கெங்குவார்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெங்குவார்பட்டி (ஆங்கிலம்:Genguvarpatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது கொடைக்கானல் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது. இது வத்தலகுண்டு - கொடைக்கானல் நெடுஞ்சாலையில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,928 மக்கள்தொகையும், 5 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

அமைவிடம்[தொகு]

கெங்குவார்பட்டி 10.170677 அட்ச ரேகையிலும், 77.6979885 தீர்க்க ரேகையிலும், கடல் மட்டத்திலிருந்து 883.332 அடி(269.240 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் கொடைக்கானல் மலையும், மேற்கில் தேவதானப்பட்டியும், கிழக்கில் வத்தலக்குண்டும் எல்லைகளாக அமைந்துள்ளன.

தட்பவெப்பநிலை[தொகு]

இது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் இங்கே வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 43°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் உள்ளன.

மக்கள்[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,592 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 5,377 ஆண்கள், 5,215 பெண்கள் ஆவார்கள். கெங்குவார்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கெங்குவார்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஊர் அமைப்பு[தொகு]

இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன. காமக்காபட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பாலப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் எல்லையாகவும் அமைந்திருக்கிறது.

தொழில்கள்[தொகு]

இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல்வி வசதிகள்[தொகு]

இங்கு பள்ளிக் கல்விக்காகக் கீழ்க்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.

  1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி
  2. அரசு மேல்நிலைப்பள்ளி
  3. அறிஞர் அண்ணா உயர்நிலைப்பள்ளி
  4. அருள் மலர் ஆரம்பப்பள்ளி
  5. புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி

மருத்துவ வசதிகள்[தொகு]

ஒரேயொரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது .

கோவில்கள்[தொகு]

  • முத்தாலம்மன் கோவில்
  • முக்கியப்பிராணசுவாமி ஆஞ்சநேயர் கோவில்
  • ராகவேந்திர பிருந்தாவனம்
  • ராமர்கோவில்- மஞ்சள் நதி மாரியம்மன் கோவில்
  • காளஹஸ்தீஸ்வரர்-ஞானாம்பாள் கோவில்
  • ஐய்யனார் கோவில்
  • பகவதி அம்மன் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. ஊரின் பொதுக் கோவிலாக இருக்கும் முத்தாலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கெங்குவார்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜுலை 23. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=கெங்குவார்பட்டி&oldid=3618095" இலிருந்து மீள்விக்கப்பட்டது