பாரம்பரிய கிரேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்சில் ஏதெனாவுக்காக கட்டப்பட்ட பார்த்தினன் கோயில்

பாரம்பரிய கிரேக்கம் (Classical Greece) என்பது பண்டைய கிரேக்கத்தில் சுமார் 200 ஆண்டுகள் (கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகள்) ஆகும்.[1] பாரசீக கலாச்சாரத்தின் பாதிப்பில் இருந்த கிழக்கு ஏஜியன் மற்றும் வடக்குப் பகுதிகள் ( ஐயோனியா மற்றும் மாசிடோனியா போன்றவை) பாரசீகத்திலிருந்து சுயாட்சியைப் பெற்றன. சனநாயக ஏதென்சு அதன் உச்ச நிலைக்கு சென்றது. முதல் மற்றும் இரண்டாம் பெலோபொன்னேசியப் போர்கள்; எசுபார்தன் மற்றும் தீப்சின் மேலாதிக்கங்கள்; மற்றும் இரண்டாம் பிலிப்பின் தலைமையில் மாக்கெடோனியாவின் விரிவாக்கம். மேற்கத்திய நாகரீகத்தின் துவக்கக்கால அரசியல், கலை சிந்தனை (கட்டடக்கலை, சிற்பம்), அறிவியல் சிந்தனை, நாடகம், இலக்கியம், மேற்கத்திய நாகரிகத்தின் மெய்யியல் ஆகியவை கிரேக்க வரலாற்றின் இந்த காலகட்டத்திலிருந்து வந்தவையே. இவை பிற்கால உரோமைப் பேரரசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பாரசீகப் பேரரசான பொது எதிரிக்கு எதிராக கிரேக்க உலகின் பெரும்பாலான பகுதிகளை இரண்டாம் பிலிப் ஒன்றிணைத்தார். பிலிப்பின் மகன் பேரரசர் அலெக்சாந்தரின் போர்களின் போது 13 ஆண்டுகளுக்குள் பாரசீகப் பேரரசின் பகுதிகள் கைப்பற்றபட்டன. இதன் பின்னர் பாரம்பரிய காலம் முடிந்தது.

பண்டைக் கிரேக்கத்தின் கலை, கட்டடக்கலை, கலாச்சாரத்தின் பின்னணியில், பாரம்பரிய காலம் கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு ஒத்திருக்கிறது (மிகவும் பொதுவான காலம் கிமு 510 இல் கடைசி ஏதெனியன் சர்வாதிகாரியின் வீழ்ச்சியிலிருந்து கிமு 323 இல் அலெக்சாந்தரின் மரணம் வரையிலான காலம்). இந்த பொருளில் பாரம்பரிய காலமானது கிரேக்க இருண்ட காலம் மற்றும் தொன்மையான காலத்தை அடுத்து வருகிறது. பாரம்பரிய காலத்தை அடுத்து எலனியக் காலம் வருகிறது.

கிமு 5ஆம் நூற்றாண்டு[தொகு]

பார்த்தினன் கட்டுமானம் கிமு 5 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது

இந்த நூற்றாண்டானது முதன்மையாக ஏதெனியன் கண்ணோட்டத்தில் இருந்தே ஆய்வு செய்யப்படுகிறது, ஏனெனில் ஏதென்சில் இருந்துதான் மற்ற பண்டைய கிரேக்க அரசுகளை விட அதிகமான கதைகள், நாடகங்கள் மற்றும் பிற எழுதப்பட்ட படைப்புகளை நாம் கிடைக்கபெற்றுள்ளோம். பாரம்பரிய கிரேக்கத்தில் உள்ள ஏதெனியன் கலாச்சாரத்தின் கண்ணோட்டத்தில், பொதுவாக கிமு 5 ஆம் நூற்றாண்டு என குறிப்பிடப்படும் காலம் கிமு 6 ஆம் நூற்றாண்டு வரை சற்று நீண்டுள்ளது. இந்தச் சூழலில், இந்த நூற்றாண்டின் முதல் குறிப்பிடத்தக்க நிகழ்வு கிமு 508 இல், கடைசி ஏதெனியன் சர்வாதிகாரியின் வீழ்ச்சி மற்றும் கிளீசுத்தனீசுவின் சீர்திருத்தங்களே என்று கருதலாம். எவ்வாறாயினும், முழு கிரேக்க உலகின் பரந்த பார்வையானது கிமு 500 ஆம் ஆண்டின் ஐயோனியன் கிளர்ச்சியிலிருந்து துவங்குவதாக கொள்ளலாம். இது கிமு 492 இல் நடந்த கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்புக்குத் தூண்டுகோலாக ஆனது. கிமு 490 இல் பாரசீகர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கிமு 481-479 இல் இரண்டாவது பாரசீக படையெடுப்பு முயற்சியில், தேமோபைலேச் சமர் மற்றும் ஆர்ட்டெமிசியம் சமரைத் தொடர்ந்து நடந்த போர்களின் போது ஒரு முக்கியமான கட்டத்தில் நவீனகால கிரேக்கத்தின் பெரும்பகுதியை ( கொரிந்தின் பூசந்தியின் வடக்கு) கைப்பற்றிய போதிலும் இறுதியில் தோல்வியடைந்தது.[2][3] டெலியன் கூட்டணியானது பின்னர் ஏதெனியன் மேலாதிக்கத்திற்கான ஏதென்சின் ஒரு கருவியாக உருவானது. ஏதென்சின் வெற்றிகள் அதன் நட்பு நகரங்களில் பல கிளர்ச்சிகளை உண்டாக்கியது. ஆனால் அவை அனைத்தும் ஏதென்சின் பலத்தால் அடக்கப்பட்டன. ஆனால் ஏதெனியன் இயங்காற்றல் இறுதியாக எசுபார்த்தாவை எழவைத்தது. அது கிமு 431 இல் பெலோபொன்னேசியப் போரைக் கொண்டு வந்தது. இரண்டு படைகளும் போர்களில் ஈடுபட்ட பிறகு, கொஞ்ச காலம் அமைதி ஏற்பட்டது; பின்னர் போர் எசுபார்த்தாவிற்கு சாதகமாக மீண்டும் தொடங்கியது. கிமு 404 இல் ஏதென்சு திட்டவட்டமாக தோற்கடிக்கப்பட்டது. மேலும் உள் ஏதெனியன் கிளர்ச்சிகள் கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் முடிவைக் குறிக்கின்றன.

எசுபார்த்தா அதன் தொடக்கத்திலிருந்து, இரட்டை ஆட்சியால் ஆளப்பட்டது. இதன் பொருள் எசுபார்த்தாவின் முழு வரலாற்றிலும் ஒரே நேரத்தில் இரண்டு மன்னர்கள் ஆட்சி செய்தனர். இரண்டு அரசர்களும் இரண்டு பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவை அகியட் வம்சம் மற்றும் யூரிபோன்டிட் வம்சம் ஆகியவை ஆகும். தொன்மங்களின் படி, இந்த இரண்டு வம்சங்களின் பரம்பரைத் தொடரானது எர்குலிசின் இரட்டை வழித்தோன்றல்களான யூரிஸ்தீனஸ் மற்றும் பிரோக்கிள்சிலிருந்து தோன்றின. திராயன் போருக்குப் பிறகு இரண்டு தலைமுறைகள் கழித்து அவர்கள் எசுபார்த்தாவைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

கிளீசுதனீசின் கீழ் ஏதென்சு[தொகு]

கிமு 510 இல், பிசிசுட்ரேடசுவின் மகனான ஏதெனிய கொடுங்கோலன் இப்பியாசை தூக்கியெறிய ஏதெனியர்களுக்கு எசுபார்த்தன் துருப்புக்கள் உதவின. எசுபார்த்தாவின் மன்னரான முதலாம் கிளிமினெஸ், இசகோரஸ் தலைமையில் எசுபார்த்தன் சார்பு சிலவர் ஆட்சியை ஏற்படுத்தினர். ஆனால் அவரது போட்டியாளரான கிளீசுத்தனீசு, நடுத்தர வர்க்கத்தின் ஆதரவுடனும், சனநாயக சார்பு குடிமக்களின் உதவியுடனும் ஆட்சியைப் பிடித்தார். கி.மு. 508 மற்றும் 506 ஆம் ஆண்டுகளில் இவ்விசயத்தில் கிளீமினெஸ் தலையிட்டார். ஆனால் அப்போது ஏதெனியர்களின் ஆதரவைப் பெற்ற கிளீஸ்தீனசைத் தடுக்க முடியவில்லை. கிளிஸ்தனீஸ் சீர்திருத்தங்கள் மூலம், ஏதென்சின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் (சுதந்திர குடிமக்களுக்கு மட்டும்) வழங்கினார். மேலும் ஆஸ்ட்ராசிசம் என்னும் நாடுகடத்தலை ஒரு தண்டனையாக நிறுவினார்.

ஐசோனமிக் மற்றும் ஐசெகோரிக் (சமமான பேச்சு சுதந்திரம்) [4] சனநாயகம் முதலில் சுமார் 130 தெமெக்களாக நிர்வாக பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டது. இது அடிப்படை குடிமை உறுப்பு ஆனது. தெமெக்களில் வசிக்கும் 10,000 குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை பேரவையில் (கிரேக்க மொழியில் எக்லேசியா ) பயன்படுத்தினர். அதில் குடிகளிலிருந்து குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 குடிமக்கள் குழுவினர் தலைமைவகித்தனர்.

கலப்பு அரசியல் குழுக்களை உருவாக்குவதற்காக நகரின் நிர்வாகம் புவியியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்டது: கடற்கரை, நகரம், வேளாண்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய குடிகளாக வகைப்படுத்தப்பட்ட கலப்பு அரசியல் குழுக்களைக் கொண்டிருப்பது இதன் நோக்கம் ஆகும். நகரத்தின் பிரதேசம் பின்வருமாறு 30 திரிட்டிகளாக பிரிக்கப்பட்டது:

  • கடலோரப் பகுதியில் பத்து திரிட்டிகள் (παρᾰλία, பராலியா )
  • நகர்ப்புற மையத்தைக் ἄστυ ( அஸ்து ) கொண்ட பத்து திரிட்டிகள்
  • கிராமப்புற ஊரகங்களைக் கொண்ட பத்து திரிட்டிகள், (μεσογεία, mesogia ).

இந்த சீர்திருத்தங்கள்தான் கிமு 460 மற்றும் 450 களில் பரந்த அளவில் சனநாயகம் தோன்ற வழிகோலியது.

பாரசீகப் போர்கள்[தொகு]

ஐயோனியாவில் ( துருக்கியின் நவீன ஏஜியன் கடற்கரை பகுதி) மிலீட்டஸ் மற்றும் ஆலிகார்னாசசு போன்ற பெரிய பகுதிகளை உள்ளடக்கிய கிரேக்க நகரங்கள், தங்கள் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தன. கிமு 499 இல் அந்த பிராந்தியத்தின் கிரேக்க நகர அரசுகள் பாரசீகர்களுக்கு எதிராக ஐயோனியன் கிளர்ச்சியில் எழுந்தன. மேலும் ஏதென்சும் வேறு சில கிரேக்க நகர அரசுகளும் அவர்களுக்கு உதவியாகச் சென்றன. இருப்பினும் கிமு 494 இல் லேட் சமரில் அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆசியா மைனரில் உள்ள கிரேக்க நகரங்கள் பாரசீகத்தின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் சென்றன.

கிமு 492 இல், பாரசீக தளபதி மார்தோனியசு, திரேசு மற்றும் மாக்கெடோனியா வழியாக ஒரு போர்த் தொடரை வழிநடத்தினார். இதில் திரேசை வென்றார் மாக்கெடோனியாவை அடிபணியச் செய்தார்.[5] ஆனால் அவர் காயமடைந்து ஆசியா மைனருக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கூடுதலாக, பயணத்தில் மார்டோனியசுடன் வந்த சுமார் 1,200 கப்பல்கள் கொண்ட கடற்படை அதோஸ் மலையின் கடற்கரையில் புயலால் சிதைந்தது. பின்னர், தளபதிகள் ஆர்டபெர்னெஸ் மற்றும் தேடிஸ் ஆகியோர் ஏஜியன் தீவுகளுக்கு எதிராக ஒரு கடற்படைப் போரை வெற்றிகரமாக நடத்தினர்.

கிமு 490 இல், பேரரசர் டேரியஸ், ஐயோனியன் நகரங்களை அடக்கி, கிரேக்கர்களை தண்டிக்க ஒரு பாரசீக கடற்படையை அனுப்பினார். (வரலாற்றாளர்கள் குறிப்பிடும் வீரர்களின் எண்ணிக்கையானது 18,000 முதல் 100,000 வரை மாறுபடுகின்றன. ) அவர்கள் ஏதென்சைக் கைப்பற்றும் நோக்கத்தில் அட்டிகாவில் தரையிறங்கினர். ஆனால் மராத்தான் சமரில் 9,000 ஏதெனியன் ஹாப்லைட்டுகள் மற்றும் ஏதெனியன் தளபதி மில்டியாடீசு தலைமையிலான 1,000 பிளாட்டீயன்களைக் கொண்ட கிரேக்கப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர். பாரசீக கடற்படை ஏதென்சை நோக்கிச் சென்றது, ஆனால் அது படைகளால் காவல் காக்கப்பட்டதைக் கண்டு, தாக்குதல் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று முடிவு செய்து பின்வாங்கியது.

