அமீனா மசூத்து சன்சுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமீனா மசூத்து சன்சுவா, (Amina Masood Janjua உருது: آمنہ مسعود جنجوعہ 28 பிறப்பு: ஏப்ரல் 1964), வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தலுக்கு எதிரான இவரது பணியினால் பரவலாக அறியப்படும் இவர் ஒரு பாக்கித்தானிய போராளியுமாவார்.இவர் பாக்கித்தானின் மனித உரிமைகள் பாதுகாப்பு குழுவின் தலைவராக உள்ளார். [1] இவரது கணவர் மசூத் அகமது சன்சுவா 30 ஜூலை 2005 இல் காணாமல் போனபோது, இவரது சமூக செயல்பாட்டு வாழ்க்கை தொடங்கக் காரணமாக அமைந்தது. வலுக்கட்டாயமாக காணாமல் போனதைத் தவிர, வெளிநாடுகளில் உள்ள கைதிகளுக்கு சட்டரீதியான ஆதரவை வழங்குதல், கட்டாயப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை ஏற்பாடு செய்தல் மற்றும் சிறைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் இருந்து சித்திரவதைகளை ஒழித்தல் ஆகியவை இவரது முக்கிய பணிகளில் அடங்கும். காணாமல் போனவர்களின் செய்தித் தொடர்பாளராக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் இவர் அடிக்கடி உரையாற்றியுள்ளார். மேலும், இவ்வப்போது நாட்டின் உருது மற்றும் ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் பாக்கித்தான், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மர்தானில் சகிதா மற்றும் இச்லாம் அக்தர் சுபாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

கல்வி[தொகு]

இவர் தனது ஆரம்பக் கல்வியை ரிசல்பூரின் மாட உயர்நிலைப் பள்ளியில் (மர்தானுக்கு அருகில் உள்ள ஒரு நகரம் மற்றும் விமானப்படை தளம்) பயின்றார், அங்கு இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தார். மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்ற பிறகு ரிசல்பூரில் உள்ள நிசார் ஷாஹீத் கல்லூரியில் சேர்ந்தார். நிசார் ஷாஹீத் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்த பிறகு, இவர் ராவல்பிண்டி மகளிர் கல்லூரியில் சேர்ந்தார், அங்கே இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். [2] ஒரு நேர்காணலில் இவளால் விவரிக்கப்பட்டுள்ளபடி, குழந்தை பருவத்திலிருந்தே ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஓவியத்தின் இந்த இயற்கையான திறமை இவரை பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான வாய்ப்பினை வழங்கியது. நுண்கலைகளில் முதுகலைப் பட்டப்பில் வெள்ளிப் பதக்கத்தோடு பட்டம் பெற்றார். முதுகலைப் பட்டப் படிப்பிற்குப் பிறகு பாக்கித்தானின் புகழ்பெற்ற ஓவியர்களான மன்சூர் ரகி [3] மற்றும் ஹாஜிரா மன்சூர் ஆகியோர் இவரது ஓவியத் திறனை மெருகூட்டுவதில் வழிகாட்டியாக திகழ்ந்துள்ளனர். [4]

கலைத்துறையில் தொழில் வாழ்க்கை[தொகு]

ஒரு கலைஞராக இவருக்கு எண்ணெய்க் குழைவனம், அக்ரிலிக் வண்ணந்தீட்டுதல் ஆகியன இவருக்கு மிகவும் பிடித்தமான வண்ணப்பூச்சு முறைகளாகும். இவரது படைப்புகள் வெளிப்பாடு மற்றும் கற்பனாவாதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவர் வழக்கமாக ஓவியங்கள் மற்றும் வாழ்க்கை வரைபடங்களை வரைவதற்கு விரும்புகிறார். இவரது படைப்புகள் பல தனி மற்றும் குழு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டன.

கவிதை[தொகு]

இவளுடைய கவிதைகள் எப்போதாவது இவளுடைய வலைப்பதிவுகளில் பதிவேற்றப்படும். ஆனால் இவர் இதுவரை எந்த கவிதைத் தொகுதியையும் வெளியிடவில்லை. [5]

திருமண வாழ்க்கை[தொகு]

இவர் இராணுவ குடும்பத்தைச் சேர்ந்த மசூத் அகமது சன்சுவாவை திருமணாம் செய்தார். இவரது மாமனார் இள பேரரையர் ராஜா அலி முஹம்மது மற்றும் இரண்டு மூத்த சகோதரர்கள் பாக்கித்தான் இராணுவம் மற்றும் பாக்கித்தான் விமானப்படையில் பணியாற்றினர் . இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வழக்கறிஞர் இயக்கத்தில் பங்கேற்பு[தொகு]

2007 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதியும் பின்னர் நவம்பர் 3 ஆம் தேதியும் பர்வேசு முஷாரப், பாக்கித்தான் தலைமை நீதிபதி இப்திகார் முஹம்மது சவுத்ரியையும் மற்ற நீதித்துறையையும் நீக்கி அனைத்து நீதிபதிகளையும் வீட்டுக் காவலில் வைத்தார். இதனால் பாக்கித்தானின் குடிசார் சமூகம் ,குறிப்பாக வழக்குரைஞர் சமூகம் கோபமடைந்து நீதித்துறையை மீட்டெடுப்பதற்கான வரலாற்று இயக்கத்தைத் தொடங்கின. இந்த இயக்கம் " வழக்கறிஞர்கள் இயக்கம் " என்று பரவலாக அறியப்பட்டது. ஆமினாவின் தலைமையின் கீழ் காணாமல் போன குடும்பங்கள் வெளியேறி இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். சட்டத்தின் ஆட்சிக்கான ஒவ்வொரு முயற்சியிலும் இவர் பங்கேற்றார். கடைசியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி மற்றும் மீதமுள்ள நீதிபதிகள் 16 மார்ச் 2009 அன்று பதவியில் சேர்ந்தனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Defence of Human Rights Pakistan".
  2. "F.G College for Women Rawalpindi".
  3. "Mansoor Rahi".
  4. "Hajra Masroor".
  5. "Urdu Poetry by Amina Masood Janjua". Archived from the original on 2012-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீனா_மசூத்து_சன்சுவா&oldid=3275882" இலிருந்து மீள்விக்கப்பட்டது