அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு
சுருக்கம்அ.இ.பெ.வ.கூ.
உருவாக்கம்2007
தலைமையகம்பெங்களூர்
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியாஇந்தியா
சார்புகள்பெண் வழக்கறிஞர்களின் பன்னாட்டு கூட்டமைப்பு
வலைத்தளம்www.aifwl.com

அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு (All India Federation of Women Lawyers) என்பது இந்தியப் பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பைக் குறிக்கிறது. 2007 ஆம் ஆண்டு இக்கூட்டமைப்பு நிறுவப்பட்டது. சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் இக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகச் செயல்படுகிறது. [1] இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பல பெண் வழக்கறிஞர்களின் ஆதரவுடன், கூட்டமைப்பு தனது சேவை நடவடிக்கைகளைத் தொடங்கியது. அனைத்துலகப் பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்புடன் இக்கூட்டமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்[தொகு]

  1. இந்திய அரசியலமைப்பை நிலைநாட்டுதல், சட்டத்தின் பாதுகாப்பிற்காக உழைத்தல்
  2. நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டுதல், நீதி நிர்வாகத்தில் அதிக செயல்திறனை உறுதி செய்தல்
  3. குறிப்பாக சட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பயன்படுத்த உதவுதல்.
  4. பெண் வழக்கறிஞர்களின் தகுதி, ஆர்வம், கௌரவம, உரிமைகள் மற்றும் சலுகைகள், கண்ணியம் ஆகியாவற்றை ஆதரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிலைநிறுத்தல்.
  5. சட்டவியல் மற்றும் ஒப்பீட்டு சட்டங்களின் அறிவியலில் ஆய்வுகளை ஊக்குவித்தல்
  6. பல்வேறு நாடுகள் தொடர்பான அறிவைப் பரப்புதல், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்
  7. அனைத்து மத்திய மற்றும் மாநில சட்டங்கள் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், சலுகைகள் மற்றும் ஆர்வத்தைப் பற்றிய அல்லது பாதிக்கும் கருத்துக்களைப் படித்தல் மற்றும் கருத்து தெரிவித்தல்
  8. குறைந்த செலவில் நீதியைப் பெறுதலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் [2]

தலைவர்கள்[தொகு]

சீலா அனீசு அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்தார். இப்போது இவர் பன்னாட்டு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் இயக்குநராக உள்ளார். [3]வி.பி. சீமந்தினி, எம் பாசுகரலட்சுமி, கே சாந்தகுமாரி, மற்றும் இந்திராயனி பதானி உள்ளிட்ட முன்னாள் தலைவர்களாவர். அனைத்திந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரும் 1984 ஆம் ஆண்டு முதல் பயிற்சி செய்துவரும் வழக்கறிஞருமான அமீ யச்னிக் தற்போது இக்கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். [4]

மாநாடுகள்[தொகு]

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசியப் பெண் வழக்கறிஞர்கள் மாநாடு பெங்களூருவிலும், [5] 2009 டிசம்பர் மாதத்தில் கொச்சியில் அகில இந்திய மகளிர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநாடும் நடைபெற்றன. [6]தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் ஐதராபாத்து நகரிலும், 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சென்னையிலும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மும்பையிலும் 2014 ஆம் ஆண்டு பெங்களூருவிலும் அகமதாபாத் நகரில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரிலும் இக்கூட்டமைப்பின் தேசிய மாநாடுகள் நடைபெற்றன.

ஆசிய பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டை 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் இக்கூட்டமைப்பு பெங்களுர்ருவில் ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி பாலகிருட்டிணன் மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி சிரியாக் யோசபு ஆகியோர் கலந்து கொண்டனர். [7] தேசிய சட்ட சேவை ஆணையத்துடன் இணைந்து கூட்டமைப்பு 16 மார்ச் 2008 ஆம் ஆண்டன்று பெண் குழந்தைகள் குறித்த ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. பெண் குழந்தைகளின் மதிப்பு மற்றும் அவர்களுடைய தேவைகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும். இச்செய்தி பல்வேறு ஊடகங்களின் அட்டைப் பக்கத்தை அலங்கரித்தன. கருத்தரங்கு பொதுமக்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டது.

இதே ஆண்டு செப்டம்பர் மாதம் 16 அன்று தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து "இரவு நேர பெண் பணியாளர்கள்" சிக்கல்கள் குறித்த ஒரு கருத்தரங்கும் நடத்தப்பட்டது. பெண் ஆர்வலர்களின் பெரும் பங்கேற்பு இருந்தது. கருத்தரங்கின் நடவடிக்கைகள் சட்ட ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன.

2008 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற பன்னாட்டு பெண் வழக்கறிஞர் மாநாட்டில் இக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

2009 ஆம் ஆண்டு கொச்சியில் நடந்த தேசிய மாநாட்டில் வி.பி.சீமந்தினி கூட்டமைப்பின் அப்போதைய தலைவராக இருந்தார். மாநாடு லீ மெரிடியன் பன்னாட்டு மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் பிரதம விருந்தினராக இருந்தார். [8][9] 2012 ஆம் ஆண்டு , சென்னையில் தேசிய மாநாடு நடைபெற்றபோது, வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Website AIFWL". Archived from the original on 24 August 2013. பார்க்கப்பட்ட நாள் 26 December 2012.
  2. "All India Federation of Women Lawyers". பார்க்கப்பட்ட நாள் November 25, 2017.
  3. News Deccan Herald 14 April 2012
  4. "All India Federation of Women Lawyers". பார்க்கப்பட்ட நாள் November 25, 2017.
  5. News The Hindu 20 September 2007
  6. "AIFWL: Conferences". பார்க்கப்பட்ட நாள் November 25, 2017.
  7. The Hindu 22 September 2007
  8. News The Hindu 28 December 2009
  9. News The Hindu 24 December 2009

புறஇணைப்புகள்[தொகு]