மொள்ள இராமாயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் கம்ப இராமாயணம் எப்படி புகழ் பெற்றதோ அது போல் தெலுங்கில் புகழ் பெற்ற இராமாயணம் மொள்ள இராமாயணம். இது வால்மீகி இராமாயணத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இக்காவியம் நாரதரிடம் வால்மீகி கதை கேட்பது போல் அமைந்திருக்கிறது. இந்த இராமாயணம் முழுவதும் 824 பதிகங்களுக்குள் சுருக்கமாக அடங்கிவிடுகிறது. இந்த இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் 43 பதிகங்களைக் கொண்டது. ஆரண்ய காண்டம் 75 பதிகங்களும், கிஷ்கிந்தா காண்டம் 27 பதிகங்களும், சுந்தர காண்டம் 247 பதிகங்களும், யுத்த காண்டம் 351 பதிகங்களும், மீதமுள்ள பதிகங்கள் பால காண்டம் மற்றும் பிற காண்டங்களாக உள்ளன.

நூலாசிரியர்[தொகு]

இதை இயற்றிய அதுகுரி மொல்லா என்பவர் ஒரு பெண் புலவர். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரின் தந்தை பெயர் கேசன செட்டி. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோபவரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு முன் தெலுங்கில் காவியம் இயற்றிய பெண்கள் யாரும் இல்லை என்பது இங்கு முக்கியமானது. [1]

தோற்றம்[தொகு]

இந்நூல் உருவான விதம் குறித்துக் கதை ஒன்று உண்டு. தமது ஊரில் உள்ள கோயிலில் "மொள்ள" ஆழ்ந்த தியானத்தில் இருந்தாராம். அப்போது, இராமர் அவர் முன் தோன்றி உடனே இராமாயணத்தைப் பாடுமாறு கூறி மறைந்தாராம். கோயில் பூசகர் உடனடியாகவே வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவே, சற்று நேரம் தியானத்தில் இருந்த "மொள்ள" இராமாயணத்தைப் பாடத்தொடங்கிச் சிறிது நேரத்திலேயே முழுவதையும் பாடி முடித்ததாகச் சொல்லப்படுகின்றது. மொள்ள தனது காவியச் செய்யுள்களில், தான் இலக்கணம் படிக்கவில்லை என்றும், கோபவரத்து ஸ்ரீகண்ட மல்லேசனுடைய கருணையாலும், ஸ்ரீ ராமச்சந்திரன் ராமாயணம் பாடு என்று சொன்னதாலும் ராமாயணத்தை எழுதத் துணிந்ததாகவும் தெரிவித்திருக்கிறாள்.

இதர இராமாயணங்கள்[தொகு]

தெலுங்கில் இந்த மொள்ள இராமாயணம் தவிர பாஸ்கரர், ரங்கநாதர் ஆகியோர் எழுதிய இராமாயணங்களும் உண்டு. ஆனால், ஆந்திராவில் அனைவராலும் படிக்கப்படும் இராமாயணம் மொள்ள இராமாயணம்தான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தெலுங்கு மொழி மொள்ள இராமாயணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொள்ள_இராமாயணம்&oldid=3296219" இலிருந்து மீள்விக்கப்பட்டது