பிரித்தானிய சரவாக் முடியாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய சரவாக் முடியாட்சி
Crown Colony of Sarawak
1946–1963
கொடி of Sarawak
கொடி
சின்னம் of Sarawak
சின்னம்
நாட்டுப்பண்: கடவுளே அரசனைக் காப்பாற்று (1946–1952)
கடவுளே இராணியைக் காப்பாற்று (1952–1963)

நியாயமான நிலம் சரவாக்
Sarawakஅமைவிடம்
நிலைபிரித்தானிய காலனி
தலைநகரம்கூச்சிங்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், இபான் மொழி, மெலனாவு மொழி, பிடாயூ மொழி, சரவாக் மலாய் மொழி, சீனம்
அரசாங்கம்முடியாட்சி காலனி
அரசர் 
• 1946–1952
ஆறாம் ஜோர்ஜ்
• 1952–1963
இரண்டாம் எலிசபெத்
ஆளுநர் 
• 1946–1949
சார்லசு கிளார்க்
• 1960–1963
அந்தோன் வாடெல்
சட்டமன்றம்சட்டமன்றம்
வரலாற்று சகாப்தம்புதிய பேரரசுவாதம்
• சரவாக் இராச்சியம் முடியாட்சி காலனி
1 சூலை 1946[1]
• சுய இராச்சியம்
22 சூலை 1963
16 செப்டம்பர் 1963
நாணயம்சரவாக் டாலர், மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்
முந்தையது
பின்னையது
போர்னியோவில் பிரித்தானிய இராணுவ நிருவாகம்
சரவாக்
தற்போதைய பகுதிகள்மலேசியா

பிரித்தானிய சரவாக் முடியாட்சி (Crown Colony of Sarawak; மலாய்: Tanah Jajahan Mahkota Sarawak) என்பது 1946-ஆம் ஆண்டில், போர்னியோ தீவில் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இருந்த ஒரு நிலப்பகுதியாகும்.

1945 செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 1946 சூலை 1-ஆம் தேதி வரையில், சரவாக் மாநிலத்தைத் தற்காலிகமாக நிருவாகம் செய்த பிரித்தானிய இராணுவ நிருவாகம் கலைக்கப்பட்ட பிறகு, சரவாக் மாநிலத்தில் பிரித்தானிய சரவாக் முடியாட்சி நிறுவப்பட்டது.

1963-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா கூட்டமைப்பு உருவாக்கப்படும் வரை பிரித்தானிய சரவாக் முடியாட்சி இயங்கி வந்தது. மலேசியா கூட்டமைப்பு அமைக்கப்பட்ட பின்னர் அந்தக் கூட்டமைப்பில் சரவாக் இணைந்தது. அதன் பின்னர் சரவாக் தனி ஒரு மாநிலமாகத் தகுதி பெற்றது. தற்போது சரவாக் மாநில சட்டமன்றம் அந்த மாநிலத்தின் சட்டப் பேரவையின் கீழ் இயங்கி வருகிறது.

பொது[தொகு]

சர் ஜேம்சு புரூக், செப்டம்பர் 1848-இல் பயன்படுத்திய எச்.எம்.எஸ். மேண்டர் கப்பல்
1912-இல் சரவாக் மலாய் மக்கள் தலைவர்கள்

இரண்டாம் உலகப் போரின் முடிவில், நேச நாடுகளிடம் சப்பான் சரண் அடைந்தது. அதைப் போல போர்னியோவிலும் சப்பானிய படைகள் நேச நாட்டுப் படைகளிடம் சரண் அடைந்தன.

இந்த நிலையில் சரவாக், சபா, லபுவான் பகுதிகளில் ஒரு நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புவதற்காகப் போர்னியோவில் ஒரு பாதுகாப்பு நிருவாகம் (Caretaker Government) உருவாக்கப்பட்டது.

