அகில ஆசிய மகளிர் மாநாடு

அனைத்து ஆசிய மகளிர் மாநாடு (All-Asian Women's Conference) என்பது 1931 சனவரியில் இலாகூரில் கூட்டப்பட்ட ஒரு மகளிர் மாநாடு ஆகும். இதுவே முதல் ஆசிய மகளிர் மாநாடு ஆகும்.[1] இது இந்திய அமைப்பாளர்களின் ஆதிக்கத்தில், இந்தியப் பெண்கள் தங்கள் கருத்துக்களையும், இந்தியாவை மையமாகக் கொண்ட ஆசியா குறித்த பார்வையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இருந்தது".[2] இதன் முன்னோடியான, அகில இந்திய மகளிர் மாநாடு, பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக கல்வி மற்றும் சட்டம் ஆகிய துறைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.[3] அகில இந்திய மகளிர் மாநாட்டைப் போலவே, அனைத்து ஆசிய மகளிர் மாநாடும் ஆசியாவின் சுதந்திரத்திற்கான பார்வையில் பெண்களை உள்ளடக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
பின்னணி
[தொகு]மார்கரெட் கசின்சு மற்றும் 1927 ஆம் ஆண்டு அகில இந்திய மகளிர் மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆர்வலர்களே அகில ஆசிய மகளிர் மாநாட்டின் முக்கியமானவா்களாக இருந்தனர். தன் கணவருடன் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு, மார்கரெட் கசின்சு இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த சமூக சீர்திருத்தத்தில் ஈடுபட்டார்.[2]1928 ஆம் ஆண்டு ஹவாய் நடைபெற்ற பான்-பசிபிக் மகளிர் மாநாட்டிற்கு அவர் சென்றது. அகில ஆசிய மகளிர் மாநாட்டினை நிறுவுவதற்கான அவரது உத்வேகத்தைத் தூண்டியது. அந்த மாநாடு பான்-பசிபிக் மகளிர் சங்கத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. பான்-ஆசிய சூழலில் பெண்ணியத்தின் மீது கவனம் செலுத்தப்படாதது இந்த மாநாட்டிற்குப் பின்னணியில் இருந்த நோக்கங்களாகும்.[2] மேலும், பல பிரதிநிதிகள் தங்கள் நாட்டின் சுதந்திர இயக்கங்களில் ஈடுபட்டிருந்ததால், சுயநிர்ணய உரிமையையும் இது ஆதரித்தது.[4] இது இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் புதிய சர்வதேசவாதத்தின் பரந்த உலகளாவிய சூழலில் நிகழ்ந்தது. 1930களின் முற்பகுதியில், பான்-பசிபிக் மகளிர் சங்கம், அமெரிக்கன் மகளிர் ஆணையம் மற்றும் அகில இந்திய மகளிர் மாநாடு போன்ற பிற மேற்கத்தியரல்லாத பெண்ணிய பிராந்திய ஒத்துழைப்புகள் காணப்பட்டன.[4]
பிரதிநிதிகள் அருகிலுள்ள ஆக்ரா மற்றும் தில்லியைச் சுற்றிப் பார்க்க ஏதுவாக, மாநாடு லாகூரில் நடைபெறத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] மாநாட்டைச் சனவரி 1931-ல் நடத்தலாம் என்று பரிந்துரைக்கும் வகையில், மார்ச்சு 12, 1930 அன்று, அகில இந்திய மகளிர் மாநாட்டிற்காக இந்தியப் பெண்களுக்கு சுற்றறிக்கை அழைப்புகள் அனுப்பப்பட்டன.[2] அழைக்கப்பட்ட பிரதிநிதிகளில் சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, ராஜ்குமாரி அம்ரித் கவுர், லேடி அப்துல் காதிர், ராணி லட்சுமிபாய் ராஜ்வாடே மற்றும் ஹில்லா ருஸ்தம்ஜி ஃபரிதூன்ஜி ஆகியோர் அடங்குவர். இந்தப் பெண்கள் பெரும்பாலும் அகில இந்திய மகளிர் மாநாட்டின் முன்னாள் பிரதிநிதிகளாகவும், பெண்கள் பிரச்சினைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட சமூக ஆர்வலர்களாகவும் இருந்தனர். "ஆகத்து 1930-ல் ஹவாயிலும், 1932-ல் சீனாவிலும் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பான்-பசிபிக் மகளிர் மாநாடுகளுக்கு இடையில்" நடைபெறுவதற்காக இந்தத் தேதி வியூகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[2] மாநாட்டிற்கான களத்தை உருவாக்கிய பிறகு, மாநாட்டின் "ஏற்பாடுகளை இந்தியப் பெண்கள் முன்னின்று நடத்த" அனுமதிப்பதற்காக கசின்சு ஒரு படி பின்வாங்கினார்.