பிரம்மேசுவரர் கோயில் (Brahmeshvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 12 ஆம் நூற்றாண்டில் போசளர் கட்டிடக்கலை பாணியில் கிக்கேரி நகரத்தில் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவில் ஆகும். இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான சரவணபெலகுளாவிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ளது. பொ.ச. 1171இல் போசள மன்னன் முதலாம் வீர நரசிம்மன் ஆட்சியின் போது பொம்மரே நாயகிட்டி என்ற பணக்கார பெண்மணியால் இந்த கோயில் கட்டப்பட்டது. [1] இந்தக் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [2]
கோயிலின் வடிவமைப்பு தனித்துவமானது. கோயிலின் உட்புறம் அதன் அடிப்பகுதிக்கு அப்பால் அகலப்படுத்தப்பட்டு வெளிப்புற சுவர்கள் குவிந்த வடிவத்தில் வெளியேறுகிறது. இது ஒரு ஒற்றை சன்னதி கட்டுமானமாகும். மண்டபத்தின் ஒரு இடத்தில் இந்துக் கடவுளான சிவனின் நான்கு அடி உயர உருவம் உள்ளது. மண்டபத்தின் தூண்களில் உச்சியின் மீது செதுக்கப்பட்ட மதனிகா சிற்பங்கள் (சலாபஞ்சிகா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு பெண்ணின் சிற்பத்தை குறிக்கிறது. பகட்டான பெண் அம்சங்களைக் காட்டுகிறது) சிறந்த கலைப் படைப்புகளாகும்.[3]
↑"Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 ISBN81-7017-345-0
Kamath, Suryanath U. (2001). A concise history of Karnataka: from pre-historic times to the present. Bangalore: Jupiter books. இணையக் கணினி நூலக மையம்:7796041.