தமிழ் மின் புத்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி மிக இன்றியமையாத கருவியாக மாறிவருகிறது. தமிழன் இன்று கணினியுடன் நெருங்கிய தொடர்புடைய இணையத்தில் தமிழைப் புகுத்தி அதன் வளர்ச்சியில் முக்கியப் பங்கேற்றுள்ளான். இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி இரண்டாவது இடத்தைப் பெற்று வளர்ந்து வருகிறது.[மேற்கோள் தேவை] ஆங்கில மொழி இணைய தளங்களைப் போல் தமிழ் மொழியிலான இணையத் தளங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த இணைய தளங்களில் படிக்கக்கூடிய தமிழ் மின் புத்தகங்கள் உருவாக்கும் முயற்சியிலும் பல தமிழ் இணைய தளங்கள் முயன்று வருகின்றன.

மின் புத்தகங்கள்[தொகு]

இன்று அதிக அளவில் பயன்படுத்தும் புத்தகங்கள், தாளில் அச்சிட்டு, கட்டுமானம் செய்து தயாரிக்கப்படுகின்றன. இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செய்திகளைப் போலவே கணினி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் இடம் பெறச் செய்து அதை இணைய வழியில் படிக்கும் படியாக மின்புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து இதனைப் தரவிறக்கம் செய்து கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது படிக்கும் நிலையிலும் மின் புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன.

மின் நூல்கள்[தொகு]

  • முனைவர் கே.கல்யாணசுந்திரம், முனைவர் பி.குமார் மல்லிகாருசுணன் ஆகிய இருவரின் முயற்சியால் மதுரைத் திட்டம் என்ற பெயரில் திருவள்ளுவர் திருநாள் தை முதல் தேதி 1998 ஆம் ஆண்டு சில மின்நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
http://www.projectmadurai.org/pmworks.html
  • 27 ஆகஸ்டு 2001 தமிழ்மரபு அறக்கட்டளை மின்நூலை வெளியிட்டுள்ளது.

http://www.tamilheritage.org/old/index.html

  • தமிழில் 2003 ல் முதல்வன் என்ற பெயரில் மின்-நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிட்டவர் முனைவர் சி.சிதம்பரம் அவர்கள். இவர் தற்பொழுது காந்திகிராமகிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

http://www.muthalvan.in/images/mudalvan28-09-20pdf.pdf பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

  • இதனைத் தொடர்ந்து தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களின் முன்முயற்சியோடு முனைவர் ம.இளையராஜா, முனைவர் கா.வாசுதேவன்,முனைவர் மு.அருணாசலம், முனைவர் வே.கண்ணையன் இவர்களின் துணையோடு தமிழ்த்திணை சார்பில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடைபெற்ற சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு சிறப்புக் கருத்தரங்கில் (டிசம்பர் 2005) தமிழ்நாடு சட்டப்பேரவை அந்நாளைய தலைவர் முனைவர் கா.காளிமுத்து அவர்கள் கருத்தரங்க மின்-நூலை வெளியிட மகாகவி பாரதியின் பெயர்த்தி விஜயபாரதியின் வாழ்க்கைத் துணைவர் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் P.K.சுந்தராஜன் (கனடா) அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தமிழ் மின் புத்தகங்கள் உருவாக்கம்[தொகு]

ஒருவர் புத்தகமாக வெளியிட விரும்பும் ஆழ்ந்த, உட்பொதிந்த கருத்துக்கள் அடங்கிய பொருட்கூறுகளை (அ) பகுதிகளை கணினி வழியாகத் தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி, தட்டச்சு செய்து, அதை ஒரு கோப்பாக சேமித்துக் கொள்ள வேண்டும். தட்டச்சு செய்த கோப்புக்குப் பயன்படுத்திய மென்பொருளைக் கொண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவை இணையத்தின் குறிப்பிட்ட இணைய முகவரியின் சேமிப்புக் கிடங்கில் சேர்ப்பிக்கப்படும். அந்தக் கோப்பைப் பார்வையிடச் சொடுக்கும் பொழுது அந்த கோப்பு செயல்படும் பக்கங்களாக மாறி குறிப்பிட்ட கணினித் திரைக்கு வருகிறது.