[2] ஜார்ஜியா, பாலத்தீனம், ஈராக், சிரியா, மலாயா, இந்தோ-சீனா, சியாம் மற்றும் ஹவாய் உட்பட முப்பது ஆசிய நாடுகள் இதற்கு அழைக்கப்பட்டன.[1]மொத்தம் 36 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்: அழைக்கப்பட்ட 30 ஆசிய நாடுகளில் இருந்து 19 பேரும், 17 இந்தியப் பிரதிநிதிகளும், மார்கரெட் கசின்சு உட்பட ஒன்பது வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இருந்தனர். இந்தப் பிரதிநிதிகள் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் பெண்களின் பங்களிப்பு குறித்த உரையாடலைத் தொடங்கத் தயாராக இருந்தனர்.[1] அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு சபைகளில் இந்தியப் பெண் பட்டதாரிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்க வேண்டியதன் அவசியம் போன்ற சில பிரச்சினைகள் அகில இந்திய மகளிர் மாநாட்டின் பரிந்துரைகளில் பிரதிபலித்தன.[3] சரஜோனி நாயுடு ஆரம்பத்தில் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் மகாத்மா காந்தியுடனான தனது நட்பிற்காக நன்கு அறியப்பட்டவர். இருப்பினும், நாயுடு "இந்திய தேசியவாத ஒத்துழையாமை இயக்கத்தில் ஆற்றிய பங்கிற்காக" மே 1930-ல் கைது செய்யப்பட்டார்.{{sfn|Mukherjee|2017} இதன் விளைவாக, மாநாட்டின் ஒவ்வொரு அமர்வும் வெவ்வேறு தலைவர்களால் தலைமை தாங்கப்பட்டது. இந்தத் தலைவர்களில் இலங்கையைச் சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆப்கானித்தானைச் சேர்ந்த திருமதி கமால்-உத்-தின், பர்மாவைச் சேர்ந்த டாவ் மியா செய்ன், பாரசீகத்தைச் சேர்ந்த ஷிரின் ஃபொஸ்தார் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த செல்வி ஹோஷி ஆகியோர் அடங்குவர்.[2]
கபூர்தலா மகாராணியின் மகளான மண்டி ராணி, தனது தொடக்க உரையில் மாநாட்டிற்கான அடித்தளத்தை அமைத்தார், அது கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:
"கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலைகளில் வாழ்ந்து, ஒத்த பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் நல்ல அல்லது கெட்ட விளைவுகளையும், இறுக்கமான உளவியலையும் பகிர்ந்து கொண்டு, ஆசியப் பெண்களின் மறுமலர்ச்சி என்று விவரிக்கப்படக்கூடிய ஒரு மாற்றத்திற்கான ஏக்கத்தால் சம அளவில் உந்தப்பட்டு, அவர்கள் ஒன்றிணைந்து, கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, தங்களின் பொதுவான குறிக்கோள்களையும் நோக்கங்களையும் அடைவதற்கான வழிமுறைகளை வகுக்க எந்த அமைப்பும் இருக்கவில்லை. இந்த மாநாடு, நமது பெண் இனத்தை அறிவுசார் அடிப்படையில் புத்துயிர் பெறச் செய்வதற்கான ஒரு ஊடகத்தையும், ஒரு கருவையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டத் தேவையில்லை."[5]
பங்கேற்பாளர்கள்
[தொகு]1930-ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில், அகில ஆசிய மகளிர் மாநாட்டிற்கான சுற்றறிக்கை அழைப்புகள், முப்பத்து மூன்று நாடுகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் பிரதிநிதிகள், மகளிர் உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுக்கு அனுப்பப்பட்டன.