ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்

அரச சமூகத்தின் மதிப்புறு உறுப்பினர்
பிரித்தானிய கருவூல வேந்தர்
பதவியில்
13 நவம்பர் 1947 – 19 அக்டோபர் 1950
பிரதமர்கிளெமென்ட் அட்லி
முன்னையவர்ஹியூ டால்டன்
பின்னவர்ஹியூ கையிட்ஸ்கெல்
பிரித்தானிய பொருளாதாரத்துறை அமைச்சர்
பதவியில்
29 செப்டம்பர் 1947 – 13 நவம்பர் 1947
பிரதமர்கிளெமென்ட் அட்லி
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்பதவி நீக்கப்பட்டது (சோதனை பதவி)
வணிக வாரியத் தலைவர்
பதவியில்
27 சூலை 1945 – 29 செப்டம்பர் 1947
பிரதமர்கிளெமென்ட் அட்லி
முன்னையவர்ஓலிவர் லைடெல்டன்
பின்னவர்எரால்ட் வில்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-04-24)24 ஏப்ரல் 1889
லண்டன், இங்கிலாந்து
இறப்பு21 ஏப்ரல் 1952(1952-04-21) (அகவை 62)
சுவிட்சர்லாந்து
அரசியல் கட்சிதொழிற் கட்சி
துணைவர்இசோபெல் கிரிப்சு

சர் ரிச்சர்ட் இசுடாஃபோர்டு கிரிப்சு (ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், இசுடாஃவோர்டு கிரிப்சு, Sir Richard Stafford Cripps, 24 ஏப்ரல் 1889 – 21 ஏப்ரல் 1952) இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த ஓர் பிரித்தானியத் தொழிற் கட்சியின் அரசியல்வாதி. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் போர்க்காலக் கூட்டணி அரசில் பல பதவிகளை வகித்தவர். சோவியத் ஒன்றியத்திற்கான தூதராகவும் வானூர்தி தயாரிப்புத்துறை அமைச்சராகவும் இந்தக் காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார். போருக்குப் பின்னர் அட்லி தலைமையில் அமைந்த தொழிற் கட்சி அரசில் முதலில் வணிக வாரியத் தலைவராகவும் 1947-50களில் பிரித்தானிய நிதி அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். நிதி அமைச்சராக பிரித்தானியாவின் போருக்குப் பின்பான பொருளாதார வளமைக்கு அடிக்கல் நாட்டியதாகக் கருதப்படுகிறார்.[1]

இரண்டாம் உலகப்போர்[தொகு]

இரண்டாம் உலகப்போரின்போது கிரிப்சும் மகாத்மா காந்தியும் சந்திப்பு

1940இல் வின்ஸ்டன் சர்ச்சில் போர்க்கால கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது கிரிப்சை, அவரது மார்க்சிய சார்பினால், உருசியாவிற்கு பிரித்தானியத் தூதராக அனுப்பினார். செருமனியுடன் இணைந்திருந்த ஜோசப் ஸ்டாலின் மனதை மாற்றுவார் என நம்பினார். 1941இல் செருமனி தாக்கியபோது சோவியத் ஒன்றியத்தை நேச நாடுகள் பக்கம் இழுப்பதில் கிரிப்ஸ் பெரும் பங்காற்றினார். இதனால் 1942இல் பிரித்தானியாவிற்குத் திரும்பிய கிரிப்ஸ் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றார். இந்த நன்மதிப்புடன் இந்தியாவிற்கு, போர்க்காலத்தில் இந்தியத் தேசியத் தலைவர்களின் ஒத்துழைப்பைப் பெற, சர்ச்சில் கிரிப்சை தூது அனுப்பினார். இதன் பின்னர் போர்க்கால அமைச்சரவையிலிருந்து விலகி வானூர்தி தயாரிப்பு அமைச்சராகப் பணியாற்றினார். 1945இல் மீண்டும் தொழிற்கட்சியில் இணைந்தார்.

போருக்குப் பின்னர்[தொகு]

போருக்குப் பின்னர் பொறுப்பேற்ற தொழிற்கட்சியின் பிரதமர் கிளெமென்ட் அட்லி கிரிப்சை வணிக வாரியத்தின் தலைவராக பணியமர்த்தினார். முந்தைய வாக்குறுதிகளுக்கிணங்க அட்லி 1946ஆம் ஆண்டு கிரிப்சை அமைச்சரவை தூதுக்குழுவின் உறுப்பினராக இந்தியாவிற்கு அனுப்பினார். இக்குழுவில் கிரிப்சைத் தவிர இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலர் பெத்விக் லாரன்சு பிரபு, அடிமிரால்டியின் முதல் பிரபு (கடற்படை முதன்மைத் தளபதி) ஏ. வி. அலெக்சாந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களால் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த இந்தியா விடுதலை கருத்துரு இந்திய தேசியக் காங்கிரசு மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது இந்தியப் பிரிவினைக்கு வழிகோலிட்டது.

1947இல் ஏற்பட்ட அரசியல் மற்றும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க புதியதாக உருவாக்கப்பட்ட பொருளியல் விவகார அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆறு வாரங்களிலேயே பிரித்தானியக் கருவூல வேந்தர் ஹியூ டால்டன் பதவி விலக இவரது அமைச்சை இணைத்து கிரிப்ஸ் பிரித்தானியக் கருவூல வேந்தர் ஆனார். இந்தப் பொறுப்பில் வரிகளை உயர்த்தி உள்நாட்டு நுகர்வைக் கட்டுப்படுத்தி ஏற்றுமதிகளை வளரச் செய்தார். இதனால் பிரித்தானிச் செலாவணி ஸ்டெர்லிங்கின் மதிப்புயர நிதி நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார். நிலக்கரி மற்றும் எஃகு தொழிலகங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தார்.[2] தமது கடுமையான நடவடிக்கைகளால் புகழ் இழந்தாலும் அவரது முனைப்பும் நேர்மையும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1945க்குப் பின்பான தொழிற்கட்சி, எரிக் ஷா (ஆங்கிலத்தில்)
  2. Cooke, Colin. 1957. The Life of Richard Stafford Cripps

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stafford Cripps
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாஃபோர்ட்_கிரிப்ஸ்&oldid=3858764" இலிருந்து மீள்விக்கப்பட்டது