இட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்லி (இட்டலி)
இட்லி
பரிமாறப்படும் வெப்பநிலைகாலை உணவு, சிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி,
உளுத்தம் பருப்பு
வேறுபாடுகள்ரவா இட்லி, சவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, மங்களூர் இட்லி, குஷ்பு இட்லி

இட்லி (இட்டலி) (ஒலிப்பு) என்பது அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவான இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றப்படுவதாக, உணவு நிபுணர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். [1]

பரிமாறும் முறை[தொகு]

சட்னியுடன் இட்லி

பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.

செய்முறை[தொகு]

இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் இட்லி

அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம்

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 400 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
  • ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
  • அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
  • அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
  • இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
  • புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும்.

வகைகள்[தொகு]

இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:

  • செட்டிநாடு இட்லி
  • மங்களூர் இட்லி
  • காஞ்சிபுரம் இட்லி (செய்முறை பரணிடப்பட்டது 2007-05-16 at the வந்தவழி இயந்திரம்)
  • ரவா இட்லி
  • சவ்வரிசி இட்லி
  • சேமியா இட்லி (செய்முறை பரணிடப்பட்டது 2007-05-14 at the வந்தவழி இயந்திரம்)
  • சாம்பார் இட்லி - இட்லி சாம்பார் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் பரிமாறப்படும்.
  • குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது.
  • குட்டி இட்லி (மினி இட்லி)(fourteen idly/Mini Idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
  • சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும்.
  • பொடி இட்லி - இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும்.

இட்லிச் சட்டி[தொகு]

இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது.

இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி.

இட்லி குறித்த சர்ச்சை டிவிட்[தொகு]

பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இந்திய உணவான இட்லியை சலிப்பு மிக்கது என்றும் மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று தனது டவிட்டரில் குறிப்பிட்ட நிகழ்வு, இட்லிப் பிரியர்கள் நடுவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இட்லி பிரியர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான உணவை தவறாக விமர்சிக்கப்படுவதை கண்டு விரக்தியடைந்து, ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.[2]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. K. T. Achaya (May 12, 1994). Indian Food: A Historical Companion. Oxford University Press, USA. ISBN 978-0-19-563448-8. பக்கம் 90
  2. ’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்லி&oldid=3619186" இலிருந்து மீள்விக்கப்பட்டது