[5] ஜார்ஜியா, பாலஸ்தீனம், ஈராக், சிரியா மற்றும் மலாயா, இந்தோ-சீனா, சியாம், ஹவாய் போன்ற நாடுகள் அழைக்கப்பட்டன. இருப்பினும், இந்த அழைப்புகளிலிருந்து ஆப்கானித்தான், பர்மா, இலங்கை, யப்பான், பாரசீகம் மற்றும் ஈராக்கு ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பத்தொன்பது பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். [2]பாலத்தீனம், பாக்கித்தான், உருசியா, நேபாளம் மற்றும் சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான பதிவை முடித்திருந்தாலும், உடல்நலக்குறைவு, கால அட்டவணை முரண்பாடுகள் மற்றும் விசா மறுப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக மாநாட்டிற்கு முன்பே விலகிக்கொண்டனர். மேலும், ஜாவாவைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள், தங்கள் பிரதிநிதிகள் என்ற தகுதியைத் திரும்பப் பெற்ற பின்னர், மாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் மட்டுமின்றி, தனிநபர்களும் மாநாட்டில் பிரதிநிதிகளாகவோ அல்லது பார்வையாளர்களாகவோ பதிவு செய்துகொள்ள முடிந்தது. மேலும், அமெரிக்கா, நியூசிலாந்து, அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆசியரல்லாத பெண்களும் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.
முக்கிய நபர்களும் அவர்களின் பங்களிப்புகளும்
[தொகு]மார்கரெட் கசின்சு
[தொகு]
முதல் அனைத்து ஆசியப் பெண்கள் மாநாட்டின் முக்கிய உந்து சக்திகளில் ஒருவராகவும் அமைப்பாளராகவும் மார்கரெட் கசின்சு இருந்தார். அவர் ஐரிஷ் பெண்கள் வாக்குரிமை சங்கத்தின் உறுப்பினராக இருந்தார், எனவே 1915-ல் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பிறகு சமூக சீர்திருத்தம் மற்றும் இந்தியப் பெண்களின் நிலையை மேம்படுத்துவதில் ஒரு வலுவான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1910-களின் பிற்பகுதியிலும் 1920-களிலும், பெண்களுக்கு சம வாக்குரிமை கோருவது போன்ற பெண்கள் உரிமைக்கான இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்டார்.[2]
1928-ல் ஹவாயில் நடந்த பான்-பசிபிக் பெண்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, ஆசியாவில் உள்ள பெண்களிடையே ஒற்றுமைக்காக இதேபோன்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான உத்வேகத்தை கசின்ஸ் பெற்றார். ஆன்மீக உணர்வு இல்லாததாகவும், ஆசியாவின் "கீழைத்தேய" குணங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இருப்பதாகவும் கசின்சு நம்பினார், எனவே ஆசியப் பெண்கள் சுய விழிப்புணர்வு பெற ஒன்றுகூட வேண்டும். அவர் டிசம்பர் 1929-ல் தனது யோசனையை முன்வைக்கவும், இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மற்ற பெண்களைத் தன்னுடன் சேர வற்புறுத்தவும் கடிதங்களை அனுப்பத் தொடங்கினார். அகில இந்திய மகளிர் மாநாட்டில் இந்தியப் பெண்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருந்ததால், இந்த மாநாட்டிற்கு அவர்களே தலைமை ஏற்க வேண்டும் என்று அவர் தனது கடிதங்களில் முன்மொழிந்தார். அகில இந்திய மகளிர் மாநாட்டு அமைப்பைத் தொடங்குவதில் அவரே முக்கியப் பங்காற்றியபோதிலும், ஆசியப் பெண்கள், குறிப்பாக இந்தியப் பெண்கள், பொறுப்பேற்று அந்த அமைப்பை மேலும் மேற்பார்வையிட வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ராமேசுவரி நேரு
[தொகு]
ராமேசுவரி நேரு ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் தனது ஆரம்பகால வாழ்க்கையை ஒரு சமூக சீர்திருத்தவாதியாகக் கழித்தார். பற்றி கேள்விப்பட்ட பிறகு, அவர் மாநாட்டிலும் அதன் அமைப்பிலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, நேரு ஒரு நிரந்தரக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரானார் மற்றும் எதிர்காலத்தில் ஆசிய மகளிர் மாநாடுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தார். இருப்பினும், இந்தக் குழு விரைவில் கலைக்கப்பட்டது மற்றும் 1950களில் நேருவின் ஆசியவாத நடவடிக்கைகள் வரை செயலற்றதாகவே இருந்தது.[6]
மே ஓங்
