மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு
Japanese Occupation of Malaya
Malai マライMarai
19411945
கொடி of Japanese-occupied Malaya
கொடி
குறிக்கோள்: Eight Crown Cords, One Roof
八紘一宇
நாட்டுப்பண்: கிமி ஙா யொ
சப்பானிய ஆக்கிரமிப்பில் மலாயா சிங்கப்பூர் 1942
சப்பானிய ஆக்கிரமிப்பில் மலாயா சிங்கப்பூர் 1942
நிலைசப்பானிய பேரரசின் இராணுவ ஆக்கிரமிப்பு
தலைநகரம்இல்லை
சிங்கப்பூர் (1942–1944)
தைப்பிங் (1944–1945)
அரசாங்கம்இராணுவ ஆக்கிரமிப்பு
மாமன்னன் 
• 1942-1945
இறோகித்தோ
வரலாற்று சகாப்தம்இரண்டாம் உலகப் போர்
8 டிசம்பர் 1941a
• கோத்தா பாருவில் சப்பானிய படைகள்

8 டிசம்பர் 1941
• பிரித்தானிய படைகள் சிங்கப்பூருக்குப் பின்வாங்குதல்
31 சனவரி 1942
18 அக்டோபர் 1943
• சப்பான் சரணடைதல்
15 ஆகஸ்ட் 1945
• பிரித்தானிய இராணுவ நிர்வாகம்

12 செப்டம்பர் 1945
• மலாயன் யூனியன் உருவாக்கம்

1 ஏப்ரல் 1946
நாணயம்சப்பானிய அரசாங்க டாலர் ("வாழைமரக் காசு")
முந்தையது
பின்னையது
மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள்
நீரிணை குடியேற்றங்கள்
மலாயா கூட்டமைப்பில் சேரா மாநிலங்கள்
பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம்
தற்போதைய பகுதிகள்மலேசியா
  1. ஆசிய நேரக் கணக்குப்படி பசிபிக் போர் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கியது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நேரக் கணக்குப்படி 1941 டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
1941 நவம்பர் மாதம் சிங்கப்பூரில் வந்து இறங்கிய இந்திய துருப்புக்கள். சிலிம் ரிவர் போரில் இரண்டு படைப்பிரிவுகள் முற்றாக அழிக்கப்பட்டன.
தென்சீனக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ்
ஜொகூரில் சப்பானியப் படையினர்

மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு அல்லது மலாயாவில் சப்பானிய ஆட்சி; (ஆங்கிலம்: Japanese occupation of Malaya; மலாய்: Pendudukan Jepun di Tanah Melayu) என்பது 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சப்பானிய இராணுவம் மலாயாவை ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும்.

1941 டிசம்பர் 8-ஆம் தேதி, சப்பானிய படைகள் மலேசியா, கோத்தா பாருவில் தரை இறங்கின. நேச நாடுகளின் இராணுவப் படைகள் 1942 பிப்ரவரி 16-ஆம் தேதி சிங்கப்பூரில் சப்பானிய இராணுவத்திடம் சரண் அடைந்தன.

1945-ஆம் ஆண்டில், நேச நாடுகளிடம் சப்பானியர் சரணடையும் வரை மலாயாவை ஆக்கிரமிப்பு செய்தனர். 1945 செப்டம்பர் 2-ஆம் தேதி, மலாயா, பினாங்கில் எச்.எம்.எஸ். நெல்சன் கப்பலில் (HMS Nelson) முதல் சப்பானியப் படை சரண் அடைந்தது. தங்களின் ஆயுதங்களைப் பிரித்தானியர்களிடம் ஒப்படைத்தது. அத்துடன் மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பும் ஒரு முடிவிற்கு வந்தது.[1]

வரலாறு[தொகு]

1941 டிசம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மலாயா, கிளாந்தான், பாத்தாங் பாக் அமாட் கடற்கரையில் (Pantai Padang Pak Amat) சப்பானியர்கள் கரை இறங்கினர். பிரித்தானிய இந்திய இராணுவத்துக்கும் (British Indian Army), சப்பானிய இராணுவத்துக்கும் இடையே பெரும் போர் மூண்டது.[2]

பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு (Attack on Pearl Harbor) முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த கோத்தா பாரு மோதல் நடந்தது.

இந்த கோத்தா பாரு மோதல் தான், பசிபிக் போரின் தொடக்கத்தையும்; மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் தொடக்கத்தையும் குறிக்கின்றது.[3]

கோத்தா பாருவில் சப்பானியப் படைகள்[தொகு]

கோத்தா பாருவில் சப்பானியர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. பிரித்தானியக் கூட்டுப் படைகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரையில், சப்பானியர்கள் அலை அலையாய்க் கடற்கரையைத் தாக்கினார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து கோத்தா பாரு விமான நிலையத்தைக் கைப்பற்றினர்.[2]

கோத்தா பாருவில் தரையிறங்கிய சப்பானிய வீரர்கள் இரண்டு தனிப் படைகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு படை கிழக்குக் கடற்கரையில் இருந்து குவாந்தான் நகரத்தை நோக்கி நகர்ந்தது. மற்றொரு படை தெற்கே பேராக் ஆற்றை நோக்கி நகர்ந்தது.

