ஆவிச்சி மெய்யப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார்
பிறப்பு(1907-07-28)சூலை 28, 1907
காரைக்குடி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்புஆகத்து 12, 1979(1979-08-12) (அகவை 72)
சென்னை
செயற்பாட்டுக்
காலம்
1934–1973
வாழ்க்கைத்
துணை
அலமேலு மெய்யப்பன், ராஜேஸ்வரி மெய்யப்பன்[1]

ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[2] தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன.

இளம்பருவம்[தொகு]

மெய்யப்பர் காரைக்குடியில் வாழும் நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907.[4] ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.[1] இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர்.[4][5] தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.[1][2][4] தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.[4]

திரைத்துறையில் தொடக்கக் காலம்[தொகு]

டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.[2][4] 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.[4] நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.[6][7] இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.[4] 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.[1] அதே ஆண்டில், பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட சபாபதி, போலி பாஞ்சாலி, என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1][7] பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.

ஏவியெம் புரொடக்சன்சு[தொகு]

ஏவிஎம் நிறுவன முத்திரை

நவம்பர் 14, 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின் சாந்தோமில் நிறுவினார். கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.[4][8] இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.[9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.[10] 25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும்[11], பகர் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

1950களில்[தொகு]

1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[12] தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார்.[12][13][14] ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[15] இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.[16] இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.[17] இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது.[18][19] 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது.[20] இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.[21]

1960கள்[தொகு]

1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.

இந்தித் திரைப்படங்கள்[தொகு]

திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது

ஏவி.எம். அறக்கட்டளை[தொகு]

மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.

கட்டிடங்கள்[தொகு]

இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.

அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு[தொகு]

1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்:

வ.எண் ஆண்டு தலைப்பு சொற்பொழிவாளர்
1 1984 கம்பன் - புதிய பார்வை[22] அ. ச. ஞானசம்பந்தன்
2 1985 மூன்று வினாக்கள் மு. மு. இஸ்மாயில்
3 1986 கம்ப சூத்திரம் எஸ் ராமகிருஷ்ணன்
4 1987
5 1988
6 1989
7 1990 கம்பனின் அரசியல் கோட்பாடு அப்துல் ரகுமான்
8 1991
9 1992
10 1993 கம்பர் முப்பால் ம. ரா. போ. குருசாமி
11 1994 கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
12 1995
13 1996
14 1997 கம்பனும் கீதையும் இளம்பிறை மணிமாறன்
15 1998
16 1999
17 2000
18 2001 கம்பன் நேற்று - இன்று - நாளை சுகி. சிவம்
19 2002
20 2003
21 2004
22 2005
23 2006
24 2007
25 2008 சுந்தர காண்டம் - புதிய பார்வை பழ. பழனியப்பன்
26 2009
27 2010 கணினி யுகத்திற்குக் கம்பர் முனைவர் இரா. மோகன்
28 2011 கம்பன் பார்வையில் கடவுள் சுகி.சிவம் [23]
29 2012 கம்பன் பிறந்த தமிழ்நாடு[24] பேராசிரியர் சரஸ்வதி ராமநாதன்
30 2013 கிழக்கும் மேற்கும் இளம்பிறை மணிமாறன் [25]
31 2014 கம்பனில் சட்டமும் நீதியும் நீதிபதி வெ. சுப்பிரமணியன் [26]
32 2015 கம்பனில் சுவைநுகர் கனிகள் இரெ.சண்முகவடிவேலு[27]
33 2016 கம்பன் காட்டும் யோகியர் மரபின் மைந்தன் முத்தையா[28]
34 2017 கடல் தாண்டிய கதாநாயகன்[29] கு. ஞானசம்பந்தன்
35 2018 உடன்பிறந்த தம்பியரும் உடன்பிறவாத் தம்பியரும் திருப்பூர் கிருஷ்ணன்[30]
36 2019 கம்பனில் பிரமாணங்கள் இலங்கை இ. ஜெயராஜ்[31]
37 2022 கம்பனில் நகைமலர்கள் ஏசு. ராசா[32]

இறுதிக்காலம்[தொகு]

மெய்யப்பரின் உடல்நலம் குன்றியதால் திரைப்படத் தயாரிப்புகள் குறைந்தன. 1970களில் குறைவான திரைப்படங்களே வெளியாயின. மேலும், இவரது குடும்பத்தினர் சமூகத் தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாண்டுகளில் நான்கு திரைப்படங்களை வெளியிட்டனர். பொம்ம பொருசா, தில் கா ராசா, அக்கா தமுடு, சைசே கோ தைசா ஆகிய திரைப்படங்களில் பொம்ம பொருசா, தில் கா ராசா ஆகியன ஓரளவு வெற்றியடைந்தன. கிருசுணன் - பஞ்சு ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் அக்கா தமுடு என்ற வெற்றித் திரைப்படமும் வெளியானது. ஏவியெம் இயக்கி செயலலிதா நடித்த ஒரே தெலுங்குத் திரைப்படம் இதுவே. 1973 இல் மெய்யப்பர் தன் கடைசித் திரைப்படத்தை சிதேந்திரா என்றவரின் முன்னணி நடிப்பில் வெளியான சைசே கோ தைசா என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தன் சமூகத் தொண்டையும் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டார். மெய்யப்பர் தன் 72 ஆவது அகவையில் ஆகத்து 12, 1979 அன்று இறந்தார். இவரது கடைசி விருப்பத்திற்கேற்ப, இவரது மகனின் பெயரில் ஏவியெம் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டது.

சிறப்புகள்[தொகு]

இவரது நாற்பது ஆண்டு காலத் திரை வரலாற்றில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவற்றில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும். நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார். பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார். அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும், மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் செயலலிதாவும் நடித்திருந்தனர். இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமல்காசன், மேஜர் சந்திரகாந்து ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவரது வெற்றிகளிலேயே பெரியது இவரது பெரிய தொழிற்கூடங்கள் தான். திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து சாதனை புரிந்துள்ளார். ஏவியெம் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக வெற்றித் திரைப்படங்களை வழங்குகிறது. மெய்யப்பரின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன்களான பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புன்னாமி நாகு (சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம்), முரட்டுக் காளை (ரசினிகாந்திற்கு வெற்றியளித்த திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், மின்சாரக் கனவு, ஜெமினி, பேரழகன் ஆகியன குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள். மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் சிவாஜி திரைப்படம் வெளியானது. ஏறத்தாழ 77 கோடியில் உருவான இத்திரைப்படமே தமிழ்த் திரைத்துறையின் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். தற்காலத்தில் அதிக தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். சரவணின் மகன் குகன், பாலசுப்பிரமணியத்தின் மகன் குருநாத் ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். 1955 இல், அம் பஞ்சி ஏக் தல் கே திரைப்படத்தில் நடித்ததற்காக பிரதமர் மெய்யப்பருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. மெய்யப்பரின் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், இவர் நினைவாக குறுவட்டுகள் வெளியிட்டது. அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2006, யூலை 30 இல், மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி, மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார்.

மேலும் படிக்கவும்[தொகு]

  • எனது வாழ்க்கை அனுபவங்கள் - தன்வரலாறு - அ. மெய்யப்பச் செட்டியார்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "A.V. Meiyappa Chettiar Birth Centenary". Archived from the original on 2008-03-18. பார்க்கப்பட்ட நாள் 2008-04-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 2.2 2.3 Guy, Randor (28 July 2006). "AVM, the adventurer". The Hindu: Friday Review இம் மூலத்தில் இருந்து 2008-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080523110401/http://www.hindu.com/fr/2006/07/28/stories/2006072802680100.htm. பார்த்த நாள்: 2008-04-13. 
  3. "The Stamp of Honour". The Hindu: Friday Review. 10 July 2000 இம் மூலத்தில் இருந்து 2008-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080307050819/http://www.hinduonnet.com/thehindu/2000/07/10/stories/09100224.htm. பார்த்த நாள்: 2008-04-13. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "Biography of AVM". Archived from the original on 2008-02-26. பார்க்கப்பட்ட நாள் 2008-04-13.
  5. "Saga of a Legend". The Hindu. 15 August 2003 இம் மூலத்தில் இருந்து 2008-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080502145752/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/15/stories/2003081501440200.htm. பார்த்த நாள்: 2008-04-13. 
  6. "Detailed biography of T.R.Mahalingam". Archived from the original on 2008-03-14. பார்க்கப்பட்ட நாள் 2008-04-14.
  7. 7.0 7.1 "Tamil Cinema History – The Early Days. Part II:1937-1944". Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  8. "Landmarks in Tamil cinema". Archived from the original on 2008-04-10. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  9. "From Naam Iruvar to Sivaji". The Hindu:Business Line. 15 August 2007. http://www.blonnet.com/2007/08/15/stories/2007081552860200.htm. பார்த்த நாள்: 2008-04-16. 
  10. Umashankar, Sudha (29 April 2001). "Bali Uncensored". The Hindu இம் மூலத்தில் இருந்து 2008-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080522055518/http://www.hinduonnet.com/2001/04/19/stories/13190782.htm. பார்த்த நாள்: 2008-04-14. 
  11. "Entry for Jeevitham in IMDB". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  12. 12.0 12.1 Guy, Randor (27 July 2001). "Talent, charisma and much more". The Hindu இம் மூலத்தில் இருந்து 2008-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080522055523/http://www.hinduonnet.com/2001/07/27/stories/09270225.htm. பார்த்த நாள்: 2008-04-16. 
  13. R. Rangaraj. "The rise of a colossus". chennaionline.com. Archived from the original on 2008-03-25. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  14. Personalities of Indian cinema -- Stars:Sivaji Ganesan
  15. "Entry for Andha Naal in IMDB". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  16. "History of Tamil cinema". culturopedia.com. Archived from the original on 2009-01-18. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
  17. "Review of film Andha Naal". Archived from the original on 2008-05-21. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
  18. IMDB entry for Jatakaphalam
  19. "Yesteryear actress Kamala Bai in coma". The Indian Express News Service. 21 November 1998 இம் மூலத்தில் இருந்து 2008-05-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080521100105/http://www.expressindia.com/news/ie/daily/19981122/32650154p.html. பார்த்த நாள்: 2008-04-16. 
  20. "AVM's Bhookailas (1958) film review from cinegoer.com". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.
  21. IMDB entry for Bhookailash
  22. [1]
  23. தினமலர் 2011 சூலை 29
  24. [2]
  25. [3]
  26. [4]
  27. சென்னை கம்பன் கழக விழா அழைப்பிதழ், 2015-07-01, பக்.4
  28. சென்னை கம்பன் கழக விழா அழைப்பிதழ், 2016-07-18, பக்.4
  29. http://www.nlb.gov.sg/biblio/14541624]
  30. சென்னை கம்பன் கழக விழா அழைப்பிதழ், 2018-07-20,பக்.4
  31. சென்னை கம்பன் கழக விழா அழைப்பிதழ், 2019-07-20, பக்.4
  32. தினத்தந்தி 2022 ஆகசுடு 12

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவிச்சி_மெய்யப்பன்&oldid=3626919" இலிருந்து மீள்விக்கப்பட்டது