சிபிச் சக்கரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழன் சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு பொதுவாக வழங்கப்படும் சோழன் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன. மன்னர் யயாதியின் மகன்களில் ஒருவர் " அனு" . அவருக்கு மூன்று மகன்கள் சபாநரன், சசு, பரோக்ஷன் ஆவர். அதில் , சபாநரன் மகன் காலநரன் அவனின் மகன் ஸ்ருஞ்ஜயன், அவனின் மகன் ஜனமேஜய. அவனின் மகன் மகாசீலன். அவனின் மகன் மஹாமனஸ். அவனுக்கு இரண்டு மகன்கள் ஒன்று உசீநரன் மற்றொன்று திதிசு. உசீநரனின் மகனே " சிபி" ஆவார். அதுபோல் திதிசு மகன் ருசத்ரதன் அவன் மகன் ஹேமன். அவன் மகன் சுதபஸ்.அவன் மகன் பலி. பலிலின் மகன்களே அங்கன், வங்கன், கலிங்கன் மற்றும் ஆந்திரன். இவர்கள் பெயரிலேயே தேசங்கள் உருவாகின.

சோழன் சிபி வரலாறு[தொகு]

புறநானூறு[தொகு]

  • புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டிருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.[1]
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொடைத்திறம் மிக்கவன். என்றாலும் இவனது முன்னோன் புறாவைக் காப்பாற்ற வழங்கிய கொடையை எண்ணுகையில் அது பரம்பரைக் குணம் என்றே கொள்ளத்தக்கது என்று புலவர் மாறோக்கத்து நப்பசலையார் குறிப்பிட்டுள்ளார்.[2] அவர் யானைத் தந்தத்தின் இருபுறமும் தொங்கும்படி உருவாக்கப் பட்டிருந்த அக்காலத் தராசு பற்றிய குறிப்பினையும் தந்துள்ளார்.
  • இந்தப் புலவர் நப்பசலையார் தமது மற்றொரு பாடலிலும் அந்த அரசனைக் குறிப்பிடும்போது இவன் புறவின் இன்னலைப் போக்கிய செய்தியைக் குறிப்பிடுள்ளார்.[3]
  • கோவூர் கிழார் என்னும் புலவரும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் குறிப்பிடும்போது புறாவின் துன்பம் போக்கியவனின் வழிவந்தவன் எனக் குறிப்பிடுகிறார்.[4]

சிலப்பதிகாரம்[தொகு]

தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.[5]
கங்கை ஆற்றின் தென்கரையில் ஆரிய அரசர்கள் அமைத்துத் தந்த வெள்ளிடைப்பாடி படைவீட்டில் இருந்துகொண்டு மாடலனைத் தனியே அழைத்து வினவியபோது, சோழநாட்டின் ஆட்சியைப் பற்றிக் கூறுகையில், புறாவின் துன்பமும், பருந்தின் துன்பமும் விலகுமாறு தன் உடம்பை அரிந்து புறாவின் எடை அளவு பருந்துக்கு இரையாகத் தந்த அறநெறி (சிபி மன்னன்) வழிவந்த ஆட்சி அது என்று கூறுகிறான். [6]

பெருந்தொகை மற்றும் விம்பிசார கதை[தொகு]

பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.[7]

கம்பராமாயணம்[தொகு]

இராமனின் சூரிய குலப் பெருமையைச் சனகனுக்குக் கூறும் விசுவாமித்திரர் சிபிச் சக்கரவர்த்தி சூரிய குலத்தில் தோன்றியவன் என்று குறிப்பிடுகிறார். [8]

புனைவு[தொகு]

  • இவர் இரகு வம்சத்தை சேர்ந்தவர் என்பவை தவறான கருத்துக்கள் என்று சில குறிப்பேடுகளுடன் ஒப்பிட்டு தமிழ் அறிஞர்கள், அக்கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர்.[சான்று தேவை]
  • மேலும் தொடையை அறுத்து வைத்தது மட்டும் உண்மையாக இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.[சான்று தேவை]

கொடைமடம்[தொகு]

பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி புறாவிற்காக தன்னைத் தந்ததும் கொடைமடம்.[9]

அடிக்குறிப்பு[தொகு]

  1. 'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
    தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
    தபுதி அஞ்சிச் சீரை புக்க,
    வரையா ஈகை உரவோன்'
    என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43
  2. புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
    யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
    கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
    ஈதல் நின் புகழும் அன்றே -புறநானூறு 39
  3. புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
    சினம் கெழு தானை, செம்பியன் மருக! -புறநானூறு 37
  4. நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
    இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, - புறநானூறு 46
  5.  எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை

  6. ,poem>குறு நடைப் புறவின் நெடுந் துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க, அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்; திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? </poem>
  7. :பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
    வரையா ஈகை போல யாவிரும்
    கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
    முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
    அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
    என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
    குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
    கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
    மாய யாக்கை சொல்லிய தான் தன்
    உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101
  8. இவர் குலத்தோன், மென் புறவின் \ மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்! (கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 12. வரலாற்றுப் படலம் 9)
  9. மடத்தனமான கொடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிச்_சக்கரவர்த்தி&oldid=3416966" இலிருந்து மீள்விக்கப்பட்டது