மும்மூர்த்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்மூர்த்திகள்
தேவநாகரிत्रिमूर्ति
சமசுகிருதம்திரிமூர்த்தி
வகைதேவர் (இந்து சமயம்)
துணைமுத்தேவியர்
பிரம்மா, மகா விஷ்ணு மற்றும் சிவன் சிற்பங்கள், எல்லோரா
திருமூர்த்திகள் தங்கள் தேவியருடன்
பிரம்மா, சிவன், விச்ணு சிற்பங்கள், களேபீடு(halebeedu), கர்நாடகம்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை மும்மூர்த்தி அல்லது திரிமூர்த்தி (சமஸ்கிருதம்:त्रिमूर्तिः, ''trimūrti'') என்று குறிப்பிடுகின்றார்கள். சிவன் தனது இடப்புறத்திலிருந்து விஷ்ணுவையும், வலப்புறத்திலிருந்து பிரம்மதேவரையும் படைத்ததாக விஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர் எடுத்தியம்புகிறார். ஒருமுறை பிரம்மருக்கும், விஷ்ணுவுக்கும் தான்தான் பெரியவர் என்று பூசல் ஏற்பட்டதன் காரணமாக பிரம்மன், பத்ம கற்பத்தில் திருமாலின் உந்தி கமலத்திலிருந்து பிறப்பெடுப்பார் என்று திருமாலுக்கு சிவன் அருளினார்.[1] இந்து சமயத்திலே இந்த அண்டத்தையும் அதில் உள்ள உயிர்களையும் உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவராகப் பிரம்மாவையும், அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவராக விஷ்ணுவையும், அழித்தல் தொழிலைச் செய்பவராகச் சிவனையும் கொள்வர். இந்துக் கடவுளரில் மிகவும் முக்கியமான இம்மூவரையும் மும்மூர்த்திகள் எனக் குறிப்பிடுவர்.

இம்மூவரையும் ஒருங்கே பிரம்மா-விஷ்ணு-சிவன் என்பது வழக்கம். இக் கருத்துருவை உருவ வடிவத்தில் ஒருங்கே குறிக்கும்போது சில சமயங்களில் ஒரே கழுத்தில் மூன்று தலைகள் இருப்பது போல் அமைப்பர். ஒரே தலையில் மூன்று முகங்களைக் கொண்டதாகவும் அமைப்பது உண்டு.

கடவுள்கள்[தொகு]

பிரம்மா[தொகு]

இவர் இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனுமாவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரசுவதி சத்ய லோகத்தில் வசிப்பவர். திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளிவந்த சரசுவதி தேவியையே இவர் மணந்து கொண்டார். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, ஜனகர், ஜனந்தனர், சனாதனர், ஜனத்குமாரர், என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது.

பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிஷியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமகரிசியையும், பெருவிரலிலிருந்து தட்ஷனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்திரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.

சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக, பிரம்மா கயிலை வரும்பொழுது, முருகனை வணங்கத் தவறிவிட்டார். இவரை முருகன் அழைத்து, யார் அவர்? என வினாவெழுப்பிய பொழுது, தான் பிரணவ மந்திரத்தினைக் கூறி, படைக்கும் தொழிலை செய்பவன் என்று கூறினார். முருகன், பிரணவ மந்திரத்தின் உட்பொருளை அவரிடம் கேட்க, தெரியாது நின்ற பிரம்மாவை முருகன் சிறைசெய்தார். அத்துடன் படைக்கும் தொழிலையும் தானே எடுத்துக் கொண்டார். சிறையிலிருந்த பிரம்மா, தனது எட்டுக்கண்களைக் கொண்டு சிவபெருமானை வணங்கினார். அதனால் முருகனிடமிருந்து, பிரம்மாவிற்கு, படைக்கும் தொழில் மீண்டும் கிடைத்ததாக எண்கண் (பிரம்மபுரம்) தலவரலாறு கூறுகிறது.

