண்கள் விடுதியும் உள்ளன. இக்கல்லூரியில், மிகப்பெரிய துடுப்பாட்ட மைதானமும், தனியான உள்ளரங்கமும் கல்விசாரா செயல்களுக்கு வசதிகள் செய்கின்றன.

மருத்துவமனை[தொகு]

ஈரோட்டை அடுத்துள்ள பெருந்துறையில் 1937ஆம் ஆண்டு 344.36ஏக்கர் நிலப்பரப்பில் காசநோய்ப் பிரிவு உருவாக்கப்பட்டது. பின்னர் இது இராமலிங்கம் காசநோய் சானிடோரியம் (Ramalingam Tuberculosis Sanatorium) மருத்துவமனை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1992ம் ஆண்டு கல்லூரி உருவாக்கத்திற்குப் பின் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையுடன் அருகில் செயல்பட்டு வந்த இராமலிங்கம் காசநோய் (RTS Hospital) மருத்துவமனையும் இம்மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, ஈரோடு

மேற்கோள்கள்[தொகு]

  1. "mci list of colleges". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  2. "பெருந்துறை ஐஆர்டி மருத்துவ கல்லூரியை அரசு ஏற்றது காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப சுகாதாரத் துறை நடவடிக்கை". இந்து தமிழ். திசம்பர் 15 2018.