திருவிளக்கு வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிளக்கு வழிபாடு

திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும்.

வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்[தொகு]

ஏற்ற நாள் நேரம்[தொகு]

பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்

பின்பற்ற வேண்டிய முறைகள்[தொகு]

  1. திருவிளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும்.
  2. திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பின்னமடைந்த (உடைந்த, கீறல் விழுந்த) விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.

திருவிளக்கேற்றும் பலன்கள்[தொகு]

  • ஒரு முகம் முதல் ஐந்து முகம் வரை ஏற்றினால் அதற்குரிய நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறை[தொகு]

திருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைப்பர். உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள் வைப்பர்.

திருவிளக்கேற்றும் திசைகள்[தொகு]

  • கிழக்கு
  • மேற்கு
  • வடக்கு

ஆகிய திசைகளில் மட்டுமே விளக்கேற்றுவர். திருவிளக்கை கிழக்கு முகமாக வைத்து, வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி அமருவர்.

தெய்வங்களும் எண்ணெய் வகைகளும்[தொகு]

  • பசுநெய் , நல்லெண்ணெய் ,ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.
  1. குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது. திருவிளக்கில் அடிக்கடி எண்ணெய் ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு கடவுளர்களுக்கும் ஒரு வகை எண்ணையை ஊற்றுவர்.
  • கணபதி - தேங்காய் எண்ணெய்
  • நாராயணன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்
  • மகாலட்சுமி - பசுநெய்
  • குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
  • ருத்திரர் - இலுப்பெண்ணெய்
  • பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்

திரிகளும், பயன்களும்[தொகு]

திருவிளக்கிற்குப் பயன்படும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

  • பருத்திப் பஞ்சு
  • வாழைத் தண்டின் நார்
  • தாமரைத்தண்டு நூல்
  • வெள்ளை எருக்கம்பட்டை
  • புதிய மஞ்சள் துணி
  • புதிய சிவப்பு வண்ண துணி
  • புதிய வெள்ளை துணி திரி ஆகியவற்றைத் திரியாகப் பயன்படுத்துவர்.

விளக்கேற்றும் முறை[தொகு]

  1. விளக்கை துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும். தீக்குச்சியால் ஏற்றுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். ஒரு திரி ஏற்றுவதானால் கிழக்கு முகமாக மட்டுமே ஏற்ற வேண்டும்.
  2. திருவிளக்கு வழிபாட்டின் போது விளக்கு ஏற்றிய பின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  3. திருவிளக்கு வழிபாட்டின் போது மந்திரங்கள், பதிகங்கள் மற்றும் பாசுரங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
  4. திருவிளக்கு வழிபாட்டின் போது விளக்கு ஏற்றிய பின்பு கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.

வேண்டிய பொருட்கள்[தொகு]

திருவிளக்கு வழிபாட்டுக்கு திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு), தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, படையல் பொருட்கள், துணை விளக்கு, நீர்க்கடன் செலுத்தும் பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

செய்யும் முறைகள்[தொகு]

முதலில் வழிபாடு நடத்தும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக்கப்படும். வழிபாடு நடத்தும் முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களால் அழகு செய்வர். பின்பு வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமருவர். பின்பு கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுவர். அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றுவர். தீபம் ஏற்றும்போது

ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி

என்று சொல்லுவர். பின் ஊதுபத்தி ஏற்றி வைப்பர்

விநாயகர் வழிபாடு[தொகு]

முதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அலங்கரிப்பர். பின்பு அம்பாள் துதிப்பாடல்கள் பாடியபடி வழிபாட்டைத் துவங்குவர்.

அருச்சனை[தொகு]

அம்பாள் வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் மலர் அல்லது குங்கும அர்ச்சனை நடைபெறும். அவ்வாறு அர்ச்சனை செய்கின்ற போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும், மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும். மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அருச்சிக்க வேண்டும் என்பது விதி.

நூற்றியெட்டு போற்றி[தொகு]

அர்ச்சனை செய்து முடித்தவுடன் எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதுவர்.

படையல்[தொகு]

நூற்றியெட்டு போற்றி ஓதி முடிந்தவுடன் படையல் பொருள்களை அம்மனுக்குக் காணிக்கையாக்குவர்.

தீபாராதனை[தொகு]

எல்லோரும் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுவர். இப்போது திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூரசோதி காண்பிக்கப்படும். கற்பூர சோதி காட்டும்போது சொல்லப்படவேண்டியது:.

 "திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ|
 அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ|
 எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ|
 சுங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே"

பின்பு திருவிளக்கின் முன் கற்பூர தட்டை வைத்தபடி கையில் மலரெடுத்து கற்பூர சோதியை வலம் சுற்றி திருவிளக்கிற்கு சாற்றி கற்பூர தீபத்தைத் தொட்டு வணங்குவர்.

வலம்வருதல்[தொகு]

அனைவரும் பின்வருமாறு அம்பாள் பெயர் போற்றி கைதட்டிப் பாடிக்கொண்டு திருவிளக்கினை மூன்று முறை வலம் வருவர்.

மங்களம்[தொகு]

மங்களம் பாடி நிறைவு செய்யப்படும். திருவிளக்கை அம்பாளாகக் கருதி, 16 முறை விழுந்து வணங்குவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிளக்கு_வழிபாடு&oldid=3756691" இலிருந்து மீள்விக்கப்பட்டது