அதுவே போர்னியோவின் இராணுவ நிருவாகம் எனும் தற்காலிக நிருவாகம் ஆகும்.[2]

சார்லசு வைனர் புரூக்[தொகு]

1946-இல் சரவாக் மற்றும் வடக்கு போர்னியோவில் பிரித்தானிய முடியாட்சி நிறுவுவதற்கு முன்னர் இந்த நிருவாகம் செயல்பட்டது. அதன் பின்னர் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் பொறுப்புகள் பிரித்தானிய சரவாக் முடியாட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.[3]

1945 செப்டம்பர் 11-ஆம் தேதி, சரவாக்கில் சப்பானிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்த பிறகு, ஜோன் பிட்சுபாட்ரிக் (John Fitzpatrick) என்பவரின் தலைமையில் பிரித்தானிய இராணுவ நிருவாகம் சரவாக் இராச்சியத்தை ஏழு மாதங்களுக்கு நிர்வாகம் செய்தது. பின்னர் 1946 ஏப்ரல் 15-ஆம் தேதி, சரவாக் இராச்சியத்தின் (Raj of Sarawak) பொறுப்புகள் வெள்ளை இராசா சார்லசு வைனர் புரூக்கிடம் (Charles Vyner Brooke) ஒப்படைக்கப்பட்டன.

80 மில்லியன் டாலர்கள் இழப்பு[தொகு]

சார்லசு வைனர் புரூக் 1946 ஏப்ரல் 15-ஆம் தேதி, சரவாக்கிற்கு மீண்டும் வந்தார். அவரை சரவாக் மக்கள் நல்லபடியாக வரவேற்பு வழங்கினார்கள். சப்பானிய ஆக்கிரமிப்பின் போது சரவாக்கிற்கு மொத்தமாக 23 மில்லியன் சரவாக் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு இருந்தது.[3]

அதைவிட சரவாக் எண்ணெய் நிறுவனத்திற்கு (Royal Dutch Shell) அதிகமான இழப்புகள் ஏற்பட்டு இருந்தன. அந்த நிறுவனத்தின் எண்ணெய் வயல்கள், விமான ஓடுபாதைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் பெருமளவில் அழிக்கப் பட்டதால் 57 மில்லியன் சரவாக் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு இருந்தது.[4]

சரவாக் புனரமைப்பு[தொகு]

சரவாக்கை புனரமைப்பு செய்வதற்கு தன்னிடம் போதுமான நிதி வளங்கள் இல்லை என்பதை வைனர் புரூக் உணர்ந்தார். அவருக்கு அடுத்தபடியாக வெள்ளை ராஜா பதவியில் அமர்ந்து ஆட்சி செய்வதற்கு அவர் மூலமாக அவருக்கு எந்த ஓர் ஆண் வாரிசும் இல்லை.

அத்துடன் தன் இளைய சகோதரர் பெர்த்திராம் புரூக்கிற்கும் (Bertram Brooke); மற்றும் அந்தோனி புரூக்கிற்கும் (Anthony Brooke) (பெர்ட்ராம் புரூக்கின் மகன்) சரவாக்கை ஆட்சி செய்யக்கூடிய ஆளுமைத் திறன் இல்லை என்பதையும் உணர்ந்தார். இவர்கள் இருவரின் தலைமையின் மீது வைனர் புரூக்கிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

இந்த நிலையில் சரவாக் இராச்சியத்தை பிரித்தானிய முடியாட்சியின் ஒரு காலனியாக (British Crown Colony) மாற்றி அமைத்தால் சரவாக் இராச்சியத்தின் உள்கட்டமைப்பை புனரமைப்பு செய்ய முடியும் என்றும்; மற்றும் அதன் பொருளாதாரத்தை மீண்டும் மேம்படுத்த முடியும் என்றும் சார்லசு வைனர் புரூக் நம்பினார்.

விட்டுக் கொடுப்பதில் எதிர்ப்பு[தொகு]

1950-இல் சரவாக்கில் பயன்படுத்தப்பட்ட அஞ்சல் தலை

1946 பிப்ரவரி 8-ஆம் தேதி சரவாக் பிரிவினை பற்றிய செய்தி முதன்முதலில் பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. சரவாக் மக்களிடம் இருந்து பல வகையில் கலவையான பதில்கள் வந்தன.

இபான் மக்கள், சீனர்கள் மற்றும் மெலனாவு சமூகத்தினர் அந்தச் செய்தியை சாதகமாக ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் சரவாக் இராச்சியத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் விட்டுக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரித்தானியப் பிரதிநிதிகள் சரவாக்கில் உள்ள பல்வேறு இனக்குழுக்களிடம் பிரிவினைப் பிரச்சினை குறித்து ஆய்வுகள் நடத்தினர். அந்த ஆய்வுகளின் இறுதியில் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்களில் பெரும்பாலோர், சரவாக் இராச்சியம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் ஒரு காலனி நாடாக மாறுவதை ஆதரிப்பதாக அறியப்பட்டது.