கிமு 480 இல், பேரரசர் டேரியசின் வாரிசான முதலாம் செர்கஸ் தார்தனெல்சு நீரிணை மீது 1,207 கப்பல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இரட்டை மிதவைப்பாலத்தின் வழியாக 300,000 பேர்களைக் கொண்ட படைகளை அனுப்பினார். இந்தப் படைகள் தெஸ்சாலி மற்றும் போயோட்டியாவில் இறங்குவதற்கு முன் திரேசைக் கைப்பற்றின. அதே நேரத்தில் பாரசீக கடற்படை கடற்கரையைத் தாண்டி தரைப்படைகளுக்கு மறுவிநியோகம் செய்தது. கிரேக்க கடற்படை, இதற்கிடையில், ஆர்ட்டெமிஷன் முனையில் தடுக்கத் துடித்தது. அகியாட் வம்சத்தின் எசுபார்த்தன் மன்னன் லியோனிடாசால் தாமதப்படுத்தப்பட்ட பிறகு தெர்மோபைலே சமரில், (முழு பாரசீக இராணுவத்தை எதிர்கொண்ட 300 எசுபார்த்தன்களால் பிரபலமான போர்), செர்க்ஸஸ் அட்டிகாவிற்கு முன்னேறி, ஏதென்ஸைக் கைப்பற்றி எரித்தார். ஆர்ட்டெமிசியம் சமரின் விளைவாக யூபோயா கைப்பற்றப்பட்டது கொரிந்தின் பூசந்திக்கு வடக்கே கிரேக்கத்ன் பெரும்பகுதியை பாரசீக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.[2][3] இருப்பினும், ஏதெனியர்கள் தெர்மோபைலே சமருக்கு முன் கடல் வழியாக ஏதென்ஸ் நகரத்தை காலி செய்தனர், மேலும் தெமிஸ்டோக்கிளீசின் தலைமையில், அவர்கள் சலாமிஸ் சமரில் பாரசீக கடற்படையை தோற்கடித்தனர்.

கிரேக்க-பாரசீகப் போர்களின் முதல் கட்டங்களின் வரைபடம் (கிமு 500–479)

கிமு 483 இல், இரண்டு பாரசீக படையெடுப்புகளுக்கு இடையேயான அமைதி காலத்தில், லாரியனில் (ஏதென்சுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய மலைத்தொடர்) வெள்ளி தாது இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு வெட்டியெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாலத்து வெள்ளியானது ஏஜினா கடற்கொள்ளையர்களை எதிர்க்க 200 போர்க்கப்பல்களை கட்ட பயன்படுத்தப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து, கிரேக்கர்கள், எசுபார்த்தன் தளபதியான பாசேனியாசின் தலைமையில், பிளாட்டீயா சமரில் பாரசீக இராணுவத்தை தோற்கடித்தனர். பாரசீகர்கள் கிரேக்கத்திலிருந்து பின்வாங்கத் தொடங்கினர். மீண்டும் ஒரு படையெடுப்பை அவர்கள் முயற்சிக்கவில்லை.

ஏதெனியன் கடற்படை பின்னர் ஏஜியன் கடலில் இருந்து பாரசீகர்களைத் துரத்தியது. , மைக்கேல் சமரில் அவர்களின் கடற்படையை முழுமையாக தோற்கடித்தது; பின்னர் கிமு 478 இல் கடற்படை பைசாந்தியத்தை கைப்பற்றியது. அந்த நேரத்தில் ஏதென்சு அனைத்து தீவு அரசுகளையும் சில முக்கிய நிலப்பகுதிகளையும் டெலியன் கூட்டணி என்று அழைக்கப்படும் ஒரு கூட்டணியில் சேர்த்தது. அதன் கருவூலம் புனிதமான டெலோஸ் தீவில் வைக்கப்பட்டதால் அப்பெயரையே கூட்டணி பெற்றது. எசுபார்த்தன்கள் போரில் பங்கேற்றிருந்தாலும், பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏதென்சு சவாலற்ற கடற்படை மற்றும் வணிக சக்தியாக மாறியது.

பெலோபொன்னேசியன் போர்[தொகு]

பெலோபொன்னேசியப் போரின் தொடக்கத்தில் இருந்த நகரங்கள்

டெலியன் கூட்டணி மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணியின் தோற்றம்[தொகு]

கிமு 431 இல் ஏதென்சு மற்றும் எசுபார்த்தா இடையே போர் வெடித்தது. இந்தப் போரானது இரண்டு நகர அரசுகளுக்கு இடையே மட்டுமானது அல்ல. மாறாக இரண்டு கூட்டணிகள் அல்லது நகர அரசுகளின் கூட்டணிகளுக்கு இடையேயான போராட்டமாக இருந்தது:[6] ஏதென்சு தலைமையில் டெலியன் கூட்டணியும், எசுபார்த்தா தலைமையில் பெலோபொன்னேசியன் கூட்டணியும் இருந்தது.

டெலியன் கூட்டணி[தொகு]

பாரசீக ஆக்கிரமிப்புக்கு எதிராக அனைத்து கிரேக்க நகர அரசுகளையும் ஒருங்கிணைந்த முன்னணியாக கட்டமைக்க வேண்டிய தேவையிலிருந்தால் டெலியன் கூட்டணி வளர்ந்தது. கிமு 481 இல், எசுபார்த்தா உட்பட கிரேக்க நகர அரசுகள், மீண்டும் பாரசீகம் படையெடுத்து வந்தால் ஏற்படும் அபாயத்திற்கு காத்துக்கொள்ள அனைத்து கிரேக்க நகர அரசுகளையும் ஒன்றிணைக்க பாடுபட்ட "பேராயக் கூட்டங்களில்" சந்தித்தன.[7] முதல் பேராயத்திலிருந்து தோன்றிய கூட்டணிக்கு "ஹெலனிக் கூட்டணி" என்று பெயரிடப்பட்டது. அது எசுபார்த்தாவை உள்ளடக்கியதாக இருந்தது. கிமு 481 செப்டம்பரில் பாரசீகம், செர்கசின் தலைமையில் கிரேக்கத்தின் மீது படையெடுத்தது, ஆனால் ஏதெனிய கடற்படை பாரசீக கடற்படையை தோற்கடித்தது. பாரசீக தரைப் படைகள் கிமு 480 இல் தேர்மோபைலேச் சமரில் 300 எசுபார்த்தன்கள், 400 தீபன்கள் மற்றும் போயோடியன் தெஸ்பியாவைச் சேர்ந்த 700 பேரைக் கொண்ட மிகச் சிறிய படையால் தடுத்து தாமதப்படுத்தப்பட்டன.[8] கிமு 479 இல் பிளாட்டீயா சமரில் தோல்வியடைந்த பின்னர் பாரசீகர்கள் கிரேக்கத்தை விட்டு வெளியேறினர்.[9]

பிளாட்டேயா சமர் என்பது கிரேக்கத்தின் மீதான செர்க்சசின் படையெடுப்பின் இறுதிச் சமர் ஆகும். இதற்குப் பிறகு, பாரசீகர்கள் மீண்டும் கிரேக்கத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை. இந்த வெளிப்புற அச்சுறுத்தல் இல்லலாமல் போனதால், ஹெலனிக் கூட்டணியின் ஐக்கிய முன்னணியில் விரிசல் ஏற்பட்டது.[10] 477 இல், ஏதென்சானது, எசுபார்த்தாவை உள்ளடக்காத நகர அரசுகளின் கூட்டணியின் அங்கீகரிக்கப்பட்ட தலைமைப் பொறுப்பை ஏற்றது. இந்த கூட்டணி புனித நகரமான டெலோசில் சந்தித்து தங்கள் கூட்டணி உறவை முறைப்படுத்தியது.[11] இதனால், இக்கூட்டணி "டெலியன் கூட்டணி" என்று பெயர் பெற்றது. அதன் முறையான நோக்கம் பாரசீக கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள கிரேக்க நகரங்களை விடுவிப்பதாகும்.[12] இருப்பினும், ஏஜியன் முழுவதும் ஏதெனியன் மேலாதிக்கத்திற்கு உட்பட டெலியன் கூடணி ஒரு கருவியாக இருந்தது என்பது போகப்போக தெரிந்தது.[13]

பெலோபொன்னேசியன் (அல்லது எசுபார்த்தன்) கூட்டணி[தொகு]

வெளிப்புறத்தின் பாரசீக அச்சுறுத்தல் தணிந்ததால், டெலியன் கூடணிக்கு எதிராக எசுபார்த்தாவை மையமாகக் கொண்ட கிரேக்க நகர அரசுகளின் போட்டிக் கூட்டணி எழுந்தது. இந்த கூட்டணி பெலோபொன்னேசியன் கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், ஹெலெனிக் லீக் மற்றும் டெலியன் கூட்டணி போலல்லாமல், இந்தக் கூட்டணி பாரசீக அல்லது வேறு எந்த வெளிப்புற அச்சுறுத்தலையும் எதிர்த்து போராடவில்லை. இது எசுபார்த்தாவின் பாதுகாப்பு மற்றும் பெலொப்பொனேசியா தீபகற்பத்தின் மீது எசுபாரத்தாவின் ஆதிக்கத்தை இலக்காகக் கொண்ட எசுபார்த்தன் கொள்கையின் ஒரு கருவியாக இருந்தது.[14] "பெலோபொன்னேசியன் கூட்டணி" என்ற சொல் பொருத்தமற்ற ஒரு தவறான பெயராகும். இது உண்மையில் ஒரு "கூட்டணி" அல்ல. மேலும் "பெலோபொன்னேசியன்" என்ற பெயரும் பொருத்தமற்றது.[14] "கூட்டணி" என்ற சொல் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உறுப்பினர்களிடையே சமத்துவம் இல்லை. மேலும், அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் பெலோபொன்னீசியா தீபகற்பத்திற்கு வெளியே அமைந்திருந்தன.[14] "எசுபார்த்தன் கூட்டணி" மற்றும் "பெலோபொன்னேசியன் கூட்டணி" ஆகிய சொற்கள் நவீன சொற்கள். அதன் சமகாலத்தவர்கள் அதற்கு பதிலாக "கூட்டணி" பற்றி விவரிக்க " லேசிடெமோனியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள்" என்று குறிப்பிட்டனனர்.[14]

பெலோபொன்னீசிய தீபகற்பத்தில் உள்ள மற்றொரு நகரமான ஆர்கோசுடனான எசுபார்த்தாவின் மோதலில் கூட்டணி தோற்றம் பெற்றது. கிமு 7 ஆம் நூற்றாண்டில், தீபகற்பத்தில் ஆர்கோஸ் ஆதிக்கம் செலுத்தியது. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூட, ஆர்கோசினர் தீபகற்பத்தின் வடகிழக்கு பகுதியைக் கட்டுப்படுத்த முயன்றனர். 6 ஆம் நூற்றாண்டில் எசுபார்த்தாவின் எழுச்சி எசுபார்த்தாவை ஆர்கோசுடன் மோதலுக்கு இட்டுச் சென்றது. இருப்பினும், கிமு 550 இல் பெலோபொன்னேசிய நகர அரசான டெஜியாவைக் கைப்பற்றியது மற்றும் கிமு 546 இல் ஆர்கிவ்சின் தோல்வியுடன், எசுபார்த்தன்களின் கட்டுப்பாடு லாகோனியாவின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் தொடங்கியது.

முப்பது ஆண்டு அமைதி உடன்பாடு[தொகு]

ஏதெனியன் பேரரசு .

இரு கூட்டணிகளும் வளர வளர, அவர்களின் தனிபட்ட நலன்களால் முரண்பாடு பெருகிக் கொண்டே வந்தன. மன்னர் இரண்டாம் ஆர்க்கிடாமஸ் (எசுபார்த்தாவின் யூரிபோன்டிட் வம்ச மன்னர் கி.மு. 476 முதல் கி.மு. 427 வரை) ஏற்பாட்டினால், கோடையின் பிற்பகுதியில் அல்லது கிமு 446 இலையுதிர்காலத்தின் துவக்கத்தில் எசுபார்த்தா, ஏதென்சுடன் முப்பது ஆண்டு அமைதி உடன்பாட்டை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் கிமு 445 இல் அடுத்த குளிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தது.[15] இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, கிரேக்கம் முறையாக இரண்டு பெரிய ஆதிக்க மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.[16] எசுபார்த்தாவும் ஏதென்சும் தங்கள் சொந்த அதிகார மண்டலத்திற்குள் செயல்படவும் மற்ற தேவையற்ற விசயங்களில் தலையிடாமல் இருக்கவும் ஒப்புக்கொண்டனர். முப்பது ஆண்டு அமைதி உடன்பாடு என்றபோதிலும், போர் தவிர்க்க முடியாதது என்பது தெளிவாகத் தெரிந்தது.[17] கிமு 221 வரை எசுபார்த்தா அதன் வரலாற்றில் எல்லா காலத்திலும், ஒரு "டைராக்கி" (இரட்டை ஆட்சி) ஆக இருந்தது. இரண்டு மன்னர்கள் சேர்ந்து ஒரே நகர அரசை ஆட்சி செய்தனர். பரம்பரை மன்னர்களின் ஒரு மரபு யூரிபோன்டிட் வம்சத்தைச் சேர்ந்தது, மற்றொன்று அகியட் வம்சத்தைச் சேர்ந்தது. முப்பது ஆண்டு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம், எசுபார்த்தாவை அதன் அண்டை நாடுகளுடன் போரில் நுழைவதை வெற்றிகரமாக இரண்டாம் ஆர்க்கிடாமஸ் தடுத்து வந்தார்.[18] இருப்பினும், எசுபார்த்தாவில் உள்ள வலுவான போர் ஆதரவு பிரிவினர் விரைவில் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றனர் மேலும் கிமு 431 இல் ஆர்க்கிடாமஸ் டெலியன் கூட்டணியுடன் போருக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். கிமு 427 இல், இரண்டாம் ஆர்க்கிடாமஸ் இறந்தார். அதன்பிறகு அவரது மகன், இரண்டாம் அகிஸ் எசுபார்த்தாவின் யூரிபோன்டிட் அரியணையில் ஏறினார்.[19]

பெலோபொன்னேசியன் போருக்கான காரணங்கள்[தொகு]

பெலோபொன்னேசியன் போர்க்கான உடனடி காரணங்கள் குறித்த தரவுகள் மாறுபடுகின்றன. எவ்வாறாயினும், பண்டைய வரலாற்றாசிரியர்களான துசிடிடீஸ் மற்றும் புளூட்டாக் ஆகியோர் கூறும் மூன்று காரணங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. போருக்கு முன்பு, கொரிந்தும் அதனால் உருவாக்கபட்ட குடியேற்றங்களில் ஒன்றான கோர்சிராவும் (இன்றைய கோர்ஃபு ), கிமு 435 இல் கோரிராவினால் உருவாக்கப்பட்ட குடியேற்றறமான எப்பிடாம்னஸ் விசயத்தில் போருக்குச் சென்றது.[20] எசுபார்த்தா இந்த மோதலில் தலையிட மறுத்து, இருவருக்குமான சிக்கலை பேசி தீர்த்துக் கொள்ள வலியுறுத்தியது.[21] கிமு 433 இல், கோர்சிரா போரில் ஏதெனியன் உதவியை நாடியது. கொரிந்து ஏதென்சின் பாரம்பரிய எதிரியாக அறியப்பட்டது. இருப்பினும், ஏதென்சு இந்த மோதலில் நுழைவதை ஊக்குவிக்கும் விதமாக, கோர்சிராவின் மூலோபாய இடங்கள் மற்றும் அட்ரியாடிக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள எபிடாம்னஸ் குடியேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோர்சிராவுடனான நட்புறவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை கோர்சிரா சுட்டிக்காட்டியது.[22] மேலும், கிரேக்கத்தின் மூன்றாவது பெரிய கடற்படையான கோர்சிராவின் கடற்படையையும் ஏதென்சு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோர்சிரா உறுதியளித்தது. இதை நல்ல வாய்ப்பாக கண்ட ஏதென்சு கோர்சிராவின் பாதுகாப்புக்கான கூட்டணியில் கையெழுத்திட்டது.

