மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை (மலாய்: Wilayah Persekutuan; ஆங்கிலம்: New Economic Policy - NEP) என்பது மலேசியாவில் மண்ணின் மைந்தர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான பங்களிப்புத் திட்டமாகும்.[1]

1971 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் அப்துல் ரசாக் இதை அறிமுகப் படுத்தினார். 1990-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் முடிவுக்கு வந்த பொழுது, தேசிய மேம்பாட்டுக் கொள்கை ஆங்கிலம்: National Development Policy (NDP)) எனும் ஒரு புதியத் திட்டம் இதனைத் தொடர்ந்தது.[2]

மலேசியச் சீனர் சிறுபான்மை மக்களுக்கும் மலாய் மக்கள் பெரும்பான்மையினருக்கும் இடையிலான பொருளாதார வேறுபாட்டைக் குறைப்பதற்கான இந்தத் திட்டம் மலாய் மக்கள் அல்லாத மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி விட்டதாக் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை முடிவிற்கு வந்துவிட்டாலும் அதன் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட மலாய்க்காரர்களுக்கான பல சிறப்பு பங்களிப்புகள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை[தொகு]

1969-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள் தொடங்கிய இனக் கலவரத்தின் பின்னணியில், சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை சமநிலைப் படுத்த இந்தக் கொள்கை கொண்டு வரப்பட்டது.[3]

எல்லா இனத்தவரிடமும் வறுமையை ஒழிப்பதே அதன் அதிகாரப்பூர்வ நோக்கம். மலேசியப் பொருளாதாரத்தின் பங்கில் 30% மண்ணின் மைந்தர்களுக்கு (பூமிபுத்திரர்) கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்காகப் பொருளாதாரத்திலும், கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மலாய் மக்களுக்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.[3]

குற்றச்சாட்டுகள்[தொகு]

சுமார் 50 வருடங்களுக்குப் பின்னும் "பொருளாதாரத்தில் மலாய்க்காரருக்கு 30%" எனும் நோக்கம் நிறைவேறவில்லை என பலர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுபான்மையினர், குறிப்பாக இந்தியச் சிறுபான்மையினர், இந்தத் திட்டத்தினால் புறக்கணிக்கப் படுவதாக கருதுகின்றார்கள். மலாய்க்காரருக்கு சிறப்பிடம் தரும் அரசியல் சாசன பிரிவு 153-ஐ குறைகூறுவதோ, அதை நீக்க வேண்டும் என்று கோருவதோ சட்ட விரோதமாக்கப்பட்டு உள்ளது.

போராட்டங்கள்[தொகு]

சிறுபான்மை மலேசிய இந்தியர்களின் (இவர்களில் அதிகமானோர் தமிழர்கள்) நிலை மிகவும் பின்தங்கி விட்டதாகக் கருதிப் பல இந்திய அமைப்புகள் ஒன்றுகூடி இந்து உரிமை நடவடிக்கை அமைப்பை (இண்ட்ராப் (HINDRAF) உருவாக்கி எதிர்ப்புப் போராட்டம் செய்து வருகின்றனர்.

நவம்பர் 2007; பிப்ரவரி 2008-இல் பெரும் திரளான மலேசிய இந்தியர் மக்கள் ஒன்றுகூடியதை மலேசிய அரசு சட்டவிரோதமாக அறிவித்தது. இண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தலைவர்கள் காலவரையின்றி சிறைபடுத்தப்பட்டனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2021/36 "Malaysia's New Economic Policy and the 30% Bumiputera Equity Target: Time for a Revisit and a Reset" by Lee Hwok Aun". ISEAS-Yusof Ishak Institute. 25 March 2021. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  2. Long, Atan & Ali, S. Husin (ed., 1984). "Persekolahan untuk Perpaduan atau Perpecahan?", p. 281. Ethnicity, Class and Development Malaysia. Persatuan Sains Sosial Malaysia. No ISBN available.
  3. 3.0 3.1 "New Economic Policy: The 13 May 1969 riots led to the inauguration of the 20-year New Economic Policy (NEP), a social engineering project to reconstruct an economic system that had perpetuated these inequities". www.ehm.my. பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.
  4. "Malaysian police swooped on Friday on organizers of a planned protest by minority ethnic Indians, arresting them for sedition and warning of racial strife if the rally went ahead as planned at the weekend". பார்க்கப்பட்ட நாள் 28 March 2022.