அசுணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசுணம் என்பது சங்க இலக்கியங்களில் அரிதாக குறிக்கப்படும் ஒரு இசையறி விலங்கு ஆகும். இது கற்பனை விலங்காக கூட இருக்கலாம். அசுணம் என்பது பறவையா? அல்லது விலங்கா? என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிக்கு மேல் ஒலி அளவு இருந்தால் அது இரைச்சலாக மாறி விடும். ஒலி மாசை உண்டு பண்ணிவிடும். அசுணம் இனிய இசையை ரசிக்கும். அதே நேரத்தில் கொடிய இசையைக் கேட்க நேரி்ட்டால் உடனே உயிரை விட்டு விடும். [1]

கூதிர் காலத்தில் கூதளம் பூவில் மொய்க்கும் வண்டுகள் பாடும் இசையை அசுணம் கூர்ந்து கேட்கும் என்று சங்கப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. [2]

கம்பராமாயணம் இந்த அசுணம் பற்றிக் குறிப்பிடுகிறது. வேங்கை, கோங்க மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடும் கொடிச்சியரின் பாடலைக் கேட்டு அசுணமா நெருங்கி வருவதைப் பார் என்று சித்திரகூட மலையில் இராமன் சீதைக்குக் காட்டுவதாக அந்தப் பாடல் வருகிறது. [3]

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் இயற்றிய நீல மலர் கோலத் திருமேனி என்று தொடங்கும் பாடலின் அநுபல்லவியில்
"சோலை தனில் நடமாடும் தூய குழல் இசைபாடும்
சுகமுறும் அசுணமும் மகிழ விரித்தாடும்
இறகு நிழலமரும் எழிலுக்கெழிலான" என்ற வரிகள் உள்ளன. இப்பாடலுக்கு விளக்கம் எழுதிய சிலர் அசுணம் என்பதை மயில் என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேற்கோள்:[தொகு]

  1. சுந்தர ஆவுடையப்பன், சங்கச் செவ்வி, செம்மொழிப் பெட்டகம், வெளியீடு்: ராம்ராஜ் காட்டன் வேட்டிகள் சட்டைகள் பனியன் நிறுவனத்தார், திருப்பூர், முதற் பதிப்பு, ஜூன் 2010
  2. "விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
    கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
    மாதர் வண்டின் நயம்வரும் தீம் குரல்
    மணம் நாறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும்" - நற்றிணை - 244
  3. 'நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேரிழை! நிறை தேன்
    வனைந்த வேங்கையில், கோங்கினில், வயிந்தொறும் தொடுத்துக்
    குனிந்த ஊசலில், கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
    கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன-காணாய்! - கம்பராமாயணம், சித்திரகூடப் படலம், பாடல் 24

வெளி இணைப்புகள்[தொகு]

தமிழ்க் கலைக்களஞ்சியம் தொகுதி - ஒன்றில் அசுணம் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுணம்&oldid=3900906" இலிருந்து மீள்விக்கப்பட்டது