அடுத்த ஆண்டு, கிமு 432 இல், கொரிந்துக்கும், ஏதென்சுக்கும் இடையில் பொடிடேயாவை (நவீனகால நியா பொடிடாயாவிற்கு அருகில்) ஆதிக்ககம் செய்வது குறித்து சர்ச்சை எழுந்தது. இறுதியில் இது பொடிடியாவை ஏதென்சு முற்றுகையிட வழிவகுத்தது.[23] கிமு 434-433 இல் ஏதென்சு " மெகாரியன் ஆணைளை" வெளியிட்டது, இது மெகாரியன் மக்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த ஆணைகள் ஆகும்.[24] இவற்றைத் தொடர்ந்து மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளின் மூலமாகவும் ஏதென்சு முப்பது ஆண்டு அமைதி உடன்பாட்டை மீறியதாக பெலோபொன்னேசியன் கூட்டணி குற்றம் சாட்டியது. அதன்படி, எசுபார்த்தா ஏதென்சு மீது போரை முறையாகப் அறிவித்தது.

பல வரலாற்றாசிரியர்கள் இவை போரின் உடனடி காரணங்கள் என்று கருதுகின்றனர். கிரேக்கத்தில் ஏதென்சின் மேலாதிக்கம் பெருகிவந்ததே எசுபார்த்தா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஏதென்சின் மீது வெறுப்பு பெருகியதற்கு அடிப்படைக் காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏதென்சு (கடற்படை சக்தி) மற்றும் எசுபார்த்தா (நிலம் சார்ந்த இராணுவ சக்தி) ஆகியவை ஒருவரையொருவர் தங்கள் பிடிக்குள் கொண்டுவருவது கடினமாக இருந்ததால், இந்தப் போர் 27 ஆண்டுகள் நீடித்தது.

பெலோபொன்னேசியன் போர்: தொடக்க நிலை (கிமு 431–421)[தொகு]

அட்டிகாவை ஆக்கிரமிப்பதே எசுபார்த்தாவின் ஆரம்ப உத்தியாக இருந்தது. ஆனால் ஏதெனியர்கள் நகரின் மதில்களுக்குப் பின்னால் பின்வாங்கிக் கொண்டனர். எசுபார்த்தாவின் முற்றுகையின் போது ஏதென்சில் பிளேக் நோய் பரவியது. அது பெரிக்கிளீசு உட்பட பலரின் இறப்புகளுக்கு காரணமாயிற்று. அதே நேரத்தில் ஏதெனியன் கடற்படை பெலோபொன்னசில் துருப்புக்களை தரையிறக்கியது, நௌபாக்டஸ் (429) மற்றும் பைலோஸ் (425) ஆகிய இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த தந்திரோபாயங்கள் இரு தரப்பிற்கும் தீர்க்கமான வெற்றியைத் தரவில்லை. பல ஆண்டுகள் முடிவில்லாத தொடர் போர்களுக்குப் பிறகு, மிதவாத ஏதெனியன் தலைவர் நிக்கியாசால் நிக்கியாஸ் அமைதி உடன்பாடு கொண்டுவரப்பட்டது (421).

கறுப்பு உருவ மட்பாண்டத்தில் ஒரு வீரனின் தலைக்கவசம்

பெலோபொன்னேசியப் போர்: இரண்டாம் கட்டம் (கிமு 418–404)[தொகு]

இருப்பினும், கிமு 418 இல், எசுபார்த்தாவுக்கும் ஏதெனிய கூட்டாளியான ஆர்கோசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மீண்டும் போர் தொடங்க வழிவகுத்தது. எசுபார்த்தன்களுக்கு எதிராக ஆர்கோசுடன் கூட்டு சேர ஏதெனியர்களை வற்புறுத்துவதில் ஆல்சிபியாடீசின் குரல் மிகவும் செல்வாக்கு மிக்க ஒன்றாக இருந்தது.[25] மாண்டினியாவில் எசுபாரத்தா ஏதென்சு மற்றும் அவரது கூட்டாளிகளின் ஒருங்கிணைந்த படைகளை தோற்கடித்தது. அதனால், ஆர்கோஸ் மற்றும் மற்ற பெலோபொன்னெசியா மீண்டும் எசுபார்த்தாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.[25] அமைதி திரும்பியது இதன் பிறகு ஏதென்சு பெலோபொன்னெச்சின் விவகாரங்களில் தலையிடாமல் வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தியது. அதாவது பேரரசைக் கட்டியெழுப்பவும், தங்களின் நிதியை ஒழுங்கமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தியது. விரைவில் வர்த்தகம் மீண்டு, வருவாய் வரத் தொடங்கியது, ஏதென்சில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.[25] ஒரு வலுவான "அமைதி கட்சி" எழுந்தது, இது போரைத் தவிர்ப்பதை ஊக்குவித்தது மற்றும் ஏதெனியப் பேரரசின் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தியது. எவ்வாறாயினும், ஏதென்சு மற்றொரு கிரேக்க அரசுடன் மோதும் நிலை உருவானது.

மெலியன் போர்ப்பயணம் (கிமு 416)[தொகு]

கிமு 477 இல் டெலியன் கூட்டணி உருவானதிலிருந்து, மெலோஸ் தீவு அதில் சேர மறுத்தது. கூட்டணியில் சேர மறுத்ததன் மூலம், மெலோஸ் எந்த சுமையையும் தாங்காமல் கூட்டணியின் பலன்களைப் பெற்றது.[26] கிமு 425 இல், கிளியனின் தலைமையில் ஏதெனியன் இராணுவம் மெலோசைத் தாக்கி தீவை டெலியன் லீக்கில் இணைக்க கட்டாயப்படுத்தியது. இருப்பினும், மெலோஸ் தாக்குதலை எதிர்த்து. தான் நடுநிலையில் இருக்க விரும்புவதாக கூறியது.[26] மேலும் மோதல் தவிர்க்க முடியாத நிலையை நோக்கி நகரும் சூழல் சென்றது. கிமு 416 வசந்த காலத்தில் ஏதென்சின் மக்களின் மனநிலை இராணுவ சாகசத்தை நோக்கி சாய்ந்தது. இது மெலோஸ் தீவு மீது நடவடிக்கை எடுக்க போர் ஆதரவு பிரிவினருக்கு ஆதரவு நிலையை உருவாக்கியது. மேலும், அமைதிப் பிரிவில் இருந்து இந்த போர்ப் பயணத்திற்கு குறிப்பிடதக்க எதிர்ப்பு எதுவும் தோன்றவில்லை. கிளர்ச்சி செய்யும் நகர அரசுகள் மற்றும் தீவுகளின் மீது டெலியன் கூட்டணி நடவடிக்கை எடுப்பது, ஏதென்சின் தொடர்ச்சியான வர்த்தகம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். தென்மேற்கு ஏஜியன் கடலில் அமைந்துள்ள சைக்ளாடிக் தீவுகளில் மெலோஸ் மட்டும் டெலியன் கூட்டணியில் சேருவதற்கு எதிரான நிலைப்பட்டில் இருந்தது.[26] இந்த தொடர்ச்சியான எதிர்ப்பு டெலியன் கூட்டணியின் மற்ற உறுப்பினர்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக இருந்தது.

ஏதென்சுக்கும் மெலோசுக்கும் இடையே டெலியன் கூட்டணியில் சேர்வது பற்றிய விவாதத்தை துசிடிடீஸ் தனது மெலோயன் உரையாடலில் விவரித்துள்ளார்.[27] இந்த விவாதம் இறுதியில் மெலோஸ் மற்றும் ஏதென்சுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்க்கவில்லை. இதனால் விரைவில் மெலோஸ் மீது கிமு 416 இல் படையெடுக்கப்பட்டு, ஏதென்சால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஏதென்சின் இந்த வெற்றி, ஏதென்ஸ் பேரரசை மேலும் விரிவாக்க வேண்டும் என்ற ஏதென்சு மக்களின் ஆவலைத் தூண்டியது.[28] அதன்படி, ஏதென்ஸ் மக்கள் இராணுவ நடவடிக்கைகளூக்கு தயாராயினர். மேலும் ஆல்சிபியாடீசின் தலைமையிலான போர் ஆதரவு பிரிவை ஆதரிக்க முனைந்தனர்.

சிசிலியன் போர்ப் பயணம் (கிமு 415–413)[தொகு]

டார்மினாவில் உள்ள கிரேக்க நாடக அரங்கம்

எனவே, கிமு 415 இல், சிசிலியில் உள்ள பெலோபொன்னேசிய கூட்டாளியான சிரக்கூசாவுக்கு எதிராக ஏதென்சு ஒரு பெரிய போர்ப் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று ஏதென்சின் அவையில் தனது நிலைப்பாட்டிற்கு ஆல்சிபியாடிசு ஆதரவைப் பெற்றார்.[29] சிசிலி தீவில் உள்ள ஒரு நகரமான செகெஸ்டா, மற்றொரு சிசிலிய நகரமான செலினஸ் நகரத்துடனான போரில் ஏதெனியன் உதவியைக் கோரியது. இது குறித்த விவாதம் ஏதெனியன் அவையில் நடந்தபோது சிசிலியன் படையெடுபில் உள்ள சாதக பாதகங்களை குறிப்பிட்டு அவற்றை சிந்திக்குமாறு நிக்கியாஸ் கூறினார். எனினும் அவை சிசிலிக்கு படையை அனுப்ப முடிவு எடுத்து, நிக்கியாசை ஆல்சிபியாடிசுடன் இணைந்து போர்ப் பயணத்தை வழிநடத்த நியமித்தது.[30]

ஆர்ட்டெமிஷன் வெண்கலச் சிலை இது, சு கிமு 460 காலத்திய பொசைடன் அல்லது சியுசுவின் சிலை ஆகும். தேசிய தொல்லியல் அருங்காட்சியகம், ஏதென்சு . 1928 இல் ஆர்ட்டிமீசியம் முனை கடற்பகுதியில் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது இரண்டு மீட்டரைவிட உயரமானது.

இருப்பினும், மெலோசுக்கு எதிரான போர்ப் பயணத்தைப் போலல்லாமல், ஏதென்சின் குடிமக்கள் தொலைதூர சிசிலிக்கான போர்ப் பயணத்திற்கான ஆல்சிபியாடீசின் முன்மொழிவில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் ஆழமாக பிளவுற்றனர். கிமு 415 ஆம் ஆண்டு சூ்ன் மாதம், சிசிலிக்கு ஏதெனியன் கடற்படை புறப்படுவதற்கு முன்னதாக, ஏதென்சி்ல் ஒரு நாசகாரக் குழுவால் ஒரு நாள் இரவில் எர்மாய் எனப்படும் எர்மெசு கடவுளின் தலைகள் கொண்ட சிலைகள் ஏதென்சு முழுவதும் சிதைக்கப்பட்டன.[31] இந்த செயலுக்கு ஆல்சிபியாடீசு மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது அடுத்து மேற்கொள்ளவிருக்கும் போர் பயணத்திற்கு ஒரு கெட்ட சகுனமாக பார்க்கப்பட்டது.[32] எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராயும்போது, எர்மசின் சிலைகளை சிதைத்த நடவடிக்கையானது அமைதி ஆதரவுப் பிரிவினரின் நடவடிக்கைக்கே வாய்ப்பு உள்ளது.[33] பிரச்சினையில் விவாதத்தில் வெற்றிபெற இயலாததாலும், ஏதென்சு மக்கள் மீதான ஆல்சிபியாடீசின் பிடியை பலவீனப்படுத்த அமைதி பிரிவினர் தீவிரமாக இருந்தனர். காழ்ப்புணர்ச்சியாளர்கள் இச்செயலுக்கு ஆல்சிபியாடீசை குற்றம் சாட்டுவதன் வழியாக ஆல்சிபிடீயசையும் ஏதென்சில் உள்ள போர் ஆதரவுப் பிரிவினரையும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தனர். மேலும், எர்ம்சின் சிலைகளை ஆல்சிபியாடீசு வேண்டுமென்றே சிதைத்திருக்க வாய்ப்பில்லை. அவர் நீண்ட காலமாக மேற்கொள்ளவேண்டும் என்று வாதிட்டுவந்த போர்ப் பயணத்திற்கான ஒரு கெட்ட சகுனமாக காட்ட மட்டுமே இத்தகைய சிதைவுகள் செய்யப்பட்டிருக்கலாம்.

