ஏ. எல். நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. எல். நாராயணன்
பிறப்பு1887 (1887)
முக்கமாலா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு7 மார்ச் 1973
சென்னை, இந்தியா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மகாராஜாவின் கல்லூரி, கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம், ஆந்திரப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்

அப்பதவேதுலா இலட்சுமி நாராயணன் ( Appadvedula Lakshmi Narayan ) ஏ. எல். நாராயணன் என்று பிரபலமாக அறியப்படும் (1887 - 7 மார்ச் 1973) இவர் ஓர் இந்திய வானியற்பியலாளர் ஆவார். இவர், 1937க்கும் 1946க்குமிடையில் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தின் முதல் இந்திய இயக்குநராக இருந்தார். இவர் 1887ஆம் ஆண்டில் அப்பதவேதுலா வியாசுலு மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் முக்கமாலா கிராமத்தில் பிறந்தார். கொத்தபேட்டையிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வரை படித்தார். விஞ்ஞான ஆய்வில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட இவர், ராஜமன்றி அரசு கலைக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு இளங்கலை பட்டம் பெற்ற இவர் 1914இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். பின்னர், விசயநகரம், மகாராஜாவின் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார்.

தொழில்[தொகு]

அந்த நேரத்தில், இயற்பியல் இடைநிலை நிலை வரை மட்டுமே கற்பிக்கப்பட்டது. 1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்புக்கான இணைவைப் பெற்றுத் தந்தார். 1920ஆம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வுக்காக நான்கு மாணவர்களின் முதல் தொகுதிக்கு பயிற்சி அளித்தார். பிற்காலத்தில் நிறமாலையியல் ஆராய்ச்சியில் இந்தியாவில் முன்னோடியாக ஆன முனைவர் கோச்செர்லாகோட்டா இரங்கதாம இராவ் இவரது முதல் தொகுப்பில் இருந்தார்.

1929இல் கொடைக்கானலில் உள்ள சூரிய இயற்பியல் ஆய்வகத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தார். நிறுவனத்தை நிறமாலையியல் ஆராய்ச்சியின் மேலும் விரிவான மற்றும் தீவிரமான பணிகளைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக அதன் இயக்குநராக இருந்த சிறந்த வானியலாளர் ஜான் எவர்ஷெட்டின் பணியின் மூலம் சூரிய மற்றும் நட்சத்திர இயற்பியல் பற்றிய அவதானிப்புகளுக்கு இந்த ஆய்வுக்கூடம் பிரபலமானது. தனது பங்களிப்புகளுக்கு அங்கீகரிக்கும் வகையில், இவர் ஆய்வகத்தின் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இந்த பதவியை வகித்த முதல் இந்தியர் இவர். இவரது பதவி காலத்தின் போது, வானியல், கணிதம், இயற்பியல், புவி இயற்பியல், புள்ளியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் பற்றிய ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைப் பெற்றதன் மூலம் நூலகம் விரிவாக்கப்பட்டது. இவர் தனதுப் பயிற்சிப் பணிகளை விரிவுபடுத்தினார். மேலும், அதன் வேலையை மேம்படுத்துவதில் கணிசமான நேரத்தை செலவிட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது, சில மூத்த ஊழியர்கள் யுத்தம் தொடர்பாக வானிலை ஆய்வுக்காக மாற்றப்பட்டனர். ஆனால் நாராயணனால் ஓய்வெடுக்க முடியவில்லை. தன்னுடன் மீதமுள்ள மிகச்சிறிய ஊழியர்களுடன் தனது ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டார்.

போருக்குப் பின்னர், பேராசிரியர் மேகநாத சாஃகாவின் தலைமையில் கொடைக்கானல் ஆய்வகத்தின் செயல்பாடுகள் விரிவடைவது குறித்து குறிப்பாக, நாட்டில் வானியல் மற்றும் வானியற்பியல் வளர்ச்சிக்கு ஒரு குழுவை இந்திய அரசு நியமித்தது. டாக்டர் நாராயணன் குழுவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மேலும் ஆய்வகத்தின் விரிவாக்கத்தைத் தொடங்குவதில் முக்கிய பங்கும் வகித்தார். 1947ஆம் ஆண்டில் தனது 60 வயதில் இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கல்விப் பணிகள்[தொகு]

முனைவர் வி. எஸ். கிருஷ்ணாவுக்குப் பின்னர் 1961இல் விசாகப்பட்டினத்தில் ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு கடுமையான ஒழுக்கமானவர், சுயநல நலன்களை ஒதுக்கி வைத்து எந்த விலையிலும் ஒழுக்கத்தை அமல்படுத்த தயங்கவில்லை. ஆந்திர பல்கலைக்கழகத்தை இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றிய தனது புகழ்பெற்ற முன்னோடிகளான சி.ஆர்.ரெட்டி மற்றும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தான் ஒரு தகுதியான வாரிசு என்பதை நிரூபித்தார். திறமையான பேராசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் அந்தந்த கிளைகளில் முனைவர் மற்றும் பிந்தைய முனைவர் ஆய்வுகளை மேற்கொள்ள திறமையான இளைஞர்களை இவர் ஊக்குவித்தார். பல்கலைக்கழக மானியக்குழு, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் மற்றும் பிற இந்திய நிறுவனங்களிலிருந்து வாங்கிய பல ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் மானியங்களை நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். கல்வி மற்றும் நிர்வாக அம்சங்களில் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டை ஒருங்கிணைத்துள்ளார். ஐந்து ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் 1966இல் துணைவேந்தராக ஓய்வு பெற்றார்.

இறப்பு[தொகு]

இவர் மார்ச் 7, 1973 அன்று சென்னையில் இறந்தார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர்.

நூலியல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எல்._நாராயணன்&oldid=3150550" இலிருந்து மீள்விக்கப்பட்டது