[தொகு]டாவ் மியா செய்ன் என்றும் அறியப்படும் மே ஓங், பர்மாவைப் பிரதிநிதித்துவப்படுத்த லாகூரில் நடந்த இதில் கலந்துகொண்டு ஒரு அமர்வுக்குத் தலைமை தாங்கினார்.[1] ஓங் இந்த தொடர்பு குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1931 முதல் 1933 வரை இக்குழுவில் இருந்தார்.[2][2] இதற்கு முன்னர், இந்தியாவில் உள்ள தேசிய மகளிர் மன்றத்தின் பர்மிய உறுப்பினராக அதன் நிர்வாகியாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது.[1] சூலை 1931-ல், தேசியம் குறித்த மகளிர் ஆலோசனைக் குழுவில் பன்னாட்டு சங்கத்தில் இந்த இமைப்பை பிரதிநிதித்துவப்படுத்த மார்கரெட் கசின்சு அவரைத் தேர்ந்தெடுத்தார்.[2]
சரோஜினி நாயுடு
[தொகு]சரோஜினி நாயுடு மிகவும் தீவிரமான பெண்கள் உரிமை ஆர்வலராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். தபால் வாக்கெடுப்பிற்குப் பிறகு, அவர் அகில ஆசிய மகளிர் மாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், மாநாட்டிற்கு முன்பாக, இந்திய தேசியவாத ஒத்துழையாமை இயக்கமான உப்பு சத்தியாகிரகத்தில் ஆற்றிய பங்கிற்காக, 1930 ஆம் ஆண்டு மே மாதம் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். சரோஜினி நாயுடு இல்லாத நிலையில், பண்டாரநாயக்க (இலங்கை), கமால்-உத்-தின் (ஆப்கானிஸ்தான்), ஓங் (பர்மா), ஃபொசுதார் (பாரசீகம்) மற்றும் ஹோஷி (ஜப்பான்) ஆகியோர், முத்துலட்சுமி ரெட்டி மற்றும் சரீஃபா ஹமீத் அலி ஆகிய இரண்டு இந்தியப் பெண்களுடன் இணைந்து நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினர்.
மாநாட்டின் நோக்கங்கள்
[தொகு]மாநாட்டிற்கு முன்னர், பெண்களின் நாடுகடந்த மற்றும் உலகளாவிய அமைப்பு முக்கியமாக யூரோ-அமெரிக்க மைய அமைப்புகளில் கவனம் செலுத்தியது.[2] ஒரே மாதிரியான சமூக சூழல்களைக் கொண்டிருந்த போதிலும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆசியப் பெண்கள் ஒன்றுகூடி, பொதுவான இலக்குகளையும் நோக்கங்களையும் அடைவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க இடமளிக்கும் எந்த அமைப்பும் இல்லை.[5] நிறுவப்பட்ட அரசியல் குழுக்கள், ஆசியப் பெண்களுக்கும் ஆசிய கலாச்சாரங்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் கட்டுப்படுத்தின. கிழக்கு-மேற்கு (காலனித்துவப்படுத்தப்பட்டவர்-காலனித்துவவாதி) உறவு, தகவல்களைப் பகிர்வதற்கான முக்கிய வழிமுறையாக மேலோங்கியது.[5] இந்த அமைப்பு பெண்ணிய உரையாடலை மேற்கத்திய மையங்களிலிருந்து விலக்கி, ஒரு பான்-ஆசிய சூழலில் வைத்தது.[2] ஆசியப் பெண்மை குறித்த உரையாடலை மாற்றுவதையும், "பெண்ணிய கீழைத்தேயவாதிகளுக்கு எதிரான ஒரு மாற்று உரையாடலை" உருவாக்குவதன் மூலம் "கீழைத்தேயத்தின்" பிம்பங்களை மறுஉருவாக்கம் செய்வதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர்.[5]
அந்த மாநாட்டிற்கு 6 முக்கிய நோக்கங்கள் இருந்தன, அவை:
"ஒரு பொதுவான கீழைத்தேய கலாச்சாரத்தின் உறுப்பினர்களாக, ஆசியப் பெண்களிடையே ஒற்றுமை உணர்வை மேம்படுத்துதல், "தேசிய மற்றும் உலக சேவைக்காக கீழைத்தேய நாகரிகத்தின் குணங்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை மதிப்பீடு செய்தல்,
"கீழ்நாட்டு நாகரிகத்தில் தற்போது காணப்படும் குறைபாடுகளை மதிப்பாய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காணுதல்,
"...மேல்நாட்டு நாகரிக தாக்கங்களிலிருந்து ஆசியாவிற்குப் பொருத்தமானவற்றைப் பிரித்தெடுத்தல்,
"ஆசியாவின் அந்தந்த நாடுகளில் பெண்களின் நிலைமைகள் குறித்த தரவுகளையும் அனுபவங்களையும் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஒருவரையொருவர் வலுப்படுத்துதல்.
