சரோஜ் நாராயணசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரோஜ் நாராயணசுவாமி
Saroj Narayanaswamy
பிறப்பு(1935-06-10)10 சூன் 1935
மும்பை, இந்தியா
இறப்பு13 ஆகத்து 2022(2022-08-13) (அகவை 87)
மும்பை, இந்தியா
பணிவானொலி ஒலிபரப்பாளர்

சரோஜ் நாராயணசுவாமி (Saroj Narayanaswamy; 10 சூன் 1935 – 13 ஆகத்து 2022) இந்திய வானொலி ஒலிபரப்பாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.[1] அனைத்திந்திய வானொலியின் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் ஆவார்.[2] 1963 இல் வானொலி சேவையில் இணைந்த இவர் 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றினார்.[2] 2008 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழ்நாடு, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட சரோஜ் நாராயணசுவாமி மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.[2] ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தில்லியில் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய நாராயணசுவாமி என்பாரைத் திருமணம் புரிந்து தில்லி சென்று யூகோ வங்கியில் பணியாற்றினார்.[2] இவரது அலுவலகம் இந்திய வானொலி மையத்திற்கு அருகில் அமைந்திருந்ததால், இவரது ஆர்வம் வானொலி மீது அதிகரித்தது. 1963-ஆம் ஆண்டில் முறைப்படி தேர்வு எழுதி ஆகாசவாணியின் தமிழ் செய்தி வாசிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சேர்ந்தார்.[1][2] நாள்தோறும் அதிகாலை 05:30 மணிக்கு ஆகாசவாணி செய்திகள், வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற குரலுடன் இவரது செய்திகள் ஒலிபரப்பப்படும். தமிழ்த் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, பி. வி. நரசிம்ம ராவ் உள்பட்ட பிரபலங்களிடம் நேர்காணல் செய்து ஒலிபரப்பினார். அனைத்திந்திய வானொலியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், என்டிடிவி செய்தி நிறுவனத்தில் பணியாற்றினார். ம. கோ. இரா தமிழக முதல்வராக இருந்தபோது தில்லி திட்டக்குழுக் கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகளை சரோஜ் நாராயணசுவாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.[2]

விருதுகள்[தொகு]

  • கலைமாமணி விருது (2008)
  • 2013 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியின் தமிழ் செய்திப்பிரிவின் பவழ விழாக் கொண்டாட்டங்கள் தில்லியில் நடைபெற்றபோது சரோஜ் நாராயணசுவாமி நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[1][2]

எழுதிய நூல்கள்[தொகு]

  • அறிவியல் (வினாக்களும் விடைகளும்), 2015

மறைவு[தொகு]

பணி ஓய்வுக்குப் பிறகு மும்பையில் வசித்து வந்த சரோஜ் நாராயணசுவாமி 2022 ஆகத்து 13 அன்று தனது 87-ஆவது அகவையில் மும்பையில் காலமானார்.[3] இவரது கணவர் நாராயணசுவாமி 75-ஆவது அகவையில் காலமாகி விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜ்_நாராயணசுவாமி&oldid=3774964" இலிருந்து மீள்விக்கப்பட்டது