பஞ்சமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சமித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

பஞ்சமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஐந்தாவது திதி பஞ்சமி ஆகும். பஞ்ச எனும் வடமொழிச் சொல் ஐந்து எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஐந்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஐந்தாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஐந்தாம் நாளுமாக இரண்டு முறை பஞ்சமித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பூரணையை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்[தொகு]

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] பஞ்சமித் திதி ஐந்தாவது திதியும் 20 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 48 பாகையில் இருந்து 60 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்சப் பஞ்சமித் திதியும், 228 பாகையிலிருந்து 240 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்சப் பஞ்சமியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்[தொகு]

ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இந்நாளில் கருடனை வழிபடுவது சிறப்பானதாகும். புரட்டாதி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகின்றது. இவ்விரதம் சப்தரிஷிகளை நோக்கி பெண்களால் அனுட்டிக்கப்படும்[2].

  • சிம்ஹ கிருஷ்ண பஞ்சமி என்பது ஆவணியில் வருகின்ற தேய்பிறை பஞ்சமி ஆகும். [3]

ஆதாரம்[தொகு]

  1. Sharma, P.D., 2004. பக். 22.
  2. இந்துக்கலைக்களஞ்சியம் - தொகுதி பத்து - இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணக்களம், இலங்கை. 2009. பக் 22
  3. தினமலர் பக்திமலர் 27.08.2015 பக்கம் 2

உசாத்துணைகள்[தொகு]

  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சமி&oldid=3219340" இலிருந்து மீள்விக்கப்பட்டது