"உலக அமைதியை அடைதல்."[5]
முதல் மூன்று நோக்கங்கள், இரவீந்திரநாத் தாகூர் தனது அமெரிக்கா மற்றும் ஆசியப் பயணங்களின் போது முன்னெடுத்த பான்-ஆசியப் பார்வையை நெருக்கமாகப் பிரதிபலித்தன.[5] தாகூர் அகில ஆசிய மகளிர் மாநாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் பெண்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஆசியாவை உலகிற்கு கொண்டு வந்து, "கிழக்கத்திய கலாச்சார உணர்வை ஒருங்கிணைப்பதன்" மூலம் உலக கலாச்சாரத்தை வளப்படுத்த உதவுதல்.[5] மாநாட்டில் பேசியவர்கள், அமைதி, குடும்பத்தின் மீதான பக்தி, கீழ்ப்படிதல் போன்ற ஆசியப் பெண்மைக்கான முன்முடிவுகளை முன்னிலைப்படுத்தினர்.[5] இந்த வீட்டுப் பண்புகளிலிருந்து விலகிச் செல்ல, அடிபணிந்த வீட்டுச் சூழலுக்கு வெளியே ஆசியப் பெண்களின் சாதனைகள் பெரிதும் முன்னிலைப்படுத்தப்பட்டன.[5] மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலர், பெண்களின் ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கமே மூல காரணம் என்று கருதினர். எனவே, சமூகத்தில் ஆண்களை விட சிறந்த அந்தஸ்து பெற்றிருந்த, முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்த, ஆண்களை விவாகரத்து செய்யும் திறன் பெற்றிருந்த பெண்களுக்குப் பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.
கடைசி மூன்று குறிக்கோள்கள் சர்வதேச அளவில் ஆசியப் பெண்களின் நிலையை முன்னிலைப்படுத்த முயன்றன. சில பிரதிநிதிகள் தங்கள் சமூகங்களில் மேற்கத்திய கருத்துக்களின் செல்வாக்கை விமர்சித்தனர் மற்றும் மேற்கத்திய அணுகுமுறைகள் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய கலாச்சார விழுமியங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக வாதிட்டனர்.[4] இது இந்த ஆசிய பெண்ணியவாதிகளில் சிலர் தங்கள் மேற்கத்திய சகாக்களிடமிருந்து உணர்ந்த அந்நியத்தன்மையை எடுத்துக்காட்டியது. இருப்பினும், மற்ற பிரதிநிதிகள் மேற்கத்திய செல்வாக்கை முழுமையாக நிராகரிக்காமல், மாறாக, உடை, மேற்கத்திய கல்வி மற்றும் சினிமா போன்ற ஆசியர்களுக்குப் பொருத்தமானவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில் பயனைப் பார்த்தனர்.[2] பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் மத நிலைகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.[5] இது உலகெங்கிலும் உள்ள பெண்களின் நிலைமைகளை குறுக்கு-சரிபார்ப்பு செய்ய அனுமதிக்கும். கடைசி குறிக்கோள் சர்வதேச மகளிர் மன்றம் மற்றும் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கம் போன்ற உலகெங்கிலும் உள்ள அனைத்து மகளிர் அமைப்புகளுக்கும் பொதுவானதாக இருந்தது.[5] முதலாம் உலகப் போர், போர்களுக்கு இடைப்பட்ட காலம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது பல மகளிர் அமைப்புகளுக்கு உலக அமைதியை மேம்படுத்துவது முக்கியமானதாக மாறியது. "அன்புக்கும் அமைதிக்கும் பெயர் பெற்ற கண்டம்" என்பதால், இந்தப் பொறுப்பு ஆசியாவுக்கும் நீட்டிக்கப்பட்டது.[5] ஆசிய அடையாளத்தை வலியுறுத்துவதும், ஆசிய சகோதரத்துவம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதும், அவர்கள் தங்கள் தேசிய அடையாளத்தைக் கைவிடுவதைப் பொறுத்தது அல்ல என்பதில் மாநாட்டுப் பங்கேற்பாளர்களிடையே ஒரு பொதுவான ஒருமித்த கருத்து இருந்தது.[2]
எதிர்வினைகள்