கப்பற்படை சிசிலியை அடைவதற்கு முன்பே, எர்மசின் சிலைகளை சேதப்படுத்திய குற்றம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள ஆல்சிபியாடீசு வந்து சேர வேண்டும் என்று கடற்படைக்கு தகவல் வந்தது. இத்தகவல் ஆல்சிபியாடீசை எசுபார்த்தாவுக்கு தப்பி ஓட தூண்டியது.[34] கடற்படை பின்னர் சிசிலியில் தரையிறங்கியது. மேலும் போரில் ஈடுபட்டபோது, போர்ப் பயணம் முழுமையான தோல்வியாக ஆனது. இந்த போர்பயணத்தில் பயணம் மேற்கொண்ட ஏதென்சின் படை முழுவதும் அழிவுற்றது. மேலும் நிசியாஸ் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். ஏதென்சு வரலாற்றில் அதன் பலத்தை நசுக்கிய மிகப்பெரிய தோல்விகளில் இது ஒன்றாகும்.

எசுபார்த்தாவில் ஆல்சிபியாடீசு[தொகு]

இதற்கிடையில், ஆல்சிபியாடீசு ஏதென்சுக்கு துரோகம் செய்பவராக, எசுபார்த்தன்களுக்கு தலைமை ஆலோசகராக ஆனார். தனது தாயகத்தை தோற்கடிப்பதற்கான சிறந்த வழிவகைகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினார். ஆல்சிபியாடீசு எசுபார்த்தன்களை முதல் முறையாக ஒரு உண்மையான கடற்படையை உருவாக்க வைத்தார். அது கடலில் ஏதெனியன் மேன்மைக்கு சவால் செய்யும் அளவுக்கு பெரியதாக உருவானது. அதுமட்டுமல்லாமல், ஆல்சிபியாடீசு எசுபார்த்தன்களை அவர்களது பாரம்பரிய எதிரிகளான பாரசீகர்களுடன் கூட்டணி வைக்கும்படி வற்புறுத்தினார். ஆல்சிபியாடீசு விரைவில் எசுபார்த்தாவில் சர்ச்சையில் சிக்கினார், அவர் எசுபார்த்தாவின் யூரிபோன்டிட் மரபின் மன்னரான இரண்டாம் அகிசின் மனைவியான திமேயாவை மயக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.[19] இதனால் ஆல்சிபியாடீசு எசுபார்த்தாவிலிருந்து தப்பி பாரசீகம் சென்று அதன் ஆட்சியாளர்களிடம் பாதுகாப்பை நாட வேண்டியிருந்தது.

பாரசீக தலையீடு[தொகு]

பாரசீக அரசவையில், ஆல்சிபியாடீசு இப்போது ஏதென்சு, எசுபார்த்தா என இரண்டையும் காட்டிக் கொடுத்தார். எசுபார்த்தாவுக்கும் ஏதென்சுக்கும் இடையிலான நீண்ட மற்றும் தொடர்ச்சியான போர் இரண்டு நகர அரசுகளையும் வலுவிழக்கச் செய்துள்ளது. இது கிரேக்க தீபகற்பத்தில் பாரசீகர்கள் ஆதிக்கம் செலுத்த ஏற்ற தருணம் என்று அறிவுறுத்தி, கடற்படையை உருவாக்க எசுபார்த்தாவுக்கு நிதி உதவி அளிக்க பாரசீகத்தை ஊக்குவித்தார்.

415-413 இல் சிசிலிக்கான இராணுவப் போர்ப் பயணத்தை வழிநடத்த ஆல்சிபியாடீசை அனுமதித்திருந்தால் பேரழிவுகரமான தோல்வி ஏற்பட்டதை தவிர்கத்திருக்கலாம் என்ற நம்பிக்கை ஏதென்சில் இருந்த போர் ஆதரவுக் கட்சியினரிடையே, எழுந்தது. எனவே, அவர் எசுபார்த்தாவுக்குச் தப்பிச் சென்று ஏதென்சுக்கு துரோகம் செய்து, பின்னர் பாரசீக அரசவைக்கு அவர் ஒத்துழைத்த போதிலும், ஆல்சிபியாடீசின் தண்டணையை விலக்கி அவரை ஏதெனசுக்குத் திரும்பிவர அனுமதித்திட வேண்டும் என்ற கோரிக்கை போர்க் கட்சியினரிடையே எழுந்தது. ஏதெனியன் கட்டுப்பாட்டில்இருந்த சாமோஸ் தீவில் ஆல்சிபியாடீசு் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆல்சிபியாடீசு் "தீவிர சனநாயகம்" என்பது தனது மோசமான எதிரி என்று உணர்ந்தார். அதன்படி, ஏதென்சில் சிலவர் ஆட்சியை நிறுவ ஒரு சதிச் செயலைத் தொடங்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார். ஆட்சிக்கவிழ்ப்பு வெற்றிகரமாக நடந்தால், ஆல்சிபியாடீசு் ஏதென்சுக்குத் திரும்புவதாக உறுதியளித்தார். 411 ஆம் ஆண்டில், ஏதென்சில் "400" என அறியப்பட்ட ஒரு குழுவால் ஒரு வெற்றிகரமான ஆட்சிக்கவிழ்ப்பானது சிலவர் ஆட்சிக்குழுவினரால் நடத்தப்பட்டது. இருப்பினும், சமோசில் சனநாயகத்தைக் கவிழ்க்க 400 பேர் செய்த அதே முயற்சி தோல்வியடைந்தது. ஆல்சிபியாடீசு் உடனடியாக ஏதெனியன் கடற்படையில் கடற்படை தளபதியாக ( நவார்ச் ) ஆக்கப்பட்டார். பின்னர், சனநாயக அழுத்தங்கள் காரணமாக, 400 பேர் என்பது "5000" என்ற பரந்த சிலவர் ஆட்சிக் குழுவாக மாற்றப்பட்டது. பாரசீக கடற்படை தளபதியாக பதவி ஏற்றபோதிலும், ஆல்சிபியாடீசு் உடனடியாக ஏதென்சுக்குத் திரும்பவில்லை. கிமு 410 ஆம் ஆண்டின் முற்பகுதியில், தார்தனெல்சு நீரிணைக்கு அருகிலுள்ள அபிடோசில் பாரசீக நிதியுதவி பெற்ற எசுபார்த்தன் கடற்படைக்கு எதிராக ஆல்சிபியாடீசு் 18 கப்பல்களைக் கொண்ட ஏதெனியன் கடற்படைக்கு தலைமை தாங்கினார். அபிடோஸ் சமர் உண்மையில் ஆல்சிபியாடீசு் வருவதற்கு முன்பே தொடங்கியது. மேலும் போர் ஏதெனியர்களை சமநிலையிலேயே வைத்திருந்தது. இருப்பினும், ஆல்சிபியாடீசு்வின் வருகைக்குப் பிறகு, எசுபார்த்தன்களுக்கு எதிரான ஏதெனியன் வெற்றி முழுமையாக நிகழாமல் போனது.

ஆல்சிபியாடீசின் ஆலோசனையைப் பின்பற்றி, பாரசீகப் பேரரசு எசுபார்த்தாவையும் ஏதென்சையும் ஒன்றுக்கொன்று எதிராக ஆதரித்து விளையாடிக் கொண்டிருந்தது. இருப்பினும், அபிடோஸ் சமருக்குப் பிறகு எசுபார்த்தன் கடற்படை பலவீனமாக இருந்ததால், பாரசீக கடற்படை நேரடியாக எசுபார்த்தன்களுக்கு உதவியது. ஆல்சிபியாடீசு பின்னர் கிமு 410 வசந்த காலத்தில் சிசிகஸ் சமரில் ஒருங்கிணைந்த எசுபார்த்தன் மற்றும் பாரசீக கடற்படைகளுடன் களம்கண்டு, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டினார்.

லைசாந்தர் மற்றும் போரின் முடிவு[தொகு]

பாரசீகர்களின் நிதி உதவியுடன், ஏதெனியன் கடற்படை மேலாதிக்கத்தை எதிர்த்து போராட எசுபார்த்தா ஒரு கடற்படையை உருவாக்கியது. புதிய கடற்படை மற்றும் புதிய இராணுவத் தலைவரான லைசாந்தருடன், எசுபார்த்தா அபிடோசைத் தாக்கி, கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியைக் கைப்பற்றியது. ஏதென்சின் தானிய இறக்குமதியின் ஆதாரமான தார்தனெல்சு நீரிணையை ஆக்கிரமித்ததன் மூலம், எசுபார்த்தா ஏதென்சுக்கு பட்டினி குறித்த அச்சுறுத்தலை உருவாக்கியது.[35] பதிலுக்கு, ஏதென்சு தன்னிடம் கடைசியாக எஞ்சியுள்ள கடற்படையை லைசாந்தரை எதிர்கொள்ள அனுப்பியது. ஆனால் ஈகோஸ்ப்போடாமி சமரில் (கிமு 405) தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டது. அதன் கடற்படையின் முழு அழிவானது ஏதென்சை திவால்நிலைக்கு தள்ளி அச்சுறுத்தியது. கிமு 404 இல் ஏதென்சு சமாதானத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எசுபார்த்தா கடுமையான நிபந்தனைகளை கட்டளையாக விதித்தது: ஏதென்சு தனது நகர மதில் சுவர்கள், கடற்படை மற்றும் வெளிநாட்டு உடைமைகள் என அனைத்தையும் இழந்தது. லைசாந்தர் ஏதென்சில் சனநாயகத்தை ஒழித்து, அந்த இடத்தில் ஏதென்சை ஆளுவதற்கு " முப்பது கொடுங்கோலர்கள் " என்ற சிலவர் ஆட்சியை நியமித்தார்.

இதற்கிடையில், எசுபார்த்தாவில், அரசி திமேயா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். எசுபார்த்தாவின் மன்னர் இரண்டாம் அகிஸ் தன் பெரிய பாட்டனாரின் நினைவாக, குழந்தைக்கு லியோடிசிடாஸ் என்ற பெயர் வைதார். இருப்பினும், ஆல்சிபியாடீசுடன் அரசி திமேயாவுக்கு இருந்த தொடர்பு காரணமாகவே, அந்தக் குழந்தை பிறந்தது என்று பரவலாக வதந்தி பரவியது.[19] உண்மையில், கிமு 400 இல் அவரது மரணப் படுக்கையில், சாட்சிகள் முன்னிலையில், லியோடிசிடாசைத் தன் மகனாக ஒப்புக்கொள்ள இரண்டாம் அகிஸ் மறுத்துவிட்டார்.[36]

இரண்டாம் அகிசின் மரணத்திற்குப் பிறகு, லியோடிசிடாஸ் யூரிபோன்டிட் வம்சத்துக்கான அரியணையை தனக்கு கோர முயன்றார். ஆனால் அப்போது எசுபார்த்தாவில் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த லைசாந்தரிடமிருந்து பலத்த எதிர்ப்புக் குரல் எழுந்தது.[36] லியோடிச்சிடாஸ் கள்ளத் தொடர்பினால் பிறந்தவர் என்பதால் யூரிபோன்டிட் வம்சதின் அரியணையில் அமர முடியாது என்றும் லைசாந்தர் வாதிட்டார்;[36] அதற்கு பதிலாக மற்றொரு மனைவி மூலம் அகிசுக்கு பிறந்த மகனான அஜிசிலேயசின் உரிமைகோரலை ஆதரித்தார். லைசாந்தரின் ஆதரவுடன், அஜிசிலேயஸ் யூரிபோன்டிட் வம்ச மன்னரானார். இதற்கு சிலகாலம் கழித்து இரண்டாம் அஜிசிலேயஸ், லியோடிச்சிடாசை நாட்டிலிருந்து வெளியேற்றினார், மேலும் அவரது தோட்டம், சொத்துக்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்.

கிமு 4 ஆம் நூற்றாண்டு[தொகு]

தொடர்புடைய கட்டுரைகள்: எசுபார்த்தாவின் மேலாதிக்கம் மற்றும் தீப்சின் மேலாதிக்கம்
பெர்கமோன் அருங்காட்சியகத்தில் உள்ள ஏதென்சின், கிமு 375-350, காலத்திய கல்லறை சினைவுச் சின்ன சிற்பம்.

பெலோபொன்னேசியப் போரின் முடிவு எசுபார்த்தாவை கிரேக்கத்தின் தலைமை இடத்துக்கு கொண்டுவந்தது. ஆனால் எசுபார்த்தன் உயரடுக்கு போர்வீரர் சமுதாயத்தின் குறுகிய கண்ணோட்டம் இந்த பாத்திரத்திற்கு அவர்களை பொருந்தாமல் செய்தது.[37] சில ஆண்டுகளுக்குள் ஏதென்சிலும் மற்ற நகரங்களிலும் சனநாயகப் பிரிவினர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். கிமு 395 இல் எசுபார்த்தன் ஆட்சியாளர்கள் லைசாந்தரை பதவியில் இருந்து நீக்கினர். மேலும் எசுபார்த்தா தனது கடற்படை மேலாதிக்கத்தை இழந்தது. ஏதென்சு, ஆர்கோசு, தீப்சு, கொரிந்து (இதில் பிந்தைய இரண்டும் முன்னாள் எசுபார்த்தன் கூட்டாளிகள்) ஆகியவை கொரிந்தியப் போரில் எசுபார்த்தாவின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினன. இது கிமு 387 இல் முடிவடையாமல் இருந்தது. அதே ஆண்டு எசுபார்த்தா பாரசீகத்துடன் அண்டால்சிடாஸ் உடன்படிக்கையை மேற்கொண்டு கிரேக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த ஒப்பந்தம் கிரேக்க நகரங்களான அயோனியா மற்றும் சைப்ரசுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கியது. மேலும் கிரேக்கத்தின் நூறு ஆண்டுகால வெற்றியை பாரசீகத்திடம் கைவிட்டது. பின்னர் எசுபார்த்தா தீப்சின் சக்தியை மேலும் பலவீனப்படுத்த முயன்றது. இது ஒரு போருக்கு வழிவகுத்தது, அதில் தீப்ஸ் தன் பழைய எதிரியான ஏதென்சுடன் கூட்டு சேர்ந்தது.

