பாஸ்கரவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்கரவர்மன்
வர்மன் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் (7ஆம் நூற்றாண்டு)

பாஸ்கரவர்மன் ( Bhaskaravarman ) (600-650), வர்மன் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் இடைக்கால காமரூப மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவராக இருக்கலாம். தற்போது, இவரது வழித்தோன்றல்கள் அசாம் மாநிலத்தின் கலிதா சமூகத்தில் காணப்படுகின்றனர். இவர் மிதிலாவிலிருந்து வந்து கிராத் படைகளை தோற்கடித்து அப்போதைய பிரக்ஜோதிஷ்பூரை வென்ற நரக மன்னனின் சத்ரிய குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் ஆட்சியின் போது கௌடா மன்னரால் கைப்பற்றப்பட்ட பின்னர், இவர் வர்மனின் ஆட்சியை மீண்டும் நிறுவ முடிந்தது. இவர் கௌடா மற்றும் கிழக்கு மால்வாவின் கூட்டணிக்கு எதிராக தானேஸ்வர் ஹர்ஷவர்தனருடன் அரசியல் கூட்டணியை உருவாக்கினார். மன்னரைப் பற்றியும் இவரது இராச்சியத்தின் கணக்குகளையும் எழுதிச் சென்ற தாங் வம்சத்தின் தூதர் சுவான்சாங் மற்றும் லி யி-பியாவோ ஆகியோர் இவரைச் சந்தித்தனர்.

இவரது சகோதரர் சுப்ரதிஷ்டிதவர்மன் இறந்த பிறகு பாஸ்கரவர்மன் ஆட்சிக்கு வந்தார். புராண நரகாசுரன், பகாதத்தன் மற்றும் வஜ்ரதத்தன் ஆகியோரின் வம்சாவளியைக் கூறும் முதல் காமரூப அரசன் இவரே. [1] இவரது மரணத்திற்குப் பிறகு, மிலேச்ச வம்சத்தை நிறுவிய சாலாஸ்தம்பன், காமரூப இராச்சியத்தில் அதிகாரத்தைப் பெற்றார்.

இவர் துபி மற்றும் நிதான்பூர் செப்புத் தகடு மானியங்களை வழங்கினார். இவரது மூதாதையரான பூதிவர்மனுக்குப் பிறகு மீண்டும் வழங்கப்பட்டது. மேலும் நாளந்தாவில் கிடைத்த களிமண் முத்திரையாகும்.

பின்னணி[தொகு]

சுஸ்திதவர்மன் மகாசேனகுப்தனால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, காமரூபத்தின் யானைப்படையை கட்டியெழுப்பிய அவரது மகன் சுப்ரதிஷ்டிதவர்மன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் வாரிசு இல்லாமல் அகால மரணமடைந்தார். இதனால் இளைய மகன் பாஸ்கரவர்மன் காமரூபத்தின் ஆட்சிக்கு வந்தார். [2]  இவர் அரியணை ஏறிய பிறகும் சுமார் 600 பொ.ச.வில் பாஸ்கரவர்மன் 'குமாரன்' (இளவரசன்) என்று அழைக்கப்பட்டார். ஏனெனில் இவர் தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். [3] 

போட்டியாளர்கள்[தொகு]

மகாசேனகுப்தன், சசாங்கனுடன் கூட்டணி வைத்து, சுஷ்டிதவர்மனை தோற்கடித்து, வடக்கு மற்றும் மத்திய வங்காளத்தை கைப்பற்றினார். மகாசேனகுப்தரின் மரணத்திற்குப் பிறகு சசாங்கன் இந்தப் பகுதியின் ஆட்சியாளரானார். [4] அரியணை ஏறியவுடன் பாஸ்கரவர்மன் வட இந்தியாவில் மத்திய மற்றும் வடக்கு வங்காளத்தில் சசாங்கனின் கீழும் மற்றொன்று மத்திய இந்தியாவின் ஹர்ஷவர்தனரின் தந்தையான பிரபாகரவர்தனின் கீழும் இரண்டு வலுவான போட்டி சக்திகள் வளர்வதைக் கண்டார்.[3] 