[தொகு]இந்த மாநாடு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல ஊடகத் தளங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. அமெரிக்கப் பெண்கள் பத்திரிகையான 'ஈக்குவல் ரைட்சு', இது "ஆசியாவின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சிறந்த பெண்கள் கலந்து கொண்டனர்" என்று கூறியது, இருப்பினும், அதில் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற உண்மையை வலியுறுத்தத் தவறியது.[2] "கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும்" பிரச்சனைகளில் "கண்ணுக்கு எட்டிய ஒற்றுமை" இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.[2]
இந்தியாவில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு பிரித்தானிய அமைப்பான தேசிய இந்திய சங்கத்திற்காக ஜெஸ்ஸி டங்கன் வெஸ்ட்புரூக்கால் தொகுக்கப்பட்ட 'தி இந்தியன் மேகசின் அண்ட் ரிவ்யூ', இதன் அழைப்புச் சுற்றறிக்கையால் ஈர்க்கப்பட்ட முன்னோட்டத்தைக் கொண்டு மாநாட்டை ஆதரித்தது. அது 'கீழைநாட்டுப் பெண்கள்' என்ற சொல்லில் கவனம் செலுத்தி, அது பல்வேறு மேற்கத்திய உறவுகளால் ஈர்க்கப்பட்டதாகக் கூறியது. ஆசியப் பெண்கள் தொடர்ந்து ஒன்றுகூடித் தங்களின் தனித்துவமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும், "பிற நாடுகளின் பெண்களிடமிருந்து தங்களின் அடிப்படை வேறுபாட்டை" அங்கீகரிப்பதன் மூலம், அவர்களின் சிரமங்களைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.[2] மாநாடு நடந்த பிறகு, 'எல்'ஓவர்' மற்றும் 'பாக்ஸ் இன்டர்நேஷனல்' ஆகியவற்றின் ஆசிரியரும் அதைப் பற்றி செய்தி வெளியிட்டார்.[5]
இந்த அமைப்பு பல மேற்கத்திய அமைப்புகளிடமிருந்தும் ஆதரவைப் பெற்றது. இதில் லீக் ஆஃப் நேஷன்ஸ், விட்லி லேபர் கமிஷன், மகளிர் சர்வதேச கவுன்சில் (லண்டன் கிளை), நியூசிலாந்து மற்றும் இந்திய நலவாழ்வு லீக் ஆகியவை அடங்கும்.[5]
இந்த மாநாடு, உலகெங்கிலும் உள்ள ஆண்களிடமிருந்தும், மாநாட்டை நடத்திய நாட்டிடமிருந்தும் அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றது. உதாரணமாக, மாநாட்டின் விருந்தினராக இருந்த சர் அப்துல் காதிர், இதை "ஒரு சகாப்தத்தை உருவாக்கும் நிகழ்வு" என்று குறிப்பிட்டார்.[5] வேளாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு சதர் சர் ஜோகேந்திர சிங், "முழு ஆசியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மகளிர் மாநாட்டைப் போன்ற ஒரு இயக்கத்திற்கு உலக வரலாற்றில் இணையானது எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.[4]
மாநாட்டின் மையக்கருத்தை ஜவஹர்லால் நேருவும் தனது தேசத்தைக் கட்டியெழுப்பும் கொள்கைகளில் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார். அவர் பொதுவான ஆசிய நாகரிக வரலாற்றில் நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் இந்தியாவை அகில ஆசிய ஒற்றுமையின் புதிய மையமாக நிறுவும் தனது நோக்கத்தை நோக்கிய செயல்களில் அதை ஏற்றுக்கொண்டார்.[5]
விளைவுகளும் சாதனைகளும்
