தி. சத்தியமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் தி. சத்தியமூர்த்தி (Dr T. Satyamurthi) (பிறப்பு:1946) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர். அவரது தந்தை தியாகராஜன், ஒரு சுதந்திரப் போராளியாக இருந்ததால், நூற்பு உட்பட பல சுதேசி கைவினைப் பயிற்சிகளில் சத்தியமுர்த்திக்கு பயிற்சி அளித்தார். குரு சிதம்பரம் நடேசா சாஸ்திரிகளின்ன் கீழ் பாரம்பரிய முறைகளில் யஜூர் வேத மந்திரத்தை கற்றார். இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். டாக்டர் சி.வி.வெங்கடேசனின் வழிகாட்டுதலின் கீழ் பண்டைய தர்ம சாத்திரங்களில் அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். மேலும் இவர் முனைவர் பட்டத்திற்கான முன் புராணகால இலக்கியங்களில் தர்மத்தின் கருத்து பரிணாமம் என்பது குறித்து இந்தியத் தொல்லியகத்தில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் டாக்டர் சிவராமமூர்த்தி மற்றும் கே. வி. சௌந்தரராஜன் ஆகியோரின் கீழ் படிமவியல் (iconography) மற்றும் கலை ஆகியவற்றில் பயிற்சி பெற்றார். 1970-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தின் கீழ் உள்ள அருங்காட்சியகக் கிளையில் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவர் தில்லி செங்கோட்டை, கஜுராஹோ, ஹளேபீடு, புராணா கிலா மற்றும் பத்மநாபுரம் அருங்காட்சியகங்களை சீரமைத்தார். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்பொருள் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற சத்தியமூர்த்தி, வதோதரா, புவனேஸ்வர், திருச்சூர் மற்றும் சென்னை வட்டங்களில் தனது திறனை பதிவு செய்தார். அயல் பணியியல் இவர் இயக்குநராக கேரள அரசின் தொல்பொருள் துறையை மறுசீரமைத்தார். அவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த போது பங்கேற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி, புராணா கிலா மற்றும் அயோத்தி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் சாளுவன்குப்பம் ஆகும்.[1]

இவர் சென்னை வட்ட இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளராக இருந்த போது ஆதிச்சநல்லூர் தொல்லியல் கள்த்தில் 2004 - 2005 ஆண்டுகளில் அகழாய்வுப் பணி மேற்கொண்டார். 600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்தன. இந்த ஆய்வை நடத்திய தி. சத்யமூர்த்தி அடுத்த ஆண்டே பணி ஓய்வு பெற்றுவிட, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான அறிக்கை எழுதப்படாமலேயே இருந்தது.[2]

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சத்தியமூர்த்தி[3], தஞ்சாவூர் பெரிய கோயிலின் இருண்ட அறைகளின் சோழ சுவரோவியங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தினார். மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கட்டிடக்கலை உட்பட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில், மாதோட்டம் எனும் ஊரில் இடிந்து விழுந்த திருக்கேதீச்சரம் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டி வழங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Much more than stone
  2. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்
  3. "T. Sathyamurthy, Superintending Archaeologist, (retired)". Archived from the original on 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சத்தியமூர்த்தி&oldid=3557865" இலிருந்து மீள்விக்கப்பட்டது