இலட்சுமி விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி விசுவநாதன்
"மை தியாகராஜா" நடன நாடகத்தில் பெங்களூர் நாகரத்தினம்மாவாக இலட்சுமி விசுவநாதன்.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்இலட்சுமி விசுவநாதன்
பிறப்பு(1944-01-27)27 சனவரி 1944
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு19 சனவரி 2023(2023-01-19) (அகவை 78)
அடையாறு, சென்னை
இசை வடிவங்கள்நடனம்
தொழில்(கள்)பரத நாட்டியக் கலைஞர்

இலட்சுமி விசுவநாதன் (Lakshmi Viswanathan, 27 சனவரி 1944 – 19 சனவரி 2023) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் பாணியைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞரும், நடன ஆசிரியரும், ஆய்வாளரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் 1944 சனவரி 27 அன்று சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் கே. விசுவநாதன், அலமேலு ஆவர். கஞ்சீவரம் எல்லப்ப பிள்ளையிடம் பரதநாட்டியம் பயின்றார். இவரது ஏழாவது வயதில் மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேற்றம் செய்தார். இவர் தன் தாயார் அலமேலு விசுவநாதனிடம் கருநாடக இசைக் கற்றார்.[2] இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். இவர் பத்திற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று பல நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவின் அனைத்து முக்கிய நடன விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார். பல கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் படைத்துள்ளார். கோயில் நடனம் மற்றும் தேவதாசி முறை குறித்து ஆய்வு செய்து பல்வேறு இதழ்கள், செய்தித்தாள்கள், நடன இணையதளங்கள் போன்றவற்றில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். "பரதநாட்டியம் தமிழ் பாரம்பரியம்", "குஞ்சம்மா ஓட் டு எ நைட்டிங்கேல்" (எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு), "தேவதாசி பாரம்பரியத்தின் பெருமைக்குரிய பெண்கள்", "கபிலேஸ்வரர் கோவில்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். கலாட்சேத்திரா ஜர்னலின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இவர் பானியட் டிரீ, சதுரங்கா, மை தியாகராஜா போன்ற நடன நாடகங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் "The Poetry of Dance" என்ற ஆவணப்படத்தை உருவாக்கி அதை இந்திய விழாவில் திரையிட்டார். நடன ஆசிரியையாக பல மாணவர்களை நடனக் கலைஞர்களாக உருவாக்கியுள்ளார். 1991 முதல் "மாமல்லபுரம் நாட்டிய விழாக்களை" நடத்துவதில் முக்கிய பங்காற்றிவந்துள்ளார். சென்னை மியூசிக் அகாதமியின் துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

நடனத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில், சென்னை ஸ்ரீகிருஷ்ண கான சபையின் "நிருத்ய சாருமதி" பட்டம், சென்னை மியூசிக் அகாதெமியின் "நிருத்ய கலாநிதி" விருது, மத்திய சங்கீத நாடக அகாதெமியின் சங்கீத நாடக அகாதமி விருது விருது, மத்தியப் பிரதேச அரசின் "காளிதாஸ் சம்மன்" விருது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது ஆகியவை அடங்கும்.

இறப்பு[தொகு]

வயது மூப்பின் காரணமாக இலட்சுமி விசுவநாதன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் 19 சனவரி 2023 அன்று காலமானார்.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. web master. "Lakshmi Viswanathan". SANGEET NATAK AKADEMI. SANGEET NATAK AKADEMI. Archived from the original on 25 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. web master. "Lakshmi Viswanathan". International Institute of South Asian Studies. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  3. "புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் சென்னையில் காலமானார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  4. கண்ணன், ஸ்வேதா. ""உத்வேகம் அளித்த நடனம்!"- பரதக் கலைஞர் லட்சுமி விஸ்வநாதன் நினைவுகள் பகிரும் சித்ரா விஸ்வேஸ்வரன்". vikatan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_விசுவநாதன்&oldid=3927895" இலிருந்து மீள்விக்கப்பட்டது