மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்

ஆள்கூறுகள்: 23°10′58″N 75°46′6″E / 23.18278°N 75.76833°E / 23.18278; 75.76833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகாலேஸ்வரர் கோயில்
மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன் is located in மத்தியப் பிரதேசம்
மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
அமைவு:உஜ்ஜைன்
ஆள்கூறுகள்:23°10′58″N 75°46′6″E / 23.18278°N 75.76833°E / 23.18278; 75.76833
கோயில் தகவல்கள்
இணையதளம்:http://www.mahakaleshwar.nic.in
மகாகாலேஸ்வரர் கோயில் உஜ்ஜைன்

மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது.

ஜோதிர்லிங்கம் தோன்றியது குறித்த தொன்மம்[தொகு]

புராண காலத்தில் அவந்தியின் அருகில் இருந்த மலைக்காட்டில் ஒரு சாபத்தால் வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் இருந்தான். அவன் அவ்வப்போது நகருக்கு வந்து சூறையாடி மக்களுக்கு பெரும் துன்பத்தை இழைத்துவந்தான். அப்போது அவந்தி நகரில் வாழ்ந்துவந்த அந்தணரான விலாசனை நகர மக்கள் அணுகி வேதாளத்திடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் அதற்கு சம்மதித்து வேத விற்பன்னர்களையும், துறவிகளையும் அழைத்துவந்து சிவனை நோக்கி பெரும் வேள்வி ஒன்றை செய்தனர். வேள்வியின் முடிவில் வேள்வி குண்டத் தரைவெடித்து அதிலிருந்து ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்தை இரண்டாக பிளந்துகொண்டு ஆவேசத்துடன் மாகாளர் தோன்றி வேதாளத்தை அழித்தார். அதன்பிறகு மக்கள் மாகாளரை அங்கேயே தங்கி தங்களைக் காக்குமாறு வேண்டினர். மாகாலரும் ஆவேசம் தணிந்தார். பிளந்த லிங்கம் ஒன்றுசேர மாகாளர் ஜோதிவடிவில் அதில் கலந்து ஜோதிர்லிங்கமானார்.

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள்[தொகு]

சிவ புராணத்தின் படி, பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காலத்தில் படைப்பில் யார் உயர்ந்தவர் என்பதில் வாக்குவாதம் செய்தனர்.[3] அவற்றைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் முடிவில்லாத ஒளியின் தூணான ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார். விஷ்ணு மற்றும் பிரம்மா, பகவான் தூணில் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல் நோக்கி பயணிக்க முடிவு செய்கிறார்கள். ஒளியின் முடிவைக் கண்டுபிடிக்க, பிரம்மா தான் முடிவைக் கண்டுபிடித்ததாக பொய் சொன்னார். அதே நேரத்தில் விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பூலோகச் சடங்குகளில் பிரம்மாவிற்கு இடமில்லை என்றும், நித்தியம் முடியும் வரை விஷ்ணு பூவுலகத்தாரால் வழிபடுவார் என்றும் பிரம்மாவை சபித்தார்.

ஜோதிர்லிங்கம் மிக உயர்ந்த பகுதியற்ற யதார்த்தம் ஆகும். அதில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன.[4][5] இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.[6][7][8]

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களும், அவை அமைந்துள்ள இடங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.: சோமநாதர் கோயில், குசராத்து, மல்லிகார்ஜுனா கோயில் ஸ்ரீசைலம் ஆந்திரப் பிரதேசம், மகாகாலேஸ்வர் கோயில், உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம், ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி, மத்தியப் பிரதேசம், கேதார்நாத் கோயில் இமயமலை, உத்தராகாண்ட் மாநிலம், பீமாசங்கர் கோயில், மகாராட்டிரம், காசி விசுவநாதர் கோயில், வாரணாசி, உத்தரப் பிரதேசம், திரியம்பகேஸ்வரர் கோயில், மகாராஷ்டிரம், வைத்தியநாதர் கோயில், தியோகர்,சார்க்கண்ட் அல்லது பைஜ்நாத் கோயில், இமாச்சலப் பிரதேசம், நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குசராத்து, இராமநாதசுவாமி கோயில், இராமேசுவரம், தமிழ்நாடு மற்றும் கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத், மகாராஷ்டிரம்.[3][9]

கோயில் அமைப்பு[தொகு]

மாகாளர் கோயிலானது உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலத்தானமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. அதற்கு படிக்கட்டுகள்வழியாக சென்று தரிசிக்கவேண்டும். முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்டியளிக்கிறார்.

மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலே செல்ல படிக்கப்படுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. அங்கு வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.

மகாகாளேஷ்வரர் மக்கள் வழித்தடம்[தொகு]

ரூபாய் 350 கோடி அமைக்கப்பட்ட மகாகாளேஷ்வர் மக்கள் வழித்தடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 11 அக்டோபர் 2022 அன்று திறந்து வைத்தார். இது காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடத்தை விட நான்கு மடங்கு பெரியதாகும். இது 900 மீட்டர் நீளம் கொண்டது. நந்தி துவாரம் மற்றும் பினாகி துவாரம் ஆகிய இரண்டு கம்பீரமான நுழைவாயில்கள் வழியாக கோயிலுக்குச் செல்லலாம். இதன் ஒரு வரிசையில் 108 அலங்கரிக்கப்பட்ட மணற்கல் தூண்கள் உள்ளது. நடைபாதைக்கு பயன்படுத்தப்படும் மணற்கல் ராஜஸ்தானில் இருந்து பெறப்பட்டு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த கைவினைஞர்கள் கலை காட்சிகளை உருவாக்க உழைத்துள்ளனர். திரிசூலம் வடிவமைப்பு மற்றும் தூண்களில் சிவபெருமானின் திரிசூலம், மழு, பிநாகம், சிவ தனுசு மற்றும் கட்வங்கம் போன்ற பல்வேறு முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதை பழைய ருத்ரசாகர் ஏரியால் சூழப்பட்டுள்ளது. இது உஜ்ஜைனி நகரத்தின் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடைபாதையில் நுழைந்தவுடன், 192 சிலைகள், 53 சுவரோவியங்கள் மற்றும் 108 முத்திரைகள் சிவனைப் பற்றிய கதைகளைக் காண்பிக்க்கும்.[10][11]

நடைபாதை வளாகத்திற்குள் வாகன நிறுத்துமிடம், பூங்கா மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம், திரிவேணி அருங்காட்சியகம், ருத்ரசாகர் ஏரியை காண்பதற்கான திறந்தவெளி அரங்கம், உணவகங்கள் மற்றும் கடைகள் போன்றவை அடங்கும்.

வரலாறு[தொகு]

பொ.ஊ. 1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கியபோது இக் கோயில் வளாகம் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ் அவர்களால் அழிக்கப்பட்டது. படையெடுப்பின் போது திருடப்பட்ட ஜலதரியுடன் (லிங்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு) கூடிய ஜோதிர்லிங்கம் அகற்றப்பட்டு அருகிலுள்ள 'கோட்டீர்த்த குந்தா' என்கிற இக் கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. [12]

தற்போதைய கட்டமைப்பு மராட்டிய ஜெனரல் ரனோஜி ஷிண்டே என்பவரால் 1734 இல் கட்டப்பட்டது. மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேவின் மனைவி பைசா பாய் உள்ளிட்ட அவரது வம்சத்தின் மற்ற உறுப்பினர்களால் இக்கோயிலுக்கு புனரமைப்பு வசதிகள் மற்றும் மேலாண்மை செய்யப்பட்டது. (1827-1863). ஜெயாஜிராவ் ஷிண்டேவின் காலத்தில் (1886 வரை), அப்போதைய குவாலியர் மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இந்த கோவிலில் நடத்தப்பட்டன.

மராட்டிய ஆட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் உஜ்ஜைனில் நிறுவப்பட்டது. உஜ்ஜைனின் நிர்வாகப் பொறுப்பு, முதலாம் பேஷ்வா பாஜிராவிடமிருந்து அவரின் உண்மையுள்ள தளபதி ரனோஜி ஷிண்டேவுக்கு சென்றது. ரனோஜியின் திவான் சுகதானகர் ராம்சந்திர பாபா ஷெனாவி ஆவார். அவர் மிகவும் செல்வந்தராக இருந்தார், அவர் தனது செல்வத்தை மத நோக்கங்களுக்காக முதலீடு செய்ய முடிவு செய்தார். இதுதொடர்பாக, அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் 4 முதல் 5 தசாப்தங்களில் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலை மீண்டும் கட்டினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இக்கோயிலின் தேவஸ்தான அமைப்பு, உஜ்ஜைன் நகராட்சி நிறுவனத்தால் மாற்றப்பட்டது. தற்போது, இந்த அமைப்பு, உஜ்ஜைன் மாகாணத்தின் ஆட்சியாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளது.

அருகில் உள்ள கோயில்கள்[தொகு]

  • உஜ்ஜைனி காலபைரவர் கோயில்
  • ஹரஸித்தி மாதா கோயில் {உச்சினி மாகாளி}
  • சாந்திபனி முனிவர் ஆசிரமம
  • சிந்தாமணி விநாயகர் கோயில்
  • திரிவேணி நவக்கிரகக் கோயில்
  • மங்கள்நாத் கோயில்
  • சித்தர் கோயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://dic.mp.nic.in/Ujjain/mahakal/default.aspx
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. 3.0 3.1 R. 2003, pp. 92-95
  4. Eck 1999, p. 107
  5. See: Gwynne 2008, Section on Char Dham
  6. Lochtefeld 2002, pp. 324-325
  7. Harding 1998, pp. 158-158
  8. Vivekananda Vol. 4
  9. Chaturvedi 2006, pp. 58-72
  10. PM Modi inaugurates Mahakal Lok corridor at Mahakaleshwar temple in Ujjain: All you need to know
  11. The corridor that will lead you to the famous Mahakaleshwar temple is also set to become one of the largest in the country
  12. Archaeological Survey of India. "CIVIL APPELLATE JURISDICTION CIVIL APPEAL NO. 4676 2018 - Section 1.2 - RELIGIOUS AND HISTORICAL SIGNIFICANCE" (PDF). Supreme Court of India. Archived from the original (PDF) on 18 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]