அம்ரித் கவுர்
ராஜ்குமாரி பிபிஜி அம்ரித் கவுர் (Rajkumari Bibiji Amrit Kaur) (1889 பிப்ரவரி 2 -1964 பிப்ரவரி 6) இவர் ஓர் இந்திய ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இந்திய சுதந்திர இயக்கத்துடன் நீண்டகாலமாக இணைந்திருந்ததைத் தொடர்ந்து, இவர் 1947 இல் இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டு 1957 வரை அப்பதவியில் இருந்தார். கவுர் தனது பதவிக் காலத்தில், இந்தியாவில் பல சுகாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். மேலும் இவர் இந்தத் துறைக்கு அளித்த பங்களிப்புகளுக்காகவும், பெண்கள் உரிமைகளை ஆதரிப்பதற்காகவும் பரவலாக நினைவுகூரப்படுகிறார். கவுர் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
அமிர்த் கவுர் 1889 பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் (அப்பொழுது ஐக்கிய மாகாணங்கள்) பிறந்தார். கபுர்தலா ராஜாவின் இளைய மகனான ராஜா 'சர்'ஹர்னம் சிங் அலுவாலியா மற்றும் அவரது மனைவி பிரிசில்லா கோலக்நாத் (ராணி லேடி ஹர்னம் சிங்) ஆகியோருக்கு பிறந்தார். ராஜா சர் ஹர்னம் சிங் தனது மூத்த சகோதரரின் அகால மரணத்திற்குப் பின்னர், அடுத்தடுத்து ஏற்பட்ட அரியணைக்கான போராட்டத்திற்குப் பின்னர் கபுர்தலாவை விட்டு வெளியேறினார். அம்ரித் கவுர் ஒரு ஆங்கிலிகன் கிறிஸ்தவ சூழலில் வளர்க்கப்பட்டார். ஏனெனில் இவரது தந்தை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் இவரது தாய் ஒரு பெங்காலி கிறிஸ்தவர் ஆவார். இங்கிலாந்தின் தோர்செட்டில் உள்ள செர்போர்ன் மகளிர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். மேலும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்லூரிக் கல்வியைப் பெற்றார். இங்கிலாந்தில் கல்வி முடித்ததும், இந்தியா திரும்பினார். [1]
தொழில்[தொகு]
இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்பு[தொகு]
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், கவுர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஆர்வம் காட்டினார். கோபால கிருஷ்ணா கோகலே உள்ளிட்ட இந்திய தேசிய காங்கிரசு தலைவர்களுடன் இவரது தந்தை நெருங்கிய தொடர்பைப் பகிர்ந்து கொண்டார். 1919 இல் மும்பையில் சந்தித்த மகாத்மா காந்தியைச் சந்தித்தப்பின் அவரது எண்ணங்கள் மற்றும் பார்வையால் கவுர் ஈர்க்கப்பட்டார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரசில் 400 க்கும் மேற்பட்ட அமைதியான போராட்டக்காரர்களை பிரிட்டிசு படைகள் சுட்டுக் கொன்றபோது, கவுர் இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். பின்னர், இவர் முறையாக காங்கிரசில் சேர்ந்தார் .மேலும், இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். அதே நேரத்தில் சமூக சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தினார். [2]
கவுர் 1927 இல் அகில இந்திய மகளிர் மாநாட்டை நிறுவினார். [2] பின்னர் இவர் 1930இல் அதன் செயலாளராகவும், 1933 இல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1930இல் மகாத்மா காந்தி தலைமையிலான தண்டி , உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிசு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். கவுர் 1934 இல் காந்தியின் ஆசிரமத்தில் வசிக்கச் சென்றார். இவருக்கு பிரபுத்துவ பின்னணி இருந்தபோதிலும் ஒரு கடினமான வாழ்க்கை முறையை பின்பற்றினார்.
இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக, 1937ஆம் ஆண்டில், இன்றைய கைபர்-பக்துன்வாவில், பன்னுவுக்கு நல்லெண்ணத் தூதராகச் சென்றார். பிரித்தானிய அதிகாரிகள் இவரை தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர், பிரிட்டிசு அதிகாரிகள் இவரை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமித்தனர். ஆனால் 1942இல் வெளியேறு இந்தியா இயக்கத்துடன் இவர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த பதவியை ராஜினாமா செய்தார். அந்த நேரத்தில் இவர் செய்த செயல்களுக்காக இவர் பிரிட்டிசு அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார். [3]
உலகளாவிய வாக்குரிமைக்கான காரணத்தை அவர் வென்றார். மேலும் இந்திய உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய லோதியன் குழு முன், மற்றும் இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து பிரிட்டிசு நாடாளுமன்றத்தின் கூட்டுத் தேர்வுக் குழு முன் சாட்சியமளித்தார்.
கவுர் அகில இந்திய மகளிர் கல்வி நிதி சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். இவர் புதுதில்லியில் உள்ள லேடி இர்வின் கல்லூரியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் முறையே 1945 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் இலண்டன் மற்றும் பாரிஸில் யுனெஸ்கோ மாநாடுகளுக்கு இந்திய தூதுக்குழுவின் உறுப்பினராக அனுப்பப்பட்டார். அகில இந்திய நூற்பாலை சங்கத்தின் அறங்காவலர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கவுர் கல்வியறிவின்மையைக் குறைப்பதற்கும், அப்போது சில இந்திய சமூகங்களிடையே நடைமுறையில் இருந்த குழந்தைத் திருமணங்களின் வழக்கத்தையும், பெண்களுக்கான பர்தா முறையையும் ஒழிப்பதற்காகப் பணியாற்றினார்.
