தேசிய அரசுப் பேரவை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
National State Assembly
(1972-1978)
தேசிய அரசுப் பேரவை
வகை
வகைஒருமன்ற முறைமை
காலக்கோடு
நாடுஇலங்கை
தோற்றம்1972
முன்னிருந்த அமைப்புஇலங்கை நாடாளுமன்றம், 1947-1972
பின்வந்த அமைப்புஇலங்கை நாடாளுமன்றம்
கலைப்பு1978
தலைமையும் அமைப்பும்
உறுப்பினர்கள்151 (1972-1977)
168 (1977-1978)
தேர்தல்
இறுதித் தேர்தல்இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977
தலைமையகம்
கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடம். இக்கட்டடம் இலங்கை நாடாளுமன்றத்தினால் 1982 வரை பயன்படுத்தப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டடம் என இன்று அழைக்கப்படுகிறது. இங்கு இலங்கை அரசுத்தலைவரின் செயலகம் அமைந்துள்ளது.

தேசிய அரசுப் பேரவை (National State Assembly) என்பது இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் படி 1972 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபை ஆகும். 1947 இல் உருவாக்கப்பட்ட இரு அங்க இலங்கை நாடாளுமன்றம் (இலங்கை பிரதிநிதிகள் சபை மற்றும் இலங்கை செனட் சபை) ஆகியவை இல்லாதொழிக்கப்பட்டு ஓரங்க முறைமையுடன் கூடிய தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது.

1970ம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்கு பதிலாக புதியதோர் அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது. இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. 1972-1978 காலப்பகுதியில் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் தேசிய அரசுப் பேரவை என்று கூறப்பட்டது.

ஓரங்க மன்றம்[தொகு]

சோல்பரி அரசியலமைப்பில் கீழ் (1947-1972) இலங்கையின் சட்டவாக்கத்துறையானது இரண்டு மன்றங்களைக் கொண்டதாக இருந்தது.

இரண்டு மன்றங்களும் இணைக்கப்பட்டு இறைமைமிக்க ஓரங்க மன்றத்தை உடையதாக தேசிய அரசுப் பேரவை ஏற்படுத்தப்பட்டது.

அங்கத்தவர் தெரிவு[தொகு]

1972 அரசியலமைப்பின் 77ம் உறுப்புரைப்படி: அமைக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கைக்கு இணங்க மக்களால் சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே தேசிய அரசுப் பேரவை கொண்டிருக்கும்.

1974ம் ஆண்டில் நோயெல் தித்தவெல தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவானது தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 168ஆக வரையறை செய்தது.

பதவிக்காலம்[தொகு]

அரசியலமைப்பின் 40ம் உறுப்புரை (1) பந்தி தேசிய அரசுப் பேரவையின் பதவிக்காலத்தைப் பின்வருமாறு வரையறை செய்கின்றது.

அவ்வரசியலமைப்பின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தேசிய அரசுப் பேரவையும், அது முன்னரே கலைக்கப்பட்டாலொழிய அதன் முதற்கூட்டத் தேதியிலிருந்து 6 ஆண்டு காலத்துக்குத் தொடர்ந்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்படலாகாது. அந்த 6 ஆண்டு கழிவதே தேசிய அரசுப் பேரவையைக் கலைப்பதாகச் செயற்படுதல் வேண்டும்.

இதன்படி தேசிய அரசுப் பேரவையின் கூடிய பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதை தெரிந்துகொள்ள முடிகின்றது.

தகைமைகள்[தொகு]

பொதுதேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற எவரும் தேசிய அரசுப் பேரவை உறுப்பினராகத் தகுதியுடையவர்.

தேசிய அரசுப் பேரவையின் அதிகாரங்கள்[தொகு]

  • அத்தியாயம் 1

4ம் உறுப்புரை - மக்களின் இறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய அரசுப் பேரவை மூலம் பிரயோகிக்கப்படும்.

5ம் உறுப்புரை - தேசிய அரசுப் பேரவை குடியரசின் அரசதத்துவத்தின் மிக உயர்ந்த கருவியாகும். அதுவே மக்களின் சட்டவாக்க, நிர்வாக, நீதிப் பரிபாலன அதிகாரங்களைக் கொண்டு இயங்கும்.

1. மக்களின் சட்டவாக்க இறைமை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய அரசுப் பேரவையின் ஊடாகப் பிரயோகிக்கப்படும்.
2. மக்களின் பாதுகாப்பு, நிர்வாக இறைமை சனாதிபதி, கெபினட் ஊடாக நிறைவேற்றப்படும்.
3. நீதி, நிர்வாக இறைமை அதற்கென அமைக்கப்பட்ட நீதித்தாபனங்கள் ஊடாக நிறைவேற்றப்படும். இந்த முத்துறை அதிகாரமும் தேசிய அரசுப் பேரவையின் சட்டவாக்க அதிகாரம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும்.
  • முத்துறைகளிலும் சட்டவாக்க அதிகாரமே முக்கியமானது. நாட்டுக்குத் தேவையான சகல சட்டங்களையும் ஆக்கலாம், மாற்றலாம், நீக்கலாம்.
  • தேசிய அரசுப் பேரவை தனது சட்டவாக்க அதிகாரத்தைத் துறக்கவோ, கையளிக்கவோ, பாதிப்பு ஏற்படுத்தவோ முடியாது. அதேநேரம், தேசிய அரசுப் பேரவைக்குச் சமனான அதிகாரம் பொருந்திய எந்தவொரு தாபனத்தையும் அமைக்கவும் முடியாது. (45வது உறுப்புரை), (தேசிய அரசுப் பேரவை விரும்பினால் துணை நிலைச் சட்ட ஆக்க அதிகாரத்தை ஏனைய தாபனங்களுக்கு வழங்கலாம், மீளப் பெறலாம்.)
  • தேசிய அரசுப் பேரவையின் நிகழ்ச்சிகளின் மீதோ அல்லது அது செய்த, அது செய்யாது இருக்கும் அல்லது செய்யாதுவிட்ட எதன் மீதும் எந்த நீதிமன்றமோ அல்லது நீதியைப்பரிபாலிக்கும் எந்தவொரு நிறுவனமோ நீதிப்பரிபாலனம் செய்ய முடியாது.
  • நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரம் - சட்டவாக்க அதிகாரத்தில் இடம்பெறல். இதனால் எந்த உள்ளுராட்சித் தாபனமும், நிறுவனமும் வரிவிதிக்க வசூலிக்க முடியாது. (தேசிய அரசுப் பேரவையின் தீர்மானப்படியே செயலாற்ற வேண்டும்.)

சபாநாயகர்கள்[தொகு]

  • ஸ்டான்லி திலகரத்தின (1972-77)[1]
  • ஆனந்ததிஸ்ச டி அல்விஸ் (1977-78)[1]

பிரதி சபாநாயகர் மற்றும் குழுத் தலைவர்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Speakers". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.
  2. 2.0 2.1 "Deputy Speaker and Chairman of Committees". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-26. பார்க்கப்பட்ட நாள் 2011-08-21.

ஆதாரம்[தொகு]

  • 1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு

வெளி இணைப்புகள்[தொகு]