விஷ்ணுவுக்கும், பிரம்மா விற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற கருத்து வேறுபாட்டை தீர்க்க, இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவனும் லிங்கோத்பவர் என்ற வடிவத்தில் எழுந்தருளி, இருவரில் ஒருவர் தமது அடியையும், ஒருவர் தமது முடியையும் கண்டு வருமாறு பணித்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியைக் காண, பூமியை குடைந்து சென்று பார்த்தார்; சிவனின் அடியை காண இயலாத விஷ்ணு, சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியைக் காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் பிரம்ம தேவரோ, அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காணச் சென்றார். வழியிலேயே, சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவானது அதன் பயணத்தினைக் கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாகச் சொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.

பிரம்ம புராணத்தின் படி, பிரம்மா சுயம்புவாகத் தோன்றி, பூமியையும், சொர்க்கத்தினையும் படைத்ததார். ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் ஆகியவற்றை பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலச்தியர், புலகர், கிரது, வசிச்டர் முதலிய சப்த ரிஷிகளையும் படைத்தவர், சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாகக் கூறுவர்.

மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். இராவணனின் தம்பியான கும்பகர்ணன், சாகா வரம் கேட்க நினைத்து, நித்திரை வரம் வாங்கிய கதை பரவலாக அறியப்பட்டுள்ளது. இக்கதை இராமாயணத்தில் வருகிறது.

இந்து தொன்மவியலில் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக பிரம்மாச்திரம் கருதப்பெறுகிறது. இந்த அச்திரத்தினை, பிரம்மாவை நோக்கி தவமிருந்து அரக்கர்களும், தேவர்களும் பெற்றுக் கொள்வதாகவும், மந்திரத்தினை உச்சரித்து, பிரம்மாச்திரம் எய்துவதாக, புராணங்கள் தெரிவிக்கின்றன.

இந்துக்காலக் கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது, பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக, கருதப்பெறுகிறது.

இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன. அவற்றில் சில:

  • இராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற புஸ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையானதும் முதன்மையானதுமான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
  • குஜராத் மாநிலத்தில், சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி- கபிலநதி-சரஸ்வதி நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மன் கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்டது.
  • தமிழ்நாட்டில், கும்பகோணம் நகரில் சரஸ்வதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன்’ கோயில் என்று உள்ளூரில் கூறுவர்.
  • குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை.
  • பீகார் மாநிலம், கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி எனுமிடத்தில் ’கயாச்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
  • குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றாங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்தில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு பூசை இல்லை.
  • தமிழ்நாடு, திருப்பட்டூர் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
  • தமிழ்நாடு, நாகப்பட்டினம், நாகப்ஷேத்திரம் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.[2]

சிவன்[தொகு]

சிவன் என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் பிரபஞ்சத்தையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இதனில் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.

அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.

தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டு தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சைவ சமயம்[தொகு]

சைவ சமய மக்களின் படி சிவன் ஐந்து செயல்களை செய்கிறார் - படைத்தல், பாதுகாத்தல், அழித்தல், கருணை மறைத்தல் மற்றும் கருணை வெளிப்படுத்துதல். இந்த முதல் மூன்று செயல்கள் சிவனின் அவதாரங்கள் என கருதப்படும், சதியோசதா (பிரம்மாவுடன் ஒத்துப்போகின்ற), வாமதேவா (விச்ணுவை ஒத்துப்போகின்ற) மற்றும் அகோரா (ருத்ராவுக்கு ஒத்துப்போகின்ற) ஆகியவையுடன் தொடர்புடையவை. எனவே, பிரம்மா, விச்ணு மற்றும் ருத்ரர் சிவனிலிருந்து வேறுபட்ட தெய்வங்கள் அல்ல, மாறாக சிவனின் வடிவங்களே என இம்மக்களால் கருதப்படுகிறது .

