ஜெய்சுக்லால் காதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்சுக்லால் காதி (Jaisukh lal Hathi)(19 சனவரி 1909 - 2 பிப்ரவரி 1982) என்பவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சௌராஷ்டிராவில் முலியில் பிறந்தார். இவர் இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் பஞ்சாப் மற்றும் அரியானா ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் அரசியல் நிர்ணய சபை, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1909-ல் சுரேந்திரநகரில் பிறந்த காதி, 1982-ல் இறந்தார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

காதியின் தந்தை இலால்சங்கர் காதி சவுராட்டிராவை சேர்ந்தவர். இவர் 27 மே 1927-ல் பத்மாவதியை மணந்தார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[2] இவர் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஆல்பிரட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன் பிறகு பம்பாய்க்குச் சென்று வழக்கறிஞர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வழக்குரைஞர் கழகத்தில் சேர்ந்தார்.

நிர்வாக பணி[தொகு]

1943-ல், அவர் முந்தைய ராஜ்கோட் மாநிலத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1948-ல், இவர் சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலாளராக ஆனார்.

பாராளுமன்ற பணி[தொகு]

இவர் சௌராஷ்டிரா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிர்ணய சபையின் (1946-47) உறுப்பினராக இருந்தார். இவர் 1950-ல் தற்காலிக பாராளுமன்றத்திற்கும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநிலங்களவை உறுப்பினராக 3 ஏப்ரல் 1952 முதல் 12 மார்ச் 1957 வரை பணியாற்றினார். மீண்டும் இவர், 1957-ல், இந்திய தேசிய காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாகக் காதி ஏப்ரல் 1962-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 3, 1968 வரை பணியாற்றினார். இதைத் தொடர்ந்து இதே நாளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏப்ரல் 2,1974 வரை பணியாற்றினார்.[3]

அமைச்சர் மற்றும் கவர்னர்[தொகு]

காதி 1952-1962 வரை நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம், வழங்கல், உள்துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளை வகித்து மத்திய அமைச்சர்கள் குழுவில் துணை அமைச்சராகவும், அமைச்சராகவும், நீர்ப்பாசன அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1962-64 மற்றும் 1967-69 வரை தொழிலாளர் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றினார். இவர் 14 ஆகத்து 1976-ல் அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் இப்பதவியில் இவர் 23 செப்டம்பர் 1977 வரை பணியாற்றினார்.[4][5] இதனைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1977 அன்று பஞ்சாபிற்கு மாற்றப்பட்டார். இங்கு இவர் ஆகத்து 26, 1981 வரை பணியாற்றினார். உடல்நிலை காரணமாகப் பஞ்சாப் ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.

பிற நிர்வாக பதவிகள் மற்றும் பொது வாழ்க்கை[தொகு]

காதி, 1974-ல் மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். இந்தப் பொறுப்பின் போது காதி அணைய அறிக்கை (1975) என அறியப்படும் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.[6] தேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினார். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் இயக்குநராக இருந்தார். இவர் பாரதிய வித்யா பவனின் தொடக்கத்திலிருந்து பன்னாட்டுப் பிரிவின் தலைவராகவும் மத்திய குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். சோமநாத் மற்றும் துவாரகா கோவில்களின் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளியீடுகள்[தொகு]

இந்தியக் கூட்டமைப்பில் இந்திய மாநிலங்கள் வகிக்கும் பங்கினை வரையறுக்கும் நோக்கத்துடன் இவர் 1939-ல் "இந்தியக் கூட்டமைப்பில் மாநிலங்களின் நிலை" எனும் புத்தகத்தினை எழுதினார். "சைடுலைன்சு ஆன் இண்டியன் பிரின்சசு (Sidelights on Indian Princes)" என்பது 1975-ல் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது வெளியீடாகும். 1970-1974 வரை பவன் ஆய்விதழில் பல சிறுகதைகளையும் எழுதினார். இவரது வாழ்க்கை வரலாறு "அப்படி நடந்தது" எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2019-08-10.
  2. "Eminent Parliamentarians" (PDF). Lok Sabha Digital Library. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  3. "Rajya Sabha Members" (PDF). Raja Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  4. "Former Governors". Haryana Raj Bhawan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  5. "Former Governors". Punjab Raj Bhawan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  6. "Hathi Commission Report on Essential Drugs". Lok Sabha Digital Library. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
  7. Hathi, Jaisukhlal. "As it happened! : autobiography of Jaisukhlal Hathi". WorldCat. Bharatiya Vidya Bhavan. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்சுக்லால்_காதி&oldid=3658366" இலிருந்து மீள்விக்கப்பட்டது