பேராண் வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் பேராண் வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "பேராண்மை" என்னும் சொல் "பெருமை", "ஆண்மை" என்னும் சொற்களின் சேர்க்கையால் உருவானது. பெருமைக்குரிய ஆண்மையோடு போரிடும் வீரர்க்கு மன்னன் சிறப்புச் செய்வதைப் பொருளாகக் கொள்வதால் இத்துறைக்குப் "பேராண் வஞ்சி" என்னும் பெயர் ஏற்பட்டது. பகை மன்னர் வழங்கும் திறையை ஏற்றுக்கொண்டு போரைக் கைவிட்டுத் திரும்புதலும் இத்துறைக்குள் அடங்கும்.

இதனை விளக்க, நட்புக் கொண்டிராத பகைவரைப் போர்முனையில் அழித்து வெற்றியுடன் திரும்பிய வீரர்க்கு மன்னன் சிறப்புச் செய்வது என்றும், கிடைத்தற்கு அரிய பொருட்களைப் பகை மன்னர் திறையாகக் கொடுக்கக் கோபந் தணிந்த மன்னவன் மீண்டு செல்லுதல் என்றும் பொருள்படும் பின்வரும் கெழுப் பாடல்கள் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகின்றன[1].

கேள்அல்லார் முனைகெடுத்த
மீளியார்க்கு மிகஉய்த்தன்று
அருந்திறை அளப்ப ஆறிய சினத்தோடு
பெரும்பூண் மன்னவன் பெயர்தலும் அதுவே

எடுத்துக்காட்டு[தொகு]

பலிபெறு நன்னகரும் பள்ளி இடனும்
ஒலிகெழு நான்மறையோர் இல்லும் - நலிவுஒரீஇப்
புல்லார் இரியப் பொருதார் முனைகெடுத்த
வில்லார்க்கு அருள்சுரந்தான் வேந்து
- புறப்பொருள் வெண்பாமாலை 42(1).


கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப்
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலோன் - கோடி
நிதியந் திறையளந்தார் நேராகும் தன்கீழ்
முதியம் என்றாறி முரண்
- புறப்பொருள் வெண்பாமாலை 42(2).

குறிப்பு[தொகு]

  1. இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 72, 73

உசாத்துணைகள்[தொகு]

  • இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
  • கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராண்_வஞ்சி&oldid=1551244" இலிருந்து மீள்விக்கப்பட்டது