பின்னர் தீப்சின் தளபதிகளான எபமினோண்டாஸ் மற்றும் பெலோப்பிடாசு ஆகியோர் லியூக்ட்ரா சமரில் (கிமு 371) எசுபார்த்தாவை எதிர்த்து தீர்க்கமான வெற்றியைப் பெற்றனர். இந்த போரின் விளைவாக எசுபார்த்தன் மேலாதிக்கம் முடிவுக்கு வந்து, தீப்சின் ஆதிக்கம் ஏற்பட்டது. ஆனால் தீப்சின் மேலாதிக்கம் குறுகிய காலமே நீடித்ததால் ஏதென்சு தனது முந்தைய சக்தியை மீட்டது. மாண்டினியா சமரில் (கிமு 362) தீப்சின் தளபதி எபமினோண்டாசின் மரணத்துடன் அந்த நகரம் தன் தலைசிறந்த தலைவரை இழந்தது. மேலும் அவரது வாரிசுகள் போசிசுடன் பயனற்ற பத்து ஆண்டுகால போர் புரிந்து தவறிழைத்தனர். கிமு 346 இல் தீபஸ் போசியன்களுக்கு எதிராக தங்களுக்கு உதவுமாறு மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பிடம் முறையிட்டனர். இதனால் மாக்கெடோனை முதல் முறையாக கிரேக்க விவகாரங்களில் தலையிடவைத்தனர்.[38]

பெலோபொன்னேசியன் போர் கிரேக்க உலகிற்கு ஒரு தீவிர திருப்புமுனையாக இருந்தது. கிமு 403க்கு முன், ஏதென்சு மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் இந்த ஏதெனியன் சாம்ராஜ்யத்திற்கு வெளியே உள்ள பிற அரசுகளுடன் கொண்ட உறவு மிகவும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. தரவுகள் இந்த ஏதெனியன் மேலாதிக்கத்தை அடக்குவது என்பது பாதகமானது என்று கண்டிக்கின்றன.[note 1]

கிமு 403 க்குப் பிறகு, விசயங்கள் மிகவும் சிக்கலானதாக மாறின. பல நகரங்கள் இதே போன்ற பேரரசுகளாகி மற்றவர்களை ஆதிக்கம் செய்ய முயற்சித்தன. இவை அனைத்தும் குறுகிய காலமே நீடித்தன. இந்த திருப்புமுனைகளில் முதன்மையானது கிமு 390 ஆம் ஆண்டிலேயே ஏதென்சால் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. அது தன் முந்தைய பெருமையை மீண்டும் பெறவில்லை என்றாலும் மீண்டும் ஒரு பெரிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

எசுபார்த்தாவின் வீழ்ச்சி[தொகு]

எசுபார்த்தன் பேரரசு சக்தி வாய்ந்தது ஆனால் குறுகிய காலமே நீடித்தது. கிமு 405 இல், எசுபார்த்தன்கள் ஏதென்சு மற்றும் ஏதென்சின் கூட்டாளிகள் என அனைவரையும் ஆதிக்கம் செய்யும் பேரரசாக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில், அவர்களால் தங்கள் சொந்த நகரத்தை கூட பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, கிமு 400 இல், அஜிசிலேயஸ் எசுபார்த்தாவின் மன்னரானார்.[39]

எசுபார்த்தன் பேரரசின் அடித்தளம்[தொகு]

எசுபார்த்தன் பேரரசின் ஒரு பகுதியாக ஏதெனியன் பேரரசை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது குறித்து எசுபார்த்தாவின் அனைத்து குடிமக்களிடையே மிகவும் சூடான விவாதத்தம் உருவானது. ஏதெனியப் பேரரசை எசுபார்த்தா இலாபம் அடையும் வகையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று கடற்படை தளபதி லைசாந்தர் கருதினார். மற்றவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்றார்.[40] இதற்கு முன்னதாக, விலையுயர்ந்த அனைத்து உலோகங்களையும் குடிமக்கள் பயன்படுத்துவதைத் எசுபார்த்தன் சட்டம் தடைசெய்தது. சிக்கலான இரும்பு உலோகப் பாளங்கள் மற்றும் நகரத்தால் கைப்பற்றபட்ட அனைத்து விலைமதிப்பற்ற உலோகங்களும் அரசின் சொத்தாக மாறியது. எசுபார்த்தன்கள் ஆதரவின்றி, லைசாந்தரின் கட்டுபாடுகள் நடைமுறைக்கு வந்தன. இவை அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தன-உதாரணமாக, சாமோசில், லைசாந்திரியா எனப்படும் திருவிழாக்கள் அவரது நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டன. அவர் எசுபார்த்தாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டார், அங்கு எந்த ஒரு முக்கிய விசத்திலும் கலந்துகொள்ளவில்லை.

அட்டிகாவில் ஒரு கைலிக்ஸ் (குடிக்கும் கோப்பை) கொண்டு ஒரு தேவதைக்கு காணிக்கைநீர் படைப்பதைக் காட்டும், கிமு 470 வெள்ளை மட்பாண்ட வேலைப்பாடு

லைசாந்தர் அல்லது அவரது வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதை எசுபார்த்தா ஏற்கவில்லை. கிமு 403 க்குப் பிறகு அவர் இட்ட உத்தரவுகளுக்கு துணை நிற்க வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

கிமு 4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அஜிசிலேயஸ் தற்செயலாக ஆட்சிக்கு வந்தார். இவர் மற்ற எசுபார்த்தன் மன்னர்களைப் போல்லலாமல் எசுபார்த்தாவின் அகோஜ் எனப்படும் கடுமையான போர்க் கல்வியின் நன்மையைப் பெற்றவாரகிருந்தார். இந்த சமயத்தில் நகரத்தின் சட்டங்களுக்கு எதிராக சினாடன் என்பவரால் திட்டமிடபட்ட ஒரு சதியை எசுபார்த்தன்கள் கண்டுபிடித்து முறியடித்தனர். அநேகமாக இச்சதியைக் முறியடித்தில் அஜிசிலேயசின் தீவிர பங்கேற்பு இருந்திருக்கலாம் எனப்படுகிறது.

அஜிசிலேயஸ் ஒரு அரசியல் இயக்கவியலைப் பயன்படுத்தி, ஹெலனிக் இன உணர்வைத் தூண்டினார். அதன்வழியாக பாரசீக பேரரசுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போர்த்தொடர் துவக்கபட்டது.[41] மீண்டும், பாரசீகப் பேரரசு கிரேக்கத்தின் இரு தரப்பினரைக் கொண்டு விளையாடியது. பாரசீகம் ஏதெனியர்களுக்கு நிதியுதவி அளித்தது, அவர்கள் பாரசீக பணத்தைப் பயன்படுத்தி தங்கள் நீண்ட மதில் சுவர்களை (கிமு 404 இல் அழிக்கப்பட்டது) மீண்டும் கட்டியெழுப்பினர். மேலும் அவர்களின் கடற்படையை மறுகட்டமைத்து பல வெற்றிகளையும் வென்றெடுத்தனர்.

அஜிசிலேயஸ் தன் ஆட்சியின் முதல் ஆண்டுகளில் ஏஜியன் கடல் மற்றும் ஆசிய மைனரில் பாரசீகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்தார்.[42] கிமு 394 இல், எசுபார்த்தன் பொறுப்பாளர்கள் அஜிசிலேசை கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்குத் திரும்பிவரும்படி அழைத்தனர். ஆசியா மைனரில் எசுபார்த்தன் இராணுவத்தின் பெரும்பகுதியை அஜிசிலேயஸ் கொண்டிருந்த நிலையில், தாயகத்தைப் பாதுகாக்கும் எசுபார்த்தன் படைகள் கொரிந்து தலைமையிலான கூட்டணி படைகளினால் தாக்கப்பட்டன.[43] ஹாலியார்டஸ் போரில் எசுபார்த்தன்கள் தீப்சின் படைகளால் தோற்கடிக்கப்பட்டர். எசுபார்த்தாவின் தலைமை இராணுவத் தலைவரான லைசாந்தர் போரின் போது கொல்லப்பட்டது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.[44] இது " கொரிந்தியப் போர் " (கிமு 395-387) என அறியப்பட்டதன் தொடக்கமாகும்.[41] ஹாலியார்டஸில் எசுபா்த்தன் இழப்பு மற்றும் லைசாந்தரின் மரணம் பற்றி கேள்விப்பட்டதும், அஜிசிலேயஸ் ஆசியா மைனரை விட்டு வெளியேறி, ஹெலஸ்பாண்ட் நிரிணை வழியாக, திரேசைக் கடந்து மீண்டும் கிரைக்கத்தை நோக்கிச் சென்றார். கொரோனியா போரில், அஜிசிலேயஸ் மற்றும் அவரது எசுபார்த்தன் இராணுவம் தீபன்சி் படையை தோற்கடித்தது. போரின் போது, கொரிந்து பாரம்பரிய எசுபார்த்தன் எதிரிகளான ஆர்கோஸ், ஏதென்ஸ், தீப்ஸ் கூட்டணியின் ஆதரவைப் பெற்றது.[45] இருப்பினும், போர் கொரில்லா தந்திரங்களாக மாறியபோது எசுபார்த்தா இரண்டுமுனைகளிலும் போராட முடியாது என்று முடிவு செய்து, பாரசீகத்துடன் கூட்டணிய சேரும் முடிவை எடுத்தது.[45] நீடித்துவந்த கொரிந்தியப் போர் இறுதியாக அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு அல்லது அரசரின் அமைதி உடன்பாட்டுடன் முடிவடைந்தது. இதில் பாரசீகத்தின் "பேரசர் இரண்டாம் அர்தசெராக்சஸ் கிரேக்கத்தின் பல்வேறு நகர அரசுளுக்கு இடையே அமைதி "ஒப்பந்தத்தை" அறிவித்தார். அது "கிரேக்க நிலப்பகுதி மற்றும் ஏஜியன் கடல் தீவுகளில் உள்ள நகர அரசுகளுக்குள் இருந்த அனைத்து "கூட்டணி்ையும் உடைத்தது." சில நகர அரசுகளுக்கு இது "சுதந்திரம்" என்று கருதப்பட்டாலும், ஒருதலைப்பட்சமான இந்த "ஒப்பந்ததம்" பாரசீகப் பேரரசின் நலன்களுக்கு மிகவும் சாதகமானதாக இருந்தது.

கொரிந்தியப் போர் கிரேக்கத்தில் நிகழ்ந்துவரும் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தைக் காட்டியது. ஏதென்சும் எசுபார்த்தாவும் ஒருவரையொருவர் எதிர்த்து போராடி சோர்வடைந்த போது, தீப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கிரேக்க நகர அரசுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து கொண்டிருந்தன.

அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு[தொகு]

கிமு 387 இல், அனத்தோலியா மற்றும் சைப்ரசின் கிரேக்க நகரங்களையும், லிம்னோஸ், இம்ப்ரோஸ், ஸ்கைரோஸ் தவிர கிரேக்க ஏஜியன் கடல் பகுதி நகரங்களின் சுதந்திரத்தையும் பாதுகாத்து, பாரசீக மன்னரால் ஒரு ஆணை வெளியிடப்பட்டு அவை ஏதென்சுக்கு வழங்கப்பட்டன.[46] மேலும் ஏற்கனவே இருந்த கூட்டணிகளையும் கூட்டமைப்புகளையும் கலைத்துவிட்டு புதிய கூட்டணிகள் உருவாகுவதைத் தடை செய்தது. இது ஏதென்சு மூன்று தீவுகளை வைத்திருக்கும் அளவிற்கு மட்டுமே அதற்கு பயனளிக்கும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. "பேரரசர்," அர்தசெராக்சஸ், அமைதி உடன்பாட்டுக்கு உத்தரவாதம் அளித்தது. மேலும் இந்த உடன்பாட்டை அமல்படுத்துவதில் எசுபார்த்தா பாரசீகத்தின் முகவராக இருக்கும்.[47] பாரசீகர்களால் இந்த ஆவணம் " அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு " என்று அழைக்கப்பட்டது. கிரேக்கர்களால், இந்த ஆவணம் பாரசீகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட எசுபார்த்தன் தூதர் அண்டால்சிடாசின் நினைவாக அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. ஏதென்சுக்கும் பாரசீகத்திற்கும் இடையே நெருங்கிய உறவுகளை வளர்ப்பது குறித்து எசுபார்த்தா கவலைப்பட்டது. அதன்படி, "பேரரசரிடம்" தன்னால் முடிந்த அளவு உடன்படிக்கையை மேற்கொள்ளுமாறு அண்டால்சிடாஸ் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, "அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு" என்பது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஏற்பட்ட அமைதி உடன்பாடு அல்ல. மாறாக அது பாரசீகத்தின் நலன்களுக்காக வளைந்து கொடுப்பதாகவும், அதன் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு சார்பாக எழுதப்பட்டது.[47]

எசுபார்த்தன் தலையீடு[தொகு]

