சிவா சௌகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேப்டன் சிவா சௌகான் (Captain Shiva Chauhan), இந்தியத் தரைப்படையின் கேப்டனான இவரை 2 சனவரி 2023 அன்று காரகோரம் மலைத்தொடரில் 15,600 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் போர் முனையில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் இராணுவ அதிகாரி ஆவார்.[1][2] சிவா சௌகான் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூர் நகரத்தில் பிறந்தவர். உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற சிவா சௌகான் சென்னை இராணுவ அதிகாரிகள் அகாதமியில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்திய இராணுவத்தில் பொறியியல் படைப் பிரிவில் 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.[3]

தனிப்பட்ட மற்றும் இராணுவ வாழ்க்கை[தொகு]

சிவா சௌகானுக்கு 11 வயதாக இருந்தபோது, அவளுடைய தந்தை இறந்துவிட்டார். அதைத் தொடர்ந்து அவரது அம்மா சிவாவை தனியாக வளர்த்தார். சிறுவயதில் இருந்தே இந்திய இராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை சிவாவுக்கு இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்த சிவா சௌகான் உதய்ப்பூரில் உள்ள என் ஆர் ஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிடக் கலையில் இளநிலைப் பட்டம் பெற்றார். 2020ம் ஆண்டில் சென்னை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஓராண்டு இராணுவப் பயிற்சி பெற்று, மே 2021ல் இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆக பணியில் சேர்ந்தார்.

2022ம் ஆம் ஆண்டில் சிவா சௌகான் களத் தரவரிசை தேர்வு மூலம் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். சூலை 2022ல் கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு, கேப்டன் சிவா சௌகான், சியாச்சின் போர் நினைவகத்திலிருந்து கார்கில் போர் நினைவகம் வரை மிதிவண்டி ஓட்டி பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

சிவா சௌகான் இந்திய இராணுவத்தின் வடக்கு கட்டளையின்[4] அதிரடிப் படையில் நியமிக்கப்பட்டார். 2022ல் சிவா சௌகானின் துடிப்பான செயல்திறன் அடிப்படையில், சியாச்சின் போர்ப் பள்ளியில் பயிற்சி பெற தகுதி பெற்றார். பயிற்சிப் பள்ளியில் சிவா சௌகான் பனிச் சுவர் ஏறுதல், சகிப்புத்தன்மை பயிற்சி, பனிச்சரிவு மற்றும் பிளவு மீட்பு மற்றும் உயிர்வாழும் பயிற்சிகளை உள்ளடக்கிய கடினமான பயிற்சியை மேற்கொண்டார். பயிற்சி மையத்தில் அவர் மட்டுமே பெண்.

சிவா சௌகான் சுமார் ஒரு மாத காலம் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, சியாச்சின் பனிப்பாறையின் குமார் முகாமில் 2 சனவரி 2023 அன்று முதல் மூன்று மாத காலத்திற்கு, சாப்பர்ஸ் குழுவை வழிநடத்துகிறார். சிவா சௌகான் தலைமையிலான குழு போர் பொறியியல் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தது. கடினமான பயிற்சிக்குப் பிறகு, ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான், உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் குமார் முகாமில் பணியாற்ற, ஃபயர் அண்ட் ப்யூரி சப்பர்ஸின் கேப்டன் சிவா சவுகான் முதல் பெண் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.[5] சியாச்சின் குமார் முகாமில் உள்ள ஒரே பெண் அதிகாரியான சிவா சௌகானுக்கு கழிப்பறை வசதியுடன் தனி குடில் நிறுவப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவா_சௌகான்&oldid=3677664" இலிருந்து மீள்விக்கப்பட்டது