சுதேசமித்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதேசமித்திரன்
Swadesamitran
வகைதினசரி நாளிதழ்
வடிவம்காகிதம்
உரிமையாளர்(கள்)சுதேசமித்திரன் குழு
வெளியீட்டாளர்சுதேசமித்திரன் குழு
நிறுவியது1891
அரசியல் சார்புஇல்லை
மொழிதமிழ்
தலைமையகம்மெட்ராஸ், இந்தியா

சுதேசமித்திரன் (Swadesamitran) தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். 1891-ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்டது[1]. மதராசு மாகாணம் என அழைக்கப்பட்ட அக்காலத்தில் அங்கு அதிக விற்பனையைக் கொண்ட தமிழ் நாளிதழாகத் திகழ்ந்தது. தவிர கீழ் மற்றும் மேல் பர்மா (மியான்மர்), இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், மலாய் மாநில கூட்டாட்சி, சுமாத்திரா, போர்னியோ, கொச்சின் இராச்சியம், சீனா மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா என விற்பனை விரிந்திருந்தது.

மகாகவி பாரதியார் தனது 22-ஆம் வயதில் 1904-ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணிய அய்யருடன் எழுந்த வேறுபாட்டால் 1906-இல் விலகினார். பாரதி விலகிய பின்னர்ப் பஞ்சாபில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து அய்யர் அரசின் அநீதிகளை எதிர்த்த கட்டுரைகளை வெளியிட்டார். இதனால் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 1915-இல் த இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அய்யங்காரிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். அவரின் தலைமையில் நாளிதழ் புதுப்பொலிவு பெற்றது. சி. ஆர். சீனிவாசனை வணிக மேலாளராகவும் பாரதியாரை 1920-இல் மீண்டும் கொணர்ந்து ஆசிரியராகவும் அரசியல் தளத்தில் ஒரு சிறப்பு இலக்கிய நாளிதழாக மாற்றினார்.

1962-இல் சீனிவாசனின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்தி போன்றவற்றுடன் போட்டியிட முடியாது 1970களில் மூடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சுதேசமித்திரனின் பங்கு சிறப்பானது. அனுபவமிக்க க. நா. சுப்பிரமணியம், மு.வரதராசனார் மற்றும் எஸ். டி. எஸ். யோகி என்று பலரின் ஆக்கங்களை ஏந்தி வந்திருக்கிறது. கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929-இல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம், க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் தாளியலின் ஆரம்பங்கள்". Archived from the original on 2003-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசமித்திரன்&oldid=3555000" இலிருந்து மீள்விக்கப்பட்டது