சிக்கல்களும், தீர்வுகளும்[தொகு]

  • தமிழ்மொழியில் பல்வேறு வகையான எழுத்துருக்கள் உள்ளன. தமிழ் இணைய தள அமைப்பாளர்கள் அவரவருக்கு எளிதான ஒரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி இணைய தளங்களை அமைத்தனர். இதனால் அந்த இணையதளத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அந்த தமிழ் எழுத்துருவை தரவிறக்கம் செய்து அவர்களது கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகே அந்த தளத்திலுள்ள செய்திகளைப் படிக்க முடியும். தற்போது சில இணைய தளங்கள் மட்டுமே தனிப்பட்ட தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றன. அதிகமான தமிழ் இணைய தளங்கள் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. இதனால் தமிழ் இணைய தளங்களில் எழுத்துருச் சிக்கல்கள் ஓரளவு குறைந்துள்ளன.
  • தமிழ் மொழியிலான மின் புத்தகங்கள் அதிக அளவாக பி.டி.எப் எனப்படும் கோப்புகளாக உருவாக்கப்பட்டு விடுகின்றன. இந்தக் கோப்புகளைப் படிப்பதற்கான மென்பொருளை மட்டும் நம் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தக் கோப்புகளை எளிதில் படிக்க இயலும். சாதாரண இணைய இணைப்புள்ள கணினிகளில், இந்தக் கோப்புகளின் அளவு அதிகமான நிலையில் திறப்பதற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் சிறிது காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் இந்தக் கோப்புகளில் அதிக அளவுகளை எடுத்துக் கொள்ளும் படங்கள் போன்றவற்றைத் தவிர்த்து கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அவசியம் தேவை எனும் நிலையில் மட்டும் படங்களை இணைக்கலாம்.
  • தற்போது பிளாஷ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி தமிழ் மொழியில் அமைந்த எந்த ஒரு கோப்பையும் மின் புத்தகமாக எளிதில் மாற்ற முடிகிறது. இதன் மூலம் அமைந்த மின்நூலை எளிதில் படிக்க முடிகிறது. இதில் அதிகமான பக்கங்களையும், படங்களையும் இணைக்கும் வாய்ப்பு உள்ளது.

பயன்பாடுகள்[தொகு]

  • அதிகப் பக்கங்கள் கொண்ட நூல் பகுதிகளை கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
  • கட்டுமான நூல்களில் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க முடியாது. ஏனெனில் அதிக பொருட்செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் நூல்களில் அதிக அளவில் வண்ணப் புகைப்படங்களை இணைத்து வெளியிடமுடியும்.
  • மின் நூல்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்ப பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண நூல்களை இவ்வாறு பயன்படுத்த முடியாது.
  • உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் தேவையான பகுதிகளை இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக தேடிப் பார்த்துப் பயன்படுத்த முடியும்.
  • தேவையான மின்நூல்களை மின் வணிகம் (e-commerce) வழியாக வாங்கிப் பயன்படுத்த முடியும்.
  • அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் (Out of Print) இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் மின் புத்தகங்களைத் தேவையான நேரங்களில் உடனே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
  • மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும். அச்சிடப்பட்ட நூல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிதைந்து விடுகின்றன. ஆனால் மின் புத்தகங்களின் ஆயுள் காலம் பன்மடங்கு நீடிக்கக்கூடியது.

கோப்பு வகைகள்[தொகு]

  • epub
  • mobi
  • pdf

இவற்றில் epub ஆனது திறந்த வகையானது. html கோப்புகளின் zip வடிவமே இது. எந்த அளவு திரைக்கும் ஏற்ப இதன் பக்கங்கள் சுருங்கி, விரியும் தன்மை கொண்டவை. இதனால், கைபேசி, திறன்பேசி, பலகைக்கணிடிகளில் படிக்க ஏற்றது.

mobi ஆனது epub போன்றதே. ஆனால் திறந்த நிலைக் கோப்பு அல்ல. அமேசான் நிறுவனத்தின் kindle(கிண்டில்) கருவிகள், மென்பொருட்களில் மட்டுமே இதைப் படிக்க முடியும்.

PDF ஆனது அதிகம் அறியப்பட்ட கோப்பு வகை. ஆனால், பக்க அளவு மாற்ற இயலாததால், கணிணியில் மட்டுமே படிக்க ஏற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மின்_புத்தகம்&oldid=3442186" இலிருந்து மீள்விக்கப்பட்டது