கொடுந்தமிழ் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைக் காலத்து அறிஞர்கள் பாண்டிய நாட்டின் வடபகுதியில் வழங்கப்பட்ட தமிழைச் செந்தமிழ் எனக் கொண்டு அந்நிலம் தவிர்த்து ஏனைய பன்னிரு நிலங்களில் வழங்கப்பட்டுவந்த தமிழைக் கொடுந்தமிழ் (கிளைமொழி) என்று கொண்டனர். அப்பன்னிரு நிலங்களும் கொடுந்தமிழ் நாடு என்றழைக்கப்பட்டன. சுருங்கக்கூறின் வட்டார வழக்கினைக் கொடுந்தமிழ் என்றும் அது வழங்கப்படும் இடத்தினைக் கொடுந்தமிழ் நாடென்றும் கொண்டனர்.

தமிழ் மொழி பேசப்பட்ட நிலத்தைச் செந்தமிழ் நிலம் என்றனர். இது தமிழில் உள்ள இயற்சொல் வழக்கில் இருந்த நிலப்பகுதி. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் என்பது செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருந்த நிலப்பகுதி (நாடு). தொல்காப்பியர் காலத்தில் அவை பன்னிரண்டு நாடுகளாக விளங்கின. இந்த நாடுகளில் செந்தமிழ் எனப்படும் இயற்சொற்களோடு புதிதாகச் சேர்க்கப்பட்டோ, செந்தமிழ்ச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாகவோ வழங்கப்பட்ட தமிழ்ச் சொற்களைத் திசைச்சொல் எனப் பாகுபடுத்தியுள்ளனர்.[1][2] என்ற எண்ணிக்கையில் சில நாடுகள் இருந்துள்ளன. [3]

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு முதலான பாகுபாடுகள் ஆண்ட அரசர்களின் குடிப் பெயர்கள் கொண்டு அமைந்தவை.

திராவிட நாடு என்னும் பாகுபாட்டுக் குறியீடு கால்டுவெல் தமிழ்மொழிக் குடும்பத்துக்குத் திராவிட மொழிக் குடும்பம் எனப் பெயர் சூட்டிய பின்னர் உருவாக்கப்பட்ட குறியீடு.

கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.

கொடுந்தமிழ் என்னும் சொல்வழக்கு[தொகு]

திசைச்சொல்லுக்குத் தொல்காப்பியமும்,[4] நன்னூலும் [5] இலக்கணம் கூறுகின்றன.

இந்த இலக்கண நூல்கள் இரண்டுமே செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்திருக்கும் 12 நிலப்பகுதியில் பேசப்படும் மொழியைத் திசைச்சொல் என்றே குறிப்பிடுகின்றன. தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய ஆசிரியர் திசைச்சொல்லைத் திசைச்சொல் என்றே குறிப்பிடுகிறார்.

நன்னூலுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் திசைச்சொல்லைக் 'கொடுந்தமிழ்' என்னும் தொடரால் குறிப்பிடுகின்றனர்.[யார்?][யார்?] சொல் வட்டார வழக்குகளில் சிதைவு பெற்று வழங்கும் சொல் வளைந்த உருவில் பேசப்படுவதால் இதனை இக்கால மொழியியலாளர் கொடுந்தமிழ் எனக் குறிப்பிடுகின்றனர்.

இது கொடுந்தமிழ் என்னும் சொற்றொடர் பற்றிய வரலாறு.

கொடுந்தமிழ் நாடுகள்[தொகு]

தொல்காப்பியர் தம் பாடலில் கொடுந்தமிழ் நாடுகள் பன்னிரண்டு என்று கூறுகிறார். ஆனால் அவர் எவ்வெப்பகுதிகள் கொடுந்தமிழ் நாடென்று வழங்கப்படுமென்று கூறவில்லை.[6]

இப்பாடலில் "பன்னிரு நிலத்தும்" என்ற வரி கொடுந்தமிழ் நாடுகளைக் குறிக்கும்.

ஆனால் இடைக்காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் போன்றோரும் அப்பன்னிரு நாடுகள் இவை என்று கூறுகின்றனர்.

என்ற வெண்பா வழி பன்னிரு நாடுகள் கீழ்க்கண்டவைதாம் என்று அறியப்படுகின்றன.

  1. தென்பாண்டி நாடு
  2. குட்ட நாடு
  3. குடநாடு
  4. கற்கா நாடு
  5. வேணாடு
  6. பூழி நாடு
  7. பன்றி நாடு
  8. அருவா நாடு
  9. அருவா வடதலை நாடு
  10. சீத நாடு
  11. மலையமான் நாடு
  12. புனல் நாடு

இவற்றுள் மலையமான் நாடு என்பது மருவி மலாடு என்றும் வழங்கப்படும்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரண்டு நாடுகள்[தொகு]

இந்தப் பெயர்கள் நாட்டின் இருப்பிடம், நாட்டின் பாங்கு முதலானவற்றின் அடிப்படையில் அமைந்தவை. அவை [7]

  1. பொங்கர் நாடு
  2. ஒளி நாடு
  3. தென்பாண்டிய நாடு
  4. குட்ட நாடு
  5. குட நாடு
  6. பன்றி நாடு
  7. கற்கா நாடு
  8. சீத நாடு
  9. பூழி நாடு
  10. மலையாள நாடு
  11. அருவாநாடு
  12. அருவா வடதலைநாடு

கொடுந்தமிழ் நாட்டுப் பகுதிகளும் வழங்கப்பட்ட கிளைமொழிச் சொற்களும்[தொகு]

கொடுந்தமிழ் நாடு தற்காலப் பெயர் கிளைமொழி அல்லது கொடுந்தமிழ்ச் சொல் பொதுமொழி அல்லது செந்தமிழ்ச்சொல்
1.தென்பாண்டி நாடு திருநெல்வேலிப் பகுதி சொன்றி சோறு
2. குட்ட நாடு கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள் தள்ளை தாய்
3. குட நாடு வடமலபார் அச்சன் தந்தை
4. கற்கா நாடு கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள் கையர் வஞ்சர்
5. வேணாடு திருவாங்கூரின் தென்பகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) கிழார் தோட்டம்
6. பூழி நாடு கோழிக்கோடு ஞமலி நாய்
7. பன்றி நாடு பழனி மலை சூழ்ந்த பகுதி செய் வயல்
8. அருவா நாடு வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு கேணி சிறுகுளம்
9. அருவா வடதலை நாடு சித்தூர், நெல்லூர் எகின் புளி
10. சீத நாடு நீலகிரி எலுவன் தோழன்
11. மலையமான் நாடு திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி இகுளை தோழி
12. புனல் நாடு சோழ நாடு ஆய் தாய்

ஒப்புநோக்குக[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்
  2. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2010-12-14 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/d041/d0414/html/d0414662.htm
  2. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி (தொல்.சொல், 400)
  3. சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 614.
  4. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்
    தம் குறிப்பினவே திசைச்சொற் கிளவி (தொல்காப்பியம் எச்சவியல் 4)
  5. செந்தமிழ் நிலஞ் சேர் பன்னிரு நிலத்தினும்
    ஒன்பதிற்று இரட்டினில் தமிழ் ஒழி நிலத்தினும்
    தம் குறிப்பினவே திசைச்சொற் கிளவி (நன்னூல் 273)
  6. தொல்காப்பியம், தொல்காப்பியம் → சொல்லதிகாரம் → எச்சவியல் → நான்காம் பாடல்
  7. சேனாவரையர் தொல்காப்பிய உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுந்தமிழ்_நாடு&oldid=3490272" இலிருந்து மீள்விக்கப்பட்டது