பிரபாகரவர்தனைத் தொடர்ந்து தானேஸ்வரில் மன்னராகப் பதவியேற்ற இராஜ்யவர்தனனை சசாங்கன் கொன்றபோது, பாஸ்கரவர்மன் ஒரு கூட்டணியை உருவாக்க ஹங்சவேகன் என்ற தூதரை அனுப்பினார். பாணபட்டர் மற்றும் சுவான்சாங் ஆகிய இருவராலும் இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. [5] 

ஹர்ஷருடன் கூட்டணி[தொகு]

பாணபட்டரின் ஹர்சசரிதம் ஹர்ஷரை ஹங்சவேகன் சந்தித்ததைப் பற்றிய விரிவான விவரத்தை அளிக்கிறது. அவருக்கு பரிசுகளையும் பாராட்டுக்களையும் வழங்கியதன் மூலம், அவர் இரண்டு மன்னர்களுக்கு இடையே தற்காப்பு கூட்டணியை ஏற்படுத்த முடிந்தது என்று மேலும் கூறுகிறது.

சசாஷங்கனின் முந்தைய தலைநகரமான கர்ணசுவர்ணத்திலிருந்து வழங்கப்பட்ட நிதான்பூர் மானியத்தில் பாஸ்கரவர்மனின் வெற்றிகளைப் பற்றிய தகவல்கள் கணப்படுகிறது. [6]

சீனர்களுடன் கூட்டணி[தொகு]

கிபி 648 க்குப் பிறகு, ஹர்ஷவர்தனின் அரசவையில் சீனப் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்க சீனர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தனர். அமைச்சர் தோற்கடிக்கப்பட்டார். மோதலில், பாஸ்கரவர்மன் சீனர்களுக்கு கால்நடைகள், குதிரைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்க உதவினார். [7]

சுவான்சாங்கின் கணக்கு[தொகு]

சீனப் பயணியான சுவான்சாங், பாஸ்கரவர்மனின் அழைப்பின் பேரில் இவரது அரசவையில் இவரைச் சந்தித்தார். புத்தமதத்தை தழுவாத அரசர் புத்தமதத்தை ஆதரித்தார். [8] பாஸ்கரவர்மனின் வேண்டுகோளின் பேரில் சுவான்சாங் ஒரு தாவோயியம் என்ற சீன சமய தத்துவக் கோட்பாடான தாடோஜிங்கை சமசுகிருதத்தில் மொழிபெயர்த்தார் [9]

பாஸ்கரவர்மனின் காமரூபம்[தொகு]

சுவான்சாங் தனது பயணக் கட்டுரையில், காமரூபத்தில் நுழைவதற்கு முன்பு கரடோயா என்ற பெரிய ஆற்றைக் கடந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு எல்லையானது சீன எல்லைக்கு அருகில் மலைகளின் வரிசையாக இருந்தது. காமரூபம் கிட்டத்தட்ட 1700 மைல்கள் சுற்றளவு கொண்டது என்றும் அவர் கூறுகிறார். தட்பவெப்ப நிலை சீராக இருந்தது. மக்கள் உயரம் குறைவாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருந்ததாகவும் பாஸ்கர் வர்மன் இந்து அரசராக இருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார். மக்கள் நேர்மையாக இருந்தனர். அவர்களின் பேச்சு மத்திய இந்தியாவின் பேச்சிலிருந்து சற்று மாறுபட்டது. அவர்கள் வன்முறை சுபாவம் கொண்டவர்கள் ஆனால் விடாமுயற்சியுள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் தேவர்களை வழிபட்டனர். புத்த மதத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. தேவ-கோயில்கள் எண்ணிக்கையில் சில நூற்றுக்கணக்கானவை. மேலும், பல்வேறு அமைப்புகள் சில எண்ணற்ற ஆதரவாளர்களைக் கொண்டிருந்தன. நாட்டில் உள்ள சில பௌத்தர்கள் தங்கள் பக்திச் செயல்களை இரகசியமாகச் செய்தனர். நாட்டின் கிழக்கே சீனாவின் எல்லை வரையிலான மலைகளின் தொடர்ச்சியை யாத்ரீகர் மக்களிடம் இருந்து அறிந்து கொண்டார். இந்த மலைகளில் வசிப்பவர்கள் "லாவோவின் மனிதனை" ஒத்தவர்கள். நாட்டின் தென்கிழக்கில் யானைகள் ஏராளமாக இருந்தன என்று சுவான்சாங் குறிப்பிடுகிறார். [10]

விளக்கம்[தொகு]

காமரூபம் தாழ்நிலமாகவும் ஈரமாகவும் இருந்தது என்றும் பயிர்கள் சீராக இருந்ததாகவும் சுவான்சாங் குறிப்பிடுகிறார். கொக்கோ கொட்டைகள் மற்றும் பலாப்பழங்கள் ஏராளமாக வளர்ந்து மக்களால் விரும்பி உண்ணப்பட்டது. வழங்கப்பட்ட நிலத்தைப் பற்றிய விளக்கம் இன்றைய குவகாத்தியைச் சுற்றி உள்ளது.