பிரம்மா / சதியோசதவாக, சிவன் உருவாக்குகிறார், விச்ணு / வாமதேவனாக, சிவன் பாதுகாக்கிறார், ருத்ரா / அகோராக, அவர் அழிக்கிறார். சிவன் "அழிவின் தேவன்/கடவுள்" என்று கருதுபவர்களுக்கு இந்த தத்துவம் வித்தியாசமாக இருக்கிறது. சைவ மக்களுக்கு, சிவன் மட்டுமே கடவுள், எல்லா செயல்களையும் அவரே செய்கிறார், அவற்றில் ஒன்று மட்டுமே அழிவு என கருதுகின்றனர்.

7 ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தை வைட்ணவ ஆழ்வார்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்பும், இராமானுசர் போன்ற புகழ்பெற்ற வேதாந்த அறிஞர்களுமே வைஷ்ணவ விரிவாக்கத்திற்கு உதவிய தத்துவ மற்றும் நிறுவன கட்டமைப்பை உருவாக்கியதற்கு முன்னர், தென்னிந்தியாவின் முக்கிய பாரம்பரியத்தில், பௌத்தம் மற்றும் சமத சமயத்துடன் இணைந்திருந்தது சைவ சமயம்.[3]

சிவபெருமானை முதன்மை தெய்வமாகவோ அல்லது மரியாதைக்குரிய மனிதகுல வடிவமான (லிங்கம் அல்லது சுவயம்பு வடிவத்தில்) சிலைகளைக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இந்து கோயில்கள் உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் பல வரலாற்று சிவன் கோயில்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து பிழைத்திருக்கின்றன. சில பகுதிகளில் பல சிவன் கோயில்கள் உள்ளன. அதாவது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பகுதியில், பொ.ஊ. 800 முதல் 1200 வரை சோழ சாம்ராச்சிய காலத்தின்போது ஏராளமான சிவன் ஆலயங்கள் கட்டப்பட்டன.

குடிமல்லம் எனும் இடத்தில் உள்ள பழமையான பழங்கால லிங்கம் ஆகும். இது பொ.ஊ.மு. 3 முதல் 1-ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் வரையறுக்கப்பட்டுள்ளது. இது ஐந்து அடி உயர உயரமான கல் லிங்கமாக சிவன் உருவத்துடன் அமைந்துள்ளது. இந்த பண்டைய லிங்கம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.

விச்ணு[தொகு]

விச்ணு என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் நாராயணன், கேசவன், வாசுதேவன் என்றும் அறியப்பெறுகிறார். சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவராகவும், பாற்கடலில் இலக்குமியுடன் ஆதிசேசனின் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவருடைய வாகனமாக கருடனும், அருவ வடிவமாகக் சாலக்கிராமமும் கருதப்படுகிறது.

இந்துக்கோவில்களில் சயனக் கோலத்தில் மூலவராக இருக்கும் ஒரே இறைவன் இவரே. திருவரங்கம் போன்ற வைணவத்தலங்களில் இந்த கோலமுள்ளது. நின்ற கோலத்தில் திருப்பதி போன்ற தலங்களில் அருளுகிறார். மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர். பிரம்மன் இவருடைய தொப்புள்கொடியிலிருந்து தோன்றியவராகப் புராணங்கள் கூறுகின்றன. அறம் குறித்த சிந்தனைகளும் அதைத்தொடர்ந்த செயல்களும் குறையும்பொழுது தசாவதாரம் முதலிய எண்ணற்ற அவதாரங்களை எடுத்து அதை சரிசெய்கிறார். இவருடைய ராம அவதாரமும், கிருட்ண அவதாரமும் பரவலாக வணங்கப்படுகின்றது. கம்பராமாயணம், வில்லிபாரதம், பாரத வெண்பா, அரங்கநாதர் பாரதம் போன்ற பல வைணவநூல்கள் திருமாலுடைய புகழை கூறுகின்றன. இதிகாசமான மகாபாரதம் இவருடைய கிருட்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் மையப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. மச்சபுராணம், வாமன புராணம் என பன்னிரு புராண நூல்களில் விச்ணுவின் பெருமை விவரிக்கப்பட்டுள்ளதுடன், புத்தரும் சமணரும் இவருடைய அவதாரங்கள் என்கின்றன.

