பைங்கள உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைங்கள உபநிடதம் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 60வது உபநிஷத்து. நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் சேர்ந்தது. பன்னிரண்டாண்டுகள் பணிவிடை செய்த பைங்களருக்கு யாஜ்ஞவல்கியரால் உபதேசிக்கப்பட்டது என்று தொடங்குகிறது. பற்பல வேதாந்தக் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுருக்கமாகவும் எளியநடையிலும் போதிக்கும் உபநிடதம் என்று சொல்லலாம்.

கருத்துக்கள்[தொகு]

  • முன்னைப் பரம்பொருளாக, காரியமற்றதாக, இரண்டற்றதாக ஒன்றுதான் இருந்தது. அதுதான் பிரம்மம். அதன் உருவம் உண்மை, அறிவு, ஆனந்தம்.
  • அதில் இப்படி, அப்படி என்று எப்படியும் சொல்லமுடியாதபடி முக்குணமும் சமானமான மூலப்பிரகிருதி தோன்றிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம்தான் சாட்சி சைதன்யம்.
  • அம்மூலப்பிரகிருதி சத்வகுணம் மேலிட்டதாக மாறி அவியக்தம் அல்லது மாயை என்ற 'ஆவரண சக்தி' ஆயிற்று. 'ஆவரணம்' - எல்லாவற்றையும் மறைக்கக்கூடியது. அதில் பிரதிபலித்த பிம்பம்தான் கடவுட்சைதன்யம். அக்கடவுள் மாயையை தன்வசப்படுத்திக் கொண்டு அனைத்தையும் அறிபவராக பேருலகத்தையும் சுருட்டிய பாயைப்பிரித்துவிடுவது போல் தோற்றுவிக்கிறார். காத்தல், அழித்தல் தொழில்களும் அவருடையதே. பிராணிகளின் கருமங்களை அனுசரித்தே அவை தோன்றுவதும் அழிவதும் உண்டாகின்றது
  • அம்மாயையிலிருந்து ரஜஸ் மேலிட்டதான மஹத் என்ற 'விட்சேப சக்தி' உண்டாயிற்று. 'விட்சேபம்' - ஒன்றை வேறொன்றாகக் காட்டுவது. அதில் பிரதிபலித்த பிம்பம்தான் ஹிரண்யகர்ப்ப சைதன்யம்.
  • இதிலிருந்து தமஸ் மேலிட்டதான பேரகந்தை உண்டாயிற்று. இதில் பிரதிபலித்த பிம்பம் விராட்புருஷன்.அவனிடமிருந்து, வெளி, காற்று, தீ, நீர், நிலம் இவைகளுடைய மூலப்பொருட்கள் ('தன்மாத்திரைகள்') உண்டாயின.
  • இந்த சூட்சுமப்பொருட்களைத் தூலப்பொருட்களாக மாற்றவேண்டி, அக்கடவுள் ஒவ்வொன்றையும் இரண்டு பாகமாக்கி, அவைகள் ஒவ்வொன்றையும் நான்காக்கி, ஐந்து அரைபாகங்களையும் மற்றநான்கின் அரைக்கால் பாகங்களுடன் சேர்த்து, இவ்விதம் 'பஞ்சீகரணம்' செய்து உண்டாக்கப்பட்ட தூலப்பொருட்களால் உலகிலுள்ள கோடிக்கணக்கான பொருட்களையும் பதினான்கு உலகங்களையும் படைத்தார்.

இவ்விதம் தொடங்கி, இவ்வுபநிடதம், ஜீவர்கள் படைக்கப்பட்டதையும், தூல சூட்சும உடல்களைப்பற்றியும், பந்தம், மோட்சம் இவைகளைப்பற்றியும் பேசுகிறது.

சில பொன்மொழிகள்[தொகு]

  • 'அது நீ'; 'நான் பிரம்மம்' முதலிய மகாவாக்கியத்தின் தத்துவத்தை அறியும் நோக்கத்துடன் குருவிடம் கேட்டறிதல் 'சிரவணம்' எனப்படும்.(3 -2)
  • கேட்டறிந்த பொருளைத் தனிமையில் ஆழ்ந்து சிந்தித்தல் மனனம் (3-2)
  • சிரவணத்தாலும் மனனத்தாலும் தீர்மானமாகிய பொருளில் ஒன்றி மனதை நிறுத்துதல் 'நிதித்தியாசனம்' எனப்படும்.(3-2)
  • அறிவையும் அறிபவனையும் கடந்து அறியப்படும் பொருளுடன் ஒன்றுபட்டுக் காற்றில்லாத இடத்தில் விளக்கைப்போல் சித்தம் அசையாதிருக்கும் நிலை சமாதி எனப்படும்.(3 -2)
  • நீர் நீரிலும், பால் பாலிலும், நெய் நெய்யிலும் வேறுபாடில்லாமல் ஒன்றாவதுபோல் ஜீவனும் பரமாத்மனும் ஒன்றாகின்றனர். (4-10)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • S. Radhakrishnan. The Principal Upanishads. 1953. George Allen and Unwin Ltd. New York.
  • அண்ணா. 108 உப்நிஷத்ஸாரம். மூன்றாம் பாகம். 1991. ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைங்கள_உபநிடதம்&oldid=3913781" இலிருந்து மீள்விக்கப்பட்டது