'சி-யு-கியில்' கொடுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, காமரூபத்தின் சுற்றளவு சுமார் 1,700 மைல்கள் (2,700 கிமீ) என இருக்கலாம். எட்வர்ட் ஆல்பர்ட் கெய்ட் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த சுற்றளவு பிரம்மபுத்திரா ஆற்றுப் பள்ளத்தாக்கு, சுர்மா பள்ளத்தாக்கு, வடக்கு வங்காளத்தின் சில பகுதிகள் மற்றும் மைமன்சிங்கின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மதம்[தொகு]

பாஸ்கரவர்மன் சிவ வழிபாட்டாளராக இருந்தார். இருப்பினும் இவர் கற்றறிந்த பௌத்த குருமார்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். மேலும் இவர் பௌத்தத்தின் மீது முற்றிலும் நாட்டம் கொண்டிருந்தார். பொது மக்கள் பல கோவில்களில் வழிபடப்படும் தெய்வங்களை வழிபட்டனர். மேலும் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் இரகசியமாக பக்தியை கடைபிடித்தனர்.

கலாச்சாரம்[தொகு]

சுவான்சாங்கின் கூற்றுப்படி, காமரூபத்தின் மக்கள் நேர்மையானவர்கள், வன்முறையான மனநிலையுடன் இருந்தாலும், விடாமுயற்சியுள்ளவர்களாக இருந்தனர். மக்கள் உயரம் குறைவாகவும் மஞ்சள் நிறமாகவும் இருந்தனர். அவர்களின் பேச்சு இந்தியாவின் நடுப்பகுதியிலிருந்து வேறுபட்டது. கர்ணசுவர்ணத்திலிருந்து வழங்கப்பட்ட நிதான்பூர் மானியத்தில் உள்ளூர் இலக்கிய வடிவங்கள் பற்றியோ ஆட்சியாளர்கள் பற்றியோ அடுத்தடுத்த காமரூப கல்வெட்டுகளில் காணப்படவில்லை.

கலை மற்றும் தொழில்[தொகு]

பாஸ்கரவர்மனிடமிருந்து ஹர்ஷவர்தனனுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் பெரும்பாலும் நிலத்தின் பொருட்கள் இருந்தன - விலைமதிப்பற்ற கற்கள் பதித்த அரச குடை, சாயம் பூசப்பட்ட பாய்கள், அகர்-சாரம், பட்டுப் பைகளில் கஸ்தூரி, மண்பாணைகளில் திரவ வெல்லப்பாகுகள் , பாத்திரங்கள், ஓவியங்கள், கரும்பினால் செய்யப்பட்ட மற்றும் தங்கத்தால் மூடப்பட்ட கூண்டில் ஒரு ஜோடி சிவப்புத்தாரா வாத்துகள், மற்றும் தொழில்துறையைக் குறிக்கும் கணிசமான அளவு பட்டு-துணிகள் ஆகியவை அடிப்படையானவை.

நிதான்பூர் கல்வெட்டு[தொகு]