மறுபுறம், இந்த அமைதி உடன்பாடு எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்ப, பொயோட்டியன் கூட்டணி அல்லது பொயோட்டியன் கூட்டமைப்பு கிமு 386 இல் கலைக்கப்பட்டது.[48] இந்த கூட்டமைப்பு எசுபார்த்தன் மேலாதிக்கத்திற்கு எதிரான நகரமான தீப்சின் ஆதிக்கம் கொண்டது. எசுபார்த்தா எபிரஸ் மற்றும் கிரேக்கத்தின் வடக்கில் பெரிய அளவிலான செயல்பாடுகளையும், தலையீடுகளையும் மேற்கொண்டது. இதன் விளைவாக சால்சிடிஸ் மற்றும் ஒலிந்தோசைக் கைப்பற்றிய பிறகு தீப்ஸ் கோட்டையான காட்மியாவைக் கைப்பற்றியது. தீப்சின் அரசியல்வாதி ஒருவரே எசுபார்த்தன் தளபதி போபிடாசிடம் எசுபார்த்தா தீப்சைக் கைப்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார். போபிடாசின் இந்த ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எசுபார்த்தா ஆவலுடன் அங்கீகரித்தாலும், இந்தச் செயல் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. எசுபார்த்தன் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தபட்டது. மேலும் தீப்ஸ் எசுபார்த்தாவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.[49]

தீப்சுடன் மோதல்[தொகு]

கிமு 378 இல், தீப்ஸ் மீதான எசுபார்த்தன் கட்டுப்பாட்டின் எதிர்வினையாக தீப்சுக்குள் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் கட்டுப்பாடு உடைக்கப்பட்டது. கிரேக்கத்தின் மற்ற இடங்களில், மற்றொரு எசுபார்த்தன் தளபதியான சுபோத்ரியாஸ், பிரேயஸ் மீது திடீர் தாக்குதலை நடத்த முயன்றபோது, எசுபார்த்தன் மேலாதிக்கத்திற்கு எதிரான எதிர்வினை தொடங்கியது.[50] பிரேயசின் வாயில்கள் பலப்படுத்தப்படவில்லை என்றாலும், சுபோத்ரியாஸ் பிரேயசின் வாயிலுக்கு முன்பாக விரட்டியடிக்கப்பட்டார். எசுபார்த்தாவில், தோல்வியுற்ற தாக்குதல் நடவடிக்கைக்காக சுபோட்ரியாஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் எசுபார்த்தன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆயினும்கூட, இத்தாக்குதல் முயற்சியானது ஏதென்சு மற்றும் தீப்ஸ் இடையே ஒரு கூட்டணி உருவாக ஒரு தூண்டுகோலானது.[50] எசுபார்த்தா இப்போது இரு அரசுகளையும் ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டிய நிலைக்கு உள்ளானது. அதேசமயம் கிமு 404 இல் எசுபார்த்தன் "கடற்படை தளபதி" லைசாந்தரிடம் பெலோபொன்னேசியப் போரில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீள ஏதென்சு முயன்றது. எசுபார்த்தாவிற்கு எதிராக எழுந்த கிளர்ச்சி உணர்வால், முந்தைய போயோடியன் கூட்டமைப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் தீப்ஸ் ஈடுபட்டது.[51] போயோட்டியாவில், தீப்சின் தலைவர்கள் பெலோபிடாஸ் மற்றும் எபமினோண்டாஸ் ஆகியோர் தீப்ஸ் இராணுவத்தை மறுசீரமைத்து, போயோட்டியா நகரங்கள் ஒவ்வொன்றாக எசுபார்தன் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கத் தொடங்கினர். மேலும் இந்த நகரங்களை புத்துயிரூட்டபட்ட போயோடியன் கூட்டணியில் இணைத்தனர்.[47] தீப்சின் தளபதியான பெலோபிடாஸ் கிமு 375 இல் டெகிரா போரில் மிகப் பெரிய எசுபார்த்தன் படையை எதிர்த்து தீப்சுக்கு ஒரு பெரிய வெற்றியை ஈட்டித்தந்தார்.[52]

மிகக் குறுகிய காலத்தில் தீப்சின் அதிகாரம் மிகவும் பிரமாதமாக வளர்ந்தது. வளர்ந்து வரும் தீப்சின் ஆற்றலை ஏதென்சு நம்பவில்லை. இரண்டாவது ஏதெனியன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஏதென்சு மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கியது.[53] தீப்ஸ் அதன் அண்டை நாடான போசிசின் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியபோது, குறிப்பாக கிமு 375 இல் ஏதென்சின் நீண்டகால நட்பு நாடான பிளாட்டீயா நகரத்தை தீப்ஸ் இடித்த பிறகு, தீப்சின் வளர்ந்து வரும் அதிகாரத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டது.[54] பிளாட்டியாவின் அழிவு, அதே ஆண்டில் தீப்சுக்கு எதிராக எசுபார்த்தாவுடன் ஒரு கூட்டணிக்கு ஏதென்சு பேரம் பேச வழிவகுத்தது.[54] 371 ஆம் ஆண்டில், எபமினோண்டாஸ் தலைமையிலான தீப்ஸ் இராணுவம், லியூக்ட்ரா சமரில் எசுபார்த்தன் படைகளுக்கு இரத்தக்களரி மிக்க தோல்வியை ஏற்படுத்தியது. எசுபார்த்தா தனது இராணுவத்தின் பெரும் பகுதியையும் அதன் 2,000 குடிமக்களையும், துருப்புக்களில் 400 பேரையும் இழந்தது. லீக்ட்ரா போர் கிரேக்க வரலாற்றில் அழிக்கமுடியாத இடத்தைப் பெற்றது.[54] எபமினோண்டாசில் தீப்சின் வெற்றியானது எசுபார்த்தன் இராணுவ கௌரவம் மற்றும் கிரேக்கத்தின் மீதான அதன் மேலாதிக்கத்தின் நீண்ட வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவந்தது. மற்றும் எசுபார்த்தன் மேலாதிக்கக் காலம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், எசுபார்த்தன் மேலாதிக்கம் தீப்சால் மாற்றப்படவில்லை, மாறாக ஏதெனிய மேலாதிக்கத்தால் மாற்றப்பட்டது.

ஏதென்சின் எழுச்சி[தொகு]

ஏதென்ஸின் அகோராவில் உள்ள எப்பெசுடசு கோயில், கிமு 449-415 இல் கட்டப்பட்டது.

கூட்டணிக்கு நிதியளித்தல்[தொகு]

ஏதெனியன் இரண்டாவது கூட்டணிக்காக முந்தைய டெலியன் கூட்டணியின் மோசமான நினைவுகளை அழிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. பழைய கூட்டணியின் நிதி அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதாவது திறை வசூலிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஏதென்சுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் துருப்புக்கள் தேவைப்படும்போது அவற்றின் பங்களிப்பாகன தொகை பயன்படுத்தப்பட்டது. அவை துல்லியமா உரிய காரணத்திற்காக சேகரிக்கப்பட்டு முடிந்தவரை விரைவாக செலவிடப்பட்டன. இந்த பங்களிப்புத் தொகை ஏதென்சுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை கிமு 5 ஆம் நூற்றாண்டு முறையைப் போலல்லாமல், கூட்டணிக்கு மத்திய கருவூலம் இல்லை.

ஏதெனியன் மேலாதிக்கத்தின் முடிவு[தொகு]

இந்த கூட்டணி உண்மையில் அப்போதைய தேவைக்கு உகந்ததாக இருந்தது. எவ்வாறாயினும், நடைமுறையில், கூட்டணியின் நிலைமை கிமு 5 ஆம் நூற்றாண்டில் இருந்து சிறிதும் மாறவில்லை என்பதை அதன் செயல்பாடுகள் நிரூபித்தன. ஏதெனியன் தளபதிகள் அவர்கள் விரும்பியதைச் செய்து கூட்டணியில் இருந்து பணத்தைப் பறிப்பரவகளாக இருந்தனர். ஏதென்சுடனான கூட்டணி மீண்டும் அழகற்றதாக ஆனது. மேலும் கூட்டாளிகள் புகார் செய்தனர்.

இறுதியில் கூட்டணி அமைப்பு சிதையத் தொடங்கியது. முதலில் இந்த கூட்டணி எசுபார்த்தாவின் மீதான அச்சத்தால் மட்டுமே உருவானது.கிமு 371 இல் எசுபார்த்தாவின் வீழ்ச்சிக்குப் பிறகு கூட்டணி கரையத் தொடங்கியது. ஏதெனியர்களுக்கு அவர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான வழிகள் இல்லாமல் போனது. மேலும் அவர்கள் தங்களின் கடற்படைக்கு தேவைப்பட்ட நிதியை திரட்டுவது கடினமானதாக இருந்தது. அதனால் அவர்களின் கூட்டாளிகளை சரியாக பாதுகாக்கக்கூட முடியவில்லை. இதனால், பெரேயின் சர்வாதிகாரி பல நகரங்களை இழப்புகள் இன்றி அழிக்க முடிந்தது. கிமு 360 முதல், ஏதென்சு வெல்ல முடியாத ஆற்றல் என்ற நற்பெயரை இழந்தது. இதனால் அதன் பல கூட்டாளிகள் (கிமு 364 இல் பைசாந்தியம் மற்றும் நக்சஸ் போன்றவை) பிரிந்து செல்ல முடிவு செய்தன.

கிமு 357 இல் கூட்டணிக்கு எதிரான கிளர்ச்சி பரவியது. மேலும் கிமு 357 மற்றும் கிமு 355 க்கு இடையில், ஏதென்சு அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப் போரில் ஏதென்சுக்கு இறுதி எச்சரிக்கை அளிப்பதாக பாரசீக மன்னரின் தீர்க்கமான தலையீடு அமைந்தது. ஏதென்சுக்கு எதிராக பாரசீகம் 200 கப்பல்களை அனுப்புவதாக அச்சுறுத்தி ஏதென்சு அதன் நட்பு நாடுகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஏதென்சு போரைத் துறந்து கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானது. அதன் மூலம் அது மேலும் மேலும் வலுவிழப்பதாக ஆனது. அது ஏதெனியன் மேலாதிக்கத்தின் முடிவைக் குறிப்பதாக ஆனது.

தீப்சின் மேலாதிக்கம்[தொகு]

பொடியன் கலை, கிமு 5 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தது

கிமு 5 ஆம் நூற்றாண்டு பொயோட்டியன் கூட்டமைப்பு (கிமு 447–386)[தொகு]

இது தீப்சின் மேலாதிக்கத்திற்கான முதல் முயற்சி என்று கருத முடியாது. தீப்ஸ் போயோட்டியாவின் மிக முக்கியமான நகரமாகவும், 386 இல் மேலாதிக்கம் பெற்றதாகவும் இருந்தது. இது 447 இன் முந்தைய போயோட்டியன் கூட்டமைப்பின் மையமாகவும் இருந்தது.

5 ஆம் நூற்றாண்டின் கூட்டமைப்பு ஆக்சிரிஞ்சில் கிடைத்த பாப்பிரஸ் மூலம் நன்கு தெரியவருகிறது. அது "தீபீஸ் அனோனிமிஸ்" என்று அறியப்படுகிறது. தீப்ஸ் அதற்கு தலைமை தாங்கி, கூட்டமைப்பின் வெவ்வேறு நகரங்கள் கட்டணங்கள் செலுத்தக்கூடிய ஒரு அமைப்பை அமைத்தது. தீப்சில் செல்வத்தின் அடிப்படையில் குடியுரிமை வரையறுக்கப்பட்டது. 11,000 குடிமக்கள் இருந்ததாக கணக்கில் தெரியவருகிறது.

கூட்டமைப்பு 11 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் " போயோடார் " என்று அழைக்கப்படும். அதற்கு சனநாயக முறையில் ஒரு தேர்ந்தெடுக்கபட்ட தலைவரும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அவை உறுப்பினர்கள், 1,000 ஹாப்லைட்டுகள் மற்றும் 100 குதிரைவீரர்களை பராமரிப்பதாக இருக்கும். கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கூட்டணி 11,000 பேர் கொண்ட காலாட்படையை களமிறக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது. மேலும் கூடுதலாக ஒரு உயரடுக்கு படை மற்றும் 10,000 எண்ணிக்கையிலான லேசான காலாட்படை; 1,100 குதிரைப்படை போன்றவற்றைக் கொண்டிருந்தது. இது எசுபார்த்தன்களுக்கு 25 கப்பல்களை வழங்குவதன் மூலம் பெலோபொன்னேசியன் போரில் ஒரு சிறிய கடற்படையையும் கொண்டிருந்தது. மோதலின் முடிவில், கடற்படை 50 கப்பல்களைக் கொண்டதாக வளர்ந்தது.

இவையனைத்தும் தீப்சுக்கு ஒரு குறிப்பிடத்தக்க போதுமான சக்தியாக இருந்தது. மன்னரின் அமைதி உடன்பாட்டால் போயோடியன் கூட்டமைப்பு கலைக்கப்பட்டதைக் கண்டு எசுபார்த்தன்கள் மகிழ்ச்சியடைந்தனர். எவ்வாறாயினும், இந்த கூட்டமைப்பின் கலைப்பானது அப்படியே இருக்கவில்லை, மேலும் 370 களில் தீபன்கள் (கிமு 382 இல் எசுபார்த்தாவிடம் காட்மியாவை இழந்தவர்கள்) இந்த கூட்டமைப்பை சீர்திருத்துவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

தீப்சின் புனரமைப்பு[தொகு]

பெலோபிடாஸ் மற்றும் எபமினோண்டாஸ் ஆகிய தீப்சின் தலைவர்கள் ஏதென்சைப் போன்ற சனநாயக அமைப்பை தீப்சில் உருவாக்கினர். பாரசீக மன்னரின் அமைதி உடன்பாட்டினால் கூட்டமைபில் இழந்த "போயோடார்" என்ற பதவியை தீபன்கள் மீட்டெடுத்தனர். மேலும் லியூக்ட்ரா சமரில் தீப்ஸ் பெற்ற வெற்றி மற்றும் எசுபார்த்தனின் சக்தி அழிவால். இந்த இரு தலைவர்களும் தீப்சை புதுப்பிக்கும் அவர்களின் நோக்கத்தை அடைந்தனர். கூட்டமைப்பு. பெலோபொன்னசை எசுபார்தன் சார்பு சிலவர் ஆட்சிக் குழுக்களிடமிருந்து எபமினோண்டாஸ் விடுவித்தார். அவதற்கு பதிலாக தீபன் சார்பு சனநாயக ஆட்சிகள் உருவாக்கபடன. நகரங்கள் கட்டபட்டன மேலும் எசுபார்த்தாவால் அழிக்கப்பட்ட பலவற்றை மீண்டும் கட்டியெழுப்பினார். மெஸ்சீன் நகரத்தின் புனரமைப்புக்கு அவர் ஆதரவளித்தார். இது விடுதலைப் பெற்ற எலட்கள் தங்கள் தலைநகராக மெஸ்சீனை மாற்றிக்கொள்ள ஏதுவாயிற்று.

