பிரிட்டோனியர்
பிரிட்டானியர் (Prytaneis, πρυτάνεις; ஒருமை.: πρύτανις பிரிடானிஸ் ) என்பவர்கள் பண்டைய ஏதென்சின் பூலி என்ற அவையின் நிர்வாகிகள்.
தோற்றம் மற்றும் அமைப்பு[தொகு]
இந்தச் சொல்லானது அநேகமாக கிரேக்கத்திற்கும் முந்தைய காலத்தில் பிறந்த சொல்லாகும். [1]
கி.மு. 508/7 இல் கிளீசுத்தனீசு ஏதெனியன் அரசாங்கத்தை மறுசீரமைத்தபோது, அவர் பழைய சோலோன் பூலி அல்லது பேரவை 400 அய் மாற்றி புதிய 500 பூலியைக் கொண்டு வந்தார். பழைய பூலியில் ஏதென்சின் மூதாதைகளான நான்கு பழங்குடியின இனத்தின் ஒவ்வொன்றிலிருந்தும் 100 உறுப்பினர்கள் என 400 பேர் இருந்தனர். கிளீசுத்தனீசு ஏதெனிய குடிமக்களை புதியதாக பத்து பழங்குடியினராக பிரித்து, அவர்கள் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 50 உறுப்பினர்கள் என 500 பேரைக் கொண்டதாக பூலியை உருவாக்கினார். இந்த 500 பேரும் அடிக்கடி ஒன்றுகூடி அரசாங்க நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால், ஒரு ஆண்டை முப்பத்தாறு நாட்கள் கொண்ட பத்து மாதங்களாக பிரித்தார். இந்த ஒவ்வொரு மாதத்திலும் பத்து பழங்குடியினரின் எந்த பிரிவிலிருந்து ஐம்பது பேர் நிர்வாகப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று சீட்டுப்போட்டுப் அதன்படி முடிவு செய்யப்பட்டது. இப்படி நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தும் ஐம்பது பேரும் பிரிட்டோனியர்கள் என்றும் அவர்களின் பதவிக் காலம் பிரிடானி (πρυτανία) என்றும் அழைக்கப்பட்டது.
பணிகள்[தொகு]
பிரிட்டோனியர்களின் அவை ஒவ்வொரு நாளும் கூடியது. அவையினர் ஒன்று கூடி அன்றைய கூட்டத்தின் தலைவராகவும், அன்று பூலி அவை கூடுவதாக இருந்தால் அதன் தலைவராகவும் தங்களில் ஒருவரை சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பர். பூலி அவை கூட்டுவதும், அது கவனிக்கவேண்டிய விசயங்களை தயாரிப்பது போன்றவை இவர்களின் பொறுப்பாகும். ஒவ்வொரு மாதமும் பொறுப்பு வகிக்கும் பிரிட்டோனியர்கள் தாங்கள் பதவியில் இருக்கும் ஒரு மாதமும் பூலி அவைக்கு அடுத்ததாக இவர்களுக்காக கட்டப்பட்ட வட்ட வடிவ கட்டிடமான தோலோசில் அரசாங்க செலவிலேயே சாப்பிட்டனர்.
ஒவ்வொரு நாளும், 24-மணி நேர காலத்திற்கு, 50 பிரிடானியர்களில் இருந்து ஒரு உறுப்பினர், ஃபோர்மேன் (ἐπιστάτης எபிஸ்டேட்ஸ், "கேர்டேக்கர்") எனப்படும் பொறுப்பாளராக பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டார். அவர் அரசு முத்திரை, அரசு கருவூலங்கள் மற்றும் காப்பகங்களின் திறவுகோல்களை நிர்வகித்தார். அவர் அப்போது ஏதென்சின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார். எந்த ஒரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த பிரிட்டோனியர் பதவியில் இருப்பது மிக அரிதானது. ஏனெனில் தகுதியும், உரிமையும் உள்ள அனைத்து குடிமக்களும் இந்த பூலி அவையில் உறுப்பினராக சுழற்சி முறையில் இருந்து முடித்த பின்னர்தான் ஏற்கனவே இப்பதவியில் இருந்தவர் மற்றொருமுறை தேர்தெடுக்கப்பட வாய்ப்பு உண்டாகும்.
பூலி அவையில் உறுப்பினராவதற்கு முன்பு அதற்கு அவர் தகுதியானவர்தானா என்று பரிசீலிக்கப்பட்டதுபோல, அவரின் பதவிக் காலம் முடிந்த பிறகு அவர் அப்பதவியை ஒழுங்காக வகித்தாரா என்றதும் ஆய்வு செய்யப்பட்டது. இவர்கள் உறுப்பினராக இருந்த ஒரு ஆண்டு காலத்திற்கு இராணுவ சேவையில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு திராக்மா விதம் ஊதியம் வழங்கப்பட்டது.
பூலி அவைக் கூட்டங்களின் போது, தற்போதைய போர்மேன் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். நான்காம் நூற்றாண்டில், தலைமை தாங்குவம் நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.
மற்ற நகரங்களில்[தொகு]
ரோட்ஸ், அலெக்சாந்திரியா மற்றும் சின்ன ஆசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள நகரங்கள் உட்பட பிற பண்டைய கிரேக்க நகரங்களில் பிரிட்டோனியர் என்பது ஒரு பட்டமாக பயன்படுத்தப்பட்டது. இந்த பட்டத்தைப் பயன்படுத்தும் அலுவலகங்கள் பொதுவாக சில வகையான அவைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர். மிலேட்டஸ் நகரத்தில், பிரிட்டோனியர் ஒரு சர்வாதிகாரியாக ஆகக்கூடிய அளவுக்கு சக்தியைக் கொண்டிருந்தார் (அரிஸ்டாட்டில் அரசியல் V.5, 1305a17 ).
குறிப்புகள்[தொகு]
- ↑ Robert Beekes (2009). Etymological Dictionary of Greek. Brill Publishers. பக். 1243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004174184. https://books.google.com/books?id=wffLMgEACAAJ.