சரவாக் அரசியலமைப்பு சட்டம் 1941[தொகு]

1901-ஆம் ஆண்டு சார்லசு புரூக் அஞ்சல் தலை

இந்தக் கட்டத்தில், ஆத்திரேலியாவில் உள்ள வானொலி நிறுவனமான மெல்பர்ன் ஏபிசி வானொலி (ABC Radio Melbourne) ஒர் செய்தியை வெளியிட்டது. சரவாக் பிரிவினைக்கான (Cession of Sarawak) இழப்பீடாக சார்லசு வைனர் புரூக் இசுடெர்லிங் £1 மில்லியன் (£1 Million Sterling) பெறுவார் எனும் செய்தி. அந்தச் செய்தி சரவாக் மக்களைக் குழப்பம் அடையச் செய்தது.

சரவாக் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்டப் பிரிவு உள்ளது. 1941-ஆம் ஆண்டுக்குப் பிறகு சார்லசு வைனர் புரூக்கின் வழிகாட்டுதலின் கீழ் சரவாக் இராச்சியம் தன்னாட்சியை (Self-Governance) நோக்கிச் செல்லும் எனும் பிரிவு (1941 Constitution of Sarawak) உள்ளது. அதற்கு மாறாக, சரவாக் இராச்சியத்தை தனிப்பட்ட லாபத்திற்காக சார்லசு வைனர் புரூக் விற்க முயற்சிப்பதாக ஒரு தோற்றம் மக்களிடையே ஏற்பட்டது.[5]

சரவாக்கில் நடைபெற்ற சப்பானிய ஆக்கிரமிப்பின் காரணமாக அந்தச் சட்டப் பிரிவு நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பிரித்தானியர்களின் தவறுகள்[தொகு]

1911-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சரவாக் அரும் காட்சியகம்

அத்துடன் 1942-இல் சப்பானிய படையெடுப்பின் போது சரவாக் மக்களைப் பாதுகாக்க பிரித்தானியர்கள் தவறவிட்டனர். அதன் பின்னர் போருக்குப் பிறகு சரவாக்கை உரிமை கோருவதற்கு மட்டுமே முயற்சி செய்கிறார்கள் என்று உத்துசான் சரவாக் (Utusan Sarawak) என்ற உள்ளூர் மலாய் நாளிதழ் விமர்சித்தது.

மேலும், அப்படியே சரவாக் ஒரு முடியாட்சி காலனியாகப் பிரிந்து சென்றாலும் சரவாக்கை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டியதற்கான செலவுகளை நிதிக் கடன்களாக மட்டுமே வழங்கப்படும்; முழுமையான நிதியுதவி அல்ல என்று பிரித்தானியர்கள் அறிவித்து உள்ளனர்.

எனவே சரவாக் மீதான பிரித்தானியர்களின் உரிமைகோரல்; சரவாக்கின் இயற்கை வளங்களைத் தங்களின் சொந்த பொருளாதார நலன்களுக்காக சுரண்டும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது.

இதற்கு பின்னர், இலண்டனில் உள்ள பிரித்தானிய காலனித்துவ அலுவலகம் (British Colonial Office) சரவாக் மக்களைப் பொருட்படுத்தாமல் செயல்படத் தொடங்கியது. பிரித்தானிய மலாயா, நீரிணை குடியேற்றங்கள், பிரித்தானிய வடக்கு போர்னியோ புரூணை மற்றும் சரவாக் ஆகிய நிலப்பகுதிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ்; ஒரே நிர்வாகப் பிரிவாக அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.

சரவாக் உள்விவகாரங்களில் பிரித்தானியர் தலையீடு[தொகு]

1931-ஆம் ஆண்டில் கட்டப்படும் கூச்சிங் பள்ளிவாசல்

1870 முதல் 1917 வரை, பிரித்தானியர்கள் சரவாக்கின் உள் விவகாரங்களில் தலையிட்டு வந்தனர். அந்தத் தலையீடுகள் வெள்ளை இராசா சார்லசு புரூக்கின் (Rajah Charles Brooke) ஆட்சிக் காலத்தில் (1841–1868), சரவாக் மக்களின் கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொண்டன. அத்துடன் 1940-இல் உருவான அந்தோனி புரூக்கின் (Anthony Brooke; Rajah Muda of Sarawak) (1939–1946) வாரிசு பிரச்சினையிலும் பிரித்தானியர்கள் தலையிட்டனர்.