சுதந்திரத்திற்குப் பின்: அரசியலமைப்பு சபை உறுப்பினர், மற்றும் சுகாதார அமைச்சர்[தொகு]

ஆகஸ்ட் 1947 இல் காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, கவுர் இந்திய அரசியலமைப்புச் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். இது இந்திய அரசியலமைப்பை வடிவமைக்க நியமிக்கப்பட்ட அரசாங்க அமைப்பாகும் . [4] இவர் அடிப்படை உரிமைகள் தொடர்பான துணைக்குழு மற்றும் சிறுபான்மையினருக்கான துணைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். [5]
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, அமிர்த் கவுர் ஜவகர்லால் நேருவின் முதல் அமைச்சரவையின் ஒரு பகுதியாக ஆனார்; அமைச்சரவை பதவியில் இருந்த முதல் பெண் இவர். இவருக்கு சுகாதார அமைச்சகம் நியமிக்கப்பட்டது. [2] 1950 ஆம் ஆண்டில், இவர் உலக சுகாதார சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி மற்றும் முதல் ஆசியர் ஆனார்; அந்த நிறுவனத்தின் வரலாற்றின் முதல் 25 ஆண்டுகளில், இரண்டு பெண்கள் மட்டுமே அந்தப் பதவியை வகித்தனர்.
சுகாதார அமைச்சராக, கவுர் புதுதில்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை நிறுவுவதில் ஒரு கருவியாகப் பங்கு வகித்தார். மேலும் அதன் முதல் தலைவராகவும் ஆனார். இந்த நிறுவனத்தை நிறுவியதற்காக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு ஜெர்மனி, சுவீடன் மற்றும் அமெரிக்காவிலிருந்து நிதியுதவி பெற்றார் . இவரும் இவரது சகோதரர்களில் ஒருவரும் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள தங்கள் மூதாதையர் சொத்து மற்றும் வீட்டை ( மனோர்வில்லி என்று பெயரிடப்பட்டது) நன்கொடையாக வழங்கினர்.
கவுர் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவராக பதினான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவரது தலைமையின் போது, இந்திய செஞ்சிலுவை சங்கம் இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் பல முன்னோடிப் பணிகளைச் செய்தது. இவர் இந்திய காசநோய் சங்கம் மற்றும் சென்னையில் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கினார். இவர் அமிர்த் கவுர் செவிலியர் கல்லூரி மற்றும் இந்திய தேசிய விளையாட்டுக் கழகத்தைத் தொடங்கினார்.
1957 முதல் 1964 இல் அவர் இறக்கும் வரை, இவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார் . 1958 மற்றும் 1963 க்கு இடையில் கவுர் தில்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் தலைவராக இருந்தார். இவர் இறக்கும் வரை, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், இந்திய காசநோய் சங்கம் மற்றும் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் கார்ப்ஸ் ஆகியவற்றின் தலைவர் பதவிகளை தொடர்ந்து வகித்தார். இவருக்கு ரெனே சான்ட் நினைவு விருதும் வழங்கப்பட்டது. [6]
கவுர் 1964 பிப்ரவரி 6 அன்று புதுதில்லியில் இறந்தார். [7] [8] இன்று, அவரது தனிப்பட்ட ஆவணங்கள் டெல்லியின் தீன் மூர்த்தி மாளிகையில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் உள்ள காப்பகங்களின் ஒரு பகுதியாக இருக்கிறது. [9]
குறிப்புகள்[தொகு]
- ↑ https://www.nytimes.com/1964/02/07/archives/rajkumari-amrit-kaur-75-dies-indias-first-minister-of-health.html
- ↑ 2.0 2.1 2.2 Bhardwaj, Deeksha (2 February 2019). "Rajkumari Amrit Kaur, the princess who was Gandhi’s secretary & India’s first health minister". https://theprint.in/theprint-profile/rajkumari-amrit-kaur-the-princess-who-was-gandhis-secretary-indias-first-health-minister/186245/.
- ↑ Srinivas, V (24 September 2016). "RajKumari Amrit Kaur". Ministry of Health and Family Affairs. https://pib.gov.in/newsite/feacontent.aspx?relid=151084.
- ↑ CADIndia பரணிடப்பட்டது 2019-05-21 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Rajkumari Amrit Kaur பரணிடப்பட்டது 2019-03-23 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Genealogy" இம் மூலத்தில் இருந்து 2018-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180808230543/http://members.iinet.net.au/~royalty/ips/k/kapurthala.html.
- ↑ Verinder Grover. Great Women of Modern India.
- ↑ "Rajkumari Amrit Kaur, 75, Dies". 6 February 1964. https://www.nytimes.com/1964/02/07/rajkumari-amrit-kaur-75-dies.html?_r=0.
- ↑ "Archives". Nehru Memorial Museum & Library இம் மூலத்தில் இருந்து 3 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110503203613/http://www.nehrumemorial.com/archivehead.php.
மேலும் படிக்க[தொகு]
- India’s 50 Most Illustrious Women (ISBN 81-88086-19-3) by Indra Gupta