[தொகு]ஆசியாவில் உள்ள பெண்களின் பொதுவான சமூக மற்றும் அரசியல் கவலைகளைப் பற்றி விவாதிப்பதையும், பான்-ஆசியவாதத்தின் தொலைநோக்குப் பார்வைகளைப் பற்றிப் பேசுவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆசியப் பெண்களை ஒன்றிணைப்பதில் இந்தியப் பெண்கள் மையப் பங்காற்றியதை இந்த மாநாடு பெருமையாகக் கருதியது.[4] இது அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கவில்லை.[2] இந்த முயற்சியின் மூலம், சிரியாவைச் சேர்ந்த திருமதி முகமது ஜமீல் பேகம், அரேபிய மகளிர் மாநாட்டின் தலைவரான திருமதி நூர் ஹமாத், பாலத்தீன யூத மகளிர் சம உரிமைச் சங்கம், நேபாள மகளிர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பெண் தேசியவாதிகள், பெண்ணிய ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவகர்களிடமிருந்து மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்த கடிதங்களையும் மாநாட்டு அமைப்பாளர்கள் பெற்றனர்.[5]
திருமணமான பெண்களுக்கான குடியுரிமை உரிமைகளில் சமத்துவத்திற்கான சீர்திருத்தத்திற்கு ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியத் தீர்மானத்தை AAWC வெற்றிகரமாக நிறைவேற்றியது. அக்காலத்தில், திருமணமான பெண்களின் குடியுரிமை குறித்து சீரான சர்வதேச சட்டம் எதுவும் இல்லை. சில பெண்கள் தங்கள் கணவர்களின் குடியுரிமையைப் பெறுவார்கள், மற்றவர்கள் பெறமாட்டார்கள், இதனால் பிறப்பு அல்லது திருமணத்தின் மூலம் எந்தக் குடியுரிமையும் இல்லாமல் தங்களைக் கண்டுகொண்டனர். ஒரு பெண் தனது குடியுரிமையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த ஆதரவு வலியுறுத்தியது. பெண்ணியம் என்பது பிரத்தியேகமாக ஐரோப்பிய அல்லது அமெரிக்கமானது அல்ல என்பதை ஆசியப் பெண்கள் ஏற்றுக்கொண்டதன் மூலம், இந்தத் தீர்மானம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவும் உதவியது.[2]
அவர்கள் சமூக மற்றும் அரசியல் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் பல தீர்மானங்களையும் நிறைவேற்றினர். அதில் "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசிய மக்களின் அடிப்படைக் கூறாக இருந்து வரும் உயர் ஆன்மீக உணர்வைத்" தக்கவைத்தல் என்பதும் அடங்கும்.[2] சிறந்த மதத் தலைவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் கூறியது. பிற தீர்மானங்கள் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வி, குழந்தை திருமணத்தை ஒழித்தல், சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக பணம் செலவிடுதல், வரையறுக்கப்பட்ட மதுவிலக்குத் திட்டங்கள், பெரியவர்களையும் குழந்தைகளையும் தீய பழக்கங்களிலிருந்து மீட்பது, தொழிலாளர் நிலைமைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அந்தஸ்தை உறுதி செய்வது ஆகியவற்றை ஆதரித்தன. மற்ற இரண்டு தீர்மானங்கள் தேசிய சுயநிர்ணயம் மற்றும் உலக அமைதியை ஆதரித்தன.[2]
இந்த மாநாடு ஒரு நிரந்தரக் குழுவை அமைப்பதோடு முடிவடைந்தது, மேலும் 1935-ல் யப்பான் அல்லது ஜாவாவில் இரண்டாவது மாநாடு நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டின் இந்திய உறுப்பினர்கள், பரந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அடுத்த மாநாட்டை நடத்த வேண்டும் என்ற விருப்பத்தைப் பற்றி விவாதிக்க 1936 வரை ஆண்டுதோறும் சந்தித்து வந்தனர். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.[2] இருப்பினும், 1932-ல், மேலும் பல ஆசிய மகளிர் மாநாடுகளை நடத்தும் நம்பிக்கையில், தெஹ்ரானில் உள்ள ஓரியண்டல் மகளிர் மாநாடு மற்றும் அகில இந்திய மகளிர் மாநாடு ஆகியவற்றுடன் இந்தக் குழு ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்தியது. 