அவர் இறுதியில் பெலோபொன்னெசு முழுவதும் சிறிய கூட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்தார். அதன்படி ஒரு ஆர்கேடியன் கூட்டமைப்பை உருவாக்கினார் (அரசரின் அமைதி உட்ன்பாட்டினால் முந்தைய ஆர்கேடியன் கூட்டமைப்பு அழிக்கபட்டு மெஸ்சீனை எசுபார்த்தன்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது).

ஏதென்சு மற்றும் தீப்ஸ் இடையேயான மோதல்[தொகு]

போயோட்டியன் கூட்டணியின் வலிமையானது, ஏதென்சின் இரண்டாவது கூட்டணியின் கூட்டாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஏதெனியன் கூட்டணியில் இருந்து வெளியேறி, போயோடியன் கடல்சார் கூட்டணியில் சேரும்படி நகர அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக 100 கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை உருவாக்க எபமினோண்டாஸ் தனது நாட்டு மக்களிடம் ஒப்புதல் பெறுவதில் வெற்றி பெற்றார். எபமினோண்டாஸ் மற்றும் பெலோபிடாஸ் ஆகியோர் தீப்சின் இராணுவத்தை சீர்திருத்தம் செய்து, புதிய மற்றும் மிகவும் பயனுள்ள போர் முறைகளை அறிமுகப்படுத்தினர். இதனால், கிமு 371 இல் லியூக்ட்ரா சமரிலும், கிமு 362 இல் மன்டினியா போரிலும் மற்ற கிரேக்க நாடுகளின் கூட்டணிக்கு எதிராக தீப்சின் இராணுவம் வெற்றிகரமாக போர்களை நடத்தியது.

தீப்சின் வலிமையை எதிர்கொளும் முதன்மை சக்திகளில் எசுபார்த்தாவும் ஒன்றாக இருந்தது. இருப்பினும், தீப்ஸ் காரணமாக எசுபார்த்தாவுடன் இணைந்த சில நகர அரசுகள் அதற்கு எதிராகத் திரும்பின. கிமு 367 இல், எசுபார்த்தா மற்றும் ஏதென்சு என இரண்டும் பாரசீகத்தின் பேரரசரான அரசரான இரண்டாம் அர்த்தக்செர்க்சிடம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பின. இந்த பிரதிநிதிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிமு 387 இல் செய்ததைப் போலவே, அர்தக்செர்க்சைக் கொண்டு மீண்டும் கிரேக்க சுதந்திரத்தையும் ஒருதலைப்பட்சமான அமைதி உடன்பாட்டை அறிவிக்க முயன்றனர். இதற்கு முன் மேற்கொள்ளபட்ட அமைதி உடன்பாட்டினால் கிமு 387 இல் போயோட்டியன் கூட்டணி அழிவை எய்தியது. எசுபார்த்தாவும் ஏதென்சும் இப்போதும் அதே மாதிரியான "மன்னரின் அமைதி உடன்பாடு" என்ற புதிய பிரகடனம் வெளியிடப்பட்டு, அதே விசயம் நடக்கும் என்று நம்பின. தீப்சும் அவர்களுக்கு எதிராக வாதிட பெலோபிடாசை அனுப்பியது.[55] கிரேக்கத்தில் பாரசீக நலன்களின் சிறந்த முகவர்களாக தீப்ஸ் மற்றும் போயோடியன் கூட்டணி இருக்கும் என்று பெலோபிடாஸ் மற்றும் தீபன் இராஜதந்திரிகள் உறுதியளித்தனர். அதை பேரரசர் நம்பினார், அதன்படி, "மன்னரின் அமைதி உடன்பாடு" என்று புதியதாக வெளியிடவில்லை.[48] இதனால், தீப்சைச் சமாளிக்க, ஏதென்சு மற்றும் எசுபார்த்தா ஆகியவை தங்கள் சொந்த வளங்களினாலேயே முயலவேண்டும் என்று பின்வாங்கின. இதற்கிடையில் தீப்ஸ், போயோட்டியாவின் எல்லைக்கு அப்பால் தனது செல்வாக்கை விரிவுபடுத்தியது. கிமு 364 இல், பெலோபிடாஸ் வடக்கு கிரேக்கத்தில் தென்கிழக்கு தெசலிக்கு எதிராக சினோசெபலே சமரில் பெரேயின் அலெக்சாந்தரை தோற்கடித்தது. இருப்பினும், போரின் போது, தீப்சின் தளபதி பெலோப்பிடாசு கொல்லப்பட்டார்.[56]

எசுபார்த்தாவின் நட்பு நாடுகளுடனான கூட்டமைப்பானது உண்மையில் செயற்கையான ஒன்றாகும். ஏனெனில் இது கடந்த காலத்தில் அதிகம் ஒத்துப்போக முடியாத நகரங்களை ஒன்றிணைக்க முயற்சித்தது. ஆர்கேடியன் கூட்டமைப்பில் மீண்டும் கூட்டணி சேர்ந்த டீஜியா மற்றும் மாண்டினியா நகரங்களில் இது போன்ற நிலையில் இருந்தன. மாண்டினியர்கள் ஏதெனியர்களின் ஆதரவையும், டீஜியன்கள் தீபன்களின் ஆதரவையும் பெற்றனர். கிமு 362 இல், ஏதெனியன், எசுபார்த்தன், எலிசியன், மாண்டினியன், அச்சியன் படைகள் கொண்ட கூட்டணிக்கு எதிராக எபமினோண்டாஸ் தீப்சின் இராணுவத்தை வழிநடத்தினார். மாண்டினியாவில் போர் நடந்தது.[48] தீப்ஸ் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது, ஏனெனில் எபமினோண்டாஸ் போரில் இறந்தார், "லீக்ட்ராவின் வெற்றி மற்றும் மான்டினியாவில் பெற்ற வெற்றி ஆகிய இரண்டு மகள்களை நான் தீப்சுக்கு வழங்குகிறேன்" என்று கூறினார்.

மான்டினியாவில் வெற்றி பெற்ற போதிலும், இறுதியில், தீபன்கள் பெலோபொன்னெசிய விவகாரங்களில் தலையிடும் கொள்கையை கைவிட்டனர். இந்த நிகழ்வு கிரேக்க வரலாற்றில் ஒரு தேக்கமாக பார்க்கப்படுகிறது. எனவே, கிமு 362 இல் இந்த கட்டத்தில் கிரேக்க உலகின் வரலாற்றை செனபோன் முடிக்கிறார். இந்த காலகட்டத்தின் முடிவு அதன் தொடக்கத்தை விட குழப்பமாக இருந்தது. கிரேக்கம் தோல்வியடைந்தது, செனோபோனின் கூற்றுப்படி, கிரேக்க உலகின் வரலாறு இனி புரியவில்லை.

நகர அரசுகளின் மேலாதிக்க சிந்தனை மறைந்தது. கிமு 362 முதல், கிரேக்கத்தில் மேலாதிக்க சக்தியாக மாறும் வலிமை கொண்ட நகரம் எதுவும் இல்லை என்றானது. எசுபார்த்தன்கள் பெரிதும் பலவீனமடைந்தனர்; ஏதெனியர்கள் தங்கள் கடற்படையை இயக்க முடியாத நிலையில் இருந்தனர், மேலும் 365 க்குப் பிறகு கூட்டாளிகள் இல்லை; தீப்ஸ் சிறிது காலம் மட்டுமே ஆதிக்க சக்தியாக இருந்தது. மேலும் எசுபார்த்தா மற்றும் ஏதென்சை தோற்கடித்ததகாக மட்டுமே இருந்தது ஆனால் ஆசியா மைனரில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பெரிய சக்தியாக இருக்க முடியவில்லை.

பாரசீக மன்னர் போன்ற வெளி சக்திகள் தலையிட்டனர். அவர் மறைமுக உடன்படிக்கையில் கிரேக்க நகரங்களில் ஒன்றை தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சக்தியாக நியமித்துவந்தார். இந்த நிலை மோதல்களை வலுப்படுத்தியது மேலும் உள்நாட்டுப் போர்கள் பெருகியது. ஒரு போர் மற்றொன்றுக்கு இட்டுச் சென்றது, ஒவ்வொன்றும் கடந்த போரை விட நீண்டதாகவும், இரத்தக்களரியாகவும், போர் சுழற்சியை உடைக்க முடியாததாகவும் இருந்தது. கிமு 370 இல் லாகோனியாவின் படையெடுப்புடன் முதல் முறையாக குளிர்காலத்தில் கூட பகை மோதல்கள் நடந்தன.

மாசிடோனின் எழுச்சி[தொகு]

கிமு 4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அலெக்சாந்தர் ஈமப்பேழையில் தெசலியன் குதிரைப்படை வீரர் (இஸ்தான்புல் தொல்லியல் அருங்காட்சியகம்)
கிமு 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த வெர்ஜினாவில் உள்ள மாக்கெடோனிய அரச கல்லறைகளில் உள்ள ஒரு தேரோட்டியின் சுவரோவியம்

கிமு 346 இல் மாக்கெடோனியா உயரும் சக்தியாக எழும் வரை தீப்ஸ் தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது. கிமு 359 இல் மாக்கெடோனின் பிலிப் தனது மருமகனான அமிண்டாசுக்கு அரச பிரதிநிதியாக ஆனபோது மாக்கெடோனுக்குள் ஆற்றல் மிக்க தலைமை உருவாகத் தொடங்கியது. சிறிது காலத்திற்குள், அதாவது கிமு 359 இல் பிலிப் தானே அரசராக முடிசூடிக்கொண்டு மாக்கெடோனியாவின் இரண்டாம் பிலிப் அரசர் என பெயர்பெற்றார்.[57] இரண்டாம் பிலிப் தன் வாழ்நாளில், மாக்கெடோனியாவின் தனது ஆட்சியை பலப்படுத்தினார். மேலும் பிலிப் அண்டை நாடுகளில் மாக்கெடோனியாவின் செல்வாக்கை விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்ளளத் தொடங்கினார்.

இரண்டாம் பிலிப்பின் (கிமு 359-336) ஆட்சியின் கீழ், மாக்கெடோனியா பியோனியர்கள், திரேசியர்கள், இல்லியர்களின் எல்லைகளுக்குள் விரிவடைந்தது.[58] கிமு 358 இல், பிலிப் இலிரியாவுக்கு எதிரான போர்த்தொடரில் எபிரசுடன் கூட்டு சேர்ந்தார். கிமு 357 இல், பிலிப் ஏதென்சுடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். திரேசிய துறைமுக நகரமான ஆம்பிபோலிஸ், மாக்கெடோனியாவின் கிழக்கே ஸ்ட்ரூமான் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ள நகரம் மற்றும் ஒரு பெரிய ஏதெனிய வர்த்தக துறைமுகத்தை கைப்பற்றினார். இந்த நகரத்தை கைப்பற்றியதன் மூலம் பிலிப் திரேஸ் முழுவதையும் அடிபணியச் செய்தார். ஒரு ஆண்டு கழித்து கிமு 356 இல், மாக்கெடோனியர்கள் ஏதெனியன் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுக நகரமான பிட்னாவைத் தாக்கி கைப்பற்றினர். இது ஏதென்சுக்கு மாசிடோனிய அச்சுறுத்தலை அவர்களின் நகரத்துக்கு அருகில் கொண்டு வந்தது. கிமு 356 இல் போசியன் போரின் தொடக்கத்தில், ஏதென்சின் சிறந்த சொற்பொழிவாளரும் "போர் ஆதரவு கட்சியின்" அரசியல் தலைவருமான டெமோஸ்தனிஸ், பிலிப்பின் எல்லை விரிவாக்க நோக்கங்களுக்கு எதிராக ஏதென்சு தீவிரமாகப் போராட வேண்டும் என்ற கருத்தை ஆதரித்து பெருகிய முறையில் செயல்களில் ஈடுபட்டார்.[59] கிமு 352 இல், டெமோஸ்தனிஸ் மாக்கெடோனிய அச்சுறுத்தலுக்கு எதிராக பல உரைகள் ஆற்றினார். இரண்டாம் பிலிப்பை ஏதென்சின் மிகப்பெரிய எதிரியாக அறிவித்தார். ஏதென்சின் "அமைதிக் கட்சியின்" தலைவர் போசியன் ஆவார். அவர் ஒரு மோதலைத் தவிர்க்க விரும்பினார். பிலிப்பிடம் மோதினால் அது ஏதென்சுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று போசியன் உணர்ந்தார். போர்க் கட்சியைக் கட்டுப்படுத்த போசியனின் முயற்சிகளை எடுத்த போதிலும், போர் பிரகடனத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகள் ஏதென்சு மாக்கெடோனியாவுடன் போரில் ஈடுபட்டது.[60] ஏதென்சுக்கும், இரண்டாம் பிலிப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கிமு 346 இல் தொடங்கியது.[61] கிமு 352 இல் அதே ஆண்டு தெர்மோபைலேயில் அட்டிகா மீதான பிலிப்பின் படையெடுப்பை ஏதெனியர்கள் வெற்றிகரமாக நிறுத்தினார்கள். இருப்பினும், குரோக்கஸ் பீல்ட் போரில் பிலிப் போசியர்களை தோற்கடித்தார். மாக்கெடோனியாவிற்கும் கிரேக்கத்தின் அனைத்து நகர அரசுகளுக்குமான இடையேயான மோதல் கிமு 338 இல், செரோனியா போரில் [62] ஒரு தலை தூக்கியது.

