சமண அறிவாய்வியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முழுமையான அறிவை விவரிக்கும் பொறிப்புத் தூண்

அடிப்படை அறிவாய்வியல் சிக்கல்கள் பற்றி ஆராய்ந்ததன் மூலமாக சமணம் மெய்யியலின் பகுதியாகிய அறிவாய்வியலுக்கு தனக்கேயுரித்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. சமணர்கள், அறிவு என்பது உயிரின் அடிப்படை எனக் கருதுகின்றனர்.[1] இவ்வறிவு கர்மத் துணிக்கைகளால் மறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிமுறைகளினூடாக ஒரு உயிர் அறிவைப் பெறும்போது அது எதையும் புதிதாக உருவாகவில்லை. மாறாக, அது அறிவை மறைக்கும் கர்மத் துணிக்கைகளைக் கிழித்தெறிகிறது. சமணக் கொள்கையின்படி, விழிப்புணர்வு என்பது சீவனின் (உயிர்) முதன்மைப் பண்பாகும். இவ் விழிப்புணர்வு தரிசன மாகவும் (அகப்பார்வை) ஞானமாகவும் (அறிவு) தன்னை வெளிப்படுத்துகிறது.

மேலோட்டம்[தொகு]

அறிவின் வகைகள்

தத்துவார்த்த சூத்திரம் என்ற சமண நூலின் படி, அறிவு (ஞானம்) ஐந்து வகைப்படும். அவையாவன:[2]-

  1. புலனறிவு
  2. நூலறிவு
  3. புலன் கடந்த உணர்வு (அவதி ஞானம்)
  4. தொலை நுண்ணுணர்வு (மனபர்யாய ஞானம்)
  5. முற்றறிவு (கேவல ஞானம்)

முதலிரு வகை அறிவுகளும் மறைமுக அறிவாகவும், ஏனைய மூன்றும் நேரடி அறிவாகவும் கருதப்படுகின்றன.[3]

புலனறிவு[தொகு]

அனுபவ அகப்பார்வை மற்றும் மனத்தின் மூலமாகப் பெறப்படும் அறிவு மதி ஞானம் (புலனறிவு) என அழைக்கப்படுகிறது. சமண அறிவாய்வியலின் படி, சீவன் (உயிர்) பருப்பொருள்சார் புலனுறுப்புக்கள் வழியாக சூழல் தொடர்பான புலன் சார்ந்த அகப்பார்வையைப் பெறுகிறது.[4] இது நான்கு படிமுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:[5]

  • அவக்கிரகம் (முதல் அவதானிப்பு)
  • இகம் (ஆவல்)
  • அபயம் (உறுதிப்படுத்தல்)
  • தரணம் (கருத்து)

நூலறிவு[தொகு]

வாய்வழி மற்றும் எழுத்துவழி வாக்கியங்களைப் புரிந்துகொள்வதன் மூலமாகப் பெறப்படும் அறிவு சுருத ஞானம் என அழைக்கப்படுகிறது.

நூல்கள் அறிவு அல்ல. ஏனெனில், அவை எதையும் உள்ளடக்கியிருப்பதில்லை. ஆகவே, அறிவும் நூல்களும் வெவ்வேறானவை. இது முற்றும் அறிந்த தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சமண ஆகமங்கள்[தொகு]

சுருத ஞானம் அல்லது முழுமையான நூலறிவை (சமண ஆகமங்கள்) விவரிக்கும் பொறிப்புத் தூண்.

சமணர்களின் படி, சுருத ஞானத்தின் அறிவு என்பது, அங்கங்களில் (உறுப்புக்கள் அல்லது சமணப் புனித நூல்கள்) காணப்படுகின்ற அல்லது அவற்றிலிருந்து வேறான விடயங்களாயிருக்கலாம்.[7]

புலன் கடந்த உணர்வு[தொகு]

புலன் கடந்த உணர்வு என்பது சமண நூல்களில் அவதி ஞானம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வார்த்தசித்தி எனும் சமண நூலின் படி, "இவ்வகையான அறிவு அவதி என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது கீழ்நோக்கிய வீச்சில் பருப்பொருட்களை வரிசைப்படுத்துகிறது அல்லது பொருட்கள் பற்றி ஒரு எல்லைக்குள் மாத்திரம் அறிந்துள்ளது".[8] நரகம் மற்றும் சுவர்க்கம் (தேவர்) ஆகியவற்றிலுள்ள உயிர்வாழிகள் பிறப்பிலிருந்தே புலன் கடந்த உணர்வைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமண நூல்களில் ஆறு வகையான புலன் கடந்த உணர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.[9]

தொலை நுண்ணுணர்வு[தொகு]

சமணத்தின் படி, உயிரால் ஏனையோரின் எண்ணங்களை நேரடியாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான அறிவு, 'மனபர்யாய ஞானம்' எனும் வகைக்குள் அடங்குகிறது.

முற்றறிவு[தொகு]

கர்மத் துணிக்கைகளைக் கிழித்தெறிவதன் மூலம் உயிர் முழுமை பெற்ற அறிவைப் பெறுகிறது. இவ்வறிவைப் பெறுவதன் மூலம், அறிவும் உயிரும் ஒன்றாகின்றன. இவ்வறிவு கேவல ஞானம் எனப்படும்.

உயிரின் இயல்பு[தொகு]

அறிவு என்பது உயிரின் இயல்பு எனச் சமணர்கள் கருதுகின்றனர். சம்பத் ராய் செயின் அவர்களின் கூற்றுப்படி:

அறிவு என்பது உயிரின் இயல்பு. அது உயிரின் இயல்பு இல்லையெனில், அது உயிரற்றதன் இயல்பாகவோ அல்லது எதுவுமே இல்லாததாகவோ இருக்கும். எனினும், முதல் சந்தர்ப்பத்தில் உணர்வற்றது உணர்வுள்ளதாகும். மேலும், உயிர் தன்னையோ அல்லது பிறரையோ அறியவியலாததாயிருக்கும். இதனால் உயிர் உணர்வொழிந்ததாயிருக்கும். பின்னைய சந்தர்ப்பத்தில், அறிவு என்பதோ அல்லது உணர்வுள்ளவையோ இருக்க மாட்டாது. எனினும், மகிழ்ச்சிகரமாக அதற்கான வாய்ப்பு இல்லை.[10]

அநேகாந்தவாதம்[தொகு]

அநேகாந்தவாதம் என்பது முன்னோக்குக் கொள்கைகள் மற்றும் நோக்குநிலைகளின் பன்முகத்தன்மை ஆகியவற்றைக் குறித்து நிற்கிறது. இதன் மூலம், உண்மையும் நனவு நிலையும் வெவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து வெவ்வேறு விதமாக அணுகப்படும் எனவும், ஒரு தனித்த நோக்கிநிலை முழு உண்மையைப் பிரதிபலிப்பதில்லை எனவும் குறிப்பிடுகிறது.[11]

சமணர்கள் முழு உண்மை பற்றிய வெளிப்படுத்தலுக்கான அனைத்து முயற்சிகளையும், அத்கசநியாயம் ஊடாக மறுதலிக்கின்றனர். இது "குருடர் தடவிய யானை" எனும் உவமையினூடாக விளக்கப்படலாம். பொருட்கள் தமது பண்புகளிலும் இருப்பு நிலைகளிலும் முடிவிலி விதங்களில் காணப்படுவதை உணர்ந்துகொண்டதனூடாக, முடிவுறு மனிதப் புலன்சார் அவதானிப்புகள் மூலம் அனைத்துப் பாங்குகள் மற்றும் வெளிப்பாடுகள் அடங்கலாக முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட முடியாது என இக்கொள்கையை முறைப்படி விளக்கலாம். சமணர்களின் படி, கேவலிகள் (முற்றறிவு பெற்றவை) மாத்திரமே பொருட்களின் அனைத்துப் பாங்குகள் மற்றும் வெளிப்பாடுகளையும் புரிந்து கொள்ளமுடியும். ஏனையோர் பகுதியளவிலான அறிவையே பெற்றுக்கொள்ளமுடியும். இதன் விளைவாக, எந்தவொரு குறிப்பிட்ட மனித அவதானிப்பும் முழு உண்மையைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளமுடியாது.

பல்வேறு நோக்குநிலைகள் பற்றிய கொள்கை (சமக்கிருதம்: நயவாதம்), பொருட்களை (நய) அவதானிக்கும் வழிமுறைகள் முடிவிலியானது எனக் கூறுகிறது.[12] நூல்களில் இக்கொள்கை, சியாத்வாதம் (சியாத் = 'இருக்கலாம்') எனப்படும் நிபந்தனைக் கூற்றுக்களைப் பயன்படுத்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட ஏழு நிபந்தனைக்கூற்றுக்களும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  1. சியாத்-அசுதி: சிலவழிகளில், இது அதுவே;
  2. சியாத்-நாசுதி: சிலவழிகளில், இது அதுவல்ல;
  3. சியாத்-அசுதி-நாசுதி: சிலவழிகளில், இது அதுவும், அதுவல்லதுமாகும்;
  4. சியாத்-அசுதி-அவக்தவ்யா: சிலவழிகளில், இது அதுவும், விவரிக்கப்படமுடியாததுமாகும்;
  5. சியாத்-நாசுதி-அவக்தவ்யா: சிலவழிகளில், இது அதுவல்லாததும், விவரிக்கப்படமுடியாததுமாகும்;
  6. சியாத்-அசுதி-நாசுதி-அவக்தவ்யா: சிலவழிகளில், இது அதுவும், அதுவல்லதும் விவரிக்கப்படமுடியாததுமாகும்;
  7. சியாத்-அவக்தவ்யா: சில வழிகளில், இது விவரிக்கப்படமுடியாதது.[13]

குறிப்புகள்[தொகு]

  1. Jaini 1927, ப. 11.
  2. Jain 2011, ப. 5.
  3. Jain 2011, ப. 6.
  4. Jain, Vijay K. (2013). Ācārya Nemichandra's Dravyasaṃgraha. Vikalp Printers. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788190363952. https://books.google.com/books?id=g9CJ3jZpcqYC. "Non-copyright" 
  5. Prasad 2006, ப. 60–61.
  6. Jain 2012, ப. x.
  7. Jaini 1927, ப. 12.
  8. S. A. Jain 1992, ப. 16.
  9. S. A. Jain 1992, ப. 33.
  10. Jain, Champat Rai (1924). Nyaya. பக். 11. https://books.google.com/books?id=9MYRnTo1r1oC.  Alt URL
  11. Sethia 2004, ப. 123–136.
  12. https://www.britannica.com/topic/syadvada
  13. Graham Priest, 'Jaina Log: A contemporary Perspective', History and Philosophy of Logic 29 (3): 263-278 (2008).

மேற்கோள்கள்[தொகு]

  • Jain, Vijay K. (2012), Acharya Kundkund's Samayasara, Vikalp Printers, ISBN 978-81-903639-3-8
  • Jain, Vijay K. (2011), Acharya Umasvami's Tattvarthsutra, ISBN 9788190363921, Non-copyright
  • S. A. Jain (1992). Reality. Jwalamalini Trust. https://books.google.com/books?id=uRIaAAAAMAAJ. "Not in Copyright"  Alt URL
  • Jaini, Jagmandar-lāl (1927), Gommatsara Jiva-kanda Alt URL
  • Sethia, Tara (2004), Ahiṃsā, Anekānta and Jainism, Motilal Banarsidass
  • Prasad, Jyoti (2006), Religion & culture of the Jains, Delhi: Bharatiya Jnanpith
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமண_அறிவாய்வியல்&oldid=3283317" இலிருந்து மீள்விக்கப்பட்டது