1934 ஆம் ஆண்டில், இந்தக் குழு இந்தியா முழுவதிலும் இருந்து 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய ஆனால் குறுகிய கால "அனைத்து ஆசியக் குழுவாக" வளர்ந்தது. ஜெனீவாவில் நடைபெற்ற வாக்குரிமை மற்றும் சம குடியுரிமைக்கான பெண்களின் சர்வதேசக் கூட்டமைப்பிற்கு ஒரு நிரந்தரப் பிரதிநிதியின் மூலம் அனைத்து ஆசிய மகளி ர் மாநாடு அதிகாரப்பூர்வப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றது. 1935 இல் இஸ்தான்புல்லில் இந்தக் கூட்டமைப்பு தனது 12வது மாநாட்டை நடத்தியபோது, ஆசியக் குழு ஒரு வலுவான தூதுக்குழுவை அனுப்பியது, அதன் இருப்பு கலந்துகொண்ட பத்திரிகைகளின் கவனத்திலிருந்து தப்பவில்லை. இருப்பினும், முந்தைய புரவலரான இந்தியா உட்பட பல உறுப்பினர்கள் தங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்களில் மும்முரமாக இருந்ததால், இரண்டாவது அனைத்து ஆசிய மகளிர் மாநாடு நடைபெறவில்லை.[6]
இதனையும் பார்க்கவும்
[தொகு]- இரண்டாவது கிழக்கு மகளிர் காங்கிரஸ்
- அகில இந்திய மகளிர் மாநாடு
- சுயநிர்ணயம்
- இரு உலகப்போர் இடைப்பட்ட காலம்
- மகாத்மா காந்தி
- தாவ் மியா செய்ன்
- அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான மகளிர் ஆணையம்
- அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச சங்கம்
- சர்வதேச மகளிர் கூட்டணி
- முதல் கிழக்கு மகளிர் காங்கிரஸ்
நூல் பட்டியல்
[தொகு]- Basu, Aparna; Ray, Bharati (1990). Women's Struggle: A History of the All India Women's Conference, 1927–1990. Manohar. ISBN 978-81-85425-42-9.
- Broome, Sarah (2012). Stri-Dharma: Voice of the Indian Women's Rights Movement 1928-1936 (Thesis). doi:10.57709/3075581.
- Mukherjee, Sumita (4 May 2017). "The All-Asian Women's Conference 1931: Indian women and their leadership of a pan-Asian feminist organisation". Women's History Review 26 (3): 363–381. doi:10.1080/09612025.2016.1163924.
- Nijhawan, Shobna (2017). "International Feminism from an Asian Center: The All-Asian Women's Conference (Lahore, 1931) as a Transnational Feminist Moment". Journal of Women's History 29 (3): 12–36. doi:10.1353/jowh.2017.0031. வார்ப்புரு:Project MUSE. https://archive.org/details/journal-of-womens-history_fall-2017_29_3/page/12.
- Sandell, Marie (2015). The Rise of Women's Transnational Activism: Identity and Sisterhood Between the World Wars. Bloomsbury Academic. ISBN 978-1-84885-671-4. கணினி நூலகம் 863174086.
- Frey, Marc; Spakowski, Nicola, eds. (2016). Asianisms: Regionalist Interactions and Asian Integration. NUS Press. doi:10.2307/j.ctv1nthd7. ISBN 978-9971-69-859-1. JSTOR j.ctv1nthd7. கணினி நூலகம் 1082958633.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 Broome 2012, ப. [page needed].
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 Mukherjee 2017.
- 1 2 Basu & Ray 1990, ப. [page needed].
- 1 2 3 4 5 Sandell 2015, ப. [page needed].
- 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 Nijhawan 2017.
- 1 2 Frey & Spakowski 2016, ப. [page needed].