த. துரைசிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. துரைசிங்கம்
பிறப்பு(1937-04-09)9 ஏப்ரல் 1937
புங்குடுதீவு, இலங்கை
இறப்புஆகத்து 23, 2021(2021-08-23) (அகவை 84)
கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், கவிஞர்
பெற்றோர்தம்பிராசா, சிவபாக்கியம்
உறவினர்கள்நாவேந்தன்

த. துரைசிங்கம் (9 ஏப்ரல் 1937 – 23 ஆகத்து 2021) ஈழத்து எழுத்தாளரும், கவிஞரும், ஆசிரியரும் ஆவார்.[1] இவர் 44 சிறுவர் இலக்கிய நூல்களையும், 15 கட்டுரை நூல்களையும், ஏராளமான பாடநூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

துரைசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில்[2] தம்பிராசா, சிவபாக்கியம் ஆகியோருக்குப் பிறந்தார். புங்குடுதீவு மேற்கு அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார். இளமையிலேயே பத்திரிகைச் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.[1] நல்லூர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைச் சிறப்புப் பட்டமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார்.[1] புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்ற்னார். பின்னர் கோட்டக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்விப் பணிப்பாளர் போன்ற பதவிகளில் இருந்துள்ளா.[1] நல்லூர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை கலாசாலை வெளியீடான 'கலா விருட்சம்' இதழின் ஆசிரியராகவும் (1957–1958) பணியாற்றினார். ஈழப்போர்க் காலத்தில் 1995-97 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[2]

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய (சாகித்திய) விருது இவருக்கு நான்கு முறை கிடைத்துள்ளது. வட-கிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம், கொழும்பு விவேகானந்த சபை, கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியன இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளன. இலக்கிய வித்தகர், கலாபூசணம் ஆகிய பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.[1]

பிற சேவைகள்[தொகு]

1953-இல் புங்குடுதீவில் 'பாரதி கழகம்' என்ற அமைப்பினை நிறுவி பாரதி விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.[2] யாழ்ப்பாண மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசத்தின் வெளியீடான 'சமூகத் தொண்டன்' மாத இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

மறைவு[தொகு]

துரைசிங்கம் தனது 2021 ஆகத்து 23 அன்று 84-வது அகவையில் கொழும்பில் காலமானார். இவரது இளைய சகோதரர்கள் நாவேந்தன், வி. ரி. தமிழ்மாறன், வி. ரி. இளங்கோவன் ஆகியோரும் எழுத்தாளர்கள் ஆவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
த. துரைசிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சிறுவர் இலக்கிய கர்த்தா துரைசிங்கம், லெ. முருகபூபதி, ஈழநாடு, ஆகத்து 29, 2021
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 தமிழறிஞர் த. துரைசிங்கம், இளநிலா சுரேசானந்த், தினகரன், ஆகத்து 29, 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._துரைசிங்கம்&oldid=3264120" இலிருந்து மீள்விக்கப்பட்டது