மாக்கெடோனியர்கள் கிரேக்கத்தின் தென்-மத்திய நகர அரசுகளுடன் அரசியல் ரீதியாக அதிக ஈடுபாடு கொண்டிருந்தனர். இராணுவ ரீதியாக, தீப்சில் எபமினோண்டாஸ் மற்றும் பெலோபிடாஸ் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட புதிய பாலங்க்ஸ் பாணி சண்டையை பிலிப் அங்கீகரித்தார். அதன்படி, அவர் இந்த புதிய அமைப்பை மாக்கெடோனிய இராணுவத்தில் இணைத்தார். பிலிப் தீப்சின் இராணுவ பயிற்சியாளரை மாக்கெடோனுக்கு வரவழைத்து, தீப்சின் போர் முறையை வருங்கால மன்னர் அலெக்சாந்தருக்கு பயிற்றுவித்தார்.[63]

பிலிப்பின் மகன் பேரரசர் அலெக்சாந்தர் மாக்கெடோனியாவின் பெல்லாவில் பிறந்தார் (கிமு 356-323). மன்னர் பிலிப் அரிசுடாட்டிலை இளம் அலெக்சாந்தருக்கு கற்பிக்க பெல்லாவுக்கு அழைத்து வந்தார்.[64] அலெக்சாந்தரின் தாயார் ஒலிம்பியாசைத் தவிர, பிலிப் கிளியோபாட்ரா யூரிடிஸ் என்ற மற்றொரு மனைவியைக் கொண்டிருந்தார்.[65] கிளியோபாட்ராவுக்கு யூரோபா என்ற மகளும், காரனஸ் என்ற மகனும் இருந்தனர். அலெக்சாந்தரின் அரசுரிமைக்கு காரனஸ் அச்சுறுத்தலாக இருந்தார்.[66] கிளியோபாட்ரா யூரிடைஸ் ஒரு மாக்கெடோனியர். எனவே, காரனஸ் இரத்தம் முழு மாக்கெடோனியன் இரத்தமாக கருதப்பட்டது. மறுபுறம் ஒலிம்பியாஸ், எபிரசைச் சேர்ந்தவர். எனவே, அலெக்சாந்தர் அரை-மாக்கெடோனியனாக மட்டுமே கருதப்பட்டார்.

கிமு 336 இல் எபிரஸ் மன்னர் முதலாம் அலெக்சாந்தருடன் மாசிடோனின் மகள் கிளியோபாட்ராவின் திருமணத்தின் போது இரண்டாம் பிலிப் படுகொலை செய்யப்பட்டார்.[67] பிலிப்பின் மகன், வருங்கால பேரரசர் அலெக்சாந்தர் காரனஸ் மற்றும் அவரது உறவினர் அமிடாஸ் உட்பட மற்ற அரசு உரிமைகோரியவர்களையும் இல்லாமல் செய்து மாக்கெடோனியாவின் அரியணையை உடனடியாகக் கைப்பற்றினார்.[68] அலெக்சாந்தர் அரியணை ஏறும் போது அவருக்கு இருபது வயதுதான்.[69]

அதன்பிறகு, அலெக்சாந்தர் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றும் தன் தந்தையின் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினார். இராணுவ பலத்தாலும் வற்புறுத்தலாலும் இதைச் செய்தார். தீப்ஸ் மீதான வெற்றிக்குப் பிறகு, அலெக்சாந்தர் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்க ஏதென்சுக்குச் சென்றார். ஏதென்ஸின் போர்க் கட்சி சார்பாக மாக்கெடோனிய அச்சுறுத்தலுக்கு எதிராக டெமோஸ்தனிசு திறமையாக உரையாற்றியபோதிலும், ஏதென்சில் உள்ள பொதுமக்கள் இன்னும் "அமைதிக் கட்சி" மற்றும் டெமோஸ்தீனசின் "போர்க் கட்சி" என்று பிரிளவு பட்டிருந்தனர். இருப்பினும், அலெக்சாந்தரின் வருகை ஏதென்சு மக்களைக் கவர்வதாக இருந்தது.[70] அமைதிக் கட்சி பலப்படுத்தப்பட்டது, பின்னர் ஏதென்சுக்கும் மாக்கெடோனியாவுக்கும் இடையே அமைதி ஏற்பட்டது.[71] இது அலெக்சாந்தர் மற்றும் கிரேக்கர்களின் நீண்டகாலக் கனவான கிழக்கைக் கைப்பற்றுவதற்கு உதவியாக இருந்தது. அதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட, பாதுகாப்பான கிரேக்க அரசை அவருக்குப் பின்னால் திரள வைத்தது.

கிமு 334 இல், அலெக்சாந்தர் சுமார் 30,000 காலாட்படை வீரர்கள் மற்றும் 5,000 குதிரைப்படைகளுடன் ஹெலஸ்பாண்ட்டைக் கடந்து ஆசியாவிற்குள் நுழைந்தார். அவர் திரும்பி வரவே இல்லை.[72] அலெக்சாந்தர் மாக்கெடோனிய அதிகாரத்தை மத்திய கிரேக்க நகர அரசுகளுக்கு மட்டுமல்ல, எகிப்து உட்பட பாரசீகப் பேரரசுக்கும் இந்தியாவின் விளிம்புப் பகுதியான கிழக்குப் பகுதிகளுக்கும் நீட்டிக்க முடிந்தது.[58] அவரால் அறியப்பட்ட உலகம் முழுவதும் கிரேக்க கலாச்சாரத்தை பரப்ப முடிந்தது.[73] கிமு 323 இல் பாபிலோனில் தனது ஆசிய வெற்றிப் போர்ப் பயணத்தின் போது பேரரசர் அலெக்சாந்தர் இறந்தார்.[74]

கி.மு 323 இல் பேரரசர் அலெக்சாந்தர் இறப்புடன் கிரேக்க பாரம்பரிய காலம் முடிவடைகிறது. மேலும் அவரது பேரரசு துண்டு துண்டாக, தியாடோச்சிக்கு இடையில் பிரிக்கப்பட்டது.[75] இது பெரும்பாலான அறிஞர்களால், எலனியக் காலத்தின் தொடக்கமாக குறிக்கப்படுகிறது.

பாரம்பரிய கிரேக்கதின் மரபு[தொகு]

கிரேக்கத்தின் மரபானது மறுமலர்ச்சிக்குப் பிந்தைய ஐரோப்பிய உயரடுக்கு மக்களால் நன்கு உணரப்பட்டது. அவர்கள் தங்களை கிரேக்கத்தின் ஆன்மீக வாரிசுகளாகக் கருதினர். வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் 1939 இல் எழுதினார், "எந்திரங்களைத் தவிர, நமது கலாச்சாரத்தில் கிரேக்கத்திலிருந்து வராத மதச்சார்பற்ற எதுவும் இல்லை," மாறாக "கிரேக்க நாகரிகத்தில் நமக்கு ஒளி தராத எதுவும் இல்லை".[76]

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. These sources include Xenophon's continuation of Thucydides' work in his Hellenica, which provided a continuous narrative of Greek history up to 362 BC but has defects, such as bias towards Sparta, with whose king Agesilas Xenophon lived for a while. We also have Plutarch, a 2nd-century Boeotian, whose Life of Pelopidas gives a Theban version of events and Diodorus Siculus. This is also the era where the epigraphic evidence develops, a source of the highest importance for this period, both for Athens and for a number of continental Greek cities that also issued decrees.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. The "Classical Age" is "the modern designation of the period from about 500 B.C. to the death of Alexander the Great in 323 B.C." (Thomas R. Martin, Ancient Greece, Yale University Press, 1996, p. 94).
  2. 2.0 2.1 Brian Todd Carey, Joshua Allfree, John Cairns. Warfare in the Ancient World Pen and Sword, 19 January 2006 ISBN 1848846304
  3. 3.0 3.1 Aeschylus; Peter Burian; Alan Shapiro (17 February 2009). The Complete Aeschylus: Volume II: Persians and Other Plays. Oxford University Press. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-045183-7. https://books.google.com/books?id=0kTiBwAAQBAJ&pg=PT18. 
  4. isegoria: equal freedom of speech
  5. Joseph Roisman,Ian Worthington. "A companion to Ancient Macedonia" John Wiley & Sons, 2011. ISBN 144435163X pp. 135–138
  6. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War (Cornell University Press: Ithaca, New York, 1969) p. 9.
  7. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, p. 31.
  8. Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) pp. 244–248.
  9. Carl Roebuck, The World of Ancient Times, p. 249.
  10. Carl Roebuck, The World of Ancient Times, p. 254.
  11. Carl Roebuck, The World of Ancient Times, p. 256.
  12. Carl Roebuck, The World of Ancient Times, p. 255.
  13. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, p. 44.
  14. 14.0 14.1 14.2 14.3 Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, p. 10.
  15. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, p. 128.
  16. Carl Roebuck, The World of Ancient Times, p. 261.
  17. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, pp. 2–3.
  18. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives (Penguin Books: New York, 1980) p. 25.
  19. 19.0 19.1 19.2 Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 26.
  20. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, pp. 206–216.
  21. Carl Roebuck, The World of Ancient Times, p. 278.
  22. Carl Roebuck, The Outbreak of the Peloponnesian War, p. 278.
  23. Carl Roebuck, The World of Ancient Times, pp. 278–279.
  24. Donald Kagan, The Outbreak of the Peloponnesian War, pp.252.
  25. 25.0 25.1 25.2 Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) p. 287.
  26. 26.0 26.1 26.2 Donald Kagan, The Peace of Nicias and the Sicilian Expedition Cornell University Press: New York, 1981) p. 148.
  27. Thucydides, The Peloponnesian War: Book 5 (Penguin Books: New York, 1980) pp. 400–408.
  28. Carl Roebuck, The World of Ancient Times p. 288.
  29. Donald Kagan, The Peace of Nicias and the Sicilian Expedition, p. 171.
  30. Donald Kagan, The Peace of Nicias and the Sicialian Expedition, p. 169.
  31. Donald Kagan,The Peace of Nicias and the Sicilian Expedition, pp. 193–194.
  32. Carl Roebuck, The world of Ancient Times, pp. 288–289.
  33. Donald Kagan, The Peace of Nicias and the Sicilian Expedition, pp. 207–209.
  34. Carl Roebuck, The World of Ancient Times, p. 289.
  35. Donald Kagan, The Fall of the Athenian Empire (Cornell University Press: New York, 1987) p. 385.
  36. 36.0 36.1 36.2 Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 27.
  37. Carl Roebuck, The World of Ancient Times, p. 305.
  38. Carl Roebuck, The World of Ancient Times, pp. 319–320.
  39. Plutarch, The Age of Alexander, p. 28.
  40. Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) p. 305.
  41. 41.0 41.1 Carl Roebuck, The World of Ancient Times, p. 306.
  42. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, pp. 33–38.
  43. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 39.
  44. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 45.
  45. 45.0 45.1 Carl Roebuck, The World of Ancient Times, p. 307.
  46. Carl Roebuck, The World of Ancient Times, pp. 307–308.
  47. 47.0 47.1 47.2 Carl Roebuck, The World of Ancient Times, p. 308.
  48. 48.0 48.1 48.2 Carl Roebuck, The World of Ancient Times, p. 311.
  49. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 81.
  50. 50.0 50.1 Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 82.
  51. Carl Roebuck, The World of Ancient Times, pp. 308–309.
  52. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 83.
  53. Carl Roebuck, The World of Ancient Times, p. 309.
  54. 54.0 54.1 54.2 Carl Roebuck, The World of Ancient Times, p. 310.
  55. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 97.
  56. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 99.
  57. Carl Roebuck, The World of Ancient Times (Charles Scribner's Sons: New York, 1966) p. 317.
  58. 58.0 58.1 Carl Roebuck, The World of Ancient Times, p. 317.
  59. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 198.
  60. Plutarch, The Age of Alexander: Nine Greek Lives, p. 231.
  61. Carl Roebuck, The World of Ancient Times, p. 319.
  62. Harold Lamb, Alexander of Macedon, p. 65.
  63. Harold Lamb, Alexander of Macedon (Pinnacle Books: New York, 1946) p. 9.
  64. Harold Lamb, Alexander of Macedon, p. 30.
  65. Harold Lamb, Alexander of Macedon, p. 55.
  66. Harold Lamb, Alexander of Macedon, p. 83.
  67. Harold Lamb, Alexander of Macedon, p. 82.
  68. Harold Lamb, Alexander of Macedon, p. 86.
  69. Arrian, The Campaigns of Alexander (Penguin books: New York, 1979) pp. 41–42.
  70. Harold Lamb, Alexander of Macedon, p. 96.
  71. Arrian, The Campaigns of Alexander, p. 64.
  72. Arrian, The Campaigns of Alexander, p. 65.
  73. Carl Roebuck, The World of Ancient Times, p. 349.
  74. Arrian, The Campaigns of Alexander, p. 395.
  75. Carl Roebuck, The World of Ancient Times, p. 362.
  76. Will Durant, The Life of Greece (The Story of Civilization, Part II) (New York: Simon & Schuster) 1939: Introduction, pp. vii and viii.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரம்பரிய_கிரேக்கம்&oldid=3905140" இலிருந்து மீள்விக்கப்பட்டது