1941 டிசம்பர் 9-ஆம் தேதி, சப்பானியர்கள் சுங்கை பட்டாணி, பட்டர்வொர்த் நகரங்களைக் கைப்பற்றினர். அதே தினம் அலோர் ஸ்டார் விமான நிலையத்தைக் கைப்பற்றினர்.

இரு போர்க் கப்பல்கள் கடலில் மூழ்கின[தொகு]

1941 டிசம்பர் 9-ஆம் தேதி, எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (HMS Prince of Wales); மற்றும் எச்.எம்.எஸ். ரிபல்ஸ் (HMS Repulse) ஆகிய இரு போர்க் கப்பல்கள் மலாயாவின் கிழக்கு கடற்கரை வழியாகக் குவாந்தான் துறைமுகத்திற்குச் சென்றன. இரண்டு கப்பல்களுக்கும் வான் பாதுகாப்பு இல்லாததால், இரண்டு கப்பல்களும் ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு இலக்காகி தென்சீனக் கடலில் மூழ்கின.[4]

1941 டிசம்பர் 11-ஆம் தேதி, சப்பானியர்கள் பினாங்கு மீது குண்டு வீசத் தொடங்கினர்.

1941 டிசம்பர் 12 ஆம் தேதி, ஜித்ராவும்; பின்னர் அலோர் ஸ்டார் நகரமும் சப்பானியர்களின் கைகளில் விழுந்தன.

கம்பார் போர்[தொகு]

1941 டிசம்பர் 19-ஆம் தேதி, சப்பானியர்கள் பினாங்கு தீவைக் கைப்பற்றினர். சப்பானியர்கள் தொடர்ந்து தெற்கு நோக்கி முன்னேறினர். 1941 டிசம்பர் 26-ஆம் தேதி, ஈப்போவைக் கைப்பற்றினர்.

சப்பானியர்கள் மலாயாவுக்குள் அதிவேகமாகப் படை நடத்தி வருவதைப் பிரித்தானிய படைகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜப்பானியர்களுக்கு அதிகமான பாதிப்புகள் ஏற்படவில்லை.

ஆனால் கம்பார் நகரத்திற்கு அருகே கோலா டிப்பாங் ஆற்றுப் பகுதியில் (Dipang River) மட்டுமே ஜப்பானியர்களுக்கு முதன் முறையாக கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.[5]

இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை[தொகு]

கம்பாரில் நான்கு நாட்கள் போர் நடந்தது. இந்தப் போருக்குக் கம்பார் போர் (Battle of Kampar) என்று பெயர். பிரித்தானியப் படையின் பீரங்கித் தாக்குதல்களினால் ஜப்பானியர்கள் பெரும் உயிரிழப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தது.[6]

கம்பார் நகருக்குத் தெற்கே இந்திய இராணுவத்தின் 11-ஆவது காலாட்படை பிரிவு முகாம் அமைத்தது. அங்கு இருந்து பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும் ஜப்பானியர்களுக்குக் கடலோரத் தரையிறக்கங்கள் (seaborne landings) சாதகமாக அமைந்து விட்டன. அங்கு இருந்து அதிகமான ஜப்பானியப் போர் வீரர்கள் கம்பாரில் களம் இறக்கப் பட்டனர்.

அதனால் இந்திய இராணுவத்தினரால் சமாளிக்க முடியவில்லை. பின்வாங்க வேண்டிய இக்கட்டான நிலைமை. துரோலாக் நகருக்கு வடக்கே ஐந்து மைல்கள் தொலைவில் உள்ள சிலிம் ரீவர் பகுதிக்குப் பின்வாங்கினர்.

1941 டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 1942 சனவரி 2-ஆம் தேதி வரை மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் கம்பார் போர் நீடித்தது.

சிலிம் ரிவர் போர்[தொகு]

1942 சனவரி 7-ஆம் தேதி பிரித்தானிய இந்திய இராணுவத்திற்கும் ஜப்பானிய இராணுவத்திற்கும் இடையே பேராக், சிலிம் ரிவர் பகுதியில் நடந்த ஒரு போரை சிலிம் ரிவர் போர் என்று அழைக்கிறார்கள்.

போர் முனையில் இந்திய இராணுவத்திற்கு அவசரமாகத் தேவைப்பட்ட ஆயுதங்கள்; மருந்துகள்; உணவு நீர் வகைகள்; தொலைத் தொடர்பு சாதன வசதிகள்; பின்னணிக் காப்புகள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அதனால் நிராதிபதிகளான 500-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டார்கள்.