சைவக்கடவுளான சிவபெருமானின் மனைவியான சக்தியின் அண்ணன் என்று விச்ணு போற்றப்படுகிறார். அதன் காரணமாக அவர் சிவசக்தி மைந்தர்களான விநாயகருக்கும், முருகனுக்கும் தாய்மாமனாக அறியப்படுகிறார்.

தாருகாவனத்தில் ரிசிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்று ரிசிபத்தினிகளை கவர்ந்ததைப் போல, அவருடன் திருமால் மோகினி வடிவெடுத்து சென்று ரிசிகளை வசப்படுத்தியதாக இந்து தொன்மவியல் கதைகள் கூறுகின்றன.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற போது, விச்ணு எடுத்த மோகினி அவதாரத்தினைக் காண இயலாத சிவபெருமான் விச்ணுவை மீண்டும் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாகவும், அவரின் வேண்டுகோளுக்கினங்கி மோகினியாக மாறிய விச்ணுவுடன் சிவபெருமான் உறவாடியதாகவும் ஒரு கதையுண்டு. இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.[4]

வைணவ சமயம்[தொகு]

வைணவ சமயம் விச்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விச்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விச்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணுவின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், மோகினி, வாமனன், பரசுராமன், இராமன், கிருட்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராக புராணங்கள் ஆகும். குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவ சமயம் மக்களிடையே பரவியிருந்தது.

இராமானுசர் பரப்பிய விசிச்டாத்வைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் திருமால் என்ற விச்ணுவே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் அபார கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் சீவனும் உயிரும் உடலும் போல. சீவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.

இறைவனுக் கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிச்ணு, இராமர், கிருட்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும்.. யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருட்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார்.

வைணவ சமயத்தில் திருவைணவம், பிரம்ம வைணவம், ருத்ர வைணவம், குமார வைணவம் என பிரிவுகள் உண்டு. திருவைணவத்தில் வடகலை, தென்கலை, ராமாநந்தி, சுவாமிநாராயண் என்று நான்கு பிரிவுகள் உள்ளன. பிரம்ம வைணவத்தில் தத்வவாதம், கெளடீய வைணவம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

  • வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்.
  • தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்.

புராண காலத்திலேயே தொடங்கிய திருவைணவம், ஆழ்வார்கள் காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால திருவைணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார். வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.[5]

சாக்த சமயம்[தொகு]

சாக்தம் எனும் சமயம் சக்தியை வழிபாடு கடவுளாகக் கொள்ளும் இந்து மத பிரிவு அல்லது சமயம் ஆகும். பூரண பிரம்ம சுவரூபிணியாகவும் சிவனிடத்திலே திருவருளாகவும் விச்ணுவிடத்திலே யோகமாயையாகவும் பிரம்மனிடத்திலே வாக்தேவியாகவும் வீற்றிருப்பது அந்த ஒரே சக்திதான். ஆதி பரம்பொருளான சிவபெருமானில் அவள் சரிபாதியான சக்தி. சிவம் எனும் ஒரு பரம்பொருளை அண்டசராசரம் எனும் விச்ணுவாக விரிவுபடுத்துவது இந்த சக்திதான். திரிமூர்த்திகளை இவளே கட்டுப்படுத்தி ஆட்டிவைக்கிறாள். பரமேசுவரனான சிவ பெருமானும் அந்த சிவ பெருமானின் விரிவாக்கமாக விளங்கும் நாராயணராம் திருமாலும் அன்னை பராசக்திக்குள் அடக்கம்.

படைக்கையில் பிரம்மனாகவும், காக்கையில் திருமாலாகவும், அழிக்கையில் உருத்திரனாகவும், மறைக்கையில் மகேசுவரனாகவும், அருள்கையில் சதாசிவனாகவும் அன்னை ஆதிபராசக்தியே செயலாற்றுகிறாள் என்று திரு லலிதா சகசுரநாமம், திரிபுரா ரகசிவம், வேதங்களில் திரிபுரா உபநீசட் போன்ற அருட்காவியங்கள் உரைக்கின்றன

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்மூர்த்திகள்&oldid=3790527" இலிருந்து மீள்விக்கப்பட்டது