பாஸ்கரவர்மனின் நிதான்பூர் கல்வெட்டு

இவரது நிதான்பூர் செப்புத் தகடு கல்வெட்டில், பாஸ்கரவர்மன் தனது வருவாயை நியாயமான முறையில் பயன்படுத்தி, கலி யுகத்தின் குவிந்த இருளை அகற்றுவதன் மூலம் ஆரிய மதத்தின் ஒளியை வெளிப்படுத்தியதாகக் கூறுகிறது. தன் கைகளின் வலிமையால் தனது நிலப்பிரபுக்களின் முழு வலிமையையும் சமன் செய்தவர், தன்னுடைய பரம்பரைப் பிரஜைகளின் இன்பத்திற்குப் பல வழிகளைக் காட்டியவர், தன்னுடைய விசுவாசமான பக்தியினாலும், உறுதியினாலும், அடக்கத்தினாலும், நேசத்தினாலும், போரில் இவரால் தோற்கடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மன்னர்களால் பலவிதமாக இயற்றப்பட்ட புகழின் மலர்ந்த வார்த்தைகளால் செய்யப்பட்ட அற்புதமான புகழின் அற்புதமான அலங்காரத்துடன் இருந்தார். சீவியைப் போலவே, மற்றவர்களின் நலனுக்காக பரிசுகளை வழங்குவதில் இவரது நற்பண்புகள் பயன்படுத்தப்பட்டன; கடவுள்களின் (பிரஹஸ்பதி) இரண்டாவது ஆசானாக இருந்த இவரது சக்திகள், தகுந்த தருணங்களில் தோன்றும் அரசியலின் வழிமுறைகளை வகுத்து அவற்றைப் பயன்படுத்துவதில் இவரது திறமையின் காரணமாக மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டது; கற்றல், வீரம், பொறுமை, பராக்கிரமம் மற்றும் நல்ல செயல்களால் இவரது சொந்த நடத்தை அலங்கரிக்கப்பட்டது." [11]

பாஸ்கரவர்மனின் நாளந்தா முத்திரை (கி.பி 643 தேதி)

ஹர்ஷன் மற்றும் சுவான்சாங்குடன் பாஸ்கரவர்மனின் நெருங்கிய தொடர்பு மகதாவின் புகழ்பெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது. ஏனெனில் ஹர்ஷரின் இரண்டு துண்டு துண்டான முத்திரைகளில் இவரது முத்திரை நாலந்தாவின் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1917-18 ஆம் ஆண்டில் நாலந்தாவின் இடிபாடுகளை அகழ்வாராய்ச்சியின் போது டாக்டர் இசுபூனர் இதனைக் கண்டுபிடித்தார். [12]

இறப்பு[தொகு]

பாஸ்கரவர்மன் எப்படி அல்லது எப்போது இறந்தார் என்பது தெரியவில்லை, ஆனால் இவரது ஆட்சி சுமார் 650 இல் முடிவடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

மரபு[தொகு]

அசாமின் நல்பாரியிலுள்ள குமார் பாஸ்கர் வர்மா சமஸ்கிருத மற்றும் பழங்கால ஆய்வுகள் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "The mythical ancestors of (the Varman) line of rulers were Naraka, Bhagadatta and Vajradatta." (Sharma 1978)
  2. Kamarupa Sasanavali. பக். 31. 
  3. 3.0 3.1 Barua 1933.
  4. Banger Jatiya Itihas, Rajanya Kanda. 
  5. Barua 1933, ப. 62.
  6. Epigraphia Indica Vol XII. பக். 78. 
  7. Chatterji, Suniti Kumar (1951). Kirata-jana-krti. பக். 90, 92. https://archive.org/details/in.ernet.dli.2015.32096. 
  8. (Gait 1906)
  9. . December 1998. 
  10. (Gait 1926)
  11. Epigraphia Indica Vol XII. பக். 78. 
  12. J.B.O.R.S Vol VI. பக். 151. 

குறிப்புகள்[தொகு]

  • Acharya, N. N. (1968), Asama Aitihashik Bhuchitravali (Maps of Ancient Assam), Bina Library, Gauhati, Assam
  • Kanak Lal Barua (1933). Early History Of Kamarupa. https://archive.org/details/in.ernet.dli.2015.513799. 
  • Dutta, Anima (2008). Political geography of Pragjyotisa Kamarupa (PhD). Gauhati University. hdl:10603/68309.
  • Gait, E A (1906), A History of Assam, Thacker, Spink and Co., Calcutta
  • Gait, Sir Edward (1926), A History of Assam, Lawyer's Book Stall, Guwahati
  • Ghosh, Suchandra (2012). "Karnasuvarna". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Karnasuvarna. 
  • Kāmarūpa-Kaliṅga-Mithilā:a politico-cultural alignment in Eastern India : history, art, traditions by Chandra Dhar Tripathi, Indian Institute of Advanced Study
  • Sharma, Mukunda Madhava (1978). Inscriptions of Ancient Assam. Gauhati University, Assam. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கரவர்மன்&oldid=3403274" இலிருந்து மீள்விக்கப்பட்டது