போர் அத்துமீறல்கள்[தொகு]

1942 ஏப்ரல்: இந்திய தேசிய இராணுவத்தின் கேப்டன் மோகன் சிங்; ஜப்பானிய மேஜர் புஜிவாரா இவாச்சி.

காயங்கள் அடைந்து நடக்க முடியாமல் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் பலரை ஜப்பானியப் படையினர் கத்தியால் குத்திக் கொன்று உள்ளனர். சிலரைச் சுட்டுக் கொன்று உள்ளனர். ஓரளவிற்கு நடக்க முடிந்த இராணுவ வீரர்களைக் கொண்டு குழிகள் தோண்டப் பட்டன. [6]

கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் அந்தக் குழிகளில் புதைக்கப் பட்டனர். ஜப்பானியர்களின் மலாயா படையெடுப்பின் போது நடத்தப் பட்ட போர் அத்துமீறல்களில் இதுவும் ஒன்றாகும். [5]

கோலாலம்பூரில் சப்பானியப் படைகள்[தொகு]

1942 சனவரி 7-ஆம் தேதி, சிலிம் ரீவர் போரில் 11-ஆவது இந்தியக் காலாட்படை பிரிவின் இரண்டு படைப் பிரிவுகள் தோற்கடிக்கப்பட்டன. இதனால் ஜப்பானிய இராணுவத்தினரால் கோலாலம்பூருக்குள் எளிதாகச் செல்ல முடிந்தது.

1942 சனவரி 9-ஆம் தேதி, பேராக் பகுதியில் இருந்த அனைத்துப் பிரித்தானியா பொதுநலவாயப் படைகளும் (காமன்வெல்த் படைகள்) தெற்கே ஜொகூருக்குத் திரும்பிப் போகுமாறு கட்டளை போடப்பட்டது. அதனால் 1942 சனவரி 13-ஆம் தேதி, கோலாலம்பூரை ஜப்பானியர்கள் எளிதாகக் கைப்பற்றினார்கள்.

போர் முடிவு[தொகு]

தாய்லாந்து-பர்மா இரயில் பாதையில் பணிபுரியும் மலாயா தமிழர்கள்.

அதன் பின்னர், பிரித்தானியத் தற்காப்புப் படை, வடக்கில் சிகாமட்; மேற்கில் மூவார்; கிழக்கில் மெர்சிங் வரை நிறுத்தப்பட்டது. 45-ஆவது இந்தியக் காலாட்படை படைப்பிரிவு (45th Indian Infantry Brigade), மூவார் மற்றும் சிகாமட் நகரங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய படை (Australian Imperial Force) சிகாமட்டிற்கு வடக்கே நிறுத்தப்பட்டது.

1942 சனவரி 14-ஆம் தேதி, கிம்மாஸ் நகருக்கு அருகில் ஜப்பானிய இராணுவத்துடன் மோதல்கள். 1942 சனவரி 14-ஆம் தேதி, பிரித்தானியத் தற்காப்புப் படை தோற்கடிக்கப்பட்டது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் 45-ஆவது இந்தியக் காலாட்படை தோற்கடிக்கப்பட்டது. அடுத்து, ஆஸ்திரேலிய படையும் தோற்கடிக்கப்பட்டது.

1942 சனவரி 18-ஆம் தேதி, ஒட்டுமொத்தமாக பிரித்தானியா பொதுநலவாயப் படைகளுக்கு பெரும் இழப்புகள். ஜப்பானியப் படைக்கும் பெருத்த சேதங்கள். பிரித்தானியா பொதுநலவாயப் படைகள் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் வழியாக சிங்கப்பூருக்குள் தஞ்சம் அடைந்தன. 1942 சனவரி 31-ஆம் தேதி, முழு மலாயாவும் ஜப்பானியர்களின் கைகளில் விழுந்தது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. New Perspectives on the Japanese Occupation in Malaya and Singapore 1941–1945, Yōji Akashi and Mako Yoshimura, NUS Press, 2008, p. 30, ISBN 9971692996, 9789971692995
  2. 2.0 2.1 "The Japanese attack on Malaya started on December 8th 1941 and ended with the surrender of British forces at Singapore". History Learning Site. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  3. New Perspectives on the Japanese Occupation in Malaya and Singapore 1941–1945. NUS Press. 2008. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 9971692996. 
  4. "On December 10, 1941, the battlecruiser HMS Repulse and battleship HMS Prince of Wales sank off the east coast of Malaysia". History Of Diving Museum. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  5. 5.0 5.1 Smith, Colin (2006). Singapore Burning. Great Britain: Penguin Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-101036-6. https://archive.org/details/singaporeburning0000coli. 
  6. 6.0 6.1 Warren, Alan (2006). Britain's Greatest Defeat: Singapore 1942 (Illustrated ). Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85285-597-5. https://books.google.com/books?id=zosKzAoocu8C. 
  7. "British forces in Singapore have surrendered unconditionally to the Japanese seven days after enemy troops first stormed the island". 15 February 1942. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.

வெளி இணைப்புகள்[தொகு]