அ. சண்முகதாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. சண்முகதாசு
பிறப்பு(1940-01-02)சனவரி 2, 1940
திருகோணமலை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்

அ. சண்முகதாசு (A. Sanmugadas, பிறப்பு: சனவரி 2, 1940) ஈழத்தின் கல்விமானும் தமிழறிஞருமாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆய்வு நூல்கள்,[1] கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையில் உள்ள திருகோணமலையில் 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் இரண்டாம் நாள் பிறந்தவர். அருணாசலம்-முத்தம்மாள் ஆகியோர் இவரின் பெற்றோர்கள். தனது இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிசு சேவியர் பள்ளியில் பயின்றவர் (1945-51), பின்னர் வந்தாறுமூலையில் (செங்கலடி) உள்ள அரசு கல்லூரியிலும் (1952-57), பின்னர் சிவானந்த வித்தியாலயத்திலும் பயின்றார் (1957-59).

முனைவர் பட்டம்[தொகு]

1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தமிழை இளங்கலையில் பயின்றவர். இதில் வரலாறு, சமற்கிருதம் உள்ளிட்ட பாடங்களையும் பயின்று முதல் வகுப்பில் தேறினார். அதன் பிறகு 1969-70 இல் இசுகாட்லாந்தில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ஓராண்டு மொழியியல் பயின்றார். 1970-72 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். "இலங்கைப் பேச்சுத் தமிழின் வினைவடிவங்களின் ஒலியன்கள்" என்பது இவர் தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பாகும்.

ஆசிரியப் பணி[தொகு]

இதற்கிடையில் சண்முகதாசு அவர்கள் 1963 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் அதே நிறுவனத்தில் துணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-68 இல் வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1975 முதல் யாழ்ப்பாண வளாகத்தில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்தார். 1976 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தம் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார்.[3]

1982 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பொறுப்பு வகித்தார். அடுத்த ஆண்டில் நைசீரியாவில் உள்ள இபாதன் பல்கலைக்கழகத்தில் (University of Ibadan) மொழியியல் துறையிலும் நைசீரிய மொழியியல் துறையிலும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1983 இல் சப்பான் டோக்கியோவில் உள்ள காகூசன் பல்கலைக் கழகத்தில் (Gakushuin University)வருகைதரு பேராசிரியராக பணிபுரிந்தார்.

1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்(பொறுப்பு) பணியையும் கவனித்தவர். 2007 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல நிருவாகப் பொறுப்புகளையும் கவனித்தவர். 2008 முதல் வருகைதரு பேராசிரியராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார்.

இலங்கையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, மதிப்பீட்டுக்குழு எனப் பல நிலைகளில் பணிபுரிந்தவர். அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் தேர்வாளராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். சிந்தனை என்னும் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

உலகத் தமிழ் மாநாட்டுப் பங்களிப்பு[தொகு]

அக இலக்கியமும் அறிவியலும் என்னும் தமிழ்த்துறை வெளியிட்ட நூலின் பதிப்பாசிரியராக இருந்து கடமையாற்றியவர். உலக அளவில் நடைபெற்ற பல உலகத் தமிழ்மாநாடுகளைக் கண்ட பெருமைக்கு உரியவர். அவ்வகையில் சென்னை, பாரிசு, மலேசியா, சிங்கப்பூர், தமிழகம், மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று கட்டுரை படைத்த பெருமைக்கு உரியவர். பல நாடுகள் சுற்றி வந்தாலும் தமிழ் அரங்குகளில் தமிழர் ஆடையான வேட்டியணிந்து அமர்ந்து வீற்றிருப்பது இவர்தம் தமிழ் உணர்வுகாட்டும் சான்றாகும். இலங்கை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி விளக்கும் ஆற்றல் பெற்றவர்.

விருதுகள்[தொகு]

சண்முகதாசு அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளை, பரிசுகளை வாங்கிப் பெருமை சேர்த்தவர். 1963 இல் ஆறுமுகநாவலர் விருது இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர். 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசு பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர். யுனெசுகோ விருது ஒன்றும், இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருது ஒன்றும் பெற்ற பெருமைக்கு உரியவர்.

இவரது துணைவியார் மனோன்மணி சண்முகதாசும் ஈழத்தின் ஒரு சிறந்த கல்விமானும், தமிழறிஞருமாவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் மொழி இலக்கண இயல்புகள் – Tamil Mozhi Ilakana Iyalbugal – கலாநிதி அ. சண்முகதாஸ் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – New century book house" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  2. "வாழ்நாள் பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் பாராட்டு விழாவும் நூல்களின் வெளியீடும்". தமிழ்மித்ரன். https://www.tamilmithran.com/article-source/NjgzNzgx/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-. பார்த்த நாள்: 9 November 2021. 
  3. "உலகத் தமிழ்ச்சங்கத்தில் இணையவழி தொடர் ஆய்வரங்கம் நிறைவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/aug/21/online-seminar-on-world-tamil-association-concludes-3453236.html. பார்த்த நாள்: 9 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சண்முகதாசு&oldid=3312225" இலிருந்து மீள்விக்கப்பட்டது