சார்லசு வைனர் புரூக்கின் இளைய சகோதரர் பெர்த்திராம் புரூக்கின் மகன் தான் அந்தோனி புரூக். அதாவது சார்லசு புரூக்கின் பேரன் ஆவார்.

சரவாக்கில் பிரித்தானிய ஆலோசகர்[தொகு]

மேலும் தென்கிழக்கு ஆசியாவில் சப்பானிய செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கலாம் என்று இலண்டன் பிரித்தானிய காலனித்துவ அலுவலகம் கூறியது. அதற்கு சரவாக்கில் ஒரு பிரித்தானிய ஆலோசகரை அமர்த்த வேண்டும்; ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்; என்று சார்லசு வைனர் புரூக்கை நெருக்கியது.

சரவாக்கின் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தை ஆத்திரேலியா கையகப்படுத்தலாம் என்பதிலும் ஆங்கிலேயர்களும் எச்சரிக்கையாக இருந்தனர். இதன் விளைவாக, ஆத்திரேலியர்கள் செய்வதற்கு முன்பே பிரித்தானிய அரசாங்கம் செய்ய விரும்பியது.[6]

பிரிவினை மசோதா நிறைவேற்றம்[தொகு]

1945-ஆம் ஆண்டில் சரவாக் கொடி ஏற்றப்படும் ஒரு நிகழ்ச்சி

1946 மே 15-ஆம் தேதி, சரவாக் பிரிவினை மசோதா சரவாக் மாநில மன்றத்தில் (Council Negri) (தற்போது சரவாக் மாநில சட்டமன்றம்) விவாதிக்கப்பட்டது. 1946 மே 17-ஆம் தேதி அந்த மசோதா 19 - 16 எனும் வாக்குகளில்; சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய அதிகாரிகள் பிரிவினை மசோதாவை ஆதரித்தனர். மலாய் அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300 முதல் 400 மலாய் அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகளைத் துறப்பு செய்தனர்.

அதன் பின்னர் வெள்ளை இராசா சார்லசு வைனர் புரூக் 1946 மே 18-ஆம் தேதி பிரிவினை மசோதாவில் கையெழுத்திட்டார். பிரித்தானிய சரவாக் முடியாட்சி (British Crown Colony) முறைமை 1 ஜூலை 1946-இல் அமலுக்கு வந்தது. மலேசியா கூட்டமைப்பில் சேருவதற்கு முன், சரவாக் மாநிலம், 17 ஆண்டுகள் பிரித்தானிய அரச முடியாட்சி காலனியாக இருந்தது.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Walter Yust (1947). Ten eventful years: a record of events of the years preceding, including and following World War II, 1937 through 1946. Encyclopaedia Britannica. பக். 382. https://books.google.com/books?id=OJAGAQAAIAAJ. 
  2. Walter Yust (1947). Ten eventful years: a record of events of the years preceding, including and following World War II, 1937 through 1946. Encyclopaedia Britannica. பக். 382. https://books.google.com/books?id=OJAGAQAAIAAJ. 
  3. 3.0 3.1 Tamara Thiessen (2008). Borneo. Bradt Travel Guides. பக். 211–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84162-252-1. https://books.google.com/books?id=g9sj_FMSMu8C&pg=PA211. 
  4. Muzaffar, Tate (1999). The power behind the state (First ). Kuching, Sarawak: Sarawak Electricity Supply Corporation. பக். 133, 134, 135, 136, 148, 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:983-99360-1-8. 
  5. Government of Sarawak. Annual Report Sarawak, 1954 (London: H.M.S.O.), 191-193. https://archive.org/details/b31410698/page/n5/mode/2up
  6. Ooi, Keat Gin (29 May 2013). Post-War Borneo, 1945-1950: Nationalism, Empire and State-Building. Routledge. பக். 1937–1938. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134058105. https://books.google.com/books?id=DSDCzK6WbiUC&pg=PA1937. பார்த்த நாள்: 3 July 2018. 
  7. Frans Welman (9 March 2017). Borneo Trilogy Sarawak: Volume 2. Booksmango. பக். 134–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-616-245-089-1. https://books.google.com/books?id=A-H-O8pxUnMC&pg=PA134. பார்த்த நாள்: 9 October 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]