சினேகலதா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகலதா ரெட்டி
பிறப்பு1932
இந்தியா, ஆந்திரப் பிரதேசம்
இறப்பு20 சனவரி 1977(1977-01-20) (அகவை 44–45)
தேசியம்இந்தியர்
பணிநடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர், சமூக செயற்பாட்டாளர்
அறியப்படுவதுசம்ஸ்காரா, அவசரகாலத்தில் சிறைவாசம்
வாழ்க்கைத்
துணை
திக்கவரப்பு பட்டாபிராம ரெட்டி
பிள்ளைகள்நந்தனா ரெட்டி, கொனாரக் ரெட்டி
உறவினர்கள்இரமண ரெட்டி
டி. சுப்பராமி ரெட்டி

சினேகலதா ரெட்டி (Snehalata Reddy, 1932 - 20 ஜனவரி 1977) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் கன்னட திரைப்படங்கள், கன்னட நாடகங்கள், தெலுங்கு திரைப்படங்கள், தெலுங்கு நாடகங்களில் ஆகியவற்றில் தனது படைப்புகளுக்காக பெயர் பெற்றவர். இந்தியாவின் நெருக்கடி நிலை காலத்தின்போது பரோடா டைனமைட் வழக்கில் தொடர்புடையதாக இவர் கைது செய்யப்பட்டு, எட்டுமாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1960 களில் சென்னையில் ஆங்கில நாடகங்களை அரங்கேற்றிவந்த மெட்ராஸ் பிளேயர்ஸ் குழுவின் இணை நிறுவனர் ஆவார். டக்ளஸ் ஆல்ஜர் இயக்கிய இப்சனின் பியர் ஜின்ட், பன்னிரண்டாவது இரவு மற்றும் பீட்டர் கோ இயக்கிய டென்னசி வில்லியம்'ஸ் நைட் ஆஃப் தி இகுவானா போன்ற மறக்கமுடியாத நாடகங்களை அரங்கேற்றிய தொழில்முறை அல்லாத குழுவாக இது இருந்தது. மேலும், எ வியூ ஃப்ரம் தி பிரிட்ஜ் மற்றும் தி ஹவுஸ் ஆஃப் பெர்னார்டா ஆல்பா போன்ற நாடகங்களில் இவர் நடித்தார், இயக்கினார் அல்லது தயாரித்தார். [1] பெங்களூரில் குடியேறிய பிறகு அங்கே அபிநயா நடகக் குழுவை சக நடகக் கலைஞரான அசோக் மந்தண்ணாவுடன் இண்ந்து தொடங்கினார். 2003 ஆம் ஆண்டில், இவரது கணவர் பட்டபிராம ரெட்டி அரவிந்தரின் நூலான சாவித்ரியை அடிப்படையாகக் கொண்ட நாடகமான, இன் ஹவர் ஆஃப் காட் நாடகத்தை வழங்கினார். அன்பினால் மரணத்தை தடுத்த தொன்மவியல் பெண்ணான சாவித்திரியால் ஈர்க்கப்பட்டு, அவர் சினேலதா ரெட்டிக்கு அதை அர்ப்பணித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சினேலதா ஆந்திர மாநிலத்தில் கிருத்துவ சமயத்துக்கு மாறிய குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையில் 1932 இல் பிறந்தார். இவர் காலனித்துவ ஆட்சியை கடுமையாக எதிர்த்தார் மேலும் இவரது ஆரம்ப ஆண்டுகள் விடுதலைப் போராட்டத்தில் மூழ்கின. இவர் தனது பெயரை இந்தியப் பெயராக மாற்றிக்கொண்டார், இந்திய ஆடைகளை மட்டுமே அணிந்தார். சினேலதா கவிஞரும், கணிதவியலாளரும், திரைப்பட இயக்குனரான திக்கவரப்பு பட்டாபிராம ரெட்டியை மணந்தார். புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரும், செயல்பாட்டாளருமான ராம் மனோகர் லோகியாவிடம் இந்த இணையர் பற்றுகொண்டு அவரை பின்தொடர்ந்தனர். யு. ஆர். அனந்தமூர்த்தி எழுதி, இவரது கணவர் இயக்கிய கன்னட திரைப்படமான சம்ஸ்காராவில் நடித்ததற்காக சினேலதா தேசிய அளவில் கவனம் பெற்றார். இந்த படம் 1970 இல் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்றது. இவரது கடைசி படமான சோன் கன்சாரி இவரது மரணத்திற்குப் பிறகு 1977 இல் வெளியிடப்பட்டது. [2] [3] இவரது மகள் நந்தனா ரெட்டி ஒரு மனித உரிமைகள், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவர் 2012 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான சி.டபிள்யூ.சி (உழைக்கும் சிறார்களுக்கான) நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். [4] தன் தாய் நெருக்கடி நிலை காலங்களில் சிறையில் அனுபவித்த கொடுமைகள் குறித்து பல்வேறு நினைவுகளை எழுதியுள்ளார். அவரது மகன் கொனாரக் ரெட்டி ஒரு இசைக் கலைஞராவார்.

அரசியல் செயல்பாடு[தொகு]

சினேலதாவும் அவரது கணவரும் அவசர காலநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டனர். லோகியாவின் கொள்கைகளின்மீது பற்று கொண்ட இவர்கள் இந்திரா காந்தியின் கொடுமையான அவசரகால அறிவிப்புக்கு எதிராக பேசினர். [5] இவர்கள் தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸின் நெருங்கிய நண்பர்களாகக இருந்தார், இதன்பிறகு பரோடா டைனமைட் வழக்கு சம்பந்தமாக 1976 மே 2 அன்று கைது செய்யப்பட்டார்.[6] . பரோடா டைனமைட் வழக்கின் இறுதி குற்றப்பத்திரிக்கையில் , ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 24 நபர்களின் பெயர்களே இருந்தன. சினேக லதாவின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தபோதிலும் அந்தக் குழுவினரின் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகச் சொல்லப்பட்டு மிசா சட்டத்தின்கீழ் சினேகலதா கைது செய்யப்பட்டார். எந்தவித விசாரணையும் இன்றி பெங்களூரு மத்திய சிறையில் எட்டு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டு, மனிதாபமானமற்ற முறையில் நடத்தப்பட்டார். நாள்பட்ட ஆஸ்துமாவால் பாதிக்கபட்டிருந்த, அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கபடில்லை. இரண்டு முறை ஆஸ்துமா தீவிரமடைந்து சுயநினைவை இழந்தார். தனிமைச் சிறைவாசம் காரணமாக பலவீனமான அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றதால் இறுதியில் 1977 சனவரி 15, அன்று பரோலில் விடுவிக்கப்பட்டார். [7] நாள்பட்ட ஆஸ்துமாவினாலும், நுரையீரல் நோய்த்தொற்றின் காரணமாக, விடுவிக்கப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, 1977 சனவரி 20 அன்று இறந்தார். இவர் அவசரகாலத்தின் முதல் தியாகிகளில் ஒருவர். [8] சினேகலதா சிறையில் அடைக்கபட்டிருந்த அதே சிறையில் இருந்த மது தண்டவதே தனது நினைவுக் குறிப்பில் எழுதுகிறார், "இரவு நேர அமைதியில் சினேகலதாவின் அலறல்கள் அவரது சிற்றறையிலிருந்து கேட்கும்".

குறிப்புகள்[தொகு]

 

  1. Aditi De (1 December 2003). "A Savitri for Sneha". தி இந்து இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040331135415/http://www.hindu.com/mp/2003/12/01/stories/2003120101800200.htm. 
  2. "Snehalata Reddy".
  3. "In the Hour of God: Play in tribute to Snehalata Reddy at Chowdaiah Memorial Hall, Bangalore".
  4. "Bangalore NGO among nominees for Nobel peace prize |". Citizen Matters, Bengaluru (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
  5. "Fearless, Compassionate And Martyr: The Story of an Actress Who Took on The Emergency". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
  6. "Snehalata Reddy - churumuri".
  7. Khajane, Muralidhara (29 June 2015). "Celluloid's two-pronged response to Emergency" – via The Hindu.
  8. "When friends disappeared". தி இந்து. 2000-07-02. Archived from the original on 2014-06-29. பார்க்கப்பட்ட நாள் 2021-05-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகலதா_ரெட்டி&oldid=3905773" இலிருந்து மீள்விக்கப்பட்டது