அணிமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணிமூர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள சிற்றூர். திருச்செங்கோட்டிலிருந்து கொக்கராயன்பேட்டை வழியாகப் பள்ளிபாளையம் செல்லும் சாலையின் நான்காம் கல் தொலைவில் பிரியும் ஊராட்சிச் சாலையில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. கொங்கு வேளாளக் கவுண்டர், அருந்ததியர், பறையர் ஆகிய சாதியினர் மிகுதியாகவும் பிற சாதியினர் ஓரிரு குடும்பம் என்னும் அளவிலும் வசிக்கின்றனர். அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. மாரியம்மன் கோயிலும் படைவீட்டம்மன் கோயிலும் இவ்வூரில் சிறப்புப் பெற்றவை. ஓராண்டு மாரியம்மனுக்கும் அடுத்த ஆண்டு படைவீட்டம்மனுக்கும் என மாற்றி மாற்றித் திருவிழா நடத்துவர். ஊர் என்னும் பொதுக்கூறினையும் அணி என்னும் சிறப்புக்கூறினையும் இவ்வூர் பெற்றுள்ளது. நீர் வளம் நிறைந்த வசிப்பிடத்திற்கு ஊர் என்னும் பொதுப்பெயர் வழங்குவது இயல்பு. அணி என்றால் அழகு எனப் பொருள். அழகு நிறைந்த ஊர் என இதன் பொருளை விரிவாக்கலாம். ஆனால் இவ்வூரில் நீர்வளம் குறைவு. மேட்டாங்காடுகள் என்னும் மானாவாரி நிலங்களே அதிகம். ஆகவே ஊருக்கு இப்பெயர் அமையக் காரணம் விளங்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிமூர்&oldid=2266914" இலிருந்து மீள்விக்கப்பட்டது