அனகாபுத்தூர் அகத்தீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனகாபுத்தூர் அகத்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரத்திற்குக் கீழ்த்திசையில் அமைந்துள்ள அனகாபுத்தூர் என்னுமிடத்தில் உள்ளது. ஆனைகளைப் பாதுகாத்து வந்ததால் இவ்வூர் ஆனைகாபுத்தூர் என்று முன்னர் அழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 43 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°58'58.2"N, 80°07'42.6"E (அதாவது, 12.982828°N, 80.128502°E) ஆகும்.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக அகத்தீசுவரர் உள்ளார். இறைவன், இறைவியின் திருமணத்தின்போது தென் கோடி உயர்ந்து, வட கோடி தாழ்ந்து போன நிலையில் இறைவன் அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அகத்தியர் வரும் பல இடங்களில் பூசை செய்து வந்தார். அவ்வாறான இடத்தில் இக்கோயிலும் ஒன்றாகும். ஆதலால் இறைவன் அகத்தீசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தவல்லி ஆவார்.இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார்.[1]

அமைப்பு[தொகு]

ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. ராஜ கோபுரத்தின் உட்புறம் தென்புறத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டு கோயில் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் உள்ளனர். அருகே பைரவர் உள்ளார். சனீசுவர சன்னதி காணப்படுகிறது. கோஷ்டத்தில் தென்புறம் விநாயகரும் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும் துர்க்கையும் உள்ளனர். இக்கோயிலைச் சுற்றி சப்த கன்னியர்களுக்கு கோயில்கள் உள்ளன. இக்கோயிலுடன் இணைந்து ஆலவட்டம்மன் என்றும் அடஞ்சியம்மன் என்றும் அழைக்கப்படும் கெங்கையம்மன் மற்றும் பச்சையம்மன் கோயில்கள் உள்ளன.[1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]