ஜூலை 14, 2002ல் பன்னிரெண்டாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1997-2002ல் குடியரசுத் தலைவராக இருந்த கே. ஆர். நாராயணன் ஆரம்பத்தில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெருவித்தார். இந்திய தேசிய காங்கிரசு முதலான எதிர்கட்சிகள் அவருக்கு ஆதரவளித்தன. ஆனால் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இதற்கு இசையவில்லை. பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய்க்கும் நாராயணனுக்கும் இடையே அவ்வளவு இணக்கமான உறவு இல்லாமையே இதற்குக் காரணம். எனவே நாராயணனை மீண்டும் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக்க பாஜக கூட்டணி மறுத்துவிட்டது. ஆனால் அவர் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டால் வாக்காளர் குழுவில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது தெளிவாக இல்லாத நிலையில் தோல்வியடய தெ.ஜ கூட்டணி விரும்பவில்லை. எனவே எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் இறங்கியது. துணைக் குடியரசுத் தலைவர் கிருஷண் காந்த், முன்னாள் மகாராஷ்டிரா ஆளுனர் பி. சி. அலெக்சாந்தர் ஆகியோரது பெயர்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இவர்கள் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத் தக்கவர்களாக அமையவில்லை. இறுதியில் முன்னாள் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகரும், இந்தியாவின் “ஏவுகணை மனிதர்” என்று அறியப்பட்ட அப்துல் கலாம் தே.ஜ கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரசும் இத்தெரிவுக்கு இசைந்தது. ஆனால் சிபிஐ, சிபிஎம் முதலான இடதுசாரிக் கட்சிகள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான கேப்டன் லட்சுமி சாகலை வேட்பாளராக்கினர். தேர்தலில் கலாம் எளிதில் வென